Wednesday, October 14, 2009

சம்பள உயர்வுக்குப் பின்னரும் 390 ரூபா சம்பளம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு 405 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட போதிலும் பதுளை மாவட்டங்களில் பெரும்பாலான தோட்டப்பகுதிகளில் 390 ரூபாவையே சம்பளமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் 75 வீதம் வேலைக்கு சென்றிருந்த போதிலும் நாளாந்த படியாக 30 ரூபா வழங்கப்படவில்லை.
மேலும் அநேகமான தோட்டங்களில் ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்றபோது வேலை செய்த தொழிலாளர்களுக்கு இரண்டு நாள் வேலை செய்தால் ஒரு நாள் சம்பளம் என்ற வீதத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக கொழுந்து பறிப்புக்கு 30 ரூபா வழங்கப்படும் என கூட்டொப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட போதிலும் அவ்வாறு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
பதுளை மாவட்டத்தில் வரட்சியினால் தோட்ட நிர்வாகம் கோரும் 18 கிலோ கொழுந்து பறிக்க முடியாதுள்ளது. அத் தொழிலாளர்கள் எட்டு மணிநேரம் வேலை செய்த போதும் அரை நாள் சம்பளமே வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலி, மாத்தறையில் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாத நிலை

தென் மாகாண சபைத் தேர்தலில் காலி, மாத்தறை தோட்டப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வாக்களிக்க வாக்களார் அட்டைகள் இருந்தும் அவர்கள் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய தேசிய அடையாள அட்டையோ, வேறு ஆவணங்களோ சமர்ப்பிக்காததால் வாக்களிக்க முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் சம்பள உயர்வு போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தை தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் மீண்டும் முன்னெடுப்பதற்கு மலையக தொழிற்சங்கங்கள் தயாராவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தேசிய தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பிக்கவுள்ளதாக இ.தொ.ஐ.மு தொழிற்சங்க தலைவர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் கடந்த செப்டம்பர் மாதம் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்படட கூட்டு ஒப்பந்தத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகிறது என்றார். ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழிய நம்பிக்கை நிதி ஆகியவற்றை வழங்குமாறு தொழில்கொள்வோருக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஒப்புக் கொள்ளப்பட்ட 405 ரூபா சம்பளமே வழங்கப்படுவதில்லை எனத்; தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இந்த விடயங்கள் குறித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணியும் இந்தப் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்