Monday, August 2, 2010

மாணவர் இடைவிலகல் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி பணிப்பு



தோட்டப் பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் முழுமையாக கற்காமல் இடைவிலகிச் செல்வது தொடர்பாக உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பொன்றின் போதே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களை தெளிவுபடுத்துமாறும் அதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கினார்.

நாட்டில் வாழுகின்ற அனைவருக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எந்த இனமாகவும் இருக்கலாம், எந்த மதமாகவும் இருக்கலாம், அனைத்து மக்களும் சகல வசதிகளுடனும் சந்தோசமாக வாழ வழிவகைகளை நாம் செய்து கொடுக்க வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளினதும் கல்விக்கு மிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதுடன் கல்வியையும் சுகாதாரத்துறையையும் மேம்படுத்துவது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.

தோட்டப்புற பாடசாலைகளில் கல்வியை தொடராமல் இடைநடுவில் பாடசாலையை விட்டு மாணவர்கள் அதிகளவில் விலகிச் செல்கின்றனர். இதற்கான காரணத்தை கண்டறியவும், ஆய்வினை மேற்கொள்ளவும் வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் தோட்டப்புற மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசணை நடத்தினார்.

யுனெஸ்கோ பட்டியலில் மலைநாடு


இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியை உலக கலாசார, பாரம்பரியம் மிக்க பிரதேசங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது. குறுகிய நிலபரப்புகளில் உள்ளக எல்லை வரையறைகளை கொண்டுள்ள போதிலும் பூகோள ரீதியிலும் காலநிலை இயல்புகளிலும் பல்வேறு வேறுபாட்டம்சங்களைக் கொண்டதொரு தீவாக இலங்கை விளங்குகின்றது.

சிவனொளிபாத மலை மற்றும் நக்கள்ஸ் மலைத்தொடர் போன்ற முக்கிய மலைகளை உள்ளடக்கியுள்ள மத்திய மலைநாட்டுப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீற்றர்கள் உயரத்தில் அமைந்துள்ளது

வேகமாக அழிவடைந்த உயிரினமாக கருதப்பட்ட ஸ்லென்டர் லோரிஸ் என்ற அரிய வகை தேவாங்கினம், ஊதா நிற முகத்தோற்றத்தைக் கொண்ட குரங்கினம், இலங்கைச் சிறுத்தைப்புலி மற்றும் அரிதான பறவையினங்கள், தாவர இனங்கள் போன்ற பல வகையான உயிரினங்களுக்கும் வாழ்விடமாக விளங்குவதால் மத்திய மலைநாட்டுப் பகுதி, உயிரினப் பல்வகைத் தன்மைக்கு உகந்த இடமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்கு கரையோரத்தை ஒட்டி அமைந்துள்ள வில்பத்து தேசிய சரணாலயத்தை விட இந்தப்பிரதேசம் மிக முக்கியமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக இலங்கையில் நிலவிய சிவில் யுத்தம் காரணமாக வில்பத்து சரணாலயப் பிரதேசத்தின் உயிரின முக்கியத்துவம் குறித்து அக்கறை செலுத்தப்படாது இருந்துவந்துள்ளது.

புதிய வீதிகளை உருவாக்குதல், மற்றும் கடற்படை தளங்களை அமைப்பதற்காக இந்தப்பிரதேசத்தின் அனேகமான பசுமைக்காடுகளும் ஈரலிப்பு மிக்க சதுப்பு நிலங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அண்மைய சுற்றுச்சூழல் ஆய்வுகள் கூறுகின்றன.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய மலைநாட்டின் உலக பாரம்பரிய சிறப்பு வலயப்பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கான கட்டுமாண நடவடிக்கைகள் சட்டவிரோதமாக நடைபெறுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற போதிலும் அந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுக்கின்றது.

இந்தியாவில் ஜந்தர் மாந்தர்

இதுதவிர அமெரிக்கா, டன்ஸானியா, சவுதி அரேபியா மற்றும் ஒஸ்ட்ரேலியா போன்ற நாடுகளிலுள்ள சில முக்கிய தலங்களையும் உலக கலாசார மற்றும் பாரம்பரிய சிறப்பம்சங்கள் கொண்ட பிரதேசங்களாக அறிவித்துள்ள யுனேஸ்கோ, இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தர்வானவியல் சாஸ்திர ஆய்வு மையத்தையும் இந்த பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இரண்டாம் ஜய்சிங் ஜய்ப்பூர் மகாராஜாவால் இந்தப்பிரதேசம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது