Monday, July 3, 2017

மலையக சமூக அபிவிருத்தியில் அக்கறையற்ற பெருந்தோட்ட கம்பனிகள்

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பெருந்தோட்டப் பாடசாலைகளின் வள அபிவிருத்திக்காக தேவையான காணிகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சங்கடங்களை எதிர்நோக்குவதாக அண்மையில் தெரிவித்திருந்தார். வரவு செலவுத் திட்டங்களில் மலையகப் பெருந்தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றது. மாகாணசபை மட்டத்திலும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நிதி ஒதுக்கீடுகளும் நடைபெறுகின்றன. இருந்தும் இதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்வதில்தான் முட்டுக்கட்டைகள் நிலவுகின்றன.
காணிகளை குத்தகைக்கு எடுத்துள்ள 22 கம்பனிகளும் இதில் இறுக்கமான நடைமுறையையே கையாள்கின்றன. 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை அரசாங்கம் தனியார் கம்பனிகளிடம் குத்தகைக்குக் கொடுத்தது. அப்போது தோட்ட மக்களின் சகல தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கம்பனிவசம் சார்ந்தது. அரசாங்கத் தரப்பிலும் கம்பனிகள் தரப்பிலும் பல்வேறு உறுதிமொழிகளும் வழங்கப்பட்டன. பெருந்தோட்டத் துறையை இலாபகரமான தொழிற்றுறையாக மாற்றுவதும் அதன்மூலம் தோட்டத் தொழிலாளரின் வாழ்வியலை மேம்படுத்துவதுமே தோட்டங்களைக் கைமாற்றம் செய்வதன் நோக்கம் என அரசு தரப்பில் வியாக்கியானம் தரப்பட்டது. இதற்கு சகல ஒத்துழைப்புகளும் தாம் வழங்கத்தயாராக இருப்பதாக தோட்டக் கம்பனிகள் சான்றுரைத்தன. இவையெல்லாவற்றையும் ஆமோதிப்பது போல மலையக தொழிற்சங்கங்கள் மெளனம் சாதித்தன.
ஆனால் உறுதிமொழி வழங்கியபடி எதுவுமே நடைபேறவில்லை. பிரிட்டிஷார் காலத்தில் மலையக மக்களுக்குச் சொந்தமானவை என கருதப்பட்ட லயக்குடியிருப்புகள் இன்று தோட்டக் கம்பனிகளுக்கு உரித்தாக்கப்பட்ட நிலைமையே காணப்படுகின்றது. ஏனெனில் இன்றைய நிலையிலும் கூட அறைகளைப் பெருப்பித்தல், வீட்டை விசாலமாக்கல் தோட்ட நிர்வாகங்கள் அனுமதித்தால் மட்டுமே செய்யக்கூடியதாக உள்ளது.
இம்மக்களுக்கு தோட்டக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட சிறு சிறு நிலத்துண்டுகள் வழங்கப்பட்டிருந்தாலும் அதற்கு உரிமை கோரமுடியாது. தவிர இத்துண்டு நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வெள்ளையர் காலத்தில் சுகாதாரம் பேணப்பட்டது. வேலை வாய்ப்புகள் இருந்தன. லயக்குடியிருப்புகள் என்றாலும் அவை முறையாக பராமரிக்கப்பட்டன. இன்று சொந்தமாக வீடில்லை. காணி உரிமையில்லை. கல்வி அபிவிருத்திக்கான பின் புலங்கள் இல்லை. சகாதார நிலைமைகள் மோசமாகிப் போயுள்ளன. தனியார் கம்பனிகள் அரசு துறை நிறுவனங்களான அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை, எல்கடுவ பிளான்டேஷன் என அனைத்தும் தோட்டங்களை காடாக்கிக் கொண்டிருக்கின்றன.
இன்று தோட்ட நிர்வாகங்கள் தாம் நினைத்தமாத்திரத்தில் தொழிலாளர்களைத் தோட்டங்களை விட்டு வெளியேற பணிக்கின்றன. தோட்டங்களைக் கூறு போடுகின்றன. வெளியாருக்குக் கைமாற்றுகின்றன. இதனடிப்படையில் தோட்டக்காணிகளை தமது விருப்பிற்கேற்ப கையாளும் சகல உரிமைகளையும் இக் கம்பனிகள் கொண்டிருப்பதாகவே கருதமுடியும்.
பாராளுமன்றத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய தேவையான காணிகளைப் பெறுவதில்தான் நெருக்கடி இருப்பதாக கூறியிருந்தார். இது உண்மையிலேயே குழப்பமான விடயமாகும். அரசுக்கும் கம்பனிகளுக்கும் அவசியமென்றால் அதிரடியாக காணிகளைக் கையாடல் செய்யமுடிகின்றது. அதுவே பெருந்தோட்ட மக்களுக்குத் தேவை என்றால் மட்டும் சட்டச் சிக்கல் ஏற்படுகிறதாம். தேசிய ரீதியிலான காணிக் கொள்கை இருந்தும் தோட்டக் காணிகளை மலையக மக்களின் அத்தியாவசிய தேவைக்காக பெறுவதில்தான் எத்தனை சவால்கள். சங்கடங்கள் தடைகள்!
தோட்ட மக்களுக்கு வீடமைப்புக்கு காணி என்றாலும் சரிபாடசாலைத் தேவைக்குக் காணி என்றாலும் சரி, கம்பனி தரப்பு தவறாமல் ஒரு கூற்றை முன்வைக்கும். காணிகள் வழங்கப்படும் பட்சத்தில் விளைச்சல் நிலங்கள் வீணாகிப்போகும், அழிவடையும் என்பதுதான் அது. இதற்காக சில தோட்ட நிர்வாகங்கள் புது ஆலோசனைகளை வழங்குவதாக தெரியவருகின்றது. தற்போது மக்கள் வாழ்ந்துவரும் லயங்களிலிருந்து அவர்களை வெளியேற்றி தற்காலிக இடங்களில் தங்க வைத்துவிட்டு அவர்களின் லயக்குடியிருப்புகளை இடித்துத் தரைமட்டமாக்கி அதே இடத்தில் புதிதாக வீடுகளைக் கட்டும் யோசனையும் அதில் ஒன்று. இதன்மூலம் வீடமைப்புக்காவும் பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காகவும் சிறுவர் முன்பள்ளி விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைப்பதற்கும் இடம் வழங்குவதைத் தவிர்ப்பதே கம்பனிகளது நோக்கமாகும். பெருந்தோட்டப் பாடசாலைகள் அனைத்துமே அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகளுக்கான நிதியினை மத்திய மாகாண அமைச்சுகள் ஒதுக்கவேண்டியுள்ளது. அவ்வாறே நடைபெறவும் செய்கின்றது. ஆனால் பாடசாலைகளுக்கான காணிகளைப் பெற்றுக் கொடுப்பதில் இழுபறிநிலையே காணப்படுகின்றது. அரசுடைமையாக்கப்பட்ட சகல பாடசாலைகளுக்கும் தலா இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாட்டைக் கூட சில தோட்ட நிர்வாகங்கள் அசட்டை செய்து வருகின்றன. இந்நிலையில் மேலதிக காணிகளைப் பெறுவது அப்படியொன்றும் இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை.
மலையகக் கல்வி அபிவிருத்திக்காக பாடசாலைக் கட்டடங்கள் விரிவாக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் குறித்த நேரத்தில் இதற்கான காணி ஒதுக்கித் தரப்படாத நிலையில் குறித்த வேலைகள் ஸ்தம்பிதமடைந்து போகின்றன. குறிப்பாக மலையக பாடசாலைகளில் இடப் பற்றாக்குறை என்பது பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குன்றனர். அத்துடன் மத்திய, மாகாண கல்வித் திணைக்களங்களுக்கூடாக ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் முடங்கிப்போகிறது. அல்லது திறைசேரிக்குத் திருப்பியனுப்பப்படுகிறது. இது போன்றச் சம்பவங்கள் ஏற்கனவே நிறைய நடந்துள்ளன. இதுபற்றி மலையக பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் பிரஸ்தாபிக்கவே செய்கிறார்கள். ஆனால் தீர்வுதான் வந்தபாடில்லை. எனவே ஆளுக்காள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் விளைச்சல் தரக்கூடிய பெருமளவு காணிகள் உரிய பராமரிப்பின்றி காடுகளாகவும் தரிசு நிலங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் 200 வருடங்களாக படாத பாடுபட்டு நாட்டுக்குச் செல்வத்தைத் தேடித்தரும் பெருந்தோட்ட மக்களின் வீட்டுத் தேவைகளுக்கும் அவர்களது வாரிசுகளின் கல்வி அபிவிருத்திக்கும் அவசியமான காணிகளை வழங்குவதில் கம்பனி தரப்புக் காட்டும் பிடிவாதம் தயக்கம் அசிரத்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தவே செய்கின்றது. ஒரு வேளை பெருந்தோட்டச் சமூகம் கல்வியறிவு பெற்ற சமூகமாக வளர்ச்சியடைவதில் கம்பனிகளுக்கு விருப்பம் இல்லையோ என்னவோ! அதேபோல பிற சமூகங்களைப் போல சொந்தக் காணியில் சொந்த வீட்டில் குடியேறுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றதோ தெரியவில்லை. மனிதருக்கு சொந்தக்காணியில் சொந்த வீடு என்பது வாழ்வுரிமையின் அடையாளம். அதேபோல கல்வி என்பது அபிவிருத்திக்கான அடைவு மட்டம். அந்த இரண்டும் இல்லாத சமூகமாக இன்னும் எத்தனை காலம் தான் இருப்பதாம்?