Saturday, September 12, 2009

தீபாவளிச் சமயத்தில் பிள்ளை பிடிக்காரர்கள் தோட்டங்களுக்கு வருவார்கள்!

சிறுமிகளான ஜீவராணி, சுமதி ஆகியோரின் மர்ம மரணங்கள், தரகர்களையும், கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் நம்பி நகரங்களுக்கு வேலைக்காரர்களாக சிறுவர் சிறுமியரை அனுப்பி வைப்போரின் கண்களைத் திறந்திருக்க வேண்டும். திறக்காவிட்டால் செய்வதற்கு ஒன்றுமில்லைதான். பெற்றோரே தரகர்கள் பக்கம் நிற்கும்போது யார் என்ன செய்ய முடியும்?
கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தை பகுதி கழிவு நீர் கால்வாய் ஒன்றிலிருந்து கடந்த மாதம் 14ம் திகதி மீட்கப்பட்ட மஸ்கெலியாவைச் சேர்ந்த சிறுமிகளான ஜீவராணி மற்றும் சுமதி ஆகியோரின் மரணம் மலையகத்தைச் சேர்ந்த அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. பெருந்தோட்டக் குடும்பங்களில் வருமானக் குறைவினால், வாழ்க்கையை இழுத்துச் செல்ல முயலாததால் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரிகளாக அனுப்பி வைக்கின்றனர்.
கொழும்பு மாவட்டம், கம்பஹா மாவட்டம், புத்தளம் மாவட்டங்களிலேயே மலையகத்தைச் சேர்ந்தோர் வீடுகளில் தொழில் புரிகின்றனர். பெருந்தோட்டக் குடும்பங்கள் வறுமையில் சிக்கியிருப்பதை தெரிந்துக்கொண்டு அவர்களிடம் பொய்யும் புனைசுருட்டுமாக கதைகளை அவிழ்த்துவிட்டு தனவந்தர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் (தரகர்) புரோக்கர்கள் கைநிறைய சம்பாதிக்கின்றனர். பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து அழைத்துச் சென்று தனவந்தர்களின் வீடுகளில் விலைபேசி தங்க வைத்துவிடுகின்றனர்.
ஒரு மாத சம்பளத்தையும் பயணச் செலவுக்கென இரண்டு ஆயிரம் ருபாவையும் பெற்றுக்கொள்கின்றனர். இந்த புரோக்கர்கள் இடைஇடையே இவர்களின் சம்பளத்தில் ஐந்து நூறு, ஆயிரம் என பெற்றுக்கொள்வதும் உண்டாம். இப் பணம் மாடாய் உழைத்து தேய்ந்து போகும் எமது மலையகப் பிள்ளைகளின் சம்பளத்திலேயே கழிக்கப்படுகிறது.
1977ஆம் ஆண்டுக்கு முன் கொழும்பு உட்பட பல இடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பெருந்தோட்டப் பெண்களே வீடுகளில் வேலை செய்து வந்தனர். அவர்களின் வயதும் 45, 50 தாண்டியதாக இருந்தது. அன்று கொழும்பு உட்பட புற நகரப் பகுதி வீடுகளில் சிங்களப் பெண்களே வீட்டு வேலைக்காரிகளாக இருந்து வந்தனர். இவர்கள் 50 வயதை
தாண்டியவர்களாகவும், எவ்வித குடும்பப் பொறுப்பும் இல்லாதவர்களாகவும் இருந்து வந்தனர். இவர்கள் ‘ஆயா’ என்ற அடை மொழியிலேயே அன்று அடையாளப்படுத்தப்பட்டனர்.
1977 ஆம் ஆண்டு ஐ. தே. கட்சி ஆட்சியை கைப்பற்றியதும் வகை தொகையின்றி சிங்கள கிராமப்புறங்களைச் சேர்ந்தோர் வெளிநாடுகளுக்கு (மத்திய கிழக்கு நாடுகள்) ‘ஹவுஸ் மெய்ட்’ என்ற பெயரில் வீட்டு வேலைக்காரர்களாகச் சென்றனர். இதன் காரணமாக சிங்கள கிராமப்புறங்களைச் சேர்ந்தோர் ஆயா வேலையை துறந்து வெளிநாடுகளை நாடத் தொடங்கினர்.
இதேவேளை ஐ. தே. கட்சியின் திறந்த பொருளாதார நடவடிக்கையால் மலையக பெருந்தோட்ட மக்களும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டதுடன், இடை இடையே நிலவிய இன கலவரத்தாலும் பெரிதும் இன்னல்களை அனுபவித்தனர். சிங்கள கிராமத்து பெண்கள் கொழும்புக்கு தொழில் புரிய வருகை தருவது குறைந்ததும், கொழும்பில் வர்த்தக நிலையங்களில் தொழில் புரிந்தோர் மலையக பெண்களை முதலாளிகளின் வீட்டு வேலைகளுக்கு வழங்க முன்வந்தனர்.
இதன் காரணமாக கூன் விழுந்து போன தங்களின் வாழ்க்கையை தோட்டத்திற்கு வெளியே சென்று நிமிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்டு தரகர்களின் ஆசை வார்த்தைகளை நம்பினர். இதன் தொடர்கதையே இன்று பத்து மாதம் சுமந்து பெற்ற பிஞ்சுகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கும் பரிதாபம் மலையகத்தில் தொடர்கிறது. பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள் என்பது வெறும் அலங்கார வசனம் அல்ல.
தேயிலைச் செடி மலைகளில் கொழுந்துக் கூடையை முதுகிலும் வயிற்றில் குழந்தையையும் சுமந்து காடு மலையேறி கொழுந்து பறித்து வாழ்க்கை நடத்துபவளே பெருந்தோட்டப் பெண்கள் என்பதை எவரும் மறுக்க இயலாது. வயிற்றில் தன் குழந்தையையும், முதுகில் கொழுந்துக் கூடையையும் சுமக்கும் பெருந்தோட்டப் பெண்கள் வறுமையின் வலியையும் சுமக்கிறார்கள். வறுமையின் நிறம் சிவப்பு என்பது மலையக பெருந்தோட்டப் பெண்களுக்கே தெரியும்.
கொழும்பு வீடுகளில் தொழில் புரியும் இளம் யுவதிகள், சிறுவர்கள், பெண்கள் படும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இது முழுமையாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகக் தெரியவில்லை. அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை பலர் தாம் வேலை செய்யும் வீடுகளில் தொழில் புரிகின்றனர். அடி உதை என துன்பப்படுவோரும் அதிகமாக உள்ளனர். கொழும்பு பங்களா என்றதும் இது ஒரு சொர்க்கப்புரி என நினைத்து புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி விடுகின்றனர். கொழும்பு பங்களாவில் உள்ள வேப்ப மரத்தின் குச்சியும் இனிக்கும் எனவும் பல புரோக்கர்கள் அநியாயமான பொய் வார்த்தைகளை பெருந்தோட்ட மக்களிடம் தெளித்துவிடுகின்றனர்.
இன்று மஸ்கெலியா பகுதியை சேர்ந்த ஜீவராணி மற்றும் சுமதி ஆகியோரின் மரணங்கள் பெருந்தோட்ட மக்களின் கண்களை அகல விரிவடையச் செய்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவ் இருவரின் பரிதாப மரணம் சம்பந்தமான விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்தில் ஆரம்பமான தினத்தன்று மலையகத்தை சேர்ந்த எமது சட்டத்தரணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் ஆஜராகியிருந்தமை எமது மக்களின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்.
இவர்களது மனதில் எமது பிஞ்சுகளின் மரணம் தொட்டுவிட்டது. அல்லது சுட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். பல்வேறு வேலைகளுக்கும் இடையே இறந்தவர்கள் எமது குழந்தைச் செல்வங்கள் என்ற சமுதாய உணர்வோடு நீதிமன்றத்தில் ஆஜராகியமை பாராட்டப்படவேண்டிய ஒன்று.
அனைத்து ஊடகங்களும் பெரும் படங்களுடன் செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டு பெருந்தோட்ட மக்களை விழிப்படையச் செய்தமைக்கு ஊடகங்களுக்கு அனைவரும் நன்றிகூற வேண்டும். இது காலம் வரை கொழும்பில் வீட்டு வேலைக்கு சேர்ந்தோரின் பல மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் இந்த இரு பிஞ்சுகளின் மரணம் பெருந்தோட்டப் பகுதிகளில் பேசப்படக்கூடிய வகையில் ஊடகங்களில் இடம் பிடித்தது. இது இம்மலையக பெருந்தோட்ட வறிய குடும்பங்களின் கண்களைத் திறந்திருக்கும் என எதிர்பார்ப்போம். இனியும் கண் திறக்காவிட்டால் யாரும் எதுவும் செய்வதற்கில்லை தான்.
இத்தரகர் தொழில் நேர்மையற்ற ஒரு தொழில் சட்டபூர்வமானதல்ல. இத்தரகர்கள் பற்றித் தகவல் தெரிந்தால் அருகேயுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது அப்பகுதி கிராமசேவகரிடம் முறைப்பாடு செய்யவேண்டும்.
சிறுவர்களை பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து கட்டாய வேலைக்கு அழைத்துச் செல்வோர், அல்லது கட்டாய வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளவர் கள் பற்றிய தகவல்களை அனைவரும் வழங்க முன்வர வேண்டும் என நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதுள்ள எமது நாட்டின் சட்டங்களின் கீழ் குறிப்பிட்டோருக்கு நீதிமன்றத்தின் மூலமாக தண்டனை வழங்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டப் பகுதியில் எதிர்வரும் தீபாவளி பெருநாள் காலத்தில் தரகர்கள் நட மாட்டம் அதிகரிக்கலாம். மக்கள் விழிப்பாக செயல்பட வேண்டும்.
கே.பி.பி புஷ்பராஜா
தினகரன்
வருடா வருடம் சம்பள மீளாய்வு செய்யப்பட வேண்டும் - அரவிந்தகுமார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வருடா வருடம் மீளாய்வு செய்யப்பட வேண்டுஅமன ஊவா மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அமைப்பாளருமான அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் இலங்கை உட்பட சர்வதேச மட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணி புரிவோருக்கு வருடா வருடம் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றன. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் சக்தியாக விளங்கும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. அதிலும் பல்வேறு இழுபறிகளும், புறக்கணிப்புக்களும் இடம் பெறுகின்றன. போராடியும் நியாயம் கிடைப்பதில்லை. நாளாந்தம் உயர்வடையும் பொருட்களின் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாது தோட்டத் தொழிலாளர்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய செலவினங்களை பார்க்கையில் 500 ரூபா என்பது பாரிய பிரச்சினையல்ல.
ஆகையினால் வருடா வருடம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மீளாய்வு செய்யப்பட்டு குறைந்த பட்சம் 50 வீதமான சம்பள உயர்வையேனும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்தோடு இப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.
இனிப் பேச்சுவார்த்தை இல்லை : ஆறுமுகன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இனிமேல் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் இது குறித்து 12-09-2009 கொட்டக்கலையில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

தற்போது வழங்கப்பட்டு வரும் 290 ரூபா சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் அதேவேளை, 360 ரூபாவாக நாட் சம்பளத்தை அதிகரிக்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

சம்பள உயர்வை வலியுறுத்தும் வகையில் கடந்த பத்து தினங்களாக பெருந்தோட்டங்களில் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.