Sunday, January 19, 2014

தொழிலாளர்கள் சிறு தேயிலை தோட்ட உடமையாளர்களாக மாற வேண்டும்

தோட்டத் தொழிலாளர்கள் சிறு தேயிலை தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால எதிர்;பார்ப்பாகும் என இ.தொ.கா பொதுச்செயலாளரும், கிராமிய கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் பத்தனை பிரதேசத்தில் முன்பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக வேர்ல்ட் விஷன் நிறுவனம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஓர் அங்கமாக முன்பள்ளி கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. இதற்கெனபல லட்சம் ரூபாவை செலவிட்டு வருகின்றது. ஆரம்ப கல்விக்கு சரியான அடித்தளம் இடப்பட்டால்தான் உயர்கல்வியில் மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற முடியும் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகின்றது. தொழிலாளர்களும் தமக்கு கிடைத்த இந்த வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று நாம் விரும்புகின்ற அதேவேளையில் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலாளியாகவே இருக்காமல் சிறு தேயிலை தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். தோட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2- 3 ஏக்கர் தேயிலை காணிகளை வழங்கி அதை தொழிலாளர்களே பராமரித்து கொழுந்து பறித்து அதை தோட்ட நிர்வாகத்துக்கு விற்பனை செய்து வருமானத்தை ஈட்டி முதலாளிமார்களாக வளர வேண்டும் என்பதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான ஆலேலாசனைகளை முன்வைத்துள்ளோம். அவ்வாறு நாம் காணிகளை பெற்றுக்கொடுக்கும் போது அவற்றை வெளியாருக்கு யாரும் விற்பனை செய்து விடக்கூடாது. தங்களுக்கு கிடைத்த காணிகளில் தகுந்த வருமானத்தை தேடிக்கொள்வதோடு அந்தக் காணிகளுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். 

கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட சுமார் 6,000 குடியிருப்புக்கள் வெளியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதோடு அவற்றை விற்றவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் குடியிருப்புக்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் தீபாவளி பண்டிகை இரண்டு தினங்களுக்கு மாத்திரமே கொண்டாடப்பட வேண்டியதொன்றாகும். கடந்த வருடனம் ஒரு தோட்டத்தில் 10 நாட்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளனராம். இந்த வருடம் ஒரு தோட்டத்தில் 30 நாட்கள் கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வேலைக்குச் செல்லாமல் செய்கின்ற தொழில் மீது அக்கறை இல்லாமல் இருந்தால் தேயிலை உற்பத்தி எவ்வாறு பெருகும். தொழிலாளர்களுக்கு எவ்வாறு வருமானம் கிடைக்கும்? தமது தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே, தொழிலாளர்கள் இந்த நாட்டில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக நாம் மேற் கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு, கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ள சமூகம் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் அரசியல்வாதிகள் கண்மூடித்தனமாக செயற்படுகின்றனர்: சதாசிவம்

ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்ட ஆலோசனை குறித்து பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை முன்மொழிகின்றபோது ஒரு சில அரசியல்வாதிகள் அவ்விடயத்தில் கண்மூடித்தனமாக செயற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களை துரும்பாக உபயோகித்து ஒரு சிலர் அரசியல் இலாபம் பெறுகின்றனர். அந்நிலைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமெனக் கோரி அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது மலையக மக்கள் தனியொரு தேசிய சிறுபான்மை இனமென்றும் அம்மக்களுக்கென தனியான கலாசாரம் பொருளாதார கட்டமைப்பு என்பன உண்டு என தொடர்ந்தேர்ச்சியாக குரல்கொடுக்கப்படுகின்ற போதும் அவர்களின் வாழ்வாதாரம் பரிதாபகரமானதாகவே உள்ளது.

இவர்களால் இலங்கை அரசு பொருளாதாரத்தில் பல நன்மைகள் அடைந்துள்ள போதிலும் இம்மக்களின் வாழ்வாதாரம் அன்றும் இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. இம்மக்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் பொருளாதார ரீதியில் இலங்கையை உலகத்திற்கு உயர்த்தியது.

இந்நிலையில் அரசியல் ரீதியான ஒரு கட்டமைப்புக்குள் முழுமையாக இவர்களை செல்ல விடாது ஒருசில தொழிற்சங்கத் தலைவர்கள் இம்மக்களை அடகு வைத்து மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் பேரம் பேசும் சக்தி எனும் மாயையை மக்களிடம் புகுத்தி பல்வேறு சலுகைகளையும் வசதிகளையும் தமக்கும் தாம் சார்ந்தோருக்கும் இன்று வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெற்று வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் தன்மையை அடிப்படையகாகக் கொண்டு இவர்களது இன அடையாளத்தை கருத்தில் கொண்டும் இம்மக்கள் பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கும் பொருளாதாரத் தாக்கங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்ட ஆலோசனை குறித்து பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துகின்றபோது ஒரு சில அரசியல்வாதிகள் மௌனிகளாக இருந்து கண்மூடித்தனமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பல ஏக்கங்களோடும் எதிர்பார்ப்புகளோடும் வாழ்கின்ற மக்களை தொடர்மாடி என்று கூறி மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கு கொண்டு செல்வது இம்மக்களின் உழைப்பை உறிஞ்சுபவர்களின் நன்றிக் கடனாகாது.

மாடி வீடு என்ற மாயையில் ஒரு லயன் அறைக்கு மேல் மேலும் ஒரு லயன் அறையை கட்டிக்கொடுத்து இம்மக்களை அவமானப்படுத்தியது போதும். ஜனாதிபதி நீட்டும் வீட்டுத்திட்ட நேசக்கரத்துக்கு மலையகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் தொழிற்சங்க தலைவர்களும் நலன் விரும்பிகளும் ஆரோக்கியமான வீட்டுத் திட்டமொன்றை அமைக்க வேண்டும். இவ்வீட்டுத்திட்டமானது மலையக புவிசரிதவியலுக்கு ஏற்ப சகல வசதிகளையும் கொண்ட தனிவீடாக அமைவதே பொருத்தம். ஆகவே இது விடயத்தில் அனைவரும் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.