Thursday, January 31, 2019

பெருந்தோட்டக் காணிகளை அரசு கையேற்க நடவடிக்கை


கூட்டுக் கமிட்டியை ஒதுக்கிவிட்டு ஒப்பந்தம் செய்ததன் அவசரம் என்ன?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பான தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி, உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறாத நிலையில், அதனை ஒதுக்கிவிட்டு அவசர அவசரமாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை மிகத் தவறானதென மக்கள் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உடன்படிக்கை நகல் வரைவில் குளறுபடிகள் இருப்பதாக தெரிவித்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி கைச்சாத்திட வருகை தராதபோது, அதுபற்றி ஆராய்ந்து பார்க்காமல் ஏனைய இரண்டு சங்கங்களும் கைச்சாத்திட் டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு அந்தக் கமிட்டி முன்வருமாக இருந்தால், பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.தம்பையா தினகரனுக்குத் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, மீண்டும் 140 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவைக் கோரி பேச்சுவார்த்தை நடத்தப்படுமாக இருந்தால், அது மீளவும் சம்பள விவகாரத்தை மலினப் படுத்துவதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். 140 ரூபாகொடுப்பனவையேனும் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடன் இராமநாதனையும் அழைத்துக்கொண்டு செல்வதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக அறிய வருகிறது. எவ்வாறெனினும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 140 ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், அதனை மீண்டும் பெற்றுக் கொடுத்துவிட்டதாக எவரும் திருப்தியடைய முடியாது. அதனைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அதுவே ஒரு தீர்வாக அமையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்ட தம்பையா, சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை மீளப் புதுப்பிப்பதற்கு வெளிப்படையாக முன்னெடுக் கப்படும் நடவடிக்கைகளுக்குத் தமது சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் தொழிற்சங்கங்கள் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தெளிவான முடிவுடன் செல்ல வேண்டும் என்றும் இதுபற்றித் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதனுடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகவும் தம்பையா மேலும் கூறினார்.