Saturday, October 6, 2018

குட்டக் குட்டக் குனிந்தது போதும் என்ற உரத்த சிந்தனை மலையக சமூகத்தில் எழ வேண்டும்!

மலையகத்தின் வரலாறு இந்தியத் தமிழர்கள் ஈழமண்ணைத் தழுவியபோது ஆரம்பித்ததல்ல; அதற்கும் நூறு ஆண்டுகள் பழை மையானது. உலக காலனித்துவம் தலைவிரித்தாடியபோது கீழைத்தேய நாடுகள் அதற்கு கட்டுண்டு வாழ்ந்த காலமது. 1700 களில் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் பல்வேறு மேலைத்தேய நாடுகள் ஆபிரிக்க, இந்திய நாடுகளை கைப்பற்றிக் கொண்டு தங்கள் நாடுகளின் பொருளாதார துறையை மேம்படுத்திக் கொண்டன. இக்காலகட்டத்தில் ஆபிரிக்க நாடுகள் காலனித்துவத்தில் விடுதலை பெறவே! பிரிட்டிஷ் மாத்திரம் இந்திய, இலங்கை போன்ற நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தமது பலத்தை பிரயோகித்தன.
பூர்வீக இந்திய மக்கள் நூல் நூற்பதையும், நிலத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தையும் நம்பி வாழ்க்கை நடத்தினர். இதனை முதலில் ஊக்குவித்த பிரிட்டிஷ் அரசாங்கம் உற்பத்திகளை உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது. பிரிட்டிஷ் ஏற்றுமதியை விட இந்திய ஏற்றுமதி உலக சந்தையை ஆக்கிரமிப்பதை பார்த்த பிரிட்டிஷ் அரசு, உடனடியாக சுயதொழில் முறையை ஒடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கோரிக்கையொன்றை முன்வைத்தது. இவற்றோடு பிரிட்டிஷாரின் கைத்தொழிலை விரும்பாத மக்களாக இந்தியர்கள் இருந்தமையும் இதற்கு காரணமாகும்.
நிலத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய முறையை குறைக்க வேண்டி பிரிட்டிஷ் அரசு நிலத்தினை அடிப்படையாக கொண்ட விவசாயம் செய்பவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் தாக்குப்பிடிக்க முடியாத வரியை அறவிடவே அதிகமானோர் தன் நிலத்தினையும், பூர்வீக விவசாய முறையையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
1835- - 1840 கால கட்டங்களை நிலப்பிரபுத்துவ முறையும், ஜாதி அடிப்படையாக வர்ணாச்சிர தர்மமும் இவற்றோடு உணவுப் பஞ்சம் ஏற்பட ஆரம்பித்தது. பிரிட்டிஷார் கொண்டுவந்த வரிவிதிப்பு முறைகள் இதற்கான காரணமாகும். 1770, 1784, 1804, 1937, 1801ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்த பஞ்சத்தில் தஞ்சாவூர் மாவட்டம் நாற்பது இலட்சம் தமிழர்களை இழந்தது. இவற்றுடன் இந்தியாவில் தலைவிரித்தாடிய ஜாதி முறை, தான் விரும்பிய தொழிலை செய்யவும் வழிகொடுக்கவில்லை. இதனை பிரிட்டிஷார் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
இதே காலகட்டத்தில் ஈழத்தில் பொருளாதாரத்துறையை மேம்படுத்தவும், பெருந்தோட்டப் பொருளாதாரத்துறையை வளர்ச்சி செய்யவும் பிரிட்டிஷார் எத்தனித்தனர். பிரிட்டிஷில் உள்ள பணம் படைத்த முதலாளிகள் இலங்கையில் நிலம் மலிவாக கிடைக்கவே அதிகமானோர் இலங்கையில் முதலிடு செய்தனர்.
இதேவேளை இந்திய தமிழ் மக்கள் வறுமையில் வாடியபோது இவர்களுக்கு பல காரணங்களைக் கூறி வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஊக்குவித்தனர். 150 ரூபாய்க்கு நல்ல நிலம் கிடைத்த காலத்தில் 200 தொடக்கம் 500 ரூபாய் சம்பாதித்து வரலாம் என்றும், நல்ல உணவு. தங்குமிடம் கிடைக்கும் என்றும் இலங்கை சென்றோர் ஜாதி முறையை விரும்பாதவர்களாக இருப்பர் என்றும் பல காரணங்கள் கூறி ஏமாற்றினர் என்பதே உண்மை. உதாரணமாக கூறினால் தேயிலை மரத்திற்கு அடியில் பொன்னும், மாசியும் கிடைப்பதாக கூறினர் என்பதும் வரலாற்று உண்மையாகும். இவ்வாறு இந்தியத் தமிழர்களை கொடித்தடிமைகளாக இலங்கைக்கு கொண்டுவர முயன்றது பிரிட்டிஷ் அரசாங்கம்.
உலக சந்தையில் கோப்பி விலை முன்னிலையில் காணப்பட்டது. எனினும் ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றுவிடவே கோப்பித் தோட்டங்களில் வேலைச் செய்தோரும் அதைக் கைவிட்டனர்.
ஆனால் பிரிட்டிஷ் அரசு மட்டும் சில நாடுகளை தன் வசம் வைத்திருந்தமையால் கோப்பிப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தது. இதற்காக முதன் முறையாக இந்தியாவிலிருந்து 14 இந்தியத் தமிழர்களை வேலைக்கமர்த்தினர். இது கம்பளையில் சிங்கபிட்டிய என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு 1835- - 1840 ஆண்டுகளுக்கு இடையில் பெருந்தொகையான மக்களை கோப்பித் தோட்டங்களில் இறக்கியது பிரிட்டிஷ் அரசு. இருப்பினும் கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட ஒருவகை நோயின் காரணமாக இப் பயிர்ச் செய்கை ஆரம்பித்த அதே வேகத்தில் மண்ணைக் கௌவியது.
இவ்வாறான காலகட்டத்திலேயே 1867ஆம் ஆண்டு தெல்தோட்டை லூல்கந்துர என்ற இடத்தில் ஜேம்ஸ் டெய்லர் இலங்கையில் தேயிலையை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்தே ஈழமண்ணுக்கு பல்லாயிரம் மக்களை தோணிகளில் ஆட்டுமந்தைகளாய் கொண்டு வந்து இறக்கினர். 1827ஆம் ஆண்டு 10,000 தொழிலாளர்களும், 1877ஆம் ஆண்டுகளில் 145,000 தொழிலாளர்களும், 1947ஆம் ஆண்டு வரை எட்டு லட்சம் இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களும் இலங்கை மண்ணை வந்தடைந்தனர். இந்தியாவில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு தோணிகள் மூலம் இவர்களை கொண்டு வந்தனர். 100 பேர் வரை ஏற்றக் கூடிய தோணிகளில் 500 பேர்வரை ஏற்றி வந்தனர். இவ்வாறு வந்த பலர் தோணிகள் மூழ்கி இறந்தோரும் உளர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் மூழ்கி 120 பேர் வரை இறந்து போன காலகட்டமும் இதுவே.
தலைமன்னாரில் கொத்தடிமைகளாக வந்திறங்கியவர்கள் மலைகளும், பற்றை வனாந்தரமுமாக இருந்த மலைநாட்டை கால் நடையாக வந்து பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். இவ்வாறு கால்நடையாக வந்த மக்களும் கடுங்குளிர் காரணமாகவும், அதிக மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகவும், பாம்பு, அட்டை, பூராண் போன்ற பூச்சி இனங்கள் மற்றும் விலங்குகள் காரணமாகவும் மாண்டுபோயினர். 1867ம் ஆண்டு புறப்பட்ட 639 பேரில் 186 பேர் மட்டுமே மலையகத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தவர்களே இந்த மண்ணை தேயிலை வளரும் பொன் பூமியாக மாற்றினர்.
இது மட்டுமா? மலையக மக்களை தாக்கிய கொடுமைகள் முடிந்து விட வில்லை. 1948ம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கையர், 1920ம் ஆண்டு இலங்கையில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்ட வாக்குரிமையைப் பறித்துக் கொண்டனர். இதனால் எட்டு லட்சத்து ஐம்பதாயிரமாக இருந்த மலையக மக்களின் வாக்குரிமையில், 7 லட்சம் பேர் வாக்குரிமையை இழந்தனர். பிரட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 33 சதவீதமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக குறைந்தது.
அப்படியும் விட்டுவிடவில்லை. இந்த மலையகத் தமிழர்களை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் என்றபேரில் மீண்டும் கத்தியை வீசினர். 1964ம் ஆண்டு 8 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த இந்தியத் தமிழர்களை அரைவாசியாகக் குறைக்கும் ஒப்பந்தமே இது.
வளரவளர கவ்வாத்து செய்யப்படும் தேயிலை மரங்களைப் போல இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களும் அவ்வப்போது கவ்வாத்து பண்ணப்பட்டு வந்துள்ளனர்.
கண்டி, ஹற்றன், நுவரெலியா, பதுளை, மாத்தளை, புஸல்லாவை என்று பல்வேறு பிரதேசங்களில் பரவிக் காணப்படும் பெருந்தோட்ட சமூகம் இன்றைக்கும் பாட்டாளி வர்க்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
உலகச் சந்தைகளில் அதிக இலாபத்தை ஈட்டித்தரும் இலங்கைத் தேயிலையுடன் சம்பந்தப்பட்ட மக்களின் நிலை மட்டும் மாறாதுள்ளது. எத்தனையோ அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டும் லயன் வீடுகள் மட்டும் இன்னும் மாறாமல் இருப்பது கவலைக்கிடமானதே. இவ்வாறான நிலையை மாற்றி அமைப்பது இந்தியாவின் 4000 வீடமைப்புத் திட்டாமா? இல்லை 1000 ரூபாய் சம்பளமா? எதுவாயினும் இவை மட்டும் மலையகத் தமிழர் வாழ்வை மாற்றியமைக்காது.
இலங்கை நாட்டில் ஏனைய மக்களுடன் ஒப்பிடும் போது வாழ்க்கைத்தரம் குறைந்திருக்கும் இம் மக்களின் நிலையை முழுமையாக மாற்ற வேண்டியது எல்லோரினதும் கடமையாகும்.
இது தனிபட்ட அரசாங்கத்திற்கோ அல்லது தொழிற்சங்கங்களுக்கோ உரியதல்ல. இன்றைய இளைய சமுதாயத்தினரையும் இதுசாரும். எனவே இவ்வாறு மலையக மக்களின் சமூக, பொருளாதார வாழ்வியல் உயர்த்தப்படும்போதே இவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது ஐயமில்லை.
தயா. தினேஸ்குமார்,  கண்டி
நன்றி- தினகரன் வாரமஞ்சரி