Tuesday, May 14, 2013

பெரும் வெள்ளத்தினால் மத்திய மாகாணத்தில் 6 பேர் பலி மூவரை காணவில்லை


மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூவரை காணவில்லை எனவும் சுமார் 1099 குடும்பங்களைச் சேர்ந்த 4000 பேர் 32 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவிக்கிறது.

1361 குடும்பங்களைச் சேர்ந்த 4667 பேர் இந்த மத்திய மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் . மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய நான்கு இம் மாகாணத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
 

துற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் குமாரசிறி தெரிவித்துள்ளார்
 

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, நிவித்திகலை, எலபாத்த, குருவிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட 299 குடும்பங்களைச் சேர்ந்த 1571 பேர் பாதிக்கப்பட்டு ஆறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
 

முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் இரத்தினபுரியில் 121 குடும்பங்கள் 755 பேர், எஹலியகொடையில் ஒரு குடும்பம் 4 பேர், பெல்மதுளையில் 117 குடும்பங்கள் 580 பேர், எலபாத்தையில் 38 குடும்பங்கள் 151 பேர் அடங்குவர்
இதேவேளை கண்டி அங்கும்புரை பல்லேகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த அனுர ஜயசிங்க(45) முச்சக்கர வண்டியுடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார் சாரதி படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவரை தேடுவதற்காக கடற் படையினரின் உதவியை நாடியுள்ளனர்.