Sunday, November 16, 2008

தேயிலை விலை உலகச் சந்தையில் வீழ்ச்சியடையவில்லை- பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு

இலங்கையின் பிரதான பெருந்தோட்ட பயிரான தேயிலையின் விலை அண்மைக்காலமாக உலக சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தோட்டக் கம்பனிகள் நட்டம் அடைந்துள்ளதென கூறப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் இவ்வாறான தவறான பிரச்சாரங்களினால் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாந்து விடக்கூடாது என பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஓ.ஏ. இராமையா தெரிவித்துள்ளார் அமெரிக்க டொலருக்கு ஏற்பட்ட சிறிய வீழ்ச்சி தேயிலை, இறப்பர் ஏற்றுமதி வர்த்தகத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் பெருந்தோட்டங்களில் வேலை நாட்களை குறைத்து பெறப்படும் தேயிலையின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது பொய் பிரச்சாரமாகும்.
உலக சந்தையில் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு தோட்டக் கம்பனிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கூற முடியாது. அவர்களின் இலாபத்தில் சிறு விகிதம் குறைந்திருக்கலாம். இதற்கு எந்த விதத்திலும் தொழிலாளர்கள் பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் அல்லர். இதனால் தொழிலாளர்களின் வேதனைத்தையோ அல்லது வேலை நாட்களையோ குறைக்க முடியாது.

வரலாறு காணாத வகையில் கடந்த வருடத்தில் பெருந்தோட்டத்துறை ஏற்றுமதி வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கிடைத்திருக்கிறது. இவ்வாறு அபரிமிதமான வருமானத்தை ஈட்டுகின்ற போது கம்பனிகள் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. இலாபம் குறைந்தால் மட்டும் தொழிலாளர்களின் வேதனத்தைக் குறைக்கவும் வேலை நாட்களில் மாற்றம் கொண்டுவர தீர்மானிப்பதும் எவ்விதத்திலும் நியாயமான செயல் அல்ல. தொழிலாளர் வேதனம் இலாப நட்ட அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. மாறாக உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தினை பெற்றுக் கொள்வதே அவர்களது உரிமை.

ஏரி பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால் செயற்பை இறப்பர் உற்பத்திக்கான இலாபம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன் இயற்கை இறப்பருக்கு எப்போதும் போன்று கிராக்கி இருந்து கொண்டுதான் உள்ளது. ஒட்டு மொத்தத்தில் கூறுவதானால் பெருந்தோட்டத் தொழில் துறையின் எதிர்கால பொருளாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு பாரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூற முடியாது. இதனை காரணமாக காட்டித் தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபடுவதில் நியாயம் இல்லை.

எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அதற்கான காரணங்களை கூறி பல்வேறு துறைகளில் விலை அதிகரிப்பை செய்யும் அரசாங்கம் உலக சந்தையில் அதன் விலை குறையும் போது விலை குறைப்பை செய்வதில்லை. இதேபோல் கடந்த காலங்களில் எதிர்பாராத அளவுக்கு தேயிலைத்துறை இலாபத்தை சம்பாதித்துக் கொடுத்ததாக மார்தட்டிக் கொள்ளும் கம்பனிகள் அந்த இலாபத்தில் ஒரு சத வீதத்தையேனும் சரி தொழிலாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளதா?

இப்போது இலாபத்தில் வீழ்ச்சி என்றவுடன் தொழிலாளர்களை சுரண்டுவதா? இது தொடர்பாக இலங்கை தேயிலை சபையும் அரசும் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என இராமையா கேட்டுக் கொண்டார்.