Saturday, October 3, 2009

தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகங்களின் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும்

தோட்டக் கம்பனிகளுடன் தொழிற் சங்கங்கள் செய்து கொண்டுள்ள கூட்டுத் ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளின்படி தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வினை பெற்றுக் கொள்வதைத் தடுக்கும் சூழ்ச்சி வேலைகளில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுபடலாம். இதனை தொழிலாளர்களும், தொழிற்சங்களும் கூட்டாக இணைந்து முறியடிக்க வேண்டும் என லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளரும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவருமான எஸ். இராமநாதன் அளவத்து கொடையச் சேர்ந்த விலான தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு 405 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள சம்பளத்தை சகல தோட்ட நிர்வாகங்களும் வழங்குவதை ஊர்ஜிதப்படுத்துவதற்கான நடவடிக்கையை தொழில் அமைச்சர் எடுத்து வருகிறார்.
சம்பள உயர்வை வழங்கத் தீர்மானிக்கப்பட்ட பிறகு தோட்டத் தொழிலாளர்கள் செய்யும் வேலையின் அளவை அதிகரிப்பதற்கு சில நிர்வாகங்கள் முயன்று வருவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன. இப்படி அவர்களால் தன்னிச்சையாக செயற்பட முடியாது.
வழமையான வேலையில் எந்தவித மாற்றம் செய்வதானாலும் தோட்டத் தலைவர்களுடன் பேசி அதன் பிறகே ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும். இந்த விடயம் கூட்டு ஒப்பந்தத்தில் தெளிவாக வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
கொழுந்து பறிக்கும் அளவும், இறப்பர் பால் சேகரிக்கும் அளவும் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் கடைபிடிக்கப்பட்டு வந்த அளவாகவே இருக்க வேண்டுமேயொழிய நிர்வாகங்களின் தன்னிச்சையான முடிவின்படி இதில் எவ்வித மாற்றமும் செய்வதற்கு தொழிலாளர்கள் எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாது என்றார்.
அரசின் அபிவிருத்தித் திட்டங்களில் தோட்டப் பகுதிகள் உள்ளடக்கப்படுவதில்லையா?

அரசு நாட்டில் உள்ள 2-5 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு ஒரு கிளாஸ் பசும்பால் திட்டம் கொண்டு வந்துள்ளது. இது எத்தனை தோட்டப் பிள்ளைகளுக்கு கிடைக்கின்றது? மகிந்த சிந்தனையின் கீழ் தாய்மாருக்கான போஷாக்கு பொதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எத்தனை தோட்டப்புற தாய்மார்களுக்கு கிடைக்கின்றது. அது தவிர அரசாங்கத்தால் இலவசமாக பெற்றுத்தரப்படும் சமூக அபிவிருத்தி தொழில் விருத்தி சிறுவர் அபிவிருத்தி மற்றும் கலாச்சார நோக்கங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களும் அதற்கான அரச நிதிகளும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் கிடைத்து வருகின்றன. ஆனால் இவையெல்லாம் தோட்ட மக்களுக்கு கிடைக்கின்றனவா?
அப்படியானால் அரசாங்கம் தோட்ட மக்களை புறக்கணித்து செயற்படுகி;றதா? இல்லவே இல்லை என்கிறார் அம்பகமுவ பிரதேச செயலாளர் நாயகம் கே.பி. கருணாதிலக்க. அரசாங்கம் நாட்டு மக்களின் சேமநலனை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அதற்கான நிதியுதவிகளையும் அளித்து வருகின்றது. தோட்ட மக்களும் இந்நாட்டின் மக்களே என்ற அடிப்படையில் அவர்களுக்கும் இவ் அபிவிருத்தித் திட்டங்களில் பங்கு கொண்டு பலன் பெற சகல உரிமையும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தோட்டப் பகுதிக்கான சேவைகளை பெற்றுக் கொடுக்க பல்வேறு விசேட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கான சேவைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது. ஆயினும் இத் திட்டங்கள் தொடர்பாக இம் மக்கள் அறிந்திராமையும் இதனை உரிய வகையில் இம் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்குரிய முகவர்கள் தெளிவு பெற்றிருப்பதில்லை என்பதாலும் அரசின் இத்தகைய திட்டங்கள் இம் மக்களை சென்றடைவதில்லை. இவ் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அரசின் பிரதிநிதிகளாகச் செயற்பட்டு வருகின்ற அரச ஊழியர்கள் கூட இத் திட்டங்கள் தொடர்பான பூரண அறிவை கொண்டிருப்பதில்லை. இவ்வாறான காரணங்களாலேயே அரசின் பல அபிவிருத்தித் திட்டங்கள் தோட்ட மக்களை சென்றடையவில்லை. இது ஒரு பாதகமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே அரசின் அபிவிருத்தி திட்டங்களில் எவ்வாறு பங்கு கொண்டு பலன் பெற முடியும் என்ற தெளிவினையும், அறிவினையும் தோட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயல் திட்டமொன்றை கெயர் சர்வதேசத்தினூடாக நாம் தற்போது முன்னெடுத்து வரும் திட்டத்திற்கிணங்க பல்வேறு தோட்டப் பிரதேசங்களிலும் இருந்து மற்றவர்களுக்கு தெளிவுப் படுத்தக் கூடிய திறனைக் கொண்டிருக்கின்ற ஆண், பெண் தொழிலாளர்கள் மற்றும் படித்த இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு அரசின் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற அறிவினையும் பயிற்சியையும் வழங்கி வருவதாக இச் செயற்திட்டத்தின் இணைப்பாளர் விமன்சசொய்சா தெரிவித்துள்ளார்.
குறிஞ்சி குணா
நன்றி - சூரியகாந்தி