Friday, February 25, 2011

தோட்டத் தொழிலாளியின் பயிர்ச் செய்கையை அழிக்க தோட்ட நிர்வாகம் முயற்சி


ஹொரணை பிரதேசத்திலுள்ள தோட்டத் தொழிலாளி ஒருவர் தமது குடியிருப்புக் குமுன்னால் உள்ள வீட்டுத் தோட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் தென்னை, வாழை, மரவள்ளி மற்றும் பயிர் வகைகள் கொண்ட காணியை தோட்ட நிர்வாகம் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு மைதானத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியுடன் பயிச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள காணியையும் உள்ளடக்கும் நோக்குடனேயே தோட்ட நிர்வாகம் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கிராம உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி அதிகாரி, பொலிசார் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த தொழிற்சங்க பிரதிநிதி ஒருவரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இவர் இங்கு பயிர்ச்செய்கை மேற்கொண்டுவரும் அதேவேளையில் 2007ம் ஆண்டிலும் தொழிலாளர்கள் இது போன்ற பயிர்ச்செய்கையைத் தோட்ட நிர்வாகம் அழித்து பெரும் சேதம் விளைவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பயிரிடப்படாத தோட்டக் காணிகளை சுவீகரித்து வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கம் திட்டம் மேற்கொண்டிருக்கும் வேளையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்ச்செய்கையை தோட்ட நிர்வாகம் அழிக்க முற்படுவது குறித்து தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.