Tuesday, September 30, 2008

தேயிலை விலை உயர்வுக்கேற்ப சம்பள உயர்வு

தேயிலை விலை உயர்வுக்கேற்ற முறையில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தவும் தோழர் கொல்வின் ஆர்.டி.சில்வா சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அதாவது 100 ஏக்கருக்கு குறையாத தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் நாட்களுக்கு கீழ் கண்ட முறையில் சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

01. உலக சந்தையில் ஒரு இறாத்தல் தேயிலை ரூ.2.50 சதத்திற்கும், ரூ 2.75 சதத்திற்கும் விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு ஒரு தொழிலாளிக்கு 10 சதம் சம்பள உயர்வு

02. அதே அடிப்படையில் ரூ.2.75 சதத்திற்கும் ரூ.2.99 சதத்திற்குமிடையில் விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு 20 சதம் உயர்வு.03. ரூ. 3.00 க்கு மேல் தேயிலை விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு 30 சதம் உயர்வு.

இந்த அடிப்படையில் தொழிலாளர்களுடைய சம்பளத்தை உயர்த்தினார். மேற்கூறப்பட்ட சம்பள உயர்வை விட தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தவும் தோழர் கொல்வின் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதற்கமைய 1972 ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்று அமுலில் இருந்த அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தி ஆண் தொழிலாளருக்கு நாளொன்றுக்கு 18 சதமும் பெண் தொழிலாளர்களுக்கு 12 சதமும் வழங்கப்பட்டது. ஆண், பெண், தொழிலாளர்களின் சம்பளத்தைச் சம சம்பளமாகக் கொண்டுவர ஆலோசி;த்து வந்த தோழர் கொல்வின் தனது அமைச்சின் மூலம் 1973 ம் ஆண்டு நவம்பர் மாதம், 1974 ஏப்ரல், 1975 மார்ச் மாதங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தைக் கீழ் காணும் அடிப்படையில் உயர்த்தினார்.

1970,மே, 1973, 1974, 1975 விகிதாசாரம் மே, நவம்பர், ஏப்ரல், மார்ச், முறையேஆண்- 3.07, 4.17, 4.70, 5.43, 76 வீதம், பெண்:- 2.45, 3.15, 3.53, 4.07, 67 வீதம், பிள்ளை:- 2.13, 2.81, 3.17, 3.65, 71 வீதம்,

ரப்பர் தோட்டத் தொழிலாளி

1970, 1973, 1974, 1975 விகிதாசாரம் மே, நவம்பர், ஏப்ரல், மார்ச், முறையே ஆண்:- 3.12, 4.22, 4.75, 5.50, 76 வீதம், பெண்:- 2.60, 3.32, 3.72, 4.26, 64 வீதம், பிள்ளை:- 2.28, 2.97, 3.34, 3.85, 69 வீதம்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களின்படி 1970 முதல் 1975 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 70 சத வீதமாக உயர்ந்துள்ளது என்பதனை நாம் உணர வேண்டும். இந்தக் காலப் பகுதியிலேயே தோட்டத் தொழிற் துறை தொழிலாளர்கள் கூடுதலான சம்பள உயர்வைப் பெற்றனர்.

தோட்டத் தொழிலாளர்களும் லங்கா சமசமாஜக் கட்சியும் - எஸ். இராமநாதன்
பல மில்லியன்கள் இலாபமாக தோட்ட முகாமைத்துவம் பெறுகிறது. தொழிலாளர்களுக்கு ஐந்து சத வீதமே இலாபம் பகிரப்படுகிறது.

பெருந்தோட்டத்துறையில் பல மில்லியன் தொகையில் இலாபம் கிடைக்கும் போது மொத்த இலாபத்தில் ஐந்து சத வீதத்தினையே தொழிலாளர்களுக்கு இலாபமாக பகிர்ந்தளிக்கும் தோட்ட முகாமைத்துவத்தின் செயற்பாடானது அப்பட்டமான மோசடியாகும் என உவா மாமகாண சபை உறுப்பினர் அரவிந்குமார் தெரிவித்தார். தோட்ட முகாமைத்துவங்களால் வெளியிடப்படும் வருடாந்த நிதி அறி;க்கையை பயன்படுத்தியும் ஊடக செய்திகளை பயன்படுத்தியும் வங்கிகள் மூலம் பெருந்தொகை பணத்தை கடனாக பெற்று தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். மேலும் பங்குச் சந்தையிலும் பெருந் தோட்டங்களின் நிலை மேலோங்கியுள்ளது மூலம் முகாமையாளர்கள் பெரும் நன்மையை பெறுகின்றனர். இந் நாட்டில் ஆகக் கூடிய வேலையை செய்து கடினமாக உழைத்து அதி குறைந்த சம்பளத்தை பெற்று கொண்டிருப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களே. பெரும் அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுப்பவர்களும் இவர்கடேள. எனவே தொழிலாளர்கள் தகுந்த பாடம் அவர்களுக்கு புகட்ட வேண்டும் என்றார்.

Monday, September 29, 2008

சர்வதேச மனித உரிமை சாசனம் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டே எமது மனித உரிமைகள் பறிக்கப்பட்டன.

பிரித்தானிய குடியேற்ற ஆட்சியின் போது இலங்கை மக்கள் எப்படி நடத்தப்பட்டார்களோ அது வேறு விடயம். ஆனால் இலங்கை சுதந்திரமடைந்தபின் இலங்கையிலிருந்த அனைத்து சமூகத் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் எழுந்த பிறகு, இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் மலையக தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் முதல் பாராளுமன்றத்திலேயே கிட்டத்தட்ட ஆறு லட்சம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை. 20ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் அநீதியும் மிக மோசமான மனித உரிமை மீறலுமாகும்.

1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமை சாசனத்தின் 15வது உறுப்புரை (1) ஒரு தேசிய இனத்தவராக இருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. (2) எவரதும் தேசிய இனத்துவம் மனம் போக்கான வகையில் பறிக்கப்படவோ, தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுவதோ ஆகாது என வலியுறுத்துகின்றது. சர்வதேச மனித உரிமை பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்ட அதே ஆண்டிலேயே எமது பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டது. ஆகவே இதனைவிட உரிமை மீறல் இருக்குமா என்பது சந்தேகமே.

ஆகவே மலையகத் தமிழ் மக்களின் இந்த பிரஜா உரிமை பறிப்பு சமகால அரசியலில் ஒரு மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கூடப் பார்த்து நிவர்த்திக்கப்படாமல் இன்னும் பிரஜாவுரிமை எமது இலங்கையின் நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்படாமலிருப்பது மனித நாகரீகத்திற்கே வெட்கக் கேடான செயலாகும். எனவே மiலையக மக்களின் பிரச்சினையை இன்னும் பிரஜாவுரிமை பிரச்சினையாக மாத்திரம் மட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் மலையக தலைவர்களும் தேசிய கட்சியை சார்ந்த தலைவர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு விடயமாகும்.
- சமகால அரசியல்- அரசியல் தீர்வு- அ. லோறன்ஸ்

பெருந்தோட்டக் குடியிருப்பு தீ விபத்துக்கள் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

பெருந்தோட்ட பகுதி குடியிருப்புக்களில் ஏற்படும் தீ விபத்து தொடர்பான காரணத்தை மின்சாரசபையினரும், அனர்த்த நிவாரண அமைச்சு அதிகாரிகளும் இணைந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும்படி நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் வீ. புத்திரசிகாமணி கேட்டுக்கொண்டுள்ளார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திச் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்ட கூட்டத்தில் கல்நடை அபிவிருத்தி அமைச்சர், சீ.பி ரத்நாயக்க, பிரதியமைச்சர் மு.சிவலிங்கம், ஆகியோர் உட்பட மத்திய மாகாணசபை அமைச்சர்கள், நுவரெலியா மாவட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சம்பள உயர்வுக்கு காத்திருக்க முடியாது கூட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும் - அமைச்சர் பெ. சந்திரசேகரன்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தின்படி இன்னும் ஒரு வருடம் தமது சம்பள உயர்வுக்காக காத்திருக்க முடியாது. கூட்டு ஒப்பந்தம் என்ற இந்த நடைமுறை கிழித்தெறியப்பட வேண்டும் என அமைச்சர் பெ. சந்திரசேகரன் நானுஓயா பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வினை கம்பனிகளும், சில தொழிற்சங்கங்களும் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கம் எதிர்பார்ப்பதை நாம் ஏற்க முடியாது சம்பள உயர்வை பற்றி அரசாங்கத்துடன் பேசினால் கம்பனிகளுடன் பேசுங்கள் என்று தட்டிகழித்து விடுகின்றனர். அரசு தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் சுட்டிக்காட்டி தப்பி விடவும் முடியாது.

Sunday, September 28, 2008

மலையக பல்கலைகழக மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டம்

பெருந்தோட்டத்தைச் சேர்ந்த பல்கலைகழக மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டமொன்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. பல்கலைகழகங்களில் பயிலும் அல்லது அனுமதி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பை தொடர்வதற்கு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் அவர்களுக்கு அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது. எனவே பல்கலைகழங்களில் பயிலும் அல்லது அனுமதி பெற்ற மாணவர்கள் சகலரும் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் 30-09-2008 முன்னர் சௌமியமூர்த்தி தொண்டமான ஞாபகார்த்த மன்றம், இல.15ஏ, பிளவர் ரெரஸ். கொழும்பு-03 என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியும்
தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் சொந்தமா?

இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழிவழியாக தோட்டத் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் எட்டடி நீளமுள்ள அறைகளிலேயே புகைக் கூண்டுகளில் வாழ்வதைப் போல் வாழ்ந்து வருகின்றனர். இந்த துர்ப்பாக்கிய நிலையிலிருந்து தாங்கள் வாழும் அறைகளை விஸ்தீரணமாக ஓரளவேனும் நல்ல நிலையில் அமைக்க வேண்டும் என்ற உந்துதலில் நாகரீகமாக வாழும் ஆசையுடன் சிறிது சிறிதாக சேமித்து வைத்துள்ள சேமலாப நிதியைக் கொண்டு கட்டியுள்ளனர். ஏனையோர் பொருளாதார வசதி குறைவாகல் அதே எட்டடி அறைகளுக்குள் வாழ்க்கையை முடக்கி விடுகின்றனர்.

இப்படி வாழ்நாளில் பெரும் பங்கிளை கழித்து இறுதி காலத்தில் ஓய்வாக உணவுக்கு வழி செய்து கொண்டு வாழ வேண்டிய பணத்தை இந்த லயன் வீடுகளுக்கு செலவழிப்பதன் மூலம் ஏதும் பலன் உண்டா என்பதை தெரிந்து கொள்கிறார்கள் இல்லை. தோட்ட நிர்வாகங்களின் கீழ் இருக்கும் வீடுகள், உடைமைகள் அனைத்துக்கும் கம்பனிகளே கம்பனிகளே சொந்தக்காரர்கள் ஆவர் . அரச உடைமைகள் எனில் மக்களுக்கான உரிமைகளைப் பற்றி வாதிட முடியும். கம்பனிகளுக்கு சொந்தமானவைகளை நாம் செலவழிப்பதன் மூலம் நாளை ஒரு பிரச்சினை ஏற்பட்டு சிக்கலில் வீழ்ந்து விட்டால் சாதுரியமாகவும், சட்டரீதியாகவும் கம்பனிக்கே சொந்தமாகி விடும் என்பதை புரியாமல் இருப்பது கவலையைத் தருவதாகும்.
இந் நிலையில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைமைகள் அரசியல் பிரதிநிதிகள் எடுத்த ஓரளவு முயற்சியினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தினால் தனி வீடுகளாகவும் பின்பு மாடி வீடுகளாகவும் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இவ் வீடமைப்புக்கான செலவுத் தொகையை குடியிருக்கும் தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்தே அறவிடப்படுகின்றது. தனி வீடுகளுக்கு மாதாந்தம் 350 ரூபாவும் மாடி வீடுகளுக்கு 600 ரூபாயுமாக பதினைந்து வருடகால மாதத் தவணையில் அறவிடப்படுகின்றது. இத் திட்டத்தின் கீட் வழங்கப்படும் வீடுகள் சம்பந்தப்பட்டவர்களின் ஊழியர் சேமலாப நிதியை பிணையாகக் கொண்டே வீடுகள் வழங்கப்படுகின்றன.

இந் நிலையில் சம்பந்தப்பட்ட தொழிலாளி சேவையிலிருந்து ஓய்வு பெறுவாராயின் அவருடைய சேவைக்கால பணத்தில் முழுத் தொகையுமே அறவிடப்படுகின்றது. சேவைக்கால பணம் குறைவாகவோ அல்லது இல்லாமலிருப்பின் சம்பந்தப்பட்டவர் மேலும் பணம் செலுத்தியாக வேண்டும்.

அரசியல் வாதிகளும், தொழிற்சங்க வாதிகளும் மேற்படி வீடுகள் அவர்களுக்கே சொந்தம் என்கின்றனர். தொழிலாளர்களும் இந்த பசப்பு வார்த்தைகளை நம்பி சொந்த வீடுதானே என வங்கிகளில் கடனை பெற்று வீடுகளை சிறப்பாக அமைத்துள்ளனர். ஆனால் இந்த வீடுகளை விற்கவோ, வேறு நபர்களுக்கு மாற்றியோ கொடுக்க முடியாது. இதுதான் ஒப்பந்தத்தின் சாரம்சம்.

ஊண்மையில் உழைப்பவனின் ஊதியத்தில் அறவிடப்படும் பணம் அந்த உழைப்பாளியின் வாழ்க்கைக்கு பலன் தர வேண்டும். ஆனால் அந்த பலன் கிடைக்காவிட்டாலும் உரிமையும் இல்லாது போய்விடும் அபாயம் தான் தெரிகிறது.

-தொடரும்-

சிதம்பரம் ஜோதி



தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள பங்குகளை குறைந்த விலையில் வாங்கும் வர்த்தகர்கள்

இலங்கையில் உள்ள பெருந்தோட்டங்களை கடந்த காலங்களில் SLBC மற்றும் JEDB ஆகியன நிர்வகித்து வந்தன. தற்போது 23 கம்பனிகள் நிர்வகித்து வருகின்றன.

1991 இல் அரசாங்கம் தோட்டங்களை தனியார் மயமாக்கும் நோக்கில் கம்பனிகளுக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்தமையை இடதுசாரி தொழிற்சங்கங்கள் எதிர்த்திருந்தன. எனினும் அரசாங்கத்துடன் இணைந்திருந்த காரணத்தால் இ.தொ.கா வும் இ.தே.தோ.தொ சங்கமும் ஆதரித்திருந்தன.

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின் இறுதியில் ஒரு சமரசத் திட்டத்தை அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் ஏற்றுக் கொண்டன. அதில் ஒன்றுதான் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களையும், சுற்றியுள்ள மரக்கறி தோட்டங்களையும் அவர்களுக்கு உரித்தாக்குவது அடுத்ததாக தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் கம்பனிகளுக்கு கிடைக்கும் இலாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு தரப்பட வேண்டும் . அத்தோடு தனியார் கம்பனிகளின் பங்குகளில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

மேற்படி ஆலோசனைகள் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி நீண்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது. இறுதியில் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தொழிற்சங்கங்களின் அழுத்தம் காரணமாக 10சத வீத பங்குகளை தொழிலாளர்களுக்கும், தோட்ட சேவையாளர்களுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. இந்தப் பங்குகளை நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும் வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

பங்குகள் விநியோகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்குகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இ.தொ.கா, இ.தே.தோ.தொ சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன ஒன்றிணைந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சகல பங்குகளையும் நிர்வகிப்பதற்காக தனியான ‘நிதியம்’ ஒன்றை அமைக்க வேண்டுமென்று கோரி சம்பந்தப்பட்ட அமைச்சோடு பேச்சுவார்த்தை நடத்தின.
ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இத் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில் கம்பனிகளும் அரசாங்கத்தின் சில சக்திகளும் சேர்ந்து திடீரென பங்கு பத்திரங்களை தோட்ட நிர்வாகங்களினூடாக வழங்கி அவற்றை வங்கிகளிலோ, வர்த்தகர்களிடமோ கொடுத்து காசாக்கிக் கொள்ளலாம் என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டதால் பங்கு பத்திரம் கிடைத்தவுடன் இதன் முக்கியத்துவத்தை உணராமல் வங்கிகளிலும் வர்த்தகர்களிடமும் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வதில் அக்கறையாக இருந்தார்கள்.
மேலும் இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் பலத்தை எதிர்ப்பை காட்டியதால் வங்கிகளும் வர்த்தகர்களும் பங்கு பத்திரங்களை விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்த்துக் கொண்டார்கள்.

மீண்டும் பங்குகள் விற்பனை

இவ்வாறு விற்கப்படாமலிருந்த பங்குகளை இப்போது மீண்டும் இரகசியமான முறையில் சில வர்த்தகர்கள் விலை கொடுத்து வாங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இறந்துபோன தொழிலாளர்களின் பங்குகளையும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அல்லது வேலை நிறுத்தம் செய்யப்பட்டவர்களின் பங்குகள் செல்லுபடியாகாது என்று கூறி மிகவும் குறைந்த விலைக்கு வர்த்தகர்கள் வாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்களின் பங்குகளை மாற்ற முடியும்.

பங்குகளை பெற்றுள்ள தொழிலாளர்கள் யாராவது இறந்து போயிருந்தால் அவர்களின் பங்குகள் செல்லுபடியாகாது என்பதில் எந்தவித உண்மையும் இல்லை அந்த பங்குகளை உயிரோடிருக்கும் உறவினர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

பங்குகளினால் கிடைக்கும் பயன்கள்.

தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள பங்குகள் மிகவும் பெறுமதி மிக்கவையாகும். ஏனெனில் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் தொழிலாளர்கள் கம்பனிகளுக்கு உரித்துடையவர்கள் ஆகின்றார்கள். தோட்டங்களில் வசிப்பதற்கு அவர்களுக்கு உரிமை கிடைக்கின்றது.
எதிர்கால சந்ததிகளுக்கு இத்தகைய பங்குகள் சிறந்த முதலீடாக அமைகின்றது. மேலும் 10 ரூபா பெறுமதியான ஒரு பங்கு இப்போது 50 ரூபாய்க்கு மேல் பெறுமதியுள்ளதாக காணப்படுகின்றது.

எனவே தொழிலாளர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பெற்றுக் கொடுத்துள்ள பங்குகளுக்கான உரிமையை சதிகாரர்களின் வகைக்குள் வீழ்ந்து தொழிலாளர்கள் இழந்து விடாது அவற்றை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பானா தங்கம் - வீரகேசரி

Saturday, September 27, 2008

மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம்

மத்திய மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் யாவும் போட்டி பரீட்சை முடிவுகள் மூலம் உள்வாங்;கப்படும் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். மத்திய மகாணத்திலி; பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் தற்போது 1133 என அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டி பரீட்சை முடிவுகளின்படி 2187 பேர் பரீட்சையில் சித்தியெய்துள்ளனர்.

Friday, September 26, 2008

அரசு தீர்மானித்திருக்கும் தேர்தல் முறை மலையகத் தமிழ் சமூகத்தை 30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்லும்

விகிதாசார தேர்தல் முறையினால் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் சனத்தொகை அடிப்படையில் அமையாவிட்டாலும் அபூர்வமாக சில பகுதிகளில் மட்டும் ஒருசில அங்கத்துவத்தை பெறக்கூடிய நிலை இதுவரை இருந்தது.

தற்போது தொகுதிகளையும் உள்ளுராட்சிச் சபைகளில் வாட் முறையையும் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்ற அரசின் ஆலோசனை நடைமுறைக்கு வந்தால் இந்திய வம்சாவளி மக்கள் வாழுகின்ற நாட்டின் எந்தப் பகுதியிலும் எம்மால் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியாது.

1977 ஆம் ஆண்டு இ.தொ.கா.தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குக் காரணமாக அமைந்தது நுவரெலியா மாவட்டம் மூன்று அங்கத்தவர் தொகுதியாக ஆக்கப்பட்டதேயாகும். அவர் மூன்றாவது எம்.பி யாக தெரிவு செய்யப்பட்டார். விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் உள்ளூராட்சி சபைகளிலும் மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் அங்கும் இங்குமாக சில மலையக தமிழர்கள் பிரதிநிதிகளாகத் தெரிவாகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இப்போதைய தேர்தல் முறைகளில் அரசு ஏற்படுத்த முனைகின்ற மாற்றம் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தையே அடியோடு வேரறுத்து விடும். அது மலையகத் தமிழ் சமூகத்தை 30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்வதாகவே அமைந்துவிடும்.

எனவே சகல மலையக சக்திகளும் ஒன்றுசேர்ந்து எமது பிரதிநிதித்துவத்துக்கு வரும் ஆபத்துக்கு எதிராக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதில் அவசர தேவை ஏற்பட்டுள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு மலையக மக்கள் முன்னணி தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தலவாக்கலையில் ஹொலீரூட், ட்ரூப் தோட்டங்களில் அமைச்சு நிதி ஒதுக்கீட்டிலான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோது தெரிவித்தார்.
28,500 இந்தியா வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை

தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் நாடற்றவர்களாக நீண்ட காலமாக இருந்துவரும் 28,500 இந்திய வம்சாவளி மக்களுக்கும் உடனடியாக இலங்கைப் பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்த சட்ட மூலத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதி வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, September 25, 2008

பெருந் தோட்டத்துறை சிறுவர் உரிமை மீறல்கள்

-தொடர்ச்சி-

மிகக் குறைவான வருமானத்தைக் கொண்ட வீட்டுத் துறையினர் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். எனவே தொழிற் படையிலிருந்து சிறுவர்களை நீக்க வேண்டுமெனின் அவர்களின் குடும்ப வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். சிறுவர்களின் விருப்பத்திற்கு முரணான சூழ்நிலைகளினால் அவர்கள் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுகின்றனர். பெருந்தோட்டத் துறைச் சிறுவர்களின் உரிமை மீறல்கள் காலனித்துவக் காலங்களிலிருந்தே இடம்பெற்று வருகின்றன. இலங்கையில் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது பெருந்தோட்டத் துறையிலேயே அதிகளவான சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவது அண்மைக்கால ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களிலிருந்து 225 பிள்ளைகளிடமும் பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், தோட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் போன்ற பலரிடமிருந்தும் கலந்துரையாடி தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இங்கு 6-14 வயது வரையிலான சிறுவர்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டது. அதிலும் 14 வயதிற்கு கீழ்ப்பட்ட முழு நேரத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் பிரச்சினைகளே ஆராயப்பட்டன. இதில் 12 வீதமான சிறுவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகி தொழிலில் சேர்ந்துள்ளமை கவலைக்குரியதே. சிறுவர்கள் குடும்ப வறுமையின் காரணமாகவே தொழிலில் சேர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 60 வீதமான சிறுவர்கள் தரகர்களின் ஊடாகவே தோட்டத்திற்கு வெளியில் தொழிலில் சேர்கின்றனர். இவர்கள் மிக மோசமான சூழ்நிலையிலேயே தொழில் புரிய வேண்டியுள்ளது. பெருந் தோட்டத்துறையில் சிறுவர் தொழிலை ஊக்குவிக்கின்ற ஒரு காரணியாக குடும்ப பிளவும் காணப்படுகின்றது. எனவே தொழிலில் ஈடுபடுகின்ற சிறுவர்களது நலன் முழுமையாக பாதுகாக்க முடியாத நிலை காணப்பட்டதுடன் எந்த உரிமைகளையும் அனுபவிக்க முடியாத ஒரு பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்ப துயரங்களுடனேயே வாழவேண்டிய நிலை காணப்படுகின்றது. அவர்களது திறன்கள் சிறு வயதிலேயே அழிந்து விடுகின்றன. இதனை விடவும் சிறுவர்களின் எண்ணங்கள், அபிலாசைகள் என்பவற்றை வெளிப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது. இது காலப்போக்கில் அவர்கள் வாழ்க்கையில் விரக்தி நிலையும் சமூகத்தில் வெறுப்பும் தோன்றி அவர்களை தவறான வழியில் செல்லத் தூண்டுகின்றன. அண்மைக்காலமாக சமூக, தேசிய, சர்வதேச மட்டங்களிலிருந்தும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இலங்கை அரசாங்கமானது ஒரு குடும்பத்திற்குள் பிள்ளையின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் பல நிறுவன ரீதியான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இவற்றுள் இலவசக் கல்வி வசதி, இலவச மருத்துவ வசதி, தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கவையாகும். எனினும் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இவற்றை அனுபவிக்கக்கூடிய வாய்ப்பு மிகவும் குறைவாகும். பெருந்தோட்டதுறைச் சமூகத்தில் சிறுவர் தொழிலாளர்களை தடுப்பதற்கு தேசிய சர்வதேசிய ரீதியிலான ஒத்துழைப்புக்கள் அவசியமாகின்றன. பெருந்தோட்டத்துறையின் சிறுவர் தொழிலாளர்களை குறைப்பதற்கு பல செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெருந்தோட்டத்தில் சிறுவர் நலன் தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள கசல அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து சிறுவர் நல செயல்பாடுகள் தொடர்பான ஒரு பொதுவான செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வமைப்பில் தோட்டத்தில் இருக்கின்ற பிரஜைகள் குழுக்களின் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுவர்கள் தொடர்பான செயற்திட்டங்களை முன் வைக்கும் போது முதலில் அவர்களது பிரச்சினைகள் சரியாக இனம் காணப்பட வேண்டும. சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம், அவர்களது உரிமைகள் தொடர்பான தெளிவான விளக்கம், உரிமை மீறல்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் போன்றவை தொடர்பான சிறந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தோட்டங்களில் பல மட்டங்களிலும் உள்ள மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கல்வியின் பெறுமதி பற்றி தோட்டங்களில் பெற்றோர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். இங்கு தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகள் மத்தியில் தொழில் நுட்ப பயிற்சிகளை பெறக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். சுயதொழிலை ஆரம்பிப்பதற்கான இலகு தவணைக் கடன்களை அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்களது உற்பத்திகளுக்கு சந்தை பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். இதனை விடவும் தற்போது தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை இனம் கண்டு அவர்களுக்கு புனர் வாழ்வு வழங்கக்கூடிய செயற்பாடுகளை நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் பெருந்தோட்டத்துறைச் சிறுவர் தொழிலாளர்களை தடை செய்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்தை வழங்குவதற்கு சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும். அப்பொழுதுதான் பெருந்தோட்டத்துறையில் ஒரு சுபிட்சமான எதிர்காலத்தை சிறார்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

அமரர் இரா. சிவலிங்கம் ஞாபகார்த்த நினைவு பேருரை
-ஷோபனாதேவி இராஜேந்திரன்-
பேராதனை பல்கலைகழக முதுநிலை விரிவுரையாளர்

Wednesday, September 24, 2008

பிரஜாவுரிமை சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இந்திய தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்குவதற்கு ஏற்ற வகையில் பிரஜாவுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்படவிருக்கிறது.

இதற்கேற்ப 2003ம் ஆண்டின் 35ம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது தொடர்பான சட்டத்திருத்த மூலம் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதேவேளை 1988ம் ஆண்டின் 39ம் இலக்க நாடற்றவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்குதல் சிறப்பேடுகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பிரேரணையொன்றையும் அமைச்சர் தினேஷ் சபையில் சமர்ப்பித்தார். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி தமிழ் நாட்டில் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் அனைவரும் இலங்கை பிரஜாவுரிமையை பெறுகின்றனர்.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தபோதும் பொருட்களின் விலையில் வீழ்ச்சியில்லை. தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை அவசியம்

சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைக்கப்படாமல் உள்ளமை எவ்வகையிலும் நியாயமானதல்ல. பெருந் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் தினசரி வாடி வருகின்றனர். முன்பு எண்ணெய் விலை அதிகரிப்பினால் வாழ்க்கை செலவும் அதிகரித்தமைக்கு காரணமாய் அமைந்தது.

அண்டை நாடான தமிழகத்தில் தற்போத ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகிறார்கள். உணவுப் பொருட்கள் உட்பட மண்ணெண்ணெய் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகி;ன்றது. இதே போல் நாட்டு மக்களின் பசிப் பிணியை போக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் வாழக்கை செலவை குறைக்கவும், எண்ணெய் விலையை குறைக்கவும், சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந் தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஓ. ஏ. இராமையா தெரிவித்துள்ளார்.

பத்து வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வாழும் தொழிலாளர்கள்

நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் சுமார் 48 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களாக தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த தற்காலிக குடிசை ஒன்றில் 4,5 பேர் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். இது சம்பந்தமாக தோட்ட நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தும்பொழுது காணி வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இத்தோட்டத்தில் சுமார் 160 குடும்பங்கள் வசிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 23, 2008

மலையக மக்களின் பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினையாவே பார்க்கப்பட்டது அல்லது மட்டுப்படுத்தப்பட்டது.

1948ம் ஆண்டு மலையக மக்களின் நாட்டுரிமை பறிக்கப்பட்டதன் விளைவாக 1977ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் 30 ஆண்டுகள், எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டது. அதன் பின் எமது மக்களினதும், தலைவர்களினதும் முழு சக்தியும் பிரஜாவுரிமையை மீளப் பெறுவதிலேயே கழிந்தது. இதய சுத்தியோடு சில போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அதன் பிறகு மலையக மக்களின் பிரச்சினையை 2003ம் ஆண்டு பராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டம் வரை எமது பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினை போன்றே பார்க்கப்பட்டது. எமது தேசிய இன அடையாளத்தையும், தேசிய இன உரிமையையும் நிலை நாட்டுவதன் மூலம் எமது பிரஜாவுரிமை உட்பட எமது சகல உரிமைகளையும் இந்த நாட்டின் ஏனைய இனங்களுக்கும் உள்ளது போல் நிலை நாட்டப்பட வேண்டுமென்ற தொலை நோக்குப் பார்வையில் எமது பிரச்சினை பார்க்கப்படவில்லை.

தேசிய கட்சிகளான ஐ.தே.க வாக இருந்தாலும் ஸ்ரீ.ல.சு.க ஆக இருந்தாலும் இந்த மக்களின் வாக்கு வங்கியை எப்படி தமது ஆட்சியதிகாரத்திற்கும், இருப்பிற்கும் பயன்படுத்திக் கொள்வது என்றே பார்க்கப்பட்டது. திமபு பேச்சுவார்த்தையில் தமிழ் இயக்கங்களின் பிரஜாவுரிமை தொடர்பான வலியுறுத்தல் மிக காத்திரமான பங்களிப்பைச் செய்தது. பௌத்த பிக்குகளும், சிங்கள இனவாத அமைப்புக்களும் இந்தியா போன்ற வல்லரசொன்று எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்காக இந்த பிரஜாவுரிமை விடயத்தில் ஆதரவு நல்கின.

ஆகவே மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை ஒவ்வொரு கட்சியினதும் நலம் சார்ந்த பிரச்சினையாகவும், அவர்களது வாக்கு வங்கியை குறிக்கோளாக கொண்டதாகவும் அமைந்ததே அல்லாமல் மலையக தமிழ் மக்களின் பிரச்சினையை நீண்டகால நோக்கில், முழுமையாக தீர்க்க வேண்டுமென்ற அடிப்படையில் பார்க்கப்படவில்லை. எனவே எமது தலைவர்கள் உட்பட தேசிய கட்சிகள் வரை எமது மக்களின் பிரச்சினையை ஒரு பிரஜாவுரிமை பிரச்சினையோடு சகல உரிமைகளும் வழங்கப்பட்டு மற்ற இனங்களைப் போல தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமென்ற அபிலாசையோடு பார்க்கப்படவில்லை

-சமகால அரசியல் - தீர்வு – அ. லோறன்ஸ் -

உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்

உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை பெருந்தோட்டப் புறங்களுக்கும் முன்னெடுக்கப்பட கூடியதாக சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரின் பாரியார் புசல்லாவ நியூபீகொக் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்களை பார்வையிடும் போது மக்கள் மத்தியில் தெரிவித்தார். மேலும் வடக்கு கிழக்குடன் ஒப்பிடும் போது அச்சமற்ற சூழலில் வாழக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோம். உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் தோட்டப்புறங்களுக்கு சென்றடைவதில்லை. இதனால் பிரதிநிதிகளை தெரிவு செய்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறிவூட்டல் நிகழ்வில் 500 பேர் பங்கேற்பு

தோட்டத் தொழிலாளர்களின் அடையாள அட்டையை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத தடையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் கண்டியிலும், மாத்தளையிலும் நடத்தப்பட்ட அறிவூட்டல் நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வு மாத்தளை பிரதேச செயலகம், ரொக்சைட் தோட்ட மண்டபம், கண்டி குருதெனிய கல்வி வள நிலையம், லொவர் கொத்மலை கிளப் ஆகிய இடங்களில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தோட்ட முகாமையாளர்கள், தோட்ட சமூக நல அதிகாரிகள், தோட்ட மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பிறப்பு சான்றிதழ் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் சமூக அபிவிருத்தி, இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்குமிடையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய மனித வள அபிவிருத்தி நிதியம் இதனை முன்னெடுத்துள்ளது.
பெருந்தோட்டத்துறைச் சிறுவர் உரிமை மீறல்கள்

தொடர்ச்சி......

-ஷோபனாதேவி இராஜேந்திரன்-

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் சமூக ரீதியான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வகையிலான இலக்கினை அடைந்து கொள்வதற்கான ஒரு பயிற்சியினை கல்வி வழங்கி தயார்ப் படுத்துகின்றது. ஆனால், இத்தகைய அடிப்படை கல்வியைக்கூட பெருந்தோட்டத்துறையில் சுமார் 16 வீதமான சிறார்கள் எய்த முடியாத நிலை (தொழிலில் ஈடுபட்டுள்ள) காணப்படுகின்றது.

தொழிற் சந்தையில் நுழைவதற்கான வழிமுறைகள்

தோட்டத்துறையைச் சேர்ந்த சிறுவர்கள் தொழிலில் நுழைவதற்கான பல்வேறு விதமான வழிமுறைகள் காணப்படுகின்றன. இவர்கள் முறைசாராத தொழிற் சந்தைகளிலேயே தொழிலைப் பெறுகின்றனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 60 வீதமான சிறுவர்கள் தரகர்கள் மூலமே தோட்டத்திற்கு வெளியே தொழிலைப் பெற்றுக்கொள்கின்றனர். ஒவ்வொரு தோட்டத்திலும் குறிப்பாக வீட்டுப் பணியாட்களாக சிறுவர்களை அனுப்புவதற்கான தரகர்கள் அத்தோட்டத்திற்குள்ளேயே இருக்கின்றனர்.

இவ்வாறு சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் தரகர்கள் அவர்களது பெற்றோரை ஏமாற்றி சிறுவர்களைத் தொழிலுக்கு சேர்த்து விடுகின்றனர். இதற்கான சன்மானத்தை தொழிலுக்கு அமர்த்தும் இடத்திலிருந்து பெற்றுக்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி சிறுவர்களை ஏமாற்றி அவர்களை வீட்டுக்கு வீடு மாற்றுவதன் மூலம் தொழிலுக்கு அமர்த்தும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் தரகுப் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். சிறுவர்களை மூலதனமாக வைத்து அவர்கள் உழைப்பை சுரண்டுகின்ற இந்த தரகர்கள் எத்தகைய குற்றவாளிகள் என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயம் அல்லவா?

அட்டவணை-04
தரகர்கள் - 60 வீதம்

பெற்றோர் - 20.5 வீதம்
ஏனைய உறவினர்கள் - 6.5 வீதம்
தொழில் வழங்குநர் – 8.3 வீதம்
சிறுவர்கள் - (தாமாகவே சேருதல்) – 3.2 வீதம்
ஏனையவை – 1.4 வீதம்

மொத்தம் - 100 வீதம்

அட்டவணை 4 இன் படி 20.5 வீதமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரடியாகவே தொழிலில் சேர்த்து விடுகின்றனர். இவ்வாறு நேரடியாக தொழிலில் சேர்க்கின்றபோது தொழில் வழங்குநர்களால் தரகர்களுக்கு சன்மானம் கொடுப்பதைப் போலவே பெற்றோர்களும் சன்மானத்தைக் கொடுக்கின்றனர். இது பெற்றோர்கள் தம் சொந்தப் பிள்ளைகளை பணத்திற்காக விற்பனை செய்வதாக கருதும் நிலையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் இவ்வாறு பெற்றுக்கொள்ளும் பணத்தில் அதிகமான பகுதியை தமது மதுபாவனைக்காக பயன்படுத்துவது ஆய்வின் போது அறியக்கூடியதாக இருந்தது. இவர்கள் சிறிதேனும் பிள்ளையின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் செயற்படுகின்றனர். பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்தி அப்பிள்ளைகளின் அறிவு, ஆற்றல், ஆளுமை ஆகிய அனைத்தையும் அரும்பிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றனர். இந்நிலையில் பிள்ளைகளின் சுதந்திரத்திற்கு முழுமையாக பங்கம் விளைவிக்கப்படுவதன் மூலம் அவர்களது சகல உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இவ்வகையில் நோக்கும்போது பிள்ளைகளை தொழிலில் அமர்த்துவதற்கு வழி செய்கின்ற பெற்றோர்களே முதல் குற்றவாளிகள். எனவே, பொறுப்பற்று பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணடிக்கும் பெற்றோர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.

சிறுவர் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல்

இலங்கையில் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சிறந்த சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இங்கு 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பாக முழுமையாக கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக சிறுவர்களின் கல்விக்கான உரிமையை பாதுகாக்கும் வகையில் கட்டாயக் கல்வி அமுலாக்கம் நடைமுறையில் உள்ளது. இதன்படி 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் முழு நேரத் தொழிலில் ஈடுபடுவது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், சட்டத்திற்கு முரணான வகையில் சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுவது தொடர்பாக ஏலவே இங்கு நோக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பொதுவாக முறைசாராத துறைகளில் தொழில்களை பெற்றுக்கொள்கின்றனர். பிள்ளைகளின் அபிவிருத்தித் தேவை, குடும்பத்தின் பொருளாதாரத் தேவை இவை இரண்டிற்குமிடையில் ஒரு சமத்துவத்தன்மை இல்லை என்றே குறிப்பிடலாம். இங்கு குடும்பத்தின் பொருளாதார தேவையை முன்னுரிமைப்படுத்தி அதனடிப்படையில் சிறுவர்களை தொழிலில் அமர்த்துவது ஒரு பொதுவான விடயமாக காணப்படுகின்றது. இவ்வாறு முறைசாரா துறைகளில் தொழில்புரியும் சிறுவர்களின் ஊழியச் சுரண்டல் மிக உயர்வான நிலையில் இருப்பதை அறியக்கூடியதாக உள்ளது. சிறுவர்கள் தமது குறைந்தபட்ச கூலியை பெற்றுக்கொள்ள மிகக்கூடிய மணித்தியாலங்கள் உழைக்க வேண்டியுள்ளது. எனவே, தொழில்புரியும் பிள்ளைகள் மிக குறைந்தளவு நேரமே ஓய்வினை அனுபவிக்கின்றனர். தொழில் வழங்குநர்கள் சிறுவர்களிடமிருந்து மிக நீண்ட நேர உழைப்பினை பெற்றுக்கொண்டு மாறாக, அவர்களுக்கு குறைந்தபட்ச கூலியையும் விட மிகக்குறைவான கூலியையே வழங்குகின்றனர். இதிலும், 90 வீதமான சிறுவர்களுக்கு வழங்கப்படும் கூலியை பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ பெற்றுக்கொள்கின்றனர்.

மேலும், தொழில்புரியும் சிறுவர்களுக்கு தொழில் செய்யும் இடத்தில் ஓர் ஆரோக்கியமான சூழல் இருப்பதில்லை. மாறாக, மிக மோசமான சூழ்நிலைகளின் கீழே இவர்கள் தொழில்புரிய வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இது அவர்களது முறையான உடல், உள ரீதியான வளர்ச்சிக்கு பாதகமாகவே உள்ளது. அத்துடன், முழுநேர சிறுவர் தொழிலாளர்களின் தொழிலில் ஈடுபடும் நிலைமையானது அவர்களது உடல் நலத்தினையும் தனியாள் அபிவிருத்தியையும் பாதிக்கின்றது.

சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுவதற்கான காரணங்கள் வறுமையும் வேலையின்மையும்
சமூக, பொருளாதார சமத்துவமின்மையினாலும் போதியளவு கல்வி வசதியின்மையினாலும் உருவாக்கப்பட்ட வறுமை நிலையே சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதற்கு மூல காரணமாக இருக்கின்றது (சர்வதேச தொழிலாளர் தாபனம், 2002). பேரின மட்டத்தில் நோக்குகையில் ஒரு நாடு செல்வந்த நாடாக மாறுகின்ற போது அந்நாட்டின் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துகின்ற நிலை குறைவடைந்து செல்லும்.

சீனாவில் உன்னதமான உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பினையடுத்து 1970 களிலிருந்து அந்நாட்டில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலானது மிகத் துரித நிலையில் வீழ்ச்சி கண்டுள்ளது. (Basuand Tzannators, 2003). ஒரு நாட்டின் வறுமை நிலையும் தொழிற்படையில் சேர்ந்தவர்களில் அதிகமானோர் தொழிலற்று இருப்பதும் அந்நாட்டின் சிறுவர்களை தொழிலாளர்களாய் ஊக்குவிக்கும் பிரதான காரணியாக அமைந்துவிடுவதாக பல நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டுத்துறையினரது வருமானம் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலுக்குமிடையே எதிர்க்கணிய தொடர்பு காணப்படுகின்றது எனலாம். பெருந்தோட்டத்துறையில் குடும்பப் பருமன் உயர்வாக இருத்தல், குறைந்த கூலி வீதம் என்பன வறுமையை தோற்றுவிக்க, அது சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் நிலையினை உயர்த்தியுள்ளது.

கல்வி

இலங்கையின் தேசிய ரீதியிலான கல்வி மட்டத்துடன் ஒப்பிடுகின்ற போது பெருந்தோட்டத் துறையின் கல்வி மட்டமானது மிகக் குறைவாக இருப்பதனை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வகையில் தோட்டத்துறையிலேயே பாடசாலை இடைவிலகல் வீதம் உயர்வாக காணப்படுகிறது. குறைவான கல்வி மட்டமும் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பிற்கு பங்களிப்பு செலுத்தும் காரணியாகவுள்ளது. அத்துடன் பெண்களின் கல்வியில் ஏற்படும் அதிகரிப்பானது அவர்களின் பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு நிலை, கல்வி என்பவற்றுடன் நேரான தொடர்பினை கொண்டுள்ளது.

சிறந்த கல்வியை பெற்ற தாய்மார்கள் சிறந்த வகையில் பிள்ளைகளை வழிநடத்துவார்கள் (Wolpin, 1994 ) இலங்கையில் பெண்களின் எழுத்தறிவு வீதமும் பாடசாலை சேரும் வீதமும் ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை விட மிக உயர்வான நிலையல் காணப்படுவதாக 2005 ஆம் ஆண்டின் மனித அபிவிருத்தி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இங்கு தோட்டத் துறையில் பெண் கல்வி வீதம் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த நிலையில் காணப்படுகின்றது (சுயதநனெசயn, 2007). எனவே பெண் கல்வியறிவும் சிறுவர் தொழிலாளர்களை குறைப்பதில் பாரிய பங்களிப்பினை செலுத்தும் காரணியாகவுள்ளது.

குடும்பப் பிளவும் தாய் அல்லது தந்தை மட்டும் உள்ள குடும்பங்களும்

பெருந்தோட்டத்துறையில் சிறுவர்களைத் தொழிலுக்கு தூண்டும், தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக குடும்பப் பிளவு என்ற அம்சம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆய்வுத் தகவல்களின்படி 14 வயதிற்குக் கீழ் சிறுவர் தொழிலாளராக உள்ள பிள்ளைகளில் 20 வீதமான பிள்ளைகளின் தகப்பன்மார்களும் 05 வீதமான பிள்ளைகளின் தாய்மார்களும் குடும்ப பிரச்சினைகளால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். மேலும் 07 வீதமான பிள்ளைகள் தாய், தகப்பன் இருவரும் இல்லாதவர்களாகக் காணப்படுகின்றனர். ஒரு பெற்றோரை மட்டும் கொண்டுள்ள பிள்ளைகள் தொழிற் சந்தையில் பலவந்தமாக தள்ளப்படுகின்றனர். பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் எந்த விதத்திலும் அனுபவிக்க முடியாத இப்பிள்ளைகளின் நிலை பற்றி அக்கறை கொள்ளாது தொழிலுக்கு தள்ளப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது.
இதனை விடவும் பெற்றோரின் மத்தியில் காணப்படும் மதுபாவனைப் பழக்கமும் பெரிதும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தப்படுவதற்கான காரணமாக உள்ளதை ஆய்வின் போது காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலான பெற்றோர் தமது வருமானத்தில் 50 வீதத்திற்கும் அதிகமான பகுதியினை மதுபாவனைக்கு செலவழித்து விட்டு தம் சிறார்களை எஜமான்களின் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவது மன்னிக்க முடியாத குற்றமல்லவா?

சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதால் ஏற்படும் விளைவுகள்

சிறுவர்கள் பெரும்பாலும் அவர்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே தொழிலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தொழிலில் ஈடுபடும் சிறுவர்களினது தொழில் நிலைமைகள் மிக மோசமாக காணப்படுகின்றது. இதன் விளைவாக அச்சிறுவர்கள் இளம் பராயத்தை அடையும் போது அவர்கள் தரம் குறைந்த சுகாதாரத்தினைக் கொண்டவர்களாகவும், குறைந்த கல்வித் தரத்தினைக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இத்தகைய போக்கு அடுத்த தலைமுறையிலும் சிறுவர் தொழிலாளர்கள் உருவாகுவதற்கு வழி வகுக்கிறது.

பெருந்தோட்டத்துறையைப் பொறுத்த வரை தொழிலில் ஈடுபட்டுள்ள சிறவர்கள் குறைவான கல்வித் தரத்தினைக் கொண்டமையினால் அவர்களது வாழ்க்கையில் பல சிறந்த சந்தர்ப்பங்களை இழக்கின்றனர். அதனால் அவர்கள் பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவையாவன்

  • இளம் பருவத்தில் தொழில்வாய்ப்பு குறைவாக காணப்படும்.
  • அவர்களது குறைந்த முதலீட்டால் தொழிற் சந்தையில் குறைந்த வருமானத்தையே உழைக்க முடியும்.
  • குறைந்த கல்வித் தரம் அவர்களது தொழில் சார் திறனை வளர்க்கும் இயலளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
  • சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றது.
  • அவர்களது தலைமைத்துவம் குறைந்த தரத்திலேயே காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட மனநிலை உள்ளவர்களாகவும் சமூகத்தின் மீது வெறுப்புணர்வுள்ளவர்களாகவும் வளர்கிறார்கள்.
  • பல சிறுவர் தொழிலாளர்கள் சமூக விரோதிகளாவும், குற்றவாளிகளாகவும் ஆகிவிடுகின்றனர்.

(தொடரும்...)

Monday, September 22, 2008

1931ம் ஆண்டு இலங்கையின் முதல் பொதுத் தேர்தலில் மலையகத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள்

இலங்கையை தாயகமாகக் கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் வாழ்ந்து கல்வி, சொத்து, வருமானத் தகைமை கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வசித்து, மேலும் நிலையாக வசிக்கும் நோக்கமுடையோருக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழ் கொண்டோர் என்போருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இச் சட்டத்தால் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளரில் ஒரு பகுதியினர் வாக்களிக்கும் உரிமை பெற்றனர்.

1931இல் இலங்கையின் முதல் பொதுத் தேர்தலில் தோட்டப்பகுதிகளில் கணிசமான அளவு அரசியல் பிரச்சாரம் நடைபெற்றது. எஸ்.பி. வைத்தியலிங்கம் (தலவாக்கொல்லை), பெரிசுந்தரம் (ஹட்டன்), ஆகிய இரு இந்திய வம்சாவழியினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரி சுந்தரம் புதிய அரச கவுன்சிலில் (ஸ்டேட் கவுன்சில்) தொழில், கைத்தொழில் வர்த்தக மந்திரியானார். 1936 இல் இந்திய வாக்காளர்களின் தொகை 1,45,000 ஆக உயர்ந்தபோது தோட்டப்பகுதியில் அரசியல் குழப்பம் புதுப்பிக்கப்பட்டது. 1936ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரு இந்தியர்களான எஸ்.பி வைத்தியலிங்கம் (தலவாக்கொல்லை), கே. நடேச ஐயர் (ஹட்டன்) ஆகிய இரு இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐந்து வருடத்துக்கொரு முறை பொதுத் தேர்தல் நடப்பதால் 1941ஆம் ஆண்டு தேர்தலுக்காக மிகுந்த தயாரிப்புகள் இடம் பெற்றன. (ஆனால் இரண்டாம் உலகப் போரினால் இது பின் போடப்பட்டது) இவ்வாண்டில் இந்திய வாக்காளர் தொகை 2,25,000 ஆக உயர்ந்தது. தோட்டத்துறையில் தேர்தல் உற்சாகம் பரவியதும், 1939க்குப் பின்னர் பரவிய தொழிற்சங்க ஆதரவும் அரசியல் விழிப்புக்கு வழிகோலியது.

-இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்- குமாரி ஜெயவர்த்தனா-

தோட்டப்புற வைத்தியசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லை, மருந்துகளுக்கு தட்டுப்பாடு


மலையக தோட்டப்புற வைத்தியசாலைகள் பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன. பயிற்சி பெற்ற வைத்தியர்களோ, அல்லது தாதியர்களோ இங்கு இருப்பதில்லை. ஒரு சில வைத்தியசாலைகள் தங்குமிட வசதியுடன் காணப்படுகின்ற போதிலும் ஏனையவை உரிய சுகாதார வசதிகளுமற்ற, படுக்கையறை வசதிகள், மலசலகூட வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன இல்லா நிரையே காணப்படுகின்றன. அண்மைக்காலமாக மருந்துக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏல்லா நோய்களுக்கும் ஒரே விதமான மருந்துகளே வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியினால் தனியார் மருந்துசாலைகளில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை. தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க உள்ளதாக கடந்த தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் முறையாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

வாரத்தில் இரு நாட்கள் மாத்திரமே வேலை

மாத்தளை ரத்வத்தை- பன்சல தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் மாத்திரமே வேலை வழங்குவதால் தொழிலாளர்கள் வெலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இ.தொ.கா பிரதிநிதி தோட்ட நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தும் தற்போது மீண்டும் வாரத்தில் மூன்று நாட்களே வேலை வழங்குவதால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் இறங்க போவதாக தெரிவிக்கின்றனர்.

Sunday, September 21, 2008

மலையக மக்களின் நாட்டுரிமையை பறித்த சுதந்திர இலங்கையின் முதல் பாராளுமன்றம்

1830 களில் தோட்டத் தொழிலாளர்களின் வருகைக்கும், 1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமைப் பறிப்புக்கும் இடையில், சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் கொண்டு வந்த இரண்டு பிரதான சட்டங்கள் இம் மக்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றியதோடு அல்லாமல் இம் மக்களை 30 வருடங்கள் இந்த நாட்டின், அரசியல் அநாதைகளாக்கி விட்டன. அந்த இரண்டு மனித உரிமை மீறல் சட்டங்கள்தான் 1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டமும், 1949ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமுமாகும். இந்தச் சட்டங்களின் பாரதூரம் அன்று அவ்வளவாக தெரியவில்லை. மலையகத் தமிழ் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேல், அரசியல் அநாதைகளாக்கப்பட்டு சமகால அரசியலில் அவர்கள் அனுபவித்த மிக மோசமான இன அடக்குமுறை இந்தச் சட்டங்களின் கொடூரத் தன்மைக்கு சான்று பகர்வதாக உள்ளது.

இந்த மக்கள் அரசியல் பிரதிநிதித்துவமற்று, அபிவிருத்தி நடவடிக்கைகளிலே புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து புறம் தள்ளப்பட்டு, இந் நாட்டின் ஓரம் காட்டப்பட்ட சமூகமாக விளங்குவதற்கு, இச் சட்டங்கள் சமகால அரசியலிலே முக்கிய கருவியாக அமைந்தன. இந்தச் சட்டங்களிலே காணப்பட்ட மிக மோசமான, ஆனால் நுணுக்கமான ஒடுக்கு முறையை பிரித்தானியர்கள் கண்டு கொள்ளது, சிங்கள பெருந்தேசிய வெறியர்களை திருப்திப்படுத்துவதிலேயே, கண்ணும் கருத்துமாக இருந்தனர் என்பதைக் காட்டுவதாக அமைகின்றது. சர்வதேச சட்ட விதிகளையே இச்சட்டம் மீறுவதாக அமைந்தது.

சமகால அரசியல்- லோறன்ஸ்

Saturday, September 20, 2008

தொடர்ச்சி

பெருந்தோட்டத்துறைச் சிறுவர் உரிமை மீறல்கள்

- ஷோபனாதேவி இராஜேந்திரன் -

முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் பற்றி குறிப்பு சிறுவர்களின் தொழில் நிலை. இங்கு தொழில் நிலை என்கின்ற போது அது சிறுவர்களின் சமூக அந்தஸ்தினையும் சிறுவர் பராய நடவடிக்கைகளையும் குறிப்பிடுகின்றது. பிள்ளைகளின் சிறந்த உடல் வளர்ச்சியும், சுறுசுறுப்பான பங்குபற்றலும் எந்தவொரு சமூகத்தினையும் உத்தம அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும். சிறுவர்களின் தொழில் நிலை பற்றிய தகவல்களை அட்டவணை 02 இல் காணலாம்.

பெருந்தோட்டத்துறையில் 06 - 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 10.3 வீதமான ஆண்பிள்ளைகளும் 14.6 வீதமான பெண் பிள்ளைகளும் முழு நேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல்களின் படி பெருந்தோட்டத் துறையில் 12.4 வீதமான சிறுவர்கள் முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். மேலும், 3.8 வீதமான சிறுவர்கள் எவ்வித குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடாது வெறுமனே தோட்டத்தில் சுற்றித்திரிகின்றனர்.

முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் தொழில் வகைகள்

வேலையின் வகைக்கேற்ப தொழிலானது வகைப்படுத்தப்பட்டுள்ளது. முழுநேரத் தொழில் புரியும் சிறுவர்களின் தொழில் வகையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவர்களுள் 50.5 வீதமான சிறுவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகத் தொழில் புரிகின்றனர். அதிலும் 85.5 வீதமான சிறுவர்கள் பெண்களாவர். இத்தொழிலானது தோட்டங்களுக்கு வெளியே நகர்ப்புற வீடுகளிலேயே காணப்படுகின்றது. இச்சிறுவர்கள் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் ஏலவே வீடுகளில் தொழில்புரிந்து பல இன்னல்களை அனுபவித்து தற்போது வீடு திரும்பி மீளவும் தொழிலை நாடி நிற்கும் சிறுவர்களிடமிருந்தே பெறப்பட்டது.
இச்சிறுவர்கள் காலை 5.00 மணி - இரவு 9.00 மணி வரை தொடர்ந்தும் வேலைசெய்ய வேண்டும். இவர்களுக்கு மதிய உணவிற்காக குறைந்த நேரமே (30 40 நிமிடங்கள்) வீட்டு எஜமான்களால் அனுமதிக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி, வீட்டு பணியாட்களாக தொழிலுக்கு அமர்த்தப்படும் பிள்ளைகள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இங்கு தொழில்புரியும் சிறுவர்களின் உரிமைகள் முழுமையாகவே மீறப்படுகின்றன. அவர்களது சுயமான சிந்தனை, செயற்பாடுகளுக்கு எவ்வித இடமும் வழங்கப்படுவதில்லை.
பெற்றோரின் அன்பினையும் பாதுகாப்பினையும் வேண்டி நிற்கும் சிறுவர்களுக்கு வெறுமனே அவர்களது எஜமானின் துன்புறுத்தல்களும் ஆதிக்கங்களும் பாரபட்சங்களுமே கிடைக்கின்றன. மேலும், இச்சிறார்கள் பல துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக வேண்டிய துரதிர்ஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


வீட்டுப் பணியாட்களாக தொழில்புரிந்த சிறுவர்களிடம் கலந்துரையாடியபோது அவர்களது கசப்பான உண்மை சம்பவங்கள் கண்ணீர்த் துளிகளாலும் விரக்தி வார்த்தைகளாலும் பொங்கி எழுந்தன. உதாரணமாக 14 வயதுடைய ஒரு பெண் சிறுமியின் ஆதங்கம் பின்வருமாறு வெளிப்படுத்தப்பட்டது;

“நான் கொழும்பில் மிகப் பெரிய பணக்கார வீட்டில் மூன்று வருடங்கள் ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த எஜமானின் பிள்ளைகள் விளையாடும்போது எட்டிப்பார்த்து உதைவாங்குவேன். பசியில் பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டு பல தடவைகள் அடி வாங்கினேன். எஜமான் மட்டுமல்ல, அவர்களது இரு பிள்ளைகளும் என்னை அடிப்பார்கள், உதைப்பார்கள் எனக்கு வேலை செய்ய கஷ்டமாக இருக்கு வீடு போக வேண்டும் என அழுதபோது என்னை மிரட்டி சூடு வைத்தார்கள். (இதோ அந்த அடையாளம் என்று காட்டினாள்). அந்த வீட்டு நாயின் சொகுசு கூட எனக்குக் கிடைக்கல. அநியாயம் நாயா பிறந்தா நல்லா இருக்கலாம் என நினைத்துள்ளேன். எனக்கு காய்ச்சல் வருத்தம் வந்து என்னை வீட்டுக்கு அனுப்பிவைச்சாங்க. ஆனால், அப்பா என்னை வேற வீட்டுக்கு அனுப்பப் போறாரு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”
இத்தனை துயரங்களை தாங்கி வந்த சிறுமிக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. மீண்டும் அவளின் பெற்றோர் புதிய இடத்தில் வேலை தேடுகின்றனர். இதேபோல், பல சிறுவர்கள் சிறுமியர்களிடம் கலந்துரையாடிய போது பல உடல், உள ரீதியான இம்சைகளிலிருந்து தம்மை பாதுகாக்க முடியாத நிலையில் இருப்பதை அறியக்கூடியதாக இருந்தது.


மேலும், வீட்டுப் பணியாட்களாகப் பணிபுரியும் சிறார்கள் உடல்சார் துன்புறுத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களது பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அல்லது அவர்களது பெற்றோர், உறவினர்கள் இது தொடர்பாக நியாயம் கேட்க முடியாத ஒரு துர்ப்பாக்கியசாலிகளாக காணப்படுகின்றனர். மாறாக, அப்பிள்ளைகள் வீட்டுப் பணியாட்களாக பணிபுரிவதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி அறிந்த பின்பும் கூட மீண்டும் மீண்டும் அச்சிறார்கள் அந்த நச்சு வட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவிப்பதை இவ்வாய்வின் போது அறியக்கூடியதாக இருந்தது. வேலைப்பளுவினை மட்டும் இச்சிறார்கள் சுமக்கவில்லை. கூடவே துன்பங்களையும் துயரங்களையும் சேர்த்தே சுமக்கின்றார்கள். இதனை விடவும் 24.8 வீதமான சிறுவர்கள் சிறிய கடைகள், உணவு விடுதிகள், வீதியோர வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய தொழில்களில் பெரும்பாலும் ஆண் சிறுவர்களே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். (அட்டவணை 3) இவர்களும் வீட்டுப் பணியாட்களாக பணிபுரியும் சிறுவர்களைப் போலவே பல்வேறு இம்சைகளுக்கும் ஆளாகின்றனர். அச்சிறுவர்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என்றும் பழுதடைந்த உணவு கொடுக்கப்படுவதாகவும் அவர்கள் புகார் செய்தனர். இதனை விடவும் எவ்வித பொழுதுபோக்கோ, ஓய்வோ அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் மிக நீண்டநேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் அச்சிறுவர்கள் குறிப்பிட்டார்கள்.

சிறுவர்கள் 14 வயது வரை கட்டாயக் கல்வி கற்க வேண்டும் என இலங்கைச் சட்டம் காணப்பட்ட போதும் அந்த கட்டாயக் கல்வியைக் கூட பெறமுடியாத துர்ப்பாக்கியசாலிகளாக இந்த சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு மனிதனின் அபிவிருத்தி செய்முறையில் பங்குபற்றவும் அவனது திறனை வளர்க்கவும் ஆகக் குறைந்தது அடிப்படைக் கல்வியையாவது பெற்றிருக்க வேண்டும்.

தொடரும்…..

Friday, September 19, 2008

பெருந்தோட்டத்துறைச் சிறுவர் தொழிலாளர்கள் பற்றிய கண்ணோட்டம்

- ஷோபனாதேவி இராஜேந்திரன்-

பெருந்தோட்டத்துறைச் சிறுவர்களின் உரிமை மீறல்கள் காலனித்துவ காலம் தொட்டே இடம்பெற்று வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலேயே பிரித்தானியர்கள் சிறுவர்களைத் தொழிலில் அமர்த்துவதில் முனைப்புக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து சராசரியாக 8,000 ஆயிரம் சிறுவர்கள் தொழிலாளர்களாக பெருந்தோட்டத் துறையில் பணிபுரிவதற்காக கொண்டுவரப்பட்டனர். (சுயுஊர்நுடு, 1989) பெருந்தோட்டங்களில் தேயிலைப் பயிர்ச் செய்கை அறிமுகமானதையடுத்து பெருந்தொகையான சிறுவர் ஊழியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களையும், சிறுவர்களையும் மலிவான கூலியில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு காணப்பட்டமையினால் இவர்களை தோட்டத் தொழிலில் அமர்த்துவதில் தோட்ட உரிமையாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டிவந்தனர். அதிலும் குறிப்பாக பெண்தொழிலாளர்களைக் காட்டிலும் சிறுவர் தொழிலாளர்களை மலிவான கூலியில் பெறமுடியும் என்பதை அறிந்து தோட்ட உரிமையாளர்கள் தோட்டத்துறையில் தொழிலாளர்களை தொழிலுக்கு சேர்க்கின்ற போது குடும்ப இடப்பெயர்வினை பெரிதும் ஊக்கப்படுத்தி வந்தனர். 1922 ஆம் ஆண்டில் ஆண்,பெண் குறைந்தபட்ச கூலி வீதத்தினை விட சிறுவர்களின் குறைந்தபட்ச கூலியானது குறைவாகவே காணப்பட்டது ( அட்டவணை 01) எனினும், 1939 ஆம் ஆண்டில் இலங்கை கட்டாயக் கல்வியை
அறிமுகப்படுத்தியமையும் சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டதையடுத்துத் தோட்டத்துறைச் சிறுவர்களைத் தொழிலில் சேர அனுமதிக்கவில்லை. இதனையடுத்து இச்சிறுவர்கள் தோட்டத்துக்கு வெளியில் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அட்டவணை- 01குறைந்தபட்ச கூலி வீதம்

நாட்சம்பளம்
ஆண் 38
ண் 28
சிறுவர் 19
மூலம் - மத்திய வங்கி - 1960

இக்காலகட்டத்தில் பெருந்தோட்டத்துறைச் சிறுவர்களின் கல்வி தொடர்பான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 1970 ஆம் ஆண்டு வரை தேசிய ரீதியிலான கல்விக் கொள்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெருந்தோட்டத்துறைப் பாடசாலைகளைச் சென்றடைந்தன (வுர்யுNயுசுயுதுஇ 2004) ஆனால், இலங்கை சுதந்திரம் அடைய முன்பே 1945 ஆம் ஆண்டில் தேசிய கல்வி முறை கொண்டுவரப்பட்டது. எனினும், பெருந்தோட்டத்துறை கல்விமுறை தேசியக் கல்வி முறையோடு ஒன்றிணைக்கப்படவில்லை. 1970 ஆம் ஆண்டுவரை பெருந்தோட்டத்துறை கல்வியானது மிகவும் தரம் குறைவாகவே காணப்பட்டது. எனவே, இவ்வகையில் நோக்கும் போது குறைந்த கல்வி நிலையும் அவர்களின் குடும்ப வறுமையுமே சிறுவர் உழைப்பிற்கான பிரதான காரணியாக அமைகின்றது எனலாம்.
ஒரு சமூகத்தின் கல்வி நிலையே அச்சமூகத்தின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கின்றது. சிறுவர் உழைப்பானது கற்றலுக்கான வாய்ப்பினை மறுக்கின்றது. கல்விக்கான சிறுவர் உரிமை மீறலானது அவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றல் போன்றவற்றை வளரவிடாது தடுப்பதுடன் மாறாக, ஓர் ஆரோக்கியமற்ற சந்ததியினரை உருவாக்குகின்றது. இவ்வகையில் பெருந்தோட்டத்துறை சமூகத்தின் கல்வி பின்னடைவு அச்சமூக முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதுடன் குறிப்பாக அச்சிறுவர்களின் உரிமை மீறலுக்கும் வழிவகுக்கின்றது.
எனவே, இவ் ஆய்வுக் கட்டுரையானது பெருந்தோட்டத்துறை சார்ந்த சிறுவர்களின் உழைப்பினைப் பகுப்பாய்வு செய்வதுடன் அவற்றினைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ் ஆய்வில் மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள ஐந்து வீதமான தோட்டங்கள் (பத்து தோட்டங்கள்) எழுமாறாக தெரிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தெரிவு செய்யப்பட்ட 10 தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 0614 வயதிற்குட்பட்ட 225 பிள்ளைகளிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. இவர்களில் 100 பேர் ஆண்பிள்ளைகள். ஏனைய 125 பேரும் பெண் பிள்ளைகளாவர்.தோட்டங்களில் தொழில் புரியும் சிறுவர்களைப் பகுதிநேர தொழில் புரியும் சிறுவர்கள், முழுநேர தொழில் புரியும் சிறுவர்கள் என இருவகையில் உள்ளடக்கலாம். ஆனால், இக்கட்டுரை முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களிலேயே கவனம் செலுத்துகின்றது.
(தொடரும்..)
தினக்குரல்

அரச, தனியார் வங்கிகளில் தமிழ் ஊழியர்கள் இல்லை

இரத்தினபுரி மாவட்ட அரச மற்றும் தனியார் வங்கிகளில் தமிழ் ஊழியர்கள் நியமிக்கப்படாமையினால் அம் மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மக்கள் மொழிப் பிரச்சினை காரணமாக தமது தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாது சிங்களம், ஆங்கிலம் தெரிந்த ஒருவரை நாட வேண்டியுள்ளது. இதன்போது குறிப்பிட்ட நபர் தரகுப்பணம் எதிர்பார்ப்பதாகவும் இதனால் தமது வைப்பில் குறிப்பிட்ட பணம் தரகுப் பணத்திற்காக இழக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில தோட்டத் தொழிலாளர்கள் தமது சேவைக்கால பணம் ஊ.சே.நி., ஊ.ந.நி. போன்ற இன்னோரன்ன கொடுப்பனவுகளை காசோலையினூடாக பெறும் பட்சத்தில் அதனை மாற்றுவதற்கு தரகர்களை நாட வேண்டியுள்ளது. இதன் போது தரகர்களால் பணம் தரகர்களால் கையாளப்பட்டு வருகின்றன. இதனையறியாத தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஓய்வூதியம் பெற்றும் தமது கடைசிக் காலத்தில் தமது உழைப்பில் பெற்ற பணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இம் மாவட்டத்தில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பான் ஆசியா வங்கி, செலான் வங்கி, அட்டன் நஷனல் வங்கி, சப்ரகமுவ அபிவிருத்தி வங்கி, பிராக்தன வங்கி, சனச வங்கி உள்ளிட்ட பல வங்கிகளின் தலைமைக் காரியாலயங்களும் பிராந்திய காரியாலயங்களும் இருந்தபோதும் தமிழ் மொழி தெரிந்த ஊழியர்கள் இல்லை. எனவே தமிழ் தெரிந்த ஊழியர்களை நியமிக்குமாறு அப்பிரதேச மக்கள் கோருகின்றனர்

தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முற்பணமாக 5,000 - இ.தொ.கா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு பண்டிகை முற்பணமாக 5,000 ரூபா வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டுமென்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதால் தினசரியாக வாழ்க்கைச் செலவுக்கு போராடிக் கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இத்தொகை போதுமானதல்ல. எவ்வாறாயினும் சகல மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் குறிப்பிடப்பட்ட தொகை வழங்கப்பட வேண்டும். இதுவரை 3,000 மாத்திரம் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday, September 18, 2008

அகதிகளாக தங்கியுள்ள இலங்கையருக்கு பிரஜாவுரிமை வழங்க சட்டமூலம்

இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் 90,000 பேர் அகதிகளாக வாழ்கின்ற நிலையில் இதில் 28,500 பேர் இந்தியாவினதோ அல்லது இலங்கையினதோ பிரஜாவுரிமை இன்றி அங்கு வாழ்கின்றனர். இவர்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு சட்டமூலத்தில் இடம் இல்லாத நிலையில் அதை திருத்துவதற்காகவே இத்தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தை திருத்துவதற்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டது. முதலாவதாக, 1988 ஆம் ஆண்டு 39 ஆவது இலக்க நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான திருத்தம். மற்றது, 2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை பெற்றுக்கொடுப்பதற்கான சட்டமூலமாகும்.

இனமுறுகல் தீர்வுகாண ஜனாதிபதிக்கு முறைப்பாடு

கேகாலை ருவன்வெல டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் ஏற்பட்டுள்ள இனமுறுகல் மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பெ. சந்திரசேகரன் ஜனாதிபதிக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சம்பவம் காரணமாக ஏற்படவுள்ள இனமோதல் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும், அவ்வாறு கட்டுப்படாத பட்சத்தில் இனவாதிகளும் சந்தர்ப்பவாதிகளுமே இதில் பயனடைவார்கள் என்றும் ஒன்றுமறியாத அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு இனரீதியிலான மோதலாக வடிவமைக்கப்படுமளவிற்கு இனவாத சக்திகள் விழிப்போடு இருப்பது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தொழிலாளர்கள் ஐக்கிய முன்னணி யின் உப தலைவர் கணபதி கணகராஜ் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அவசர வேண்டுகோளில் தனி நபர்களுக்கிடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை இன மத பேதமின்றி கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் இப்பிரச்சினையை வைத்துக்கொண்டு சில விஷமிகள் இனவாத தாக்குதலுக்கு தூபமிட்டுள்ளனர். இதனால் பெருமளவிலான பெண்கள், குழந்தைகள் உட்பட 250 தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ருவான்வெல்ல டெஸ்டர்போட் தோட்டத்தில் தோன்றியுள்ள இன முறுகல் நிலைமையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பொலிஸ்மா அதிபர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும்


பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொடுக்க மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை

பிறப்புச்சான்றிதழ் இல்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுக்க பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும், நிதியத்தின் இணைப்பாளருமான துரை மதியுகராஜா தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பிறப்புச்சான்றிதழ் இன்றி பெருஞ்சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமையை கருத்திற் கொண்டு இம்மக்களுக்கு துரித கதியில் பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சம்பந்தமான உத்தரவு பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு பிறப்பிக்கப்பட்டு மூன்று மாதத்துக்குள் அனைத்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலகு முறையில் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு பல விதிமுறைகள் குறைக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டிய இளைஞர் வலுவூட்டல் சமூகப்பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசேட ஏற்பாட்டின் பேரில் வழங்கப்பட இருக்கும் பிறப்புச் சான்றிதழ்கள் இளைஞர் வலுவூட்டல் அமைச்சினது அனுசரணையுடன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன. இதனையொட்டி கண்டி, மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 65 பெருந்தோட்ட முகாமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இச் செயற்றிட்டம் சம்பந்தமான அறிவுறுத்தல் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதன் படி புதன்கிழமை நாவலப்பிட்டி,மற்றும் புசல்லாவ நகரத்திலும் இன்று வியாழக்கிழமை கண்டி மற்றும் மாத்தளை நகரத்திலும் நடைபெறுகின்றது.

Wednesday, September 17, 2008

தோட்ட மக்களை இ.தொ.கா புறக்கணிக்காது – பிரதி கல்வியமைச்சர் சச்சிதானந்தன்

சப்ரகமுவ மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோல்வியையடுத்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் இ.தொ.கா சப்ரகமுவ மாகாண மக்களை ஒருபோது கைவிடாது என்று தெரிவித்த அமைச்சர் மலையகத்தில் ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களை இணைத்து கல்வி, கலாச்சார ரீதியாக முக்கோண வடிவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும். வௌ;வேறு மாகாணங்கள் என பாகுபாடு காட்டாது. குறிப்பாக ஆசிரியர் நியமனம், சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனம், அதிபர் – ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் என எந்த விடயத்திலும் மாகாண ரீதியாக பாகுபாடு காட்டாது இ.தொ.கா பொதுவாக ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு வந்திருக்கிறது. இலங்கை அரசியல் அமைப்பின் 13வது சீர்திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதன் மூலம் வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, கலாச்சாரத்துக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும். சப்ரகமுவ மாகாண மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்ததன் மூலம் மாகாணசபைக்கு கிடைக்கும் நிதியை கோட்டை விட்டு விட்டார்கள் என்றார்.

தரிசு நிலங்களில் விவசாயம் செய்த தொழிலாளர்கள் வேலை நீக்கம்

வெலிமடை - ஹக்கலை தோட்டத்தில் தேயிலை பயிர்செய்கைக்கு பொருத்தமற்றதென தோட்ட நிர்வாகத்தினால் கைவிடப்பட்டிருந்த தரிசு நிலத்தில் விவசாயம் செய்த தோட்டத் தொழிலாளர்கள் 15 பேர் தோட்ட நிர்வாகத்தினால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதேவேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வெளியார் பலர் அத்துமீறி இதே தோட்டத்தின் தரிசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பதுடன் பயிர்செய்யையும் மேற்கொள்வதோடு மாடி வீடுகளையும் நிர்மாணித்து வாழ்கின்றனர். தோட்டத்திற்காக பாடுபடும் தொழிலாளர்கள் இவ்வாறு விவசாயம் செய்தமை குறித்து தொழிலாளர்கள் தரப்புக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஹக்கலை தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பண்டாரவளை தொழில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தோட்ட நிர்வாகங்கள் பெருமான்மையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருப்பதேன் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. வறுமை நிலை காரணமாக தரிசு நிலங்களில் விவசாயம் செய்வது எப்படி குற்றமாகும்? தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றதா என்று நீதிமன்றில் கேள்வி எழுப்பினார் தொழிலுறவு அதிகாரியும், சட்டவல்லுநருமான ஆர் சுப்பிரமனியம்.

Tuesday, September 16, 2008


கொழும்பு ஹோர்டன் பிளேஸில் பஸ் வண்டியில் குண்டு வெடிப்பு நால்வர் காயம்

கொழும்பு மட்டக்குளியிலிருந்து மொரட்டுவ நோக்கிச் சென்ற 155 இல இ.போ.ச பஸ் வண்டியில் இன்று பிற்பகல் (16-09-2008) குண்டு வெடித்ததில் நால்வர் காயங்களுக்குள்ளானார்கள். இச் சம்பவம் கொழும்பு நகர மண்டபத்திற்கு அண்மையில் ஹோர்ட்டன் சுற்றுவட்ட பகுதியிலேயே இடம்பெற்றது. இந்த பஸ் வண்டியில் சுமார் 60 பேர் பயணித்தாகவும் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று இருப்பதை கண்ட பஸ் சாரதி அவசரமாக பயணிகளை இறக்கிய சிறிது நேரத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Monday, September 15, 2008

டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்

கேகாலை மாவட்டம் ருவான்வெல டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகறாறு காரணமாக சிங்களவர் ஒருவர் கத்திக்குத்து இலக்காகி மரணமானார். இதனையடுத்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தோட்டக்குடியிருப்புக்களின் மீது கற்களை வீசி தொழிலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதனையடுத்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த தோட்டப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களை சூறையாடி சென்றுள்ளனர். இதனால் சுமார் 80 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் அருகிலுள்ள தோட்டங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். தற்காலிகமாக உறவினர்கள் தங்கியுள்ள இவர்கள் இரண்டு நாட்களாக எதுவித பசி பட்டிணியால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கடைகளில் இவர்களுக்கு பொருட்கள் விற்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்படலாம் என இவர்கள் அஞ்சுகிறார்கள். தற்போது சமாதானக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சிறுவர்களை மூலதனமாக வைத்து பிழைக்கும் தரகர் கூட்டம்

தோட்டப் பகுதிகளில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் முழுமையாக சமூக மேம்பாட்டுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பள்ளி செல்லும் வயதில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதிலிருந்து தடுத்து அவர்களை மீட்டெடுத்து புனர்வாழ்வு தருவதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இதற்கு பல துறைசார்ந்த அனைத்து பெரியார்களும் ஒன்று திரண்டு சிறந்ததோர் சிறுவர் உலகை உருவாக்க முன்வர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு அமரர் இரா சிவலிங்கத்தின் 9ம் ஆண்டு நினைவு பேருரை நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம் வாமதேவன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தூரத்திலிருந்து நோக்கும் போது மலையகம் பாரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவே தெரிகிறது. இது வெறும் மாயை. நெருங்கி பார்க்கும் போதுதான் உண்மை தெரியும். 14 வயதுவரை கட்டாயக் கல்வி நாட்டின் சட்டத்தில் உள்ளன. மலையகத்தில் இதற்கு முரணாகவே இருக்கிறது. 85சத வீத சிறுவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். 15 சதவீதம் இடைநடுவில் படிப்பை கைவிட்டு எவ்வித தொழிலுக்கும் செல்லாமல் வெறுமனே சுற்றித்திரிந்து பல்வேறு சடூமூகப் பிரச்சினைகளுக்கு காரணமாகின்றனர். நகர் புறங்களில் வீடுகளுக்கும் கடைகளுக்கும் சிற்றூழியம் செய்வதற்கு தோட்டப்புற சிறுவர்களை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடிகிறது. மூலதனம் இல்லாமல் வயிறு வளர்ப்பதற்கு சிறுவர்களை வேலைக்கு அழைத்துச் செல்ல பெரும் தரகர் கூட்டமொன்றே இயங்கி வருகிறது. கல்வி கற்கும் வயதில் சிறுவர் சிறுமியர் அதிலிருந்து திசை திருப்பப்பட்டு பலவித துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுவது மலையக சமூகத்தின் எதிர்கால மேம்பாட்டுக்கு பாரியதோர் சாபக்கேடாக மாறியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டியது அவசர – அவசிய தேவையாகும் என்றார்.

கண்டி கச்சேரியில் தமிழ் மொழி பணியாளர்கள் எததனை பேர்- அமைச்சர் மகிந்த சமரசிங்க

தமிழ் மொழியும் இந் நாட்டின் அரச கரும மொழியாக சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கண்டி கச்சேரியில் தமிழ் மொழியில் தமிழ் மக்களோடு பணியாற்றக் கூடியவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என கேள்வி எழுப்பினார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க. அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் இல்லாமல் செயல் பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் சமாதானமும் ஐக்கியமும் நிலவும் என்றார். டிசம்பர் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புத் தினத்தை கண்டியில் நடத்துவது தொடர்பாக கண்டி கச்சேரி மாவட்ட செயலாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பி;ட்டார். மேலும் உரையாற்றுகையில் தமிழ் மொழியில் கருமமாற்றக் கூடியவர்கள் இல்லையென்றால் தோட்டப்பிரதேச மக்களுக்கு சேவை செய்வது எவ்வாறு? அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மதித்து அவற்றை வழங்காவிட்டால் நெருக்கடிகளும், ஒற்றுமையின்மையும், பிரிவினை பேதங்களும் ஏற்படும் என்றார்.
மின்சார ஒழுக்கினால் தொடரும் அகதி வாழ்வு

தொழிலாளர்களின் குடியிருப்பு லயன்களில் இணைக்கப்பட்டுள்ள மின்சார ஒழுக்கில் லயன்கள் எரிவதும் அங்கு குடியிருக்கும் மக்கள் அகதிகளாகுவதும் தொடர் நிகழ்வாகிவிட்டது. இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களில் உடைமைகள், ஆவணங்கள், தாங்கள் சேர்த்து வைத்துள்ளவைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறிப்பாக
பத்தனை மவுன்ட்வேர்ணன் மேற்பிரிவில் - 20 குடும்பங்கள் நான்கு வருடங்களாகவும், மடக்கும்பரை புதுக்காடு – 20 குடும்பங்கள் 19 மாதங்களாகவும், மன்றாசி என்பீல்ட் - 24 குடும்பங்கள் 11 மாதங்களாகவும், பொகவந்தலாவ சென் ஜோன் டில்லரி 09 குடும்பங்கள் 12 மாதங்களாகவும், கொட்டக்கலை பளிங்குமலை – 20 குடும்பங்கள் 20 மாதங்களாகவும் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இவர்கள் எவ்வித அடிப்படை தேவைகளும் இல்லாது தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான விபத்துக்களுக்கு அரசியல்வாதிகளும், தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை பெறல், முறையான மின்சார இணைப்பை கொண்டிருக்காமை போன்ற காரணிகள் ஆகும். இதற்கு மின்சார சபையும் பொறுப்பேற்க வேண்டும். எதிர் வரும் காலங்களில் இவ்வாறு அகதிகளாக வாழும் மக்களுக்கு உரிய வீட்டு வசதிகள் செய்து கொடுக்கவும், முறையான மின்சார வசதியை வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய தூதரக உதவியுடன் 750 ஆசிரியர்களுக்கு பயிற்சி

மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு இந்திய உதவித் தூதரகத்தின் உதவியுடன் கடந்த மூன்று வருட காலத்தில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 750 ஆசிரியர்களுக்கு குறுகியகால ஆசிரிய பயிற்சிகளை வழங்கியுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி தெரிவித்துள்ளார். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கே இந்திய கல்வி நிபுணர்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Sunday, September 14, 2008

றுவான்வெல தோட்டத்தில் மோதல் ஒருவர் பலி மக்கள் அச்சத்தில் கோவில்களில் தஞ்சம்

றுவான்வெல செஸ்ரபோர்ட் தோட்டத்தில் நேற்று முன்தினம் (13-09-2008) சனிக்கிழமை தமிழர் ஒருவருக்கும் சிங்களவர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறினால் சிங்களவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமானார். இதையடுத்து நேற்றுக் காலை அந்தத் தோட்டத்திற்கு திரண்டு வந்த சிங்களவர்கள் தமிழர்கள் மீது மோசமான தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதனால் படுகாயமடைந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் றுவான்வெல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் இந்தத் தாக்குலில் காயமடைந்துள்ளனர். இத் தோட்டத்திலுள்ள 80குடும்பங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். பெண்கள் அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலிலும் ஆண்கள் றப்பர் தோட்டங்களினுள்ளும் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு மூன்று தமிழர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பிறப்பத்தாட்சிப் பத்திரம் பெற இ.தொ.கா ஏற்பாடு

பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் மலையக தோட்டத் தொழிலாளர்களில் 30 சதவீதமானவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. மலையக தோட்டத் தொழிலாளர்களில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் கட்டமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி,பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யும் பொருட்டு, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மற்றும் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியா ஆகியோரின் ஒப்புதலுடன், அமைச்சரவை பத்திரமொன்று அண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மாத காலத்தினுள் விசேட ஏற்பாட்டின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து தோட்ட மக்களுக்கும் அவர்களது பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் பதிவு செய்யப்படாத பிறப்புகள், தேடிக் கண்டு பிடிக்க முடியாத பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை புதிதாகப் பதியவும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இது குறித்து அறிவுத்தும் கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை காலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை காங்கிரஸ் தொழிற் கூடத்தில் நடைபெற்றபோது கொழும்பு பதிவாளர், திணைக்கள அதிகாரிகள், ட்ரஸ்ட் நிறுவன அதிகாரி, இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாதவர்கள், தத்தமது தோட்ட குடும்பநல அதிகாரிகளை அணுகி தமது விபரங்களை கையளிக்குமாறு வேண்டப்படுகின்றனர். முதலில் தோட்டத் தொழிலாளர்கள் தமது விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கு புறம்பான படிவமொன்று விநியோக்கப்பட்டுள்ளது.

Saturday, September 13, 2008

மலையக மக்களைப் பாதிக்கும் தேசிய அடையாள அட்டைப் பிரச்சினை

மலையக மக்களுக்கு வாக்குரிமை இருந்தும்; அவர்களில் கணிசமானோர் அந்த உரிமையைத் தேர்தல்களில் பயன்படுத்த இயலாதவர்களாக உள்ளனர். தேசிய அடையாள அட்டை இல்லாமையே இதற்குப் பிரதான காரணம். நடந்து முடிந்த வட மத்திய, சப்ரகமுக மாகாணசபை தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டையைக் கட்டாயமாக்கும் நிபந்தனையை நீக்குமாறு கோரிக்கை விடுப்பது இதற்குப் பரிகாரமாகாது. வருடத்திற்கொருமுறை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதை பெருந்தோட்ட மக்களோ அல்லது அம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைத்துவங்களோ இதில் அக்கறை காட்டவேண்டும். இதற்காக குறைந்தது வருடத்தில் ஐந்து நாட்களை ஒதுக்கினாலே போதும் இம் மக்களில் பெரும்;பாலானோர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக ஆக்கப்படுவார்கள். பிரசாவுரிமை வாக்குரிமை இருந்தால் மட்டும் போதாது. அவற்றின் பலனை அனுபவிக்கவும் அதனை சரிவர பயன்படுத்தவும் அந்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அம் மக்களினதும் சமூகப் பிரதிநிதிகளை சார்ந்த விடயமாகும்.

இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

இறப்பர் பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மழை காலங்களில் தங்கள் இறப்பர் பால் வெட்டும் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளனர். கடந்த சில வாரங்களாக இரத்தினபுரி போன்ற பகுதிகளில் கடுமையான மழை காரணமாக அப்பகுதி தொழிலாளர்களுக்கு தோட்டக் கம்பனிகள் வேலை வழங்காததால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். அது மட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தின்படி மாதத்தில் 25 நாட்கள் வேலைக்கு சென்றால் மாத்திரமே அவர்களுக்கான முழுமையான நாட்சம்பளம் கிடைக்கும் இவர்களுக்கு வேலை வழங்கப்படாவிட்டால் அடிப்படையில் சம்பளம் குறைக்கப்படுகின்றது. எனவே தோட்டக் கம்பனிகளுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, September 12, 2008

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு வழங்க வேண்டும்

பெருந் தோட்டங்களில் ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழும் தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களில் விவசாயம் , கால்நடை, கோழி வளர்ப்புக்கும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவை சந்தித்து தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில், கல்வி, சமூக பொருளாதார விடயங்கள் குறித்து பேசுகையிலேயே இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை தொழிற்பயிற்சி நிலையங்களாக மாற்றியமைக்கவும், அதனூடாக படித்துவிட்டு வேலையற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் கிராமப்புற, நகர்புற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும் இதர வசதிகள் கிடைப்பது போன்று தோட்டப்பகுதி முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றார்.


மின்மாற்றி குண்டு வைத்து தகர்ப்பு

நுவரெலியா மாவட்டம் தலவாக்கொல்லை நகருக்கு அண்மையில் தெவசிறிபுர என்ற இடத்தில் மின்மாற்றி குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் 11-09-2008 இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதேவேளை இப் பிரதேசங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மலையக இளைஞர்கள் பலர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத்துறை மக்களின் பொருளாதார நெருக்கடி

தற்போது அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்படும் மக்களில் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக கொள்வனவு செய்யும் கோதுமை மா, மண்ணெண்ணெய் , இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் மிகுந்த நெருக்கடிகளுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகியுள்ளனர். பிரதான காரணம் இவர்கள் அன்றாட வேதனத்தை நம்பியே வாழ்கின்றனர். சாதாரணமாக அன்றாட கூலித் தொழில் செய்பவர் 600-1000 ரூபாவரை ஒரு நாள் சம்பளமாக பெறுகிறார். தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 290 ரூபாவையே பெறுகின்றனர். தற்போதைய பொருள் விலையேற்றங்களுக்கு ஏற்ப நிவாரணம், சம்பள உயர்வு எதுவும் கிடைப்பதில்லை. வருடா வருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவு திட்டங்களில் இம் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் எதிர்பார்க்கும் மக்களுக்கு ஏமாற்றமே. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் போது வாழ்க்கை செலவு புள்ளி உயர்வுக்கான கொடுப்பனவையும் சேர்த்துக்கொள்ளுமாறு தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, September 11, 2008

வீடில்லாப் பிரச்சினைக்குதீர்வு காணும் திட்டம்

மக்கனின் வீடில்லாப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் பாரியதொரு திட்டத்தை ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதிலும் 2009ம் ஆண்டில் 21,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வீடில்லாப் பிரச்சினையினால் நீண்ட காலமாக அல்லலுறுகின்ற பல்லாயிரம் குடும்பங்கனின் துயரைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் இத்திட்டம் பெரிதும் உதவுமென எதிர்பார்க்கலாம்.

நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ள 21,000; வீடுகளில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகனில் 3,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2009ம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின்போது மேற்படி வீடமைப்புக்கென நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வீடமைப்பானது மலையக மக்களைப் பொறுத்தவரை பெரும் வரப்பிரசாதமென்றே கூற வேண்டும். பரம்பரை பரம்பரையாக ‘லயன்கள்’ என அழைக்கப்படும் வரிசை வீடுகனில் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் மக்கள் பலர் இவ்வீடமைப்புத் திட்டத்தினால் பெரும் நன்மையடையப் போகின்றனரென்பது உண்மை. வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மானிகையில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பதுளையில் 13 பேர் கைது

பதுளையில் கடந்த 08-09-2008 மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் தலைமறைவாக இருந்த பாதுகாப்பு படையினர் ஒருவரும் அடங்குகிறார். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தமிழர்கள் எனினும் அவர்களிடம் தம்மை அடையாளப்படுத்தக் கூடிய ஆவணங்கள் இருக்கவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையில் வாழ்க்கை செலவு புள்ளி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது அவர்களின் சம்பள உயர்வுடன் வாழ்க்கை செலவு புள்ளி உயர்வுக்கான கொடுப்பனவையும் சேர்த்துக் கொள்ளுமாறு தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் வலியுறுத்த இருப்பதாக லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச்செயலாளரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான எஸ் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தோட்டத் தொழிலாளரை வெகுவாக பாதித்துள்ளது. அவற்றை சமாளிக்க தொழிலாளர்களின் சம்பள முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டியதோடு வாழ்க்கைச் செலவு புள்ளி உயர்வுக்கான கொடுப்பனவையும் இதில் உள்ளடக்க வேண்டும் என்றார்.

கூட்டு ஒப்பந்தத்தினால் தொழிலாளர்களுக்கு அநீதி – ரி. சென்னன்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் ரி. சென்னன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உழைக்கும் மக்களும் சிவில் சமூக அமைப்புக்களும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்டும் இன்னும் இடம்பெயர்ந்தவர்களுக்கு பூரண நிவாரணம் கிடைக்கவில்லை. இந் நிலையில் வன்னியில் இரண்டு லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு ஆயிரக்கணக்கில் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். யுத்தத்தின் மூலம் எந்த தரப்பு வெற்றி பெற்றாலும் பிரச்சினைக்கு முற்று முழுதாகத் தீர்வு காண முடியாது. தற்போது நடைபெறும் யுத்தம் வெளிநாடுகளுக்கிடையில் இடம்பெறுவதல்ல. மாறாக சகோதர்களுக்கிடையில் இடம் பெறும் மோதலை தவிர்க்கவும் சரியான தீர்வை காணவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.