Friday, December 12, 2008

தேயிலை தின விழா

புதுடில்லியில் 2005ம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக தேயிலை தினத்தின் நான்காவது ஆண்டு நிறைவு தினம் எதிர்வரும் 15ம் திகதி நாவலப்பிட்டி தமிழ் கலாச்சார மண்டபத்தில் கொண்டாடுவதற்கு பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இத் தினத்தின் அடிப்படை தொனிப்பொருளும் குறிக்கோளும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான “வாழ்வதற்காக சம்பளம்” முதலாவது புதுடில்லி பிரகடனத்தில்
• பெருந்தோட்டப் பெண்களின் கருத்துகளுக்கு உரிய இடம் வழங்கப்படும்,
• பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
• குடும்ப அளவை தீர்மானிப்பதிலும் இனப்பெருக்கம் தொடர்பான முடிவுகளிலும் பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இத் தின நிகழ்வில் பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றத்தின் பங்காளி நிறுவனங்களின் சார்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கு கொள்வர்.

பெருந்தோட்டத்துறை அடையாமல் இருக்கும் அரசின் திட்டங்கள் விடயத்தில் கவனத்தை செலுத்தி அது வந்தடைவதற்காக பிரச்சாரம் செய்தல்.

இத்தினத்தை ஐக்கிய நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்காலிக தொடர் வீடுகளில் அடிப்படை வசதியின்றி வாழும் குடும்பங்கள்

கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் பம்பேகமவில் ஏற்பட்ட இன வன்முறையாலும், பம்பேகம தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளாலும் அப் பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் புசல்லாவ, கொத்மலை பகுதி தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். இவ்வாறு சுமார் 40 குடும்பங்கள் எல்பொட தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புதிய வீடுகள் விரைவில் நிர்மாணிக்க தோட்ட நிர்வாகமும், மலையக அரசியல்வாதிகளும் வாக்குறுதி வழங்கிய போதிலும் தற்காலிக குடியிருப்பில் தங்கியுள்ள இவர்களுக்கு புதிய வீடுகளை அமைக்கும் பணி மிக மந்தமாகவே இடம்பெற்று வருகிறது. இதனால் தொழிலாளர்கள் தங்களுக்கு மலசலகூடம், குடிநீர் உட்பட பல அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இத் தொழிலாளர்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த விடயத்தில் அரசியல்கட்சி தலைவர்களும், தோட்ட நிர்வாகமும் புதிய வீடுகளை கையளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மாகாணசபைத் தேர்தலில் இ.தொ.கா- ஐ.ம.சு.மு இணைந்து போட்டி

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களில்இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே தெரிவித்தார்.

தேயிலை விலை வீழ்ச்சியால் 1,50,000 மேற்பட்டோர் பாதிப்பு

தேயிலை விலை வீழ்ச்சி காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 1,50,000 இற்கும் மேற்பட்ட சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களை பாதுகாக்கும் இரத்தினபுரி மாவட்ட கிளையினர் தெரிவிக்கின்றனர்.
உலக சந்தையில் தேயிலையின் விலை தொடர்ந்து குறைவடைந்து வருகின்ற போதிலும் இலங்கையில் தேயிலை உர வகைகளின் விலை குறைக்கப்படவில்லை . இதனால் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் அவர்களை நம்பி வாழும் தொழிலாளர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஒரு இலையும் திரியுமான அரும்பு கொழுந்துகளை மாத்திரமே தேயிலை தொழிற்சாலை கொள்வனவு செய்கின்றன. இவ்வாறான கொழுந்து உற்பத்தி செய்யப்பட வேண்டுமெனின் உரிய காலத்தில் உரிய பசளை இடவேண்டும். அதற்கு பசளை விலை குறைக்கப்படவேண்டும். கடந்த காலங்களில் 60 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு கிலோ கொழுந்துகள் தற்போது 30 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.

நேரடி தபால் விநியோகம்; மேற்கொள்ள 355 பேர் நியமனம்

மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு நேரடி தபால் விநியோகத்தை மேற்கொள்வதற்காக தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த 355 பேருக்கு, தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் எம். எஸ்.செல்லச்சாமி தெரிவித்துள்ளார். அண்மையில் தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சர் மகிந்த விஜேசேகர தலைமையில் தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே இந் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த 500 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்படவிருந்தது. எனினும் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 355 பேருக்கு மாத்திரமே நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஏனைய 155 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மலையக தமிழ் இளைஞர்களை பார்வையிட அனுமதியில்லை – சிவஞானம்

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்படும் வட, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் இளைஞர்கள் வௌ;வேறு வகையில் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர். பொலிஸ் நிலையங்களில் விசாரணைக்காக தடுத்துவைத்துள்ள இவ் இளைஞர்களை அவரது பெற்றோர்களாலும் உறவினர்களாலும் நண்பர்களாலும் நேரில் சென்று பார்வையிடவும் அவர்களிடம் உரையாடவும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால், மலையக இளைஞர்களை பார்வையிடச் செல்வோருக்கு இத்தகைய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை. இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல அடிப்படை மனித உரிமை மீறலுமாகும் என மாத்தளை மாநகரசபை உறுப்பினர் எம். சிவஞானம் நகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்தார்
அவ்வாறு பார்வையிடவோ, பேசவோ அவரது பெற்றோருக்கு மட்டுமல்லாது எந்தவொரு நபருக்குமே இலகுவில் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் முன்னிலையில் சிங்கள மொழியில் மட்டுமே இருவரும் பேசிக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிங்கள மொழி தெரியாத பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் பேசக்கூட சந்தர்ப்பம் கிடைக்காது உள்ளனர். பொலிசாரது இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவோர் உடல், உள ரீதியாக பாதிக்கப்படுவதுடன் சமூகத்தில் பயங்கரவாதிகளென இனங்காட்டப்பட்டு வருகின்றனர். விசாரணையின் பின் இவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டாலும் இவர்களை சமூகம் சந்தேகத்துடனே நோக்குகின்றது. எனவே, இவ்வாறான செயற்பாடுகளை தடுத்துநிறுத்த ஜனாதிபதியும் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

25 குடியிருப்புகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம்

ஏல்கடுவ பிலான்டேசன் நிறுவனத்தினால் நிர்வகிகப்பட்டுவரும் பிட்டகந்த, தம்பளகல ஆகிய தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 25 குடியிருப்புகளை உள்ளடக்கிய இருவேறு வீடமைப்புத் திட்டங்கள் அமைப்பதற்கு காணிகள் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டதையடுத்தே வீடமைப்புத் திட்டம் அமைக்கப்படவுள்ளன. லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கம் மேற்கொண்ட கடும் முயற்சியின் பயனாக தேசிய வீடமைப்பு அதிகாரசபை மேற்படி வீடமைப்புத் திட்டங்களை அமைத்துக்கொடுக்க இணக்கம் தெரிவித்தன. பேச்சுவார்த்தையில் லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் எஸ்.ராமநாதன் நிதிச் செயலாளர் ஆர்.நடராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sunday, December 7, 2008

தொழிலாளர்களும் - 2009ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டமும்

இந் நாட்டின் வருமானத்திற்கு வளம் சேர்க்கின்ற தேயிலையின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி பெருந் தோட்டங்களை நிர்வகிக்கின்ற கம்பனிகள் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தொழிலாளர்களின் சம்பள உயர்வு வழங்கப்படாததால் எதிர்வரும் 08-12-2008 பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க இன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு, மற்றும் அரசு சார்பான ஏனைய தொழிற்சங்கங்கள் இதுபற்றி அக்கறை கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. கம்பனிகளுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தொழிற்சங்கங்களும், இவற்றுக்கு சார்பான தொழிற்சங்களும் தொழிலாளர் நலன் சார்ந்த நியாயமான இறுக்கமான கொள்கையை கடைபிடிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.
தேயிலையின் மூலம் வருமானம்
2007ம் ஆண்டு தேயிலையில் கிடைத்த வருமானம் 1.02 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2008ம் ஆண்டில் ஜனவரியில் இருந்து ஜூலை வரையான காலப்பகுதியில் தேயிலையின் வருமானம் 786 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2007ம் ஆண்டு இதே காலப்பகுதியில் பெற்ற வருமானத்தை விட ஏறத்தாழ 42 வீதம் அதிகமாகும். 2006ம் ஆண்டில் பெறப்பட்ட மொத்த வருமானமே 836 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இலங்கை தேயிலை சபையின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சியின் கூற்றுப்படி 2008 ம் ஆண்டு வருமானம் 1.4 – 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தற்காலிக விலை தளம்பல் பாதிப்பு ஏற்பட்டாலும் வருமானம் 1.2-1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கலாம்.
2006ம் ஆண்டில் 310.8 மில்லியன் கி.கி தேயிலையின் உற்பத்தி 2007ம் ஆண்டு 304.6 மில்லியன் கி.கி குறைவடைந்தது. 2008ம் ஆண்டு உற்பத்தி 315-320 மில்லியன் கி.கி வரை எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று எமது நாட்டில் வாழ்க்கைச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளன. உலக சந்தையில் எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறான நிலைமை இருந்த போதிலும் அரசு அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து அக்கறை கொண்ட போதும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பள உயர்வு குறித்து பாராளுமன்றத்திலும், கொள்கை வகுக்கும் இடங்களிலும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கைத்தரும் வகையில் முன் வைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.

Saturday, December 6, 2008

பொது வசதிகளுக்காக காத்திருக்கும் பெருந்தோட்ட மக்கள்

நீறுபூத்த நெருப்பில் ஊதி ஊதித்தான் பயன்பெற வேண்டும் என்றால் அது மலையகத்தை பொறுத்தவரையில் ஊதியம் பயனற்ற செயல்.

அபிவிருத்தி என்ற ஒன்றோடு ஏனைய பிரதேசங்களையும் மலையகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். கல்வியிலே ஏனைய பிரதேசங்களையும் மலையகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் அனைத்திலும் பின்தங்கியே உள்ளது. பொது வசதிகள் என்கிற போது எதனை என்று கேள்வி எழுப்பலாம்.

தோட்டத்துக்கு தோட்டம் தேயிலை செடி உண்டு. மரத்துக்கு மரம் ஆலயங்கள் உண்டு ஆனால் தோட்டப் பகுதிகளில் பின்வரும் பொது வசதிகள் இல்லையே.
• தரமான வைத்தியசாலை.
• நூலக வசதி
• தபால் நிலையம்
• கலாச்சார மண்டபம்.
• கணினி நிலையங்கள்
• விளையாட்டு மைதானம்

இவை அனைத்தையும் அமைத்துத் தருவதாக தேர்தல் காலங்களில் பல்லவி பாடுபவர்கள் தேர்தலின் பின்னர் தோட்டப் பகுதி வீதிகளை மட்டும் புனரமைத்து கொடுத்து விட்டு மக்களின் வாயை அடைத்து விடுகின்றனர்.

அடிப்படை வசதிகளற்று காணப்படும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் எதிர்கால மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. காரணம் நூலக வசதிகளை பொறுத்த வரையில் நகரங்களில் மட்டுமே காணப்படுகிறது. தோட்டப்புற பாடசாலைகளில் நூலகம் காணப்பட்டாலும் அவ்வளவு தரமான நூல்கள் கிடைப்பதில்லை. அதைவிட ‘வாசிப்பே ஒரு மனிதனை பூரணப்படுத்தும்’ மலையக மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க தோட்ட வாரியாக நூலக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அமெரிக்காவில் பகல் என்றால் இலங்கையில் இருட்டு என்பர். அது போல கொழும்பிலே விடிவு மலையகத்தில் இருட்டு காரணம் கொழும்பு போன்ற நகரங்களில் காணப்படும் கணனி கல்விக்கும் பெருந்தோட்ட கணனி கல்விக்கும் பெருந்தோட்ட கணனி கல்விக்கும் பாரிய இடைவெளி உண்டு. தேர்ச்சிப் பெற்ற கணனி ஆசிரியர்கள் மலையகத்தைப் பொறுத்தவரையில் கிடைப்பது அரிது. அதைவிட பாடசாலைகளில் கணனி பாடங்கள் இடம் பெற்றாலும் அது அடிப்படை கணனி அறிவோடு நிறுத்தப்படுகிறது. ஆசிரியர்களுக்கு போதுமான வினக்கம் இன்னும் வழங்கப்படவில்லை. முதலில் குறிப்பாக பெருந்தோட்ட ஆசிரியர்கள் பலருக்கு ஆங்கிலத்தையும் கணனியையும் கற்பிக்க வேண்டும். பிறகுதான் மாணவர்களை பற்றி யோசிக்க முடியும்.

கணனி நிலையங்களை அமைத்து தரமான ஆசிரியர்களை உள்வாங்குவதன் மூலம் மலையக மாணவர்களும் கணனித் துறையில் பிரவேசிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
விளையாட்டு மைதானம்

தோட்டப்பகுதிகளிலும், தோட்டப்பகுதி பாடசாலைகளிலும் சரி தரமான விளையாட்டு மைதானங்களை காண்பது அரிது. காரணம் இடப்பற்றாக்குறை என்பர். தரிசு நிலங்கள் தரிசாகவே காணப்பட வேளாண்மை நிலையங்களுக்கு அருகாமையில் மைதானம் அமைக்க எம்மவர்கள் கேட்க இறுதியில் விளையாட்டு மைதானமும் இல்லை. தரிசு நிலத்தின் பயன்பாடும் இல்லாமல் போய் விடும்.

மலையக சமுதாயத்தில் அதிகரித்த திறமை உடையோர் இருக்க எட்டடி காம்பிரவுக்குள் எதனை அவர்கள் ஒத்திகை பார்ப்பர். பாடுபவரா? ஆடுபவரா, நடிக்கத் தெரிந்தவரா? அனைத்து திறமையுமே மழுங்கடிக்கப்படுகின்றன. திறமைகளை வெளிக்கொண்டு வர நினைக்கும் கலைஞனுக்கு பாடசாலையை தவிர வேறு எந்த வழியும் இல்லை. அதற்கு கலாச்சார மண்டபம் இன்மையும் ஒரு காரணமே.

தோட்ட வைத்தியசாலைகள் அரசால் பொறுப்பேற்கப்படும் என்ற வாசகம். தோட்ட வைத்தியசாலைகளின் அடிப்படை தேவைகள் கூட இன்னும் நிவர்த்தி செய்யப்பட வில்லை. இவ்வாறு பல பொது வசதிகள் தோட்டப் பகுதிகளில் மட்டும் உருவாக்கப்படாமைக்கு காரணம் என்ன? அமைச்சுக்கள் உண்டு, அரச சார்பற்ற நிறுவனஙகள் உண்டு. மலையகத்திற்கு என்றால் பணம் பதுங்கி விடுமோ?

குமுறப் போகும் எரிமலையாய் கொதித்து நிற்கும் தோட்டப்பகுதி மேலும் மேலும் இக்கட்டான திசைக்கே இட்டுச் செல்லப்படுகின்றது- வீரகேசரியிலிருந்து
ஜனவசம தோட்டங்களில் தொழில் பிணக்குகளுக்கு தீர்வு எட்டப்படுவதில்லை

ஜனதா தோட்ட அபிவிருத்தி சபைக்கு உரித்தான (ஜனவசம) தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் தொழில் பிணக்குகளுக்கும், அவர்களது அடிப்படை தேவைகளுக்கும் உரிய காலத்தில் தீர்வு எட்டப்படுவதில்லை. எனினும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக இதே தோட்டங்களில் வாழ்ந்து தொழில் செய்தும் இவர்கள் ஓய்வுபெறும் போது இவர்களுக்கு சேர வேண்டிய ஊழியர் சேலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால பணம் என்பவைகூட முறையாக வழங்கப்படுவதில்லை. இது குறித்து இ.தொ.கா தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு எம்.பி.பி.எஸ் நியமனம்- சுரேஷ்

அரசினால் பொறுப்பேற்கப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு எம்.பி.பி.எஸ் தரத்திலான வைத்தியர்கள் வெக விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் பாரிய சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும், அதனடிப்படையில் தோட்ட வைத்தியசாலைகளுக்கு தமிழ் மொழியில் பரிச்சயமுள்ள நியமனங்கள் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சம்பள அதிகரிப்பு வழங்காவிடில் வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை-ம.ம.மு

தோட்டத்தொழிலாளரின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் உத்தரவாதமளிக்காத பட்சத்தில் திங்கட்கிழமை இடம்பெறவிருக்கும் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பை பகிஷ்கரிப்பதென மலையக மக்கள் முன்னணி 03-12-2008 மத்திய குழு கொழும்பில் கூடி நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின்னரே இந்த முடிவை எடுக்கத் தீர்மானித்துள்ளது.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அவசர கவனமெடுக்கும் பொறுப்பும் கடப்பாடும் அரசாங்கத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கும் உள்ளது. இதிலிருந்து அவர்களால் விலகிநிற்க முடியாது. இவ்விடயம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவிக்க மத்திய குழு தீர்மானித்துள்ளது.

Wednesday, November 26, 2008



மண் சரிவால் மூன்று வீடுகள் முற்றாக சேதம்

மலையகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழையைத் தொடர்ந்து கொட்டகலை அமைதிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவினால் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேற்படி வீடுகளில் வசித்து வந்தோர் தற்போது உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 குழந்தைகளும் உள்ளடங்குவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இம் மண்சரிவினால் சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

தோட்ட வைத்தியசாலை அரசாங்கத்தின் பொறுப்பில்

பதுளை மாவட்டம் உடுவர பெருந்தோட்டப் பகுதியைச் சார்ந்த மிகவும் பின்தங்கிய தோட்ட வைத்தியசாலை கடந்த 23-11-2008 முதல் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சீரற்ற போக்குவரத்துக் காரணமாகவும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாகவும் இப் பிரதேசத்திலுள்ள பொது மக்கள் மிகவும் சிரமங்களை உள்நோக்கி வந்ததையடுத்து அதனை உடனடியாக தீர்க்கும் வகையில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உடுவர தோட்ட வைத்தியசாலையின் சகல வேலைத் திட்டங்களையும் பதுளையிலுள்ள பிரதான வைத்தியசாலையிலிருந்து மருத்துவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அவ்வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நோயாளிகளை பரிசோதித்து அவர்களுக்கான சகல மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பூசா தடுப்பு முகாமுக்கு சென்ற விசாரணை மேற்பார்வை குழு

காணாமல் போதல், கடத்தல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழு பூசா முகாமிற்கு 27-11-2008 விஜயம் செய்யவுள்ளனர். அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 361 ஆண், பெண் தமிழ் முஸ்லிம் கைதிகளை சந்தித்து அவர்களுக்கான விசாரணைகளை துரிதப்படுத்தி நடவடிக்கை விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் வடக்கு, கிழக்கு இளைஞர்களும் 108 மலையக இளைஞர், யுவதிகளும் உள்ளதாகவும் இவர்களில் நிரபராதிகளாகக் காணப்படுபவர்களை விடுவிப்பதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாகவும் குழு உறுப்பினர்களில் ஒருவரான பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மேற்படி கண்காணிப்பு குழுவின் அங்கத்தவர்களில் அமைச்சர் ராஜித சேனாரட்ண, ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார, பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ், குழுவின் செயலாளர்களான ஆர். திவ்வியராஜன், லால் வெடிக்கார, பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு இயக்குனர் சி.என். வாக்கிஸ்டர் உட்பட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளும் பூசா முகாமிற்கு செல்லவுள்ளனர்.

வத்தேகம நகர பகுதியில் 19 பேர் கைது

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் வத்தேகம நகரப் பகுதியில் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின்போது 6 பெண்கள் உட்பட 19 தமிழ் பொதுமக்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நடவடிக்கை கடந்த 25-11-2008 ம் இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் கூடுதலானோர் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தொழில் புரிபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், சாப்பாட்டுக் கடைகளில் வேலை செய்வோர்கள், போன்றோரே கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர் எனவும் ஒரு சிலரே வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்மாற்றி வெடிப்புக்குள்ளானதில் குடியிருப்பாளர்கள் மின்சாரமின்றி அவதி

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் அமைந்துள்ள 400 கி.வோ மின்சாரத்தை விநியோகம் செய்கின்ற மின் பரிமாற்றியொன்று வெடித்து தகர்க்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபைக்கு 20 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக லிந்துலை மின்சார விநியோக அதிகாரி எஸ்.எம்.என் சமரக்கோன் தெரிவித்துள்ளார். இதனால் இந்த பிரசேத்தில் அமைந்துள்ள 400 குடியிருப்புகளுக்கான மின்சார விநியோகம் பாதிப்படைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Thursday, November 20, 2008


தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அரசு உத்தரவாதம் வழங்காத பட்சத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாத நிலையை தோற்றுவிக்கும்

அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 1970களில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை போல பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யதார்த்தமான உண்மையாகும். இது ஊடகங்களின் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது எமது கட்சி அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது எமக்கு மிகப்பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வரவுசெலவுத் திட்டத்தின் மீதூன இறுதி வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான உத்தரவாதத்தையும் வழங்காத பட்சத்தில் எமது கட்சி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் அது தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நாம் செய்யும் துரோகமாகவே விமர்சிக்கப்படும்.
எனவே, வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு முன்னர் அரசாங்கத் தரப்பிலிருந்து தொழிலாளர்களின் வருமானம் தொடர்பாக அரசாங்கம் அக்கறையை வெளிப்படுத்தாவிட்டால் எமது கட்சி எடுக்கின்ற அரசியல் நிலைப்பாட்டுக்கு கட்டுப்பட்டு நாம் வாக்களிக்க வேண்டிய கட்டயாத்தை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் சந்திரசேகரன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனம் நமுனுகலை பெருந்தோட்ட கம்பனியிடம் ஒப்படைக்க தீர்மானம்

பதுளை மாவட்டம் பசளை பகுதி டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் கணவரல்ல, கோணகலை, கந்தஹேன, பிங்கராவ, ஹிந்தகல்ல, கிளனன் ஆகிய தோட்டங்கள் அக் கம்பனி நிர்வாகத்தின் வழங்கப்பட்டிருந்த குத்தகை ரத்து செய்யப்பட்டு மீண்டும் நமுனுகலை பெருந்தோட்டத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி இந்த ஆறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை வழங்கப்பட வேண்டும் என்ற கலந்துரையாடலில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், யோகராஜன் ஆகியோரும் கம்பனி சார்பாக போல் ரத்நாயக்க, ரவிகுமார ரட்ண, பிரவீர் சமரதிலக ஆகியோரும் 183 தோட்டக் கமிட்டித் தலைவர்களும் கலந்து கொண்டனர். மேற்படி தொழிலாளர்களுக்கான அக்டோபர் மாதத்துக்கான சம்பளமும், ஏனைய சட்டபூர்வ கொடுப்பனவுகள் அனைத்தும் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் வழங்கப்படுவதாகவும் இங்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து பேச அழைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் 2006ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இ.தொ.கா வின் வற்புறுத்தலினால் 2007ம் ஆண்டு மாற்றியடைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் 2008ம் ஆண்டுவரை செல்லுபடியாகும் நிலையில் இருந்தாலும் இது ஒரு வருடத்தில் மீண்டும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் அனைத்து தரப்பிலும் வலியுறுததப்படுகின்றது. இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் அங்கம் வகிப்பதால் இதனை மாற்றியமைக்கக் கூடிய தகுதியும் பலமம் பொறுப்பும் இச் சங்கத்திற்கு இருக்கிறது. எனவே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கு சரியான தீர்மானமொன்றை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ஆறு தோட்டத் தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகள் தாமதமின்றி வழங்க உத்தரவு


பதுளை மாவட்டத்தில் டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் கணவரல்ல, கோணகலை, கந்தஹேன, பிங்கராவ, ஹிந்தகல்ல, கிளனன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என கொழும்பிலுள்ள தொழில் திணைக்கள தலைமையகத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தொழில் ஆணையாளர் நாயகத்தின் தலைமையின் கீழ் திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பட்டகொட, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர், நமுனுகுல பிளான்டேசன் முகாமைத்துவ அதிகாரிகளான போல் ரட்ணநாயக்க, பிரவீன் டி சமரசிங்க மற்றும் டஸ்கர் பொட்லிங் கம்பெனியின் சார்பில் முகாமைத்துவ அதிகாரி மனோஜ் பத்திராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொழிற்சங்கங்களின் சார்பில் வடிவேல் சுரேஷ், கே. வேலாயுதம், ஆர்.எம்.கிருஷ்ணசாமி, நாந் அமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர். 2006 ஆம் ஆண்டு ஜுன் 14 ஆம் திகதி நமுனுகுல பிளான்டேசன் முகாமைத்துவ நிர்வாகத்திற்குட்பட்ட மேற்படி தோட்டங்கள் டஸ்கர் பொட்லிங் முகாமைத்துவ நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. எனினும் பல்வேறுபட்ட நிர்வாக பிரச்சினைகளும் கொடுப்பனவு தொடர்பான இழுபறிகளும் தொடர்ந்த நிலையில் மேற்படி தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும். அன்றேல் நமுனுகுல தோட்ட நிர்வாகம் மீண்டும் பொறுப்பேற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் தொடர்ந்தன.
2008 அக்டோபர் மாத சம்பளம் வழங்கப்படாமையால் ஆறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் 450 சேவையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளலாயினர். அத்துடன் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்காலப்பணம் மற்றும் இதர கொடுப்பனவுகளும் வழங்கப்படாமையும் குறிப்பிடத்தக்கது.

மரங்கள் தறிக்கப்படுவதால் தேயிலை அழிவுக்கு வழிவகுக்கும்


மாத்தளை மாவட்டம் உக்குவளை, ரத்வத்தை, பன்சலதன்ன மற்றும் எல்கடுவ தோட்டங்களில் பெருமளவு மரங்கள் தறிக்கப்படுவதால் பாரியளவு தேயிலை பயிர் அழிவுக்குட்பட்டு வருவதாக இப் பகுதிவாழ் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனைத் எதிர்த்து அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியதையடுத்து தொழிலாளர்கள் சார்ந்த தொழிற்சங்கங்கள் தலையிட்டு மரங்கள் தறிக்கப்படுவது நிறுத்தப்பட்டடிருந்தன. எனினும் மீண்டும் மரம் தறிக்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலையை மூடிவிட திரைமறைவு சதி

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியை காரணம் காட்டி மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் பொறுப்பிலுள்ள தேயிலை தொழிற்சாலைகளை மூடி விடுவதற்கு திரைமறைவில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக ம.ம.மு வலப்பனை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். மேற்படி பெருந்தோட்ட நிறுவனத்தின் பொறுப்பிலுள்ள கபரகலை, பிரேம்லீ, மத்துரட்ட, ஆல்கரனோயா, கிளன்டன், மெரி கோல்ட் ஆகிய தோட்டங்களின் தொழிற்சாலைகளின் பெறுமதிமிக்க உதிரிப் பாகங்கள் இரவோடு இரவாக தோட்ட நிர்வாகத்தினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனை தடுப்பதற்கு சமூக முரண்பாடுகளை ஒதுக்கி ஒன்று பட்டு தொழிலாளர் சமூகத்துக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டியது தொழிற்சங்களினதும் தோட்ட நிர்வாகங்களினதும் கடமையாகும்.

Sunday, November 16, 2008

தேயிலை விலை உலகச் சந்தையில் வீழ்ச்சியடையவில்லை- பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு

இலங்கையின் பிரதான பெருந்தோட்ட பயிரான தேயிலையின் விலை அண்மைக்காலமாக உலக சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தோட்டக் கம்பனிகள் நட்டம் அடைந்துள்ளதென கூறப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் இவ்வாறான தவறான பிரச்சாரங்களினால் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாந்து விடக்கூடாது என பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஓ.ஏ. இராமையா தெரிவித்துள்ளார் அமெரிக்க டொலருக்கு ஏற்பட்ட சிறிய வீழ்ச்சி தேயிலை, இறப்பர் ஏற்றுமதி வர்த்தகத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் பெருந்தோட்டங்களில் வேலை நாட்களை குறைத்து பெறப்படும் தேயிலையின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது பொய் பிரச்சாரமாகும்.
உலக சந்தையில் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு தோட்டக் கம்பனிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கூற முடியாது. அவர்களின் இலாபத்தில் சிறு விகிதம் குறைந்திருக்கலாம். இதற்கு எந்த விதத்திலும் தொழிலாளர்கள் பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் அல்லர். இதனால் தொழிலாளர்களின் வேதனைத்தையோ அல்லது வேலை நாட்களையோ குறைக்க முடியாது.

வரலாறு காணாத வகையில் கடந்த வருடத்தில் பெருந்தோட்டத்துறை ஏற்றுமதி வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கிடைத்திருக்கிறது. இவ்வாறு அபரிமிதமான வருமானத்தை ஈட்டுகின்ற போது கம்பனிகள் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. இலாபம் குறைந்தால் மட்டும் தொழிலாளர்களின் வேதனத்தைக் குறைக்கவும் வேலை நாட்களில் மாற்றம் கொண்டுவர தீர்மானிப்பதும் எவ்விதத்திலும் நியாயமான செயல் அல்ல. தொழிலாளர் வேதனம் இலாப நட்ட அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. மாறாக உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தினை பெற்றுக் கொள்வதே அவர்களது உரிமை.

ஏரி பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால் செயற்பை இறப்பர் உற்பத்திக்கான இலாபம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன் இயற்கை இறப்பருக்கு எப்போதும் போன்று கிராக்கி இருந்து கொண்டுதான் உள்ளது. ஒட்டு மொத்தத்தில் கூறுவதானால் பெருந்தோட்டத் தொழில் துறையின் எதிர்கால பொருளாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு பாரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூற முடியாது. இதனை காரணமாக காட்டித் தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபடுவதில் நியாயம் இல்லை.

எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அதற்கான காரணங்களை கூறி பல்வேறு துறைகளில் விலை அதிகரிப்பை செய்யும் அரசாங்கம் உலக சந்தையில் அதன் விலை குறையும் போது விலை குறைப்பை செய்வதில்லை. இதேபோல் கடந்த காலங்களில் எதிர்பாராத அளவுக்கு தேயிலைத்துறை இலாபத்தை சம்பாதித்துக் கொடுத்ததாக மார்தட்டிக் கொள்ளும் கம்பனிகள் அந்த இலாபத்தில் ஒரு சத வீதத்தையேனும் சரி தொழிலாளர்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளதா?

இப்போது இலாபத்தில் வீழ்ச்சி என்றவுடன் தொழிலாளர்களை சுரண்டுவதா? இது தொடர்பாக இலங்கை தேயிலை சபையும் அரசும் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என இராமையா கேட்டுக் கொண்டார்.

Friday, November 14, 2008

சந்தா பணத்திலிருந்து மலையக மாணவர்களுக்கு புலமை பரிசில் - மாகாண கல்வி அமைச்சர்

மலையக மாணவர்களுக்கு தொழிற்சங்க சந்தா பணத்திலிருந்து புலமை பரிசில் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு கடந்த 12-11-2008 அன்று ஹட்டன சீடா கல்வி நிலையத்தில் இடம் பெற்றது. தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும், மத்திய மாகாணசபை கல்வி அமைச்சருமான எஸ் அருள்சாமி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் அருள்சாமி தெரிவிக்கையில் தொழிற்சங்க சந்தா பணத்திலிருந்து மலையக மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கி அவர்களை சிறந்த கல்விமான்களாக உருவாக்குவதே தமது நோக்கம் என்றார். இம் முன்மாதிரியை பின்பற்றி ஏனைய தொழிற்சங்கங்களும் இவ்வாறு வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றார். வெளிநாடுகளிலுள்ள தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களுக்கு சுற்றுலா செல்வதற்கு நிதி உதவி செய்கின்றது. பெரும் நிதியை சந்தவாக பெற்றுக் கொள்ளும் எமது தொழிற்சங்கங்ளும் இதை கடைபிடிப்பதில்லை. வெறுமனே தொழிற்சங்க போராட்டங்களில் விரயமாக்காமல் கல்வி துறையில் தமது தொழிற்சங்கம் அக்கறை செலுத்துவது குறித்து குறிப்பிட்டார். 5ம் ஆண்டு புலமைப்பரிகா ரூ 500 ஆகவும், உயர்தர வகுப்பில் தேறியவர்களுக்கு 750 ரூபாயும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாயும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவோம் எனக் குறிப்பிட்டார். 70 ஆண்டுகளாக தொழிற்சங்கங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் யாராவது மாணவர்களின் கல்விக்காக புலமைப் பரிசுகளை ஏற்படுத்தினோமா? புலமைப் பரிசை பல்கலைக்கழகம் வரை செய்ய வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். அதை நாம் தொடர்ந்து செய்வோமென்றார்.
இனப்பிரச்சினைத் தீர்வுத் திட்டத்தில் மலையக மக்களின் அபிலாஷைகள் பற்றிய மலையக மக்கள் முன்னணியின் புதிய முன் மொழிவுகள்

இனப்பிரச்சினை தீர்வுக்காக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை கடந்த 10-11-2008 சந்தித்த மலையக மக்கள் முன்னணியினர் மலையக மக்கள் அரசியல் அபிலாசைகளை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஏற்கனவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் தாங்கள் முன்வைத்த முன் மொழிவுகளுடன் மேலும் சில புதிய முன்மொழிவுகளை முன் வைத்துள்ளனர். அந்த விடயங்கள் வருமாறு

இலங்கையில் வாழும் சகல தேசிய இனங்களினதும் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் உண்மையான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். (Genuine Power Sharing) மத்திய, ஊவா, சப்பரகமுவ ஆகிய மாகாணங்களில், மலையக தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து ஓர் அதிகாரப் பகிர்வு அலகு (POWER SHARING UNIT)உருவாக்கப்பட வேண்டும்.

தேவை ஏற்படின் மலையக தமிழர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை தனியாக மீள் வரையறை செய்து இந்தியாவின் பாண்டிச்சேரி முறை போன்று அல்லது உலக நாடுகளில் உள்ள நிலத் தொடர்பற்ற முறைகளை அடிப்படையாக கொண்டு இவ் அதிகாரப் பகிர்வு அலகு உருவாக்கப்படலாம். உதாரணமாக (பெல்ஜியம் முறை)

நாம் முன் மொழிந்திருக்கும் மேற்படி அதிகார பகிர்வலகில் உள்ளடங்காத மலையக தமிழ் மக்கள் பல்வேறு மாவட்டங்களிலும் பரந்து காணப்படுவதால் அவர்களது அரசியல் அபிலாஷைகளையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் ஓர் அபிவிருத்தி சபை (DEVELOPMENT COUNCIL) அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதற்கு பெல்ஜியத்தில் காணப்படும் முறையைப் பயன்படுத்தலாம்.

நாம் முன் மொழிந்த அலகு பின்வரும் விடயங்களை கொண்டிருக்க வேண்டும்: சட்டவாக்க அதிகாரம் முழு அதிகாரத்துடன் கூடிய முதல் அமைச்சரும்அமைச்சர்கள் சபையும், ஆளுநர், காணி அதிகாரத்தோடும், பொலிஸ் அதிகாரத்தோடும் ஏனைய அதிகார அலகுகளுக்கு வழங்கப்படும் அனைத்து அதிகாரங்களும் நாம் முன் மொழிந்துள்ள அதிகார பகிர்வலகுக்கு வழங்கப்பட வேண்டும்.

அபிவிருத்தித் தேவைகளுக்கு வெளிநாட்டு உதவியை பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

மலையக தமிழ் மக்களின் இன விகிதாசாரத்திற்கேற்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலான தேர்தல் முறைமை மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய எல்லை நிர்ணயக்குழு அமைக்கப்பட வேண்டும்.

மலையக தலைமைகள் வரவுசெலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்

2009 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம், நாட்டு மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, ஏற்கனவே பொருளாதார சுமைக்குள் சிக்கியிருக்கும், மக்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளவுயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டுக்கு பெருமளவு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தோட்டப்புற மக்களின் அத்தியாவசியப் உணவுப் பொருளான கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தோட்டத் தொழிலாளர்களே பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மலையக தலைமைகள் அம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது உண்மையானால் எதிர் வரும் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஐ.தே.க மாத்தளை மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாட்களில் வேலை வழங்கி தொழிலாளர்களை தோட்டக் கம்பனிகள் ஏமாற்றுகின்றனர்.

தோட்டக் கம்பனிகள் விடுமுறை நாட்களில் வேலை வழங்கி, ஆண், பெண் தொழிலாளர்களை ஏமாற்றி வருவதுடன் அவர்களது உழைப்பை சுரண்டுவதாக சுட்டிக்காட்டியுள்ள தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி.அய்யாத்துரை இதற்கு தோட்டக் கமிட்டித் தலைவர்கள் துணைபோவது கண்டிக்கத்தக்க விடயமாகும் எனத் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுமானால் சாதாரண நாட்களைப் போல 16 கிலோவிற்கான சம்பளப் பணமே வழங்கப்பட வேண்டும். இதுவே தொழிற்சங்கத்தின் சட்டமும் நீதியுமாகும். ஆனால் தோட்டக் கம்பனிகள் ஒன்றரை நாள் சம்பளத்திற்கு 24 கிலோ கொழுந்து பறிக்கும்படி தோட்ட நிர்வாகங்கள் நயவஞ்சகமாக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர்.

உலகச் சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி- தொழிலாளர்களுக்குரிய கொடுப்னவுகளை வழங்க நிர்வாகம் மறுப்பு

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டத் தொழிலாளர்களுக்குரிய வேலைவாய்ப்பினையோ அல்லது உரிய சம்பளத்தையோ வழங்குவதற்கு தோட்ட நிர்வாகங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மாதமொன்றுக்கு 24 நாட்கள் வேலை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 12 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்படும் 12 நாட்களுக்கு அரை நாள் சம்பளப் பணமே வழங்கப்படுகின்றன. மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. மாதத்தில் 20 க்கும் மேற்பட்ட நாட்கள் வேலை செய்தால் மாத்திரமே 75 சதவீத வரவு கொடுப்பனவு, மேலதிக கொடுப்பனவுகள் உட்பட நாளொன்றுக்கு தலா 290 ரூபா சம்பளமாக தொழிலாளியொருவருக்கு கிடைக்கப்பெறும். இல்லையெனில் நாளொன்றுக்கு தலா 200 ரூபா வழங்கப்படுகின்றன. தற்போது இந்த 200 ரூபாவிலும் 1/2 பேர் என்ற பெயரில் நாளொன்றுக்கு தலா 100 ரூபா சம்பளமாக வழங்கப்படுகின்றன. இரத்தினபுரி கலபட (கீழ்ப்பிரிவு) தோட்டம்நிவித்திக்கலை, தொலஸ்வலை தோட்டம், கரவிட்ட பகுதி தோட்டங்களில் நாளொன்றுக்கு 1/2 நாள் சம்பளமே (100ரூபா) வழங்கப்படுகின்றன. நாள் முழுதும் வெயிலும், மழையிலும் கஷ்டப்பட்டும் தமக்கு தலா 100 ரூபா சம்பளம் வழங்கப்படுவது என்பது மிகவும் கொடுமையான விடயமென சுட்டிக்காட்டும் தொழிலாளர்கள் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று கோரி, தத்தமது தொழிற்சங்களில் முறையீட்டுள்ளனர். இதேவேளை கலபட தோட்டத்தில் அக்டோபர் மாதம் 20 நாட்கள் வேலை செய்த போதிலும் நாளொன்றுக்கு (100 ரூபா) 1/2 பேர் என்றடிப்படையில் 10 நாட்களுக்கான சம்பளமே வழங்கப்பட்டுள்ளன இதனால் இத்தோட்டத் தொழிலாளர்கள் அக்டோபர் மாதச் சம்பளத்தை வாங்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க பெல்மதுளை ரில்ஹேன தோட்டத்தில் சுழற்சி முறையிலான வேலை வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Monday, November 10, 2008

மலையக அலகு தொடர்பாக ஆராய முடிவு

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவில் “மலையக அலகு” தொடர்பில் இம் முறை ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி பிரதிநிதிகளின் 87வது கூட்டம் இக் குழுவின் தலைவரான திஸ்ஸ விதாரண தலைமையில் கூடவுள்ள இக் கூட்டத்தில் இ.தொ.கா முன்வைத்துள்ள மலையக அலகு தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இது தொடர்பாக மலையக மக்கள் முன்னணி இந்த யோசனைக்கு தமது தரப்பில் யோசனைகளை முன் வைப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளது. இதே வேளை மேலக மக்கள் முன்னணி தமது தரப்பு யோசனைகளை முன் வைப்பதற்கு கால அவகாசம் கோரியிருந்தது.

பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டுள்ள நிலையில் இ.தொ.கா முன் வைக்கப்பட்ட யோசனைகள் மேலும் இழுபறியை ஏற்படுத்தும் என்பதனால் மலையகத்துக்கு வெளியே வாழ்கின்றவர்களை உள்ளடக்கி கொள்ளும் வகையிலான தீர்வுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு சர்வ கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில அங்கம் வகிக்கின்ற கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களான விஸ்வ வர்ணபாலா, திஸ்ஸ விதாரண மற்றும் பி. துயாரத்ன ஆகியோர் மலையக அலகு யோசனைக்கு கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Sunday, November 9, 2008

அமைச்சரவை அங்கீகாரத்தை எதிர்பார்த்துள்ள தோட்டச் சேவையாளர்கள்

இலங்கையின் பெருந் தோட்டங்களில் பணியாற்றிவரும் தோட்ட சேவையாளர்கள் தங்களின் பல வருட சேவையின் பின் அவர்களுக்கென்று காணி இல்லை. ஓய்வு பெற்றபின் வீடின்றி உறவினர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் இருக்கும் நிலை தொடர்பா இவர்கள் அங்கம் வகிக்கும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க தெரிவிக்கையில் 485 பேருந்தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட சேவையாளர்கள் சுமார் 15,000 இற்கு மேற்பட்டவர்களாவர். இவர்களில் 95 வீதமானவர்கள் இத் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள். அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை என நிர்வகித்து வந்த இத் தோட்டங்கள் நிர்வாக சீர்கேடு, நட்டம் என்பவற்றால் 1992ம் ஆண்டு தனியார் கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அரசு தோட்டங்களை நிர்வகிக்கும் போது 1965ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில், சம்பள ஒப்பந்தம் உட்பட மாற்றங்களை செய்தது போலவே 1993ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கோரிக்கைளை ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள முடிந்தது என்றார்.

தற்போது 20 தனியார் கம்பனிகள் 425 தோட்டங்களையும், அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையும் குருநாகல் பிளான்டேசன், ஆகியன 60 தோட்டங்களையும் நிர்வகிக்கின்றன. மொத்தமாக-485 தோட்டங்கள்.
இவர்களுக்கான காணிப்பிரச்சினை பல வருடகாலமாக இழுபறியில் உள்ளது. அமைச்சரவையின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். என்றார்
இளைஞர் யுவதிகள் உலகிற்கேற்ற வகையில் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் -எஸ்.ஆறுமுகன் தொண்டமான்

மலையக இளைஞர் யுவதிகள் உலகிற்கேற்ற வகையில் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் அவர்களின் நலன் கருதி அவர்களுக்குரிய தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் சமூக,பொருளாதார அபிவிருத்தியமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்திப் பொறுப்பு என்பனவற்றோடு இணைந்து இளைஞர் வலுவூட்டல் சமூக,பொருளாதார அபிவிருத்தியமைச்சு ஆரம்பித்துள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான அறிவூட்டல் செயலமர்வை அட்டனில் ஆரம்பித்து வைத்துப்பேசியபோது தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம் எஸ்.ஜெகதீஸ்வரன் உட்பட பெருந்தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனைகளை இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த வளவாளர்கள் வழங்கினர்.
சோல்பரி திட்டத்தின் அநீதி பற்றி முதற்படி

இலங்கையில் எல்லா இந்திய அபிப்பிராயங்களையும் தழுவி ஓர் உருவாய் திகழும் காங்கிரஸ் மகாசபை சோல்பரி சிபாரிசுகளை நவம்பர் மாதம் 14ம் திகதி 1945-ல் காரிய கமிட்டியில் பரிசீலனை செய்ததில் கண்ட முடிவு டொனமூர் திட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகள்.
மன்னர் பிரான் 1943-ம் வருட உள்நாட்டு ஆட்சிப் பிரகடணம். இவைகளெல்லாம் சோல்பரி திட்டத்தில் அலட்சியம் செய்யப்பட்டிருக்கின்றன. இலங்கையின் சுதந்திரமே நமது இலட்சியம். ஆட்சி அதிகாரம் நாட்டு மக்கள் கைக்கு மாற்ற வேண்டுமென்பதே நம் நோக்கம். எனினும் சம அந்தஸ்தும் நியாயமாய் எமக்கு அரசியலில் கிடைக்க வேண்டிய ஸ்தானமும் தேசிய பிளவை ஏற்படுத்துவதோடு இந்தியரை பயங்கரமான அடிமைத்தனத்தில் ஆழ்த்துகின்றது.
சிறுபான்மையோருக்கு நியாயம் வழங்குவதே கமிஷனர்களின் முதன்மையான நோக்கமாயிருந்தும் மந்திரிமார் நகல் திட்டத்தை தழுவித் தயாரித்தபடியால் சோல்பரி கமிஷன் சிறுபான்மையாயோர் உரிமைகளை பலிகொடுத்திருக்கின்றன. திட்டவட்டமான இந்தியர் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த நாடெங்கும் 1945ம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 28ம் திகதி வரையிலும் சோல்பரி திட்ட அநீதிக்கு எதிரான கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சிபாரிசுகளை வன்மையாக கண்டித்து சர்க்காருக்கு தந்திகள் அனுப்பப்பட்டன. சர்க்கார் மனமாற்றம் செய்து கொள்ளத் துணியவில்லை. பாட்டாளிகள் உள்ளத்தில் ஒரு கலவரம் பீதி பற்றிக் கொண்டது. அஸீஸ் முதல்வராக திரு. வைத்திலிங்கம் தூது கோஷ்டி தாய்நாடு சென்றது. இந்திய தேசிய தலைவர்களிடம் அஸீஸ் கூறியதாவது.

கடல் கடந்த இந்தியர்கள் பாரத தேசத்தின் பிரஜைகளாக இருக்க முடியாது. இலங்கையில் வாழும் இந்தியர்கள் இலங்கை பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். இலங்கைத் தீவின் வளர்ச்சிக்காக தொழிலாளர் சமூகம் இரத்தம் சிந்தியது அல்லாமல் அவர்கள் எலும்புகள் கடந்த நூற்றாண்டுகளாய் தேசத்திற்கு உரமாயிருக்கின்றன.

கைத் தொழில்கள், பாலங்கள், வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் கட்டிடங்கள் இவைகளுக்கெல்லாம் இந்தியர் உழைப்பே காரணமாகும் என்றார்.
அதேநேரம் தொழில் ஆணையாளருக்கு கீழ்வரும் தந்தி செய்தி அனுப்பப்பட்டது. சோல்பரி சிபாரிசுகள் இந்தய தொழிலாளர்களுக்கு இழைத்திருக்கும் அநீதியை எதிர்க்க டிக்கோயா, டிம்புல பகுதியிலுள்ள 400 தோட்டங்களில் வதியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமே தக்க ஆயுதமாகக் கருதுகிறோம்.

ஐந்து வருடங்கள் இலங்கையில் வசித்தவர்களுக்கு பிரஜாவுரிமை ஓட்டுரிமை வேண்டும். இதனால் 400 தோட்டங்களிலுள்ள தலைவர்களும் அட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை, பூண்டுலோயா காங்கிரஸ் நிர்வாகஸ்தர்களைக் கொண்ட தூது கோஷ்டி 28-10-1945-ல் துவங்க நோட்டீஸ் கொடுக்க உத்தேசித்திருக்கிறது. கவர்ணருக்குத் தெரியப்படுத்தவும் . ஆதாரம் முதற்படி 1950.

குறிப்பு:- இந்தியர், பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் வரும் முன்பே சோல்பரி திட்டத்தில் இந்திய வம்சாவளியினர் ஒடுக்கப்பட்டனர் என இந்தத் தகவல் தருகிறது.
நன்றி- சத்தியம்

Saturday, November 8, 2008

தேயிலை செடிக்கு அக்கறைகாட்டும் அரசாங்கத்தால் தொழிலாளர் புறக்கணிப்பு – டி.அய்யாத்துரை

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 2009ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றுப்பட்டுள்ளதாக தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி. அய்யாத்துரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் அரச ஊழியர்கள், விவசாயிகள், உட்பட ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிவாரணமளித்த அரசாங்கம் இந் நாட்டுக்கு இலங்கையின் தேசிய வருமானத்தில் 65 சத வீதத்தை வருமானமாக பெற்றுக் கொடுக்கும் ஆறு லட்சம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை தொடர்ந்தும் புறக்கணித்து வருகிறது. தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு பன்மடங்காக அதிகரித்துள்ள வேளையில் தோட்டக் கம்பனிகள் கூட்டொப்பந்தம் மூலமாக வகுத்துள்ள சம்பளத் திட்டம் தொழிலாளர்களை வறுமையில் வீழ்த்தியிருப்பது நாடறிந்த விடயம். இதைப் பற்றி அரசாங்கத்திற்கு பல முறை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் தேயிலை செடிக்கு காட்டுகின்ற அக்கறை கூட தோட்டத் தொழிலாளர்களுக்கு காட்டுவதில்லை. இந்த வரவு செலவுத் திட்டம் சிறுபான்மை மக்களையும் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களையும் ஏமாற்றும் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்

இந்நாடு அனைவருக்குமே சொந்தமானது –பூஜித ஜயசுந்தர

சிங்களவர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் இந்நாடு சொந்தமானதாகும். அவர்க ளும் இந்நாட்டின் பிரஜைகளே. நாம் அவர்களை மொழியாலோ, சாதி, சமய இன, நிற ரீதியாகவோ ஒதுக்க்கீடு செய்யமுடியாது. நாட்டின் சுதந்திரம் பெறுவதற்கு சிங்கள, தமிழ் முஸ்லீம் தலைவர்கள் ஒன்றிணைந்து பாடுபட்டார்கள். என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதனை இன்றைய இளைஞர்கள் அறியமாட்டார்கள். என மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அட்டன் பிரின்சஸ் மண்டபத்தில் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

Friday, November 7, 2008


தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புக்கள் சொந்தமா?

அரசியல் தொழிற்சங்கத் தலைவர்களால் உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்படும் வார்த்தைகளை நம்பி தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் தங்களுக்கு வழங்கப்படும் ஏழு பேர்ச்சர்ஸ் நிலத்தில் நிர்மாணித்து வழங்கப்பட்ட வீடுகளை விருப்பப்படி விற்கவோ, வேறு பாணியில் கட்டிடத்தை மாற்றி அமைக்கவோ நினைத்து அப்படிச் செய்யும் போது நிர்வாகத்தினால் அதைக் கட்டுப்படுத்துவதோடு தவறும் பட்சத்தில் குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை அநேக தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்றனர். தொழில் நீதிமன்றங்களிலும் நீதவான் நீதிமன்றங்களிலும் இதை சென்று பார்வையிடலாம்.
வீட்டை இன்னொருவருக்கு விற்றதாகவோ மாற்றியதாகவோ நிர்வாகம் கருதி அவர்களுக்கு வேலை நிறுத்தம் செய்தால் விபரமறியாத தொழிலாளர்கள் தொழில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து வருடக் கணக்கில் வழக்காடப்பட்டு இறுதியில் காணியும் வீடும் தனக்கு சொந்தம் என்பதை நிரூபிக்கத்தவறி, வழக்கில் தோல்வி அடைந்து தொழிலை இழப்பதோடு வீட்டையும் நிலத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நீதிமன்ற கட்டளையை மீறும் பட்சத்தில் எதுவித அறிவித்தலுமின்றி இரக்கமற்ற முறையில் வீட்டில் உள்ளவர்களை வெளியில் அனுப்புவதுடன் உடைமைகளுடன் வீசப்பட்டு நிர்வாகத்திடம் வீடு கையளிக்கப்படுகிறது. வீடும் அதைச் சுற்றியிருக்கும் நிலமும் தொழிலாளருக்கு சொந்தம் என்பவர்கள் அதற்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

பொகவந்தலாவை, டிக்கோயா, வட்டகொட, மடக்கொம்பரை போன்ற தோட்டப் பகுதிகளில் வேலை செய்யாதவர்கள் வீடுகளில் இருக்க முடியாது என்று நிர்வாகத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதை யாவரும் அறிவோம். மடக்கொம்பரையில் முன்னாள் (பா.உ) சி.வீ வேலுப்பிள்ளையின் வீடு கூட பிஸ்கால் மூலம் கைப்பற்றப்பட்டது. டிக்கோயா பகுதியில் ஒரு தொழிற்சங்க பிரதிநிதிக்கும் இதுவே நடந்தது. மடக்கொம்பரை மேல் பிரிவுக்கு சொந்தமான சிறு நிலத்தை வாங்கி வீடு கட்டிய தொழிலாளிக்கு எதிராக பொலிஸ் மூலம் நிர்வாகம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

பல தோட்டங்களில் நிர்வாகங்கள் லயன்களையும், சேவையாளர்களின் வீடுகளையும் வங்களில் அடைவு வைத்து பணம் பெற்றுள்ளதை வருடாந்த அறிக்கைகளில் கம்பனிகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. தொழிலாளர்களால் லட்சக்கணக்கில் சேகரித்துக் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் கூட நிர்வாகத்துக்கே சொந்தமானதாகும். இந்த நிலையில்தான் தொழிலாளர்கள் பல்லாண்டு காலம் உழைத்து இறுதி காலத்தில் பெறப்படும் ஊழியர் சேமலாப நிதியை கொண்டு தாங்கள் இருக்கும் வீடுகளை நல்ல முறையில் திருத்தியமைக்கின்றனர். ஆனால் எந்தவொரு தொழிலாளியும் இந்த வீடுகளை சொந்தம் கொண்டாடவோ சட்டப்படி அடைவு வைக்கவோ முடியாது. காரணம் காணி, வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் தேவை.

இதேபோல் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் தொழிலாளர்கள் கடன் பெற்று 10 ஆண்டுகளுக்கும் 15 ஆண்டுகளுக்குமான பெற்ற கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இப்படி பெற்ற கடனை வட்டியுடன் உடனடியாக திருப்பிக் கிடைக்காது என்றும் உறுதிப் பத்திரத்தை வாங்கிக் கொடுக்க அமைச்சராக அப்போதிருந்த பெ. சந்திரசேகரன் அவர்களிடம் சவால் விடுத்திருந்தார் ஓ.ஏ. இராமையா என்பது நினைவு கூரத்தக்கது. 1996ம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்த இவ்வாறான முறை பணத்தை கடனுடன் திருப்பிய செலுத்திய தொழிலாளர்கள் எவருக்கும் உறுதிப்பத்திரம் கொடுக்கப்படவில்லை. மாறாக இன்னும் வீட்டுக்கு வாடகையைப் போல் ஒக்ஸ்போர்ட் போன்ற தோட்டங்களில் மாதாந்தம் 390 ரூபாய் அறவிடப்பட்டு வருகிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு அறவிடப்படும் என்பது தெரியவில்லை.

தேசிய வீடமைப்பு அதிகார சபை உதவியுடன் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு அருகாமையில் விஸ்தரித்துக் கொள்வதற்கு தோட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றே ஆக வேண்டும். அப்படி அனுமதி பெறாவிடில் நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு.
ஆகவே இந்த உரிமைகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாகாண சபை தேர்தல்கள் வரப் போகின்றன. தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்காக எவ்வளவு பணம் நிர்வாகங்களால் அறவிடப்பட்டு அதிகார சபைக்கு செலுத்தப்பட்டன. என்ற விபரங்களை கூட பல தோட்டங்களில் அறிவிப்பதில்லை. எனவே இந்த முக்கிய விடயத்திலாவது தொழிற்சங்கங்கள் செய்யப் போவதை தாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்

சிதம்பரம் ஜோதி-
நிர்வாகச் செயலாளர்

ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ்

தொடரும்…..
விலை வீழச்சியை காரணங்காட்டி தொழிலாளர்களின் சம்பளவுயர்வை மழுங்கடிக்க சதி

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி, உற்பத்தி குறைக்கப்படவேண்டும் என காரணம் கூறப்படுவது தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை மழுங்கடிக்கும் சதியெனவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளையும், போராட்ட நடவடிக்கைகளையும் பலமிழக்க செய்யும் நடவடிக்கையென மலையக தொழிலாளர் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே வாழ்க்கை செலவுப்புள்ளிக்கேற்ப சம்பள உயர்வு தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்

தேயிலையின் விலை வீழ்ச்சியால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பு

தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதனைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டங்களில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. தோட்டக் கம்பனிகளோ விலை வீழ்ச்சியால் உற்பத்திகள் அனைத்தும் தேங்கியிருப்பதாகவும், சம்பள அதிகரிப்போ, மேலதிக வேலையோ வழங்க முடியாதுள்ளதாக காரணம் தெரிவிக்கின்றனர்.

இரு இலைகள் கொண்ட இளந் தளிர் கொழுந்து மட்டுமே கொள்வனவு செய்யப்படுகின்றன. இவ்வாறான கொழுந்து வழங்கப்பட்டாலும் அதனையும் முழுமையாக கொள்வனவு செய்ய தேயிலை தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 கம்பனிகளும் 100க்கு மேற்பட்ட சிறு தேயிலை மற்றும் தனியார் தோட்டங்களும் காணப்படுகின்றன. இவற்றில் 25,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கடமை புரிகின்றனர். இத் தோட்டங்களை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு வேலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Monday, November 3, 2008

தொழிலாளிக்கு கொலை அச்சுறுத்தல்

இரத்தினபுரி காவத்தை ஹவுப்பே, யாயின்ன தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலரை அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருவதனால் அவர்கள் அத்தோட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 23-10-2008 ம் திகதி, இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை பெரும்பான்மையினர் சிலர் தாக்கியுள்ளனர். இதனால், காயமடைந்த தொழிலாளி அவர்களிடமிருந்து தப்பி வீடு வந்துள்ளார். அன்று மாலை இவரைத் தேடி வந்த பெரும்பான்மையினத்தவர்கள் சிலர் இவருடன் கைகலப்பிலீடுபட்ட போது தொழிலாளி அவர்களைத் தாக்கியதில் அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதால் தமிழ்த் தொழிலாளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலையான இத்தொழிலாளியையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் பெரும்பான்மையினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் தோட்டத் தொழிலாளியின் இரு பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியேறி விட்டனர். வீட்டில் தனியாக உள்ள அவர்களது தாயைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

Sunday, November 2, 2008

உலக நிதி நெருக்கடி தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை

உலக நிதி நெருக்கடியினால் தேயிலை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உற்பத்தி தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக சிறுதோட்டத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களே பாதிப்புக்குள்ளாவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே குறைந்த வருமானத்தைப் பெற்றுக் கொண்டு மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தத் தகவல் பேரிடியைத் தந்துள்ளதோடு தற்போதைய வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் சம்பள உயர்வு கோரிக்கை எதிர்நோக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை வலுவிழக்கச் செய்துள்ளது. இலங்கையில் கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அதிகமாக உள்ளனர். இங்கு தொழில் புரியும் தொழிலாளர்கள் பெரிய கம்பனித் தோட்டங்களில் தொழிலாளர்கள் அனுபவிக்கும் சலுகைகளை இவர்கள் அனுபவிப்பதில்லை. தற்போதுள்ள நிலைமையில் கொழுந்து பறிப்பதை குறைத்து எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலையை மட்டுமே செய்யும் வகையில் ஆலோசனைகள் தெரிவிக்கப்படும் போது புதிய கன்றுகளை நாட்டுதல், உரமிடுதல், போன்ற வேலைகள் ஒரு சில நாட்களில் மாத்திரமே செய்ய வேண்டியுள்ளது. வேலையில்லாது கஷ்டப்படும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேயிலை உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரச தரப்பினர் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்து இம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Friday, October 31, 2008

தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்காமை குறித்து அச்சம்

புசல்லாவ நகரத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவும், வேறு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் நகரத்திற்கு வரும் அப்பாவி தொழிலாளர்கள் மீது நகரில் உள்ள இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு 29-10-2008 புசல்லாவையிலிருந்து பெரட்டாசி தோட்டத்துக்கு ஆட்டோவில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேபோல் கொழும்பு போன்ற பகுதிகளில் வேலை செய்து வரும் பெரட்டாசி, மேமலை, காச்சாமலை போன்ற இளைஞர்கள் தீபாவளி தினத்தன்று தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டு திரும்புகையில் நகரில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாதுகாப்பு கடமையில் உள்ள பொலிசார் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சம்பவங்கள் பற்றி உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுள்ளனர்.

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நகர்புற இந்திய வம்சாவளியினரையும் உள்வாங்கவும்- பெற்றோர்கள், மாணவர்கள்

இந்திய வம்சாவளியினருக்காக நுவரெலியா மாவட்டம் பத்தனையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் மலையக நகர்புறங்களிலும், கிராமங்களிலும் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் புறக்கணிக்கப்படுவதாக பெற்றோர்களும், மாணவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே இம் மாணவர்களின் நன்மை கருதி பத்து சத வீத மாணவர்களையாவது உள்வாங்க வேண்டுமென பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழ் உதவி பணிப்பாளர் நியமிக்க வேண்டுகோள்

ஊவா மாகாண தோட்டப்பாடசாலைகள், நகர்புற பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, கல்வி பணிமனைகளில் நிலவும் தமிழ் மொழிப் பணிப்பாளர்களின் குறை மற்றும் இதர அபிவிருத்தி தொடர்பாக ஊவா மாகாண ஆளுனரிடம் கலந்துரையாடிய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி கல்வியமைச்சருமான எம். சச்சிதானந்தன் தமிழ் மொழி கல்வி காரியாலயங்களில் கடமையாற்றி வந்த பல உதவி பணிப்பாளர்கள் ஓய்வு பெற்று சென்றுள்ளதால் அந்த வெற்றிடத்துக்கு தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகும். சிங்கள மொழி அதிகாரிகள் தமிழ் மொழி பாடசாலைகளுக்கு செல்லும் போது சிக்கல்கள் தோன்றும் வாய்ப்புள்ளது. எனவே உவா மாகாணத்திலுள்ள தமிழ் கல்வி பணிமனைகளில் கடமையாற்றவென தமிழ் மொழி உதவி பணி;ப்பாளர்களை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்

தொண்டர் ஆசிரியை சடலமாக மீட்பு

அக்குரஸ்ஸ வில்பிட்ட தோட்டத்தில் வசித்து வந்த பழனி விஸ்வநாதன் மகேஸ்வரி(28) தோட்டத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவசமாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை திறம்பட கற்பித்து வந்தவர். இவ்வாறு கல்வி கற்பிக்க கடந்த 25-10-2008 சென்றவர் வீடு திரும்பாது காணாமல் போயிருந்தமையை இவரது தந்தை பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார். நேற்று முன்தினம் (29-10-2008) அதே தோட்டப் பகுதியிலுள்ள நீரோடையிலிருந்து இவர் அணிந்திருந்த ஆடையினால் கால்கள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இப் பெண் மரணிக்க முன்பதாக களங்கப்படுத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, October 30, 2008


நிதி நெருக்கடியால் தேயிலை தொழில் பாதிப்பு

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இலங்கையின் தேயிலைத் தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக, கடந்த வாரம் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவைப்பாடும், விலையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. பாதிப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கைத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை, குறிப்பாக நடுத்தர ரக தேயிலைகளை உற்பத்திசெய்யும் தோட்ட உரிமையாளர்களை உற்பத்தியின் அளவினைக் குறைக்கும்படி இலங்கை தேயிலை வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிற போதும் உயர்ந்தர தேயிலையைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்யும்படி அது வலியுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து கருத்துவெளியிட்டுள்ள இலங்கை தேயிலை வாரியத்தின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி இது ஒரு தற்காலிக பின்னடைவு என்றும், இந்தக் காலப்பகுதியில் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், முகாமையாளர்கள் தமது தோட்டங்களில் கப்பாத்து செய்தல், புதிய மரக்கன்றுகளை நாட்டுதல் போன்ற தோட்ட அபிவிருத்திப்பணிகளில் ஈடுபடலாம் என ஆலோசனை தெரிவித்தார்

தோட்டத்திற்கான பஸ்சேவையை ஆரம்பிக்க கோரிக்கை

இரத்தினபுரி காவத்தை நகரிலிருந்து வில்லம்பிய மடலகம தோட்டத்திற்கான பஸ்சேவையை உடனடியாக ஆரம்பிக்குமாறு பெருந்தோட்ட மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்டகாலமாக காவத்தை நகரிலிருந்து இந்த தோட்டத்திற்கு ஐந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையிலீடுபட்டிருந்தபோதும் தற்போது எதுவும் சேவையில் இல்லை. இதனால், மடலகம, சமரகந்த மியனவிற்ற, தெல்வலை, கோம்பகந்த நடுக்கணக்கு ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். இந்த பஸ்சேவை இல்லாத காரணத்தினால் தோட்ட மாணவர்கள் நகரங்களில் மாதம் 4500 ரூபா வாடகை கொடுத்து தங்கி கல்விகற்கின்றனர். பொருளாதார வசதியுள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு வாடகை செலுத்தி கல்வி கற்கின்றனர். மற்றவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளனர். தோட்ட பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மாதம் 3000 ரூபா கொடுத்து தனியார் வாடகை வாகனத்தில் தினந்தோறும் பயணம் செய்கின்றனர். இதனால், இவர்களின் சம்பளத்தின் பெரும் பகுதி வாகன வாடகைக்காக செலவு செய்யப்படுகின்றது.

தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படவில்லை

அரசாங்க ஊழியர்களுக்கும் தனியார் துறையினருக்கும் பெருநாள் முற்பணம் மேலதிக கொடுப்பனவுகள் தாராளமாக வழங்கப்படுகின்ற போதிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் முற்பணம் சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படுவதற்கு கம்பனிகள் மறுப்புத் தெரிவித்தாக ரி.வி சென்னன் பசறையில் தங்கர் பொட்லிங் கம்பனி தொடர்பாக தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு கூட கம்பனிகள் மறுப்புத் தெரிவித்து பின்னரே குறைந்த தொகை கொடுப்பதற்கு இணங்கியுள்ளன. அதேபோல் சம்பள விடயத்திலும் தொழிலாளர்கள் போராட்டம் செய்தே குறைந்தளவு சம்பள அதிகரிப்பை பெற வேண்டியுள்ளது. நமுணுகுல தங்கர் பொட்லிங் கம்பனியின் கீழ் இயங்கிவரும் ஆறு தோட்டங்களில் மூன்று தோட்டங்களுக்கு தைப்பொங்கலுக்கும் மூன்று தோட்டங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கும் முற்பணம் வழங்குவது வழக்கம். ஆனால், கணவரல்ல, கோணக்கலை, கந்தசேனை ஆகிய தோட்டங்களில் பணிபுரியும் 3,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு பணம் இல்லாமல் கம்பனி நிர்வாகம் தடுமாற்றமடைந்து குழப்பத்தில் இருந்தது.
கடந்த வருடம் ஆறு தோட்டங்களில் பணிபுரியும் 6,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் 85 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படவில்லை. அதைவிட தொழிலாளர்களின் மாதாந்தம் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் கொடுப்பனவுகள் வங்கி மரணதார சங்கம் என்பவற்றுக்கு வருடக் கணக்காக அனுப்பி வைக்கப்படவில்லை. தொழிலாளர்களினது சம்பளத்திலிருந்து மாத்திரம் மாதாந்தம் கொடுப்பனவுகள் கழிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.

தமிழ் கிராம சேவகர்களை நியமிக்க கோரிக்கை
மாத்தளை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் கிராமப்புறங்களுக்கு சிங்கள கிராமசேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போன்று முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமப்புறங்களுக்கு முஸ்லிம் கிராமசேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போன்று தமிழ் மக்கள் செறிந்து வாழும் களுதாவளை கிராமத்திற்கு தமிழ்க் கிராம சேவகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய மாநகர சபை உறுப்பினருமான எம்.சிவஞானம் பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சர் கரு ஜெயசூரியவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக பதவி வகித்தபோது அவ்வப்போது பதவிக்கு வந்த அரசுகளிடம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு தமிழ்க் கிராமசேவகர்களும் தமிழ் பதிவாளர்களும் நியமிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியதையடுத்து நுவரெலியா, பதுளை ஆகிய இரு மாவட்டங்களுக்கு மட்டும் தமிழ் கிராம சேவகர்களும் தமிழ் பதிவாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை, அதிகார பரவலாக்கல் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

Friday, October 24, 2008

தொழிலாளர்களின் சம்பள உயர்வில் அரசு உறுதியா இருக்கிறது – அத்தாவுட

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக தொழில் உறவுகள் மற்றும் மனிதவள அமைச்சர் அத்தாவுட செனிவிரத்ன அமைச்சில் அண்மையில் நடைபெற்ற இலங்கை சுதந்திர தோட்டத் ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலம் தெரிவிக்கையில் இது தொடர்பாக சம்பள நிர்வாக சபைகளின் திட்டங்களுக்கு அமைய முதலாளிமார் சம்மேளத்தில் அங்கம் வகித்துள்ள சிலர் குறித்த திட்டத்தை நடமுறைப்படுத்துவதை தட்டிக்கழித்து வருவதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்றார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், அனைத்துப் பிரதேச செயலகங்களிலும், தமிழ்மொழி அறிந்த ஒரு அதிகாரி இருக்க வேண்டும், எனினும் சில பிரதேச செயலகங்களில் அவ்வாறான அதிகாரிகள் இல்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் தலையீடுகளை மேற்கொண்டு, பணிகளை செய்து முடிக்கும் பாரிய பொறுப்பு தோட்டத் தொழிற்சங்களுக்கு உள்ளது.

பாதையை சீரமைக்க கோரி பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் ஊர்வலம்

மத்தியமாகாணம் பூண்டுலோயா மற்றும் டன்சினன் இடையே சுமார் 15 கி.மீ பாதை குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப் பாதையில் போக்குவரத்து செய்ய முடியாத நிலை இருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை அப் பிரதேசத்தில் பூண்டுலோயா, நுவரெலியா உள்ளிட்ட நகர்புற பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் உரிய பஸ் வசதிகளின்றி அல்லல்படுகின்றனர். நடைபாதை வழியாகவே இவர்கள் நகர்புற பாடசாலைகளை சென்றடைய வேண்டியுள்ளது. இதனை தொடர்ந்து பல மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையை இடையிலே நிறுத்தியும் உள்ளனர். எனவே இப் பாதையை சீரமைத்து தருமாரும் இல்லாவிடில் எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்பவற்றில் ஈடுபட போவதாக தெரிவித்து நேற்று பாதையை சீரமைக்க கோரி இப் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் ஊர்வலமாக சென்று தங்கள் எதிர்ப்பு நடவடிக்கைளை வெளிக்காட்டினர்.

Wednesday, October 22, 2008

தேயிலை, இறப்பர் ஏற்றுமதியில் கூடிய வருமானம்

சர்வதேச சந்தையில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை மற்றும் இயற்கை இறப்பர் ஆகியவற்றுக்கு பெருமளவு கிராக்கி நிலவிவருவதால் விவசாய உற்பத்திப் பொருட்கள் எற்றுமதி 32 வீதம் அதிகரித்துள்ளதாக விவசாய ஏற்றுமதி தொடர்பான ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ தேயிலையின் ஆகக்கூடுதலான விலை 4.26 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு கிலோ இயற்கை இறப்பரின் விலை 3.02 டொலர்களாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்த 29 வீதத்திலிருந்து 31 வீதமாக அதிகரித்துள்ளது.

குறைவான வேலை நாட்களால் தொழிலாளர்கள் துன்பம் - நட்டஈடு வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை

இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்தளவு வேலைநாட்கள் வழங்கப்படுவதால் அம் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர். கம்பனி தோட்டங்கள் வாரத்தில் இரு நாட்களே தொழிலாளர்களுக்கு வேலை வழங்குகின்றன. சில தனியார் தோட்ட உரிமையாளர்கள் தமது உற்பத்தியை முற்றாக கைவிட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் வேலைக்கு அழைக்கப்படுவதில்லை. கொள்முதல் செய்யப்படுகின்ற பச்சை கொழுந்து ஒரு கிலோ 59 ரூபாவிலிருந்து 25 ரூபாவிற்கு குறைவான விலையில் கொள்முதல் செய்யப்படுகின்றது. ஒரு கிலோ 300 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட இறப்பர் சீட்டுக்கள் தற்போது 100 ரூபாவிற்கு குறைவாக கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒட்டுப்பால் முன்னர் 180 ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது தற்போது 30 ரூபா – 40 ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. இவ் விலை குறைப்பு நடவடிக்கையால் தொழிலாளர்களுக்கு முறையாக வேலை வழங்கப்படவில்லை. எனவே நிலைமையை கருத்திற் கொண்டு தேயிலை, இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Saturday, October 18, 2008

தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

ஜனவசம, பெருந்தோட்டத்துறை போன்ற அரச தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய கொடுப்பனவுகள் கிட்டாமை குறித்து நீதிமன்றம் சென்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ள போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், சமூக துறை, இளைஞர் வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் சம்பள பிரச்சினை மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாக அமைய வேண்டும்

தொழில் அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன அறிவித்துள்ள, தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, நிபந்தனைகளுக்கு உட்படாத, இம்மக்களின் பிரச்சினைகளை முற்றாகத் தீர்க்கின்ற வகையில் அமையவேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணி தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க உள்ளதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியான விடயம். இம் முயற்சி கூட்டு ஒப்பந்தத்தின் சிக்கலான சரத்துக்களைப் போல நிபந்தனைகளுடன் அமைந்துவிடாமல் இருப்பதனை தொழில் அமைச்சர் உறுதி செய்தால் அப்பாவி தொழிலாளர்கள் முழுதாக பயனடைவார்கள். கூட்டு ஒப்பந்தம் என்ற மரணப்பொறி எமது எல்லா முயற்சிகளையுமே பயனற்றதாக்கிவிட்டது. தமது தினக்கூலியையும் இழந்த தொழிலாளர்கள் என்ன தான் ஒற்றுமையாக போராடினாலும் கூட இந்த கூட்டு ஒப்பந்தம் என்ற அகழியை தாண்ட அவர்களால் முடியாமலேயே போய் விடுகிறது. எனவே இம்முறையாவது தொழில் அமைச்சரின் நேரடித் தலையீட்டால் வாழ்க்கை செலவு புள்ளியோடு அமைந்த சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, October 17, 2008

தமிழ் சாகித்திய விழாவில் கௌரவிக்கப்படுவோர்

மத்திய மாகாண தமிழ்க் கல்வி இந்து கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் 18, 19 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் இடம்பெறவுள்ள மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் பின்வருவோர் கௌரவிக்கப்படவுள்ளோர்

ஆன்மீகத்துறை ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஐயர், சிவசங்கர குருக்கள், கனகசபை இராஜபுவனேஸ்வரன், ரகுநாதன் ராஜேந்திரன்.
கல்வித்துறை முத்து கருப்பன் சோமசுந்தரம், செல்லையா ஜெயக்குமார், திருமதி சீவரட்ணம்.
சமூக சேவைத்துறை சிதம்பரம் பெருமாள் ரெட்டியார், எம்.எம்.சத்தியானந்தன், பழனியாண்டி மோகன் சுப்பிரமணியம், அ. .பாஸ்கரன்.
கலைத்துறை சந்தனம் பிரான்ஸிஸ் வசந்தன், எஸ்.செல்லத்துரை, எஸ்.ஆறுமுகராஜா, பிரதிஷ்குமார், எம்.எஸ்.ஸ்ரீதயாளன்.
ஊடகத்துறை அருணாசலம்பிள்ளை பொன்னம்பலம், சிவலிங்கம் சிவகுமார், சுப்பிரமணியம் ஜெப்ரி. ஜெயதர்ஷன், பெரியசாமி இராஜேந்திரன், இரா செல்வராஜா, தேவராஜன் வசந்தகுமார்.
விளையாட்டுத்துறை கருப்பையா திருநாவுக்கரசு, கே.ரெங்கநாதன்.
தொழிற்சங்கத்துறை நல்லன் இராமசாமி, இராமகிருஷ்ணன்.
அரச நிர்வாகத்துறை ச.ஜேசுதாசன்
இவர்களுடன் நுவரெலியா கோட்லோஜ் தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் வீ. பாலேந்திரா, கந்தப்பளை மெதடிஸ் கல்லூரி அதிபர் மகேஸ்வரன்,
கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வரை நடந்து சாதனை படைத்த தயாளன் (பொகவந்தலாவை சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலய மாணவன், பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்ப் பிரிவு)
மத்திய மாகாண விளையாட்டுப் போட்டியில் மரதன் ஓட்டப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற மாணவி அல்பியன் தமிழ் வித்தியாலய மாணவி லக்னபிரியா (அக்கரப்பத்தனை அல்பியன் தோட்டம்)

Wednesday, October 8, 2008

சபை நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் நடைமுறைபடுத்தவும் - எஸ். இராதாகிருஷ்ணன்

மத்திய மாகாண சபை அதன் அனைத்து கடிதப் போக்குவரத்துக்கள் உட்பட பல்வேறுபட்ட அறிக்கைகளையும் வெளியீடுகளையும் அரச கரும மொழியான தமிழில் நடைமுறைப்படுத்தா விட்டால் இச் சபையின் தமிழ், முஸ்லீம் உறுப்பினர்கள் அடுத்த சபைக் கூட்டத்தை பகிஷ்கரித்து போராட்டம் நடத்துவார்கள் என மத்திய மாகாணசபை இ.தொ.கா உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ். இராதாகிருஷ்ணன் கண்டி பல்லேகல – கம்உதாவ மத்திய மாகாணசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த மாகாணசபை ஆரம்பித்து 19 வருடங்கள் ஆகின்றபோதும் இன்றும் தமிழ் மொழிக்குரிய உரிமைகளும், அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. நமது மாகாண சபையிலும், ஏனைய அரச அலுவலகங்களிலும் அனைத்து கருமங்களும் சிங்க மொழியிலேயே நடைபெறுகின்றன. சபையின் தலைவர் டபிள்யூ. எம். யுசமான தங்களது தாய் மொழியில் கடிதங்களையும், அறிக்கைகளையும் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. அது அவர்களது உரிமை என தெரிவித்திருக்கிறார். இதேவேளை சபைத் தலைவரின் தனிச் சிங்களத்திலான காப்புறுதி தொடர்பான அறிக்கை உறுப்பினர்களின் கையெழுத்திற்காக சபை சேவகரால் இராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தபோது சிங்களத்தில் உள்ளதால் அதில் தான் கையெழுத்திட முடியாது என்று மறுப்பினை தெரிவித்தார்.

குளவிகள் கொட்டியதில் பெண் தொழிலாளி மரணம்

இரத்தினபுரி காவத்தை ஓபாத்த இல-02 தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியான வெள்ளையம்மா(53) தனியார் தேயிலை தோட்டமொன்றுக்கு தொழிலுக்கு சென்ற வேளை அங்கு குளவிக்கூடு ஒன்று உடைந்ததில் அதிலிருந்த பெருமளவிலான குளவிகள் கொட்டியதால் அப் பெண் தொழிலாளி ஸ்தலத்திலேயே மரணமானதாக காவத்தை பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் (07-10-2008) பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சுமார் 500க்கு மேற்பட்ட குளவிகள் கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலையக கல்வி அபிவிருத்தியில் அமரர் தொண்டமான்பெருந்தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கவும், சுவீடன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் கல்வி அபிவிருத்தி ஏற்படவும் காரணமாக இருந்த அமரர் எஸ். தொண்டமான் சேவை நினைவு கூரப்படும் என தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் எஸ். ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் 1988ம் ஆண்டு மாகாணசபை நிர்வாக முறை அமுல்படுத்தப்பட்டபோது மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சை கேட்டுப் பெற்றார். அதன் பயனாக எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சராக பதவி வகிக்க முடிகிறது.

இந்திய வம்சாவளியினர் “இலங்கை தமிழர்கள்” என்ற வகையிலான சட்டமூலம்

இந்திய வம்சாவளியினர் என்ற மலையக மக்களின் நாமத்தை நீக்கி அவர்களை இலங்கை தமிழர்கள் என்று அழைக்கும் வகையிலான ஒரு சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவேன் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார். எதிர்காலத்தில் உள்ளுராட்சி தேர்தல் யாவும் தொகுதிவாரியாக நடத்தப்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மலையக மக்களும் முஸ்லீம் மக்களை போன்று பெரும்பான்மை கட்சிகளில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி கொள்ள முடியும். தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை, சம்பள பிரச்சினை தொழிற் பிரச்சினை போன்றவற்றுக்கு தொகுதி எம்.பி க்கள் மூலம் ஜனாதிபதி வரை எடுத்துச் சென்று தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
இனப்பிரச்சினையில் தமிழக கட்சிகளின் நிலைப்பாடு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். – சந்திரசேகரன் பா.உ

1983ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டபோது அனைத்து தமிழக கட்சிகளும், மக்களும் திரண்டெழுந்த வரலாற்று சம்பவத்துக்கு பின்பு தமிழகத்தில் ஆளும், எதிர்கட்சிகள் இலங்கை சிறுபான்மை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முனைந்திருக்கின்றமை இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சமூக அபிவிருத்தி அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் திரண்டெழுந்தால் இந்திய டில்லி அரசு தலைகுனிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதுவே இலங்கை தமிழ் மக்களுக்கு தலை நிமிர்வை உருவாக்கும். இலங்கை வாழ் வடக்கு கிழக்கு தமிழர்களாக இருந்தாலும், மலையக தமிழ் மக்களாக இருந்தாலும் எவரும் சிங்கள மக்களை அடிமைப்படுத்த நினைத்தவர்கள் அல்ல. சிங்கள தலைமைகளோடு கைகோர்த்த கடந்த வரலாறே இது வரையிலும் பதியப்பட்டுள்ளது. தமிழர்களின் உயர்வுக்கு தேசிய தலைவர்கள் எப்போது தடைபோட ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே முறுகல் நிலையும் போராட்டமும் தோன்ற ஆரம்பித்து விட்டன. இலங்கை பிரச்சினையில் மௌனம் காத்த தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தற்போது உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க கூடிய அளவில் சில முடிவுகளை எடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அதேபோல் எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா இலங்கை தொடர்பில் இவ்வளவு வெளிப்படையாக தமது கருத்தை வெளிப்படுத்தியிருப்பது இலங்கை தமிழர்களுக்கு புத்தூக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்று மாற்றங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மாணவனுக்கு பல்கலைகழக அனுமதி வழங்க கோரி அமைச்சர் செல்லச்சாமி கடிதம்

தேங்கிக் கிடந்த தபாலினால் பல்கலைகழக அனுமதியை இழந்த மாணவன் தொடர்பிலும் மேற்படி மாணவனுக்கு பல்கலைகழக அனுமதியை பெற்றுக் கொடுக்கும்படியும் உயர்கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால அவர்களுக்கு தபால், மற்றும் தொலை தொடர்பு பிரதியமைச்சர் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவனுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்குமாறு இரத்தினபுரி இ.தொ.கா காரியாலயத்திற்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, October 7, 2008

தொழிலாளர் வர்க்கத்தினரிடையே இன ஒற்றுமை (1890-1930)

இலங்கை தொழிலாளர் இயக்க வரலாற்றில் இன, மத உணர்ச்சிகளுக்கு மேலாக வர்க்க உணர்வு மேலோங்கி இருந்த காலகட்டங்களும் உண்டு. 19-ம் நூற்றாண்டில் பெருந்தோட்டத்துறை முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் வளர்ச்சியடையத் தொடங்கியது. தொழிலாளர் வர்க்கத்தில் சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்திய தமிழர், மலையாளிகள், முஸ்லீம்கள், மலாயர், பறங்கியர் போன்ற பல்வேறு இனத்தினரும் காணப்பட்டனர். இவர்கள் பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மதத்தினராவர். இது தவிர சிங்களவர், தமிழர், மலையாளிகள், ஆகியோரிடையே சாதி வேறுபாடுகளும் நிலவின. எனினும், ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்ற உணர்வும் குறைந்த சம்பளம், நீண்ட வேலை நேரம், மோசமான வேலை நிலைமைகள் போன்ற பொதுவான ஒடுக்கு முறைகளுக்கு உட்படுபவர் என்ற உணர்வும் யாவரிடமும் நிலவின. மேலும், சுரண்டப்படும் தொழிலாளர் என்ற வகையில் தமது நிலைமைகளை முன்னேற்றுவதற்காகத் தம்மை ஒழுங்கமைத்துப் போராட வேண்டும் என்ற விழிப்புணர்வும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகர்ப்புற தொழிலாளர்களிடையே வளர்ந்திருந்தது. 1890 ம் ஆண்டில் நிகழ்ந்த முதலாவது தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கும் 1930-ம் ஆண்டுகளின் பொருளாதார மந்தத்திற்கும் இடைப்பட்ட 40 ஆண்டுகளில் காணப்பட்ட வர்க்க உணர்வும் தொழிலாளரின் கூட்டு நடவடிக்கையும் குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும். 1880-ம் ஆண்டுகளிலிருந்து இக்காலகட்டம் வரை இனவெறி பிரச்சாரத்திற்கு இடம் தராது மத, சாதி, இன பேதங்களை மறந்து பொருளாதார கோரிக்கைகள் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒன்றிணைந்து போராடினர் இதற்கும் மேலாக பிரித்தானிய முதலாளிகள், உத்தியோகத்தர் ஆகியோருக்கு எதிராக மத்திய தர வர்க்க தேசியவாதிகளின் எதிர்ப்புக்களுக்கு முன்னோடியாகவும் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தினரின் போராட்டம் தீவிர நடைமுறை கொண்டதாகவும் இருந்தது.

இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள் -குமாரி ஜெயவர்த்தனா-

ஒத்துழைப்பு இன்மையால் வீடமைப்புத் திட்டம் நிறைவேறுவதில் தாமதம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புக்களை அமைத்துக் கொடுக்கும் தேசிய வீடமைப்பு திட்;டத்தினரால் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தை நிறைவேற்றும் போது தோட்ட முகாமையாளர் ஒத்துழைப்பு இன்மையாலும் இது தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதில் எவ்வித ஆர்வமும் காட்டுவதில்லை. இவ்வாறு தோட்ட அதிகாரிகளினதும், தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இன்மையாலும் அத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் சிரமமும் தாமதமும் ஏற்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு திணைக்களத்தின் மாவட்ட முகாமையாளர் கே.வி. எல்லாறவ உலக குடியிருப்பு தினமான நேற்று தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் கண்டி மாவட்டத்தில் இந்த ஆண்டு 1242 வீடுகள் நிர்மாணிப்பதற்கான திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 705 வீடுகளுக்கான பணி ஆரம்பமாகின. சுமார் 289 வீடுகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளபோதிலும் தோட்ட உட்கட்டமைப்பின் நிதி கிட்டுவதில் உள்ள தாமதத்தால் தடைபட்டுள்ளன.

Thursday, October 2, 2008

அரசியல் ரீதியாக மலையக மக்களை பலவீனபடுத்தும் முயற்சிக்கு மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்

இந் நாட்டில் ஏற்பட்டுள்ள இன நெருக்கடி, யுத்தம், விலைவாசி உயர்வு என்பன தோட்டத் தொழிலாளர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளன. நாட்டின் துன்பகரமான வாழ்க்கையை வாழ்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களே சமூக அபிவிருத்தி சமுதாய அநீதி ஒழிப்பு அமைச்சர் சந்திரசேகரன் கொட்டக்கலை பொரஸ்கீப் தோட்டத்தில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் அரசியல் ரீதியாக மலையக மக்களை பலவீனப்படுத்த பல சூழ்ச்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இம் மக்களை தோல்வியுறச் செய்வதன் மூலம் அவர்கள் சார்ந்த கட்சிகளை பலமிழக்கச் செய்ய நினைக்கிறது. சதா காலமும் சம்பள பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அதற்கப்பால் மலைய மக்களின் இருப்பை நிலைநாட்டுகவதற்கு அரசியல் ரீதியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களுக்கு சக்தியையும் தைரியத்தையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

Wednesday, October 1, 2008

முறையற்ற தபால் விநியோகத்தால் பல்கலைகழக வாய்ப்பை இழந்த மாணவன்

இரத்தினபுரி மாவட்டம் காவத்தை ஒபாத்த இல-02 கீழ்பிரிவைச் சேர்ந்த கே. சூரியகுமார் என்ற மாணவன் காவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவனான இவர் பல்கலைகழகத்துக்கு தகுதி பெற்றிருந்தார். பல்கலைகழக அனுமதிக்காக மானிய ஆணைக்குழுவிற்கும் விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பங்களை ஏற்று ஆணைக்குழு உரிய ஆவணங்களை அனுப்பி வைத்திருந்தபோதிலும் மாணவனுக்கு கடிதம் கிடைக்காததால் பதில் கடிதமும் அனுப்பிய போதிலும் காலம் கடந்து விட்டது. கடிதம் கிடைக்கவில்லை. கடிதம் கிடைக்காததால் தோட்டக் காரியாலயத்துக்கு பல முறை தேடி அலைந்திருந்திருக்கிறார். கடிதம் ஒரு மாதத்திற்கு மேலாக தேங்கிக் கிடந்துள்ளமை தெரிய வந்துள்ளது. எனினும் மாணவனுக்கு பல்கலைகழக அனுமதி வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பிரதேச மக்கள் நடந்த உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி மாணவன் சூரியக்குமாருக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tuesday, September 30, 2008

தேயிலை விலை உயர்வுக்கேற்ப சம்பள உயர்வு

தேயிலை விலை உயர்வுக்கேற்ற முறையில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தவும் தோழர் கொல்வின் ஆர்.டி.சில்வா சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அதாவது 100 ஏக்கருக்கு குறையாத தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் நாட்களுக்கு கீழ் கண்ட முறையில் சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

01. உலக சந்தையில் ஒரு இறாத்தல் தேயிலை ரூ.2.50 சதத்திற்கும், ரூ 2.75 சதத்திற்கும் விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு ஒரு தொழிலாளிக்கு 10 சதம் சம்பள உயர்வு

02. அதே அடிப்படையில் ரூ.2.75 சதத்திற்கும் ரூ.2.99 சதத்திற்குமிடையில் விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு 20 சதம் உயர்வு.03. ரூ. 3.00 க்கு மேல் தேயிலை விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு 30 சதம் உயர்வு.

இந்த அடிப்படையில் தொழிலாளர்களுடைய சம்பளத்தை உயர்த்தினார். மேற்கூறப்பட்ட சம்பள உயர்வை விட தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தவும் தோழர் கொல்வின் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதற்கமைய 1972 ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்று அமுலில் இருந்த அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தி ஆண் தொழிலாளருக்கு நாளொன்றுக்கு 18 சதமும் பெண் தொழிலாளர்களுக்கு 12 சதமும் வழங்கப்பட்டது. ஆண், பெண், தொழிலாளர்களின் சம்பளத்தைச் சம சம்பளமாகக் கொண்டுவர ஆலோசி;த்து வந்த தோழர் கொல்வின் தனது அமைச்சின் மூலம் 1973 ம் ஆண்டு நவம்பர் மாதம், 1974 ஏப்ரல், 1975 மார்ச் மாதங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தைக் கீழ் காணும் அடிப்படையில் உயர்த்தினார்.

1970,மே, 1973, 1974, 1975 விகிதாசாரம் மே, நவம்பர், ஏப்ரல், மார்ச், முறையேஆண்- 3.07, 4.17, 4.70, 5.43, 76 வீதம், பெண்:- 2.45, 3.15, 3.53, 4.07, 67 வீதம், பிள்ளை:- 2.13, 2.81, 3.17, 3.65, 71 வீதம்,

ரப்பர் தோட்டத் தொழிலாளி

1970, 1973, 1974, 1975 விகிதாசாரம் மே, நவம்பர், ஏப்ரல், மார்ச், முறையே ஆண்:- 3.12, 4.22, 4.75, 5.50, 76 வீதம், பெண்:- 2.60, 3.32, 3.72, 4.26, 64 வீதம், பிள்ளை:- 2.28, 2.97, 3.34, 3.85, 69 வீதம்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களின்படி 1970 முதல் 1975 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 70 சத வீதமாக உயர்ந்துள்ளது என்பதனை நாம் உணர வேண்டும். இந்தக் காலப் பகுதியிலேயே தோட்டத் தொழிற் துறை தொழிலாளர்கள் கூடுதலான சம்பள உயர்வைப் பெற்றனர்.

தோட்டத் தொழிலாளர்களும் லங்கா சமசமாஜக் கட்சியும் - எஸ். இராமநாதன்
பல மில்லியன்கள் இலாபமாக தோட்ட முகாமைத்துவம் பெறுகிறது. தொழிலாளர்களுக்கு ஐந்து சத வீதமே இலாபம் பகிரப்படுகிறது.

பெருந்தோட்டத்துறையில் பல மில்லியன் தொகையில் இலாபம் கிடைக்கும் போது மொத்த இலாபத்தில் ஐந்து சத வீதத்தினையே தொழிலாளர்களுக்கு இலாபமாக பகிர்ந்தளிக்கும் தோட்ட முகாமைத்துவத்தின் செயற்பாடானது அப்பட்டமான மோசடியாகும் என உவா மாமகாண சபை உறுப்பினர் அரவிந்குமார் தெரிவித்தார். தோட்ட முகாமைத்துவங்களால் வெளியிடப்படும் வருடாந்த நிதி அறி;க்கையை பயன்படுத்தியும் ஊடக செய்திகளை பயன்படுத்தியும் வங்கிகள் மூலம் பெருந்தொகை பணத்தை கடனாக பெற்று தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். மேலும் பங்குச் சந்தையிலும் பெருந் தோட்டங்களின் நிலை மேலோங்கியுள்ளது மூலம் முகாமையாளர்கள் பெரும் நன்மையை பெறுகின்றனர். இந் நாட்டில் ஆகக் கூடிய வேலையை செய்து கடினமாக உழைத்து அதி குறைந்த சம்பளத்தை பெற்று கொண்டிருப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களே. பெரும் அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுப்பவர்களும் இவர்கடேள. எனவே தொழிலாளர்கள் தகுந்த பாடம் அவர்களுக்கு புகட்ட வேண்டும் என்றார்.

Monday, September 29, 2008

சர்வதேச மனித உரிமை சாசனம் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டே எமது மனித உரிமைகள் பறிக்கப்பட்டன.

பிரித்தானிய குடியேற்ற ஆட்சியின் போது இலங்கை மக்கள் எப்படி நடத்தப்பட்டார்களோ அது வேறு விடயம். ஆனால் இலங்கை சுதந்திரமடைந்தபின் இலங்கையிலிருந்த அனைத்து சமூகத் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் எழுந்த பிறகு, இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் மலையக தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் முதல் பாராளுமன்றத்திலேயே கிட்டத்தட்ட ஆறு லட்சம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை. 20ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் அநீதியும் மிக மோசமான மனித உரிமை மீறலுமாகும்.

1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமை சாசனத்தின் 15வது உறுப்புரை (1) ஒரு தேசிய இனத்தவராக இருக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. (2) எவரதும் தேசிய இனத்துவம் மனம் போக்கான வகையில் பறிக்கப்படவோ, தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுவதோ ஆகாது என வலியுறுத்துகின்றது. சர்வதேச மனித உரிமை பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்ட அதே ஆண்டிலேயே எமது பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டது. ஆகவே இதனைவிட உரிமை மீறல் இருக்குமா என்பது சந்தேகமே.

ஆகவே மலையகத் தமிழ் மக்களின் இந்த பிரஜா உரிமை பறிப்பு சமகால அரசியலில் ஒரு மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கூடப் பார்த்து நிவர்த்திக்கப்படாமல் இன்னும் பிரஜாவுரிமை எமது இலங்கையின் நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்படாமலிருப்பது மனித நாகரீகத்திற்கே வெட்கக் கேடான செயலாகும். எனவே மiலையக மக்களின் பிரச்சினையை இன்னும் பிரஜாவுரிமை பிரச்சினையாக மாத்திரம் மட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் மலையக தலைவர்களும் தேசிய கட்சியை சார்ந்த தலைவர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு விடயமாகும்.
- சமகால அரசியல்- அரசியல் தீர்வு- அ. லோறன்ஸ்

பெருந்தோட்டக் குடியிருப்பு தீ விபத்துக்கள் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

பெருந்தோட்ட பகுதி குடியிருப்புக்களில் ஏற்படும் தீ விபத்து தொடர்பான காரணத்தை மின்சாரசபையினரும், அனர்த்த நிவாரண அமைச்சு அதிகாரிகளும் இணைந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும்படி நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் வீ. புத்திரசிகாமணி கேட்டுக்கொண்டுள்ளார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திச் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்ட கூட்டத்தில் கல்நடை அபிவிருத்தி அமைச்சர், சீ.பி ரத்நாயக்க, பிரதியமைச்சர் மு.சிவலிங்கம், ஆகியோர் உட்பட மத்திய மாகாணசபை அமைச்சர்கள், நுவரெலியா மாவட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சம்பள உயர்வுக்கு காத்திருக்க முடியாது கூட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும் - அமைச்சர் பெ. சந்திரசேகரன்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தின்படி இன்னும் ஒரு வருடம் தமது சம்பள உயர்வுக்காக காத்திருக்க முடியாது. கூட்டு ஒப்பந்தம் என்ற இந்த நடைமுறை கிழித்தெறியப்பட வேண்டும் என அமைச்சர் பெ. சந்திரசேகரன் நானுஓயா பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வினை கம்பனிகளும், சில தொழிற்சங்கங்களும் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கம் எதிர்பார்ப்பதை நாம் ஏற்க முடியாது சம்பள உயர்வை பற்றி அரசாங்கத்துடன் பேசினால் கம்பனிகளுடன் பேசுங்கள் என்று தட்டிகழித்து விடுகின்றனர். அரசு தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் சுட்டிக்காட்டி தப்பி விடவும் முடியாது.

Sunday, September 28, 2008

மலையக பல்கலைகழக மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டம்

பெருந்தோட்டத்தைச் சேர்ந்த பல்கலைகழக மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டமொன்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. பல்கலைகழகங்களில் பயிலும் அல்லது அனுமதி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பை தொடர்வதற்கு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் அவர்களுக்கு அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது. எனவே பல்கலைகழங்களில் பயிலும் அல்லது அனுமதி பெற்ற மாணவர்கள் சகலரும் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் 30-09-2008 முன்னர் சௌமியமூர்த்தி தொண்டமான ஞாபகார்த்த மன்றம், இல.15ஏ, பிளவர் ரெரஸ். கொழும்பு-03 என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியும்
தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் சொந்தமா?

இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழிவழியாக தோட்டத் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் எட்டடி நீளமுள்ள அறைகளிலேயே புகைக் கூண்டுகளில் வாழ்வதைப் போல் வாழ்ந்து வருகின்றனர். இந்த துர்ப்பாக்கிய நிலையிலிருந்து தாங்கள் வாழும் அறைகளை விஸ்தீரணமாக ஓரளவேனும் நல்ல நிலையில் அமைக்க வேண்டும் என்ற உந்துதலில் நாகரீகமாக வாழும் ஆசையுடன் சிறிது சிறிதாக சேமித்து வைத்துள்ள சேமலாப நிதியைக் கொண்டு கட்டியுள்ளனர். ஏனையோர் பொருளாதார வசதி குறைவாகல் அதே எட்டடி அறைகளுக்குள் வாழ்க்கையை முடக்கி விடுகின்றனர்.

இப்படி வாழ்நாளில் பெரும் பங்கிளை கழித்து இறுதி காலத்தில் ஓய்வாக உணவுக்கு வழி செய்து கொண்டு வாழ வேண்டிய பணத்தை இந்த லயன் வீடுகளுக்கு செலவழிப்பதன் மூலம் ஏதும் பலன் உண்டா என்பதை தெரிந்து கொள்கிறார்கள் இல்லை. தோட்ட நிர்வாகங்களின் கீழ் இருக்கும் வீடுகள், உடைமைகள் அனைத்துக்கும் கம்பனிகளே கம்பனிகளே சொந்தக்காரர்கள் ஆவர் . அரச உடைமைகள் எனில் மக்களுக்கான உரிமைகளைப் பற்றி வாதிட முடியும். கம்பனிகளுக்கு சொந்தமானவைகளை நாம் செலவழிப்பதன் மூலம் நாளை ஒரு பிரச்சினை ஏற்பட்டு சிக்கலில் வீழ்ந்து விட்டால் சாதுரியமாகவும், சட்டரீதியாகவும் கம்பனிக்கே சொந்தமாகி விடும் என்பதை புரியாமல் இருப்பது கவலையைத் தருவதாகும்.
இந் நிலையில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைமைகள் அரசியல் பிரதிநிதிகள் எடுத்த ஓரளவு முயற்சியினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தினால் தனி வீடுகளாகவும் பின்பு மாடி வீடுகளாகவும் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இவ் வீடமைப்புக்கான செலவுத் தொகையை குடியிருக்கும் தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்தே அறவிடப்படுகின்றது. தனி வீடுகளுக்கு மாதாந்தம் 350 ரூபாவும் மாடி வீடுகளுக்கு 600 ரூபாயுமாக பதினைந்து வருடகால மாதத் தவணையில் அறவிடப்படுகின்றது. இத் திட்டத்தின் கீட் வழங்கப்படும் வீடுகள் சம்பந்தப்பட்டவர்களின் ஊழியர் சேமலாப நிதியை பிணையாகக் கொண்டே வீடுகள் வழங்கப்படுகின்றன.

இந் நிலையில் சம்பந்தப்பட்ட தொழிலாளி சேவையிலிருந்து ஓய்வு பெறுவாராயின் அவருடைய சேவைக்கால பணத்தில் முழுத் தொகையுமே அறவிடப்படுகின்றது. சேவைக்கால பணம் குறைவாகவோ அல்லது இல்லாமலிருப்பின் சம்பந்தப்பட்டவர் மேலும் பணம் செலுத்தியாக வேண்டும்.

அரசியல் வாதிகளும், தொழிற்சங்க வாதிகளும் மேற்படி வீடுகள் அவர்களுக்கே சொந்தம் என்கின்றனர். தொழிலாளர்களும் இந்த பசப்பு வார்த்தைகளை நம்பி சொந்த வீடுதானே என வங்கிகளில் கடனை பெற்று வீடுகளை சிறப்பாக அமைத்துள்ளனர். ஆனால் இந்த வீடுகளை விற்கவோ, வேறு நபர்களுக்கு மாற்றியோ கொடுக்க முடியாது. இதுதான் ஒப்பந்தத்தின் சாரம்சம்.

ஊண்மையில் உழைப்பவனின் ஊதியத்தில் அறவிடப்படும் பணம் அந்த உழைப்பாளியின் வாழ்க்கைக்கு பலன் தர வேண்டும். ஆனால் அந்த பலன் கிடைக்காவிட்டாலும் உரிமையும் இல்லாது போய்விடும் அபாயம் தான் தெரிகிறது.

-தொடரும்-

சிதம்பரம் ஜோதி



தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள பங்குகளை குறைந்த விலையில் வாங்கும் வர்த்தகர்கள்

இலங்கையில் உள்ள பெருந்தோட்டங்களை கடந்த காலங்களில் SLBC மற்றும் JEDB ஆகியன நிர்வகித்து வந்தன. தற்போது 23 கம்பனிகள் நிர்வகித்து வருகின்றன.

1991 இல் அரசாங்கம் தோட்டங்களை தனியார் மயமாக்கும் நோக்கில் கம்பனிகளுக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்தமையை இடதுசாரி தொழிற்சங்கங்கள் எதிர்த்திருந்தன. எனினும் அரசாங்கத்துடன் இணைந்திருந்த காரணத்தால் இ.தொ.கா வும் இ.தே.தோ.தொ சங்கமும் ஆதரித்திருந்தன.

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின் இறுதியில் ஒரு சமரசத் திட்டத்தை அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் ஏற்றுக் கொண்டன. அதில் ஒன்றுதான் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களையும், சுற்றியுள்ள மரக்கறி தோட்டங்களையும் அவர்களுக்கு உரித்தாக்குவது அடுத்ததாக தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் கம்பனிகளுக்கு கிடைக்கும் இலாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு தரப்பட வேண்டும் . அத்தோடு தனியார் கம்பனிகளின் பங்குகளில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

மேற்படி ஆலோசனைகள் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி நீண்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது. இறுதியில் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தொழிற்சங்கங்களின் அழுத்தம் காரணமாக 10சத வீத பங்குகளை தொழிலாளர்களுக்கும், தோட்ட சேவையாளர்களுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. இந்தப் பங்குகளை நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும் வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

பங்குகள் விநியோகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்குகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இ.தொ.கா, இ.தே.தோ.தொ சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன ஒன்றிணைந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சகல பங்குகளையும் நிர்வகிப்பதற்காக தனியான ‘நிதியம்’ ஒன்றை அமைக்க வேண்டுமென்று கோரி சம்பந்தப்பட்ட அமைச்சோடு பேச்சுவார்த்தை நடத்தின.
ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இத் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில் கம்பனிகளும் அரசாங்கத்தின் சில சக்திகளும் சேர்ந்து திடீரென பங்கு பத்திரங்களை தோட்ட நிர்வாகங்களினூடாக வழங்கி அவற்றை வங்கிகளிலோ, வர்த்தகர்களிடமோ கொடுத்து காசாக்கிக் கொள்ளலாம் என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டதால் பங்கு பத்திரம் கிடைத்தவுடன் இதன் முக்கியத்துவத்தை உணராமல் வங்கிகளிலும் வர்த்தகர்களிடமும் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வதில் அக்கறையாக இருந்தார்கள்.
மேலும் இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் பலத்தை எதிர்ப்பை காட்டியதால் வங்கிகளும் வர்த்தகர்களும் பங்கு பத்திரங்களை விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்த்துக் கொண்டார்கள்.

மீண்டும் பங்குகள் விற்பனை

இவ்வாறு விற்கப்படாமலிருந்த பங்குகளை இப்போது மீண்டும் இரகசியமான முறையில் சில வர்த்தகர்கள் விலை கொடுத்து வாங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இறந்துபோன தொழிலாளர்களின் பங்குகளையும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அல்லது வேலை நிறுத்தம் செய்யப்பட்டவர்களின் பங்குகள் செல்லுபடியாகாது என்று கூறி மிகவும் குறைந்த விலைக்கு வர்த்தகர்கள் வாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்களின் பங்குகளை மாற்ற முடியும்.

பங்குகளை பெற்றுள்ள தொழிலாளர்கள் யாராவது இறந்து போயிருந்தால் அவர்களின் பங்குகள் செல்லுபடியாகாது என்பதில் எந்தவித உண்மையும் இல்லை அந்த பங்குகளை உயிரோடிருக்கும் உறவினர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

பங்குகளினால் கிடைக்கும் பயன்கள்.

தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள பங்குகள் மிகவும் பெறுமதி மிக்கவையாகும். ஏனெனில் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் தொழிலாளர்கள் கம்பனிகளுக்கு உரித்துடையவர்கள் ஆகின்றார்கள். தோட்டங்களில் வசிப்பதற்கு அவர்களுக்கு உரிமை கிடைக்கின்றது.
எதிர்கால சந்ததிகளுக்கு இத்தகைய பங்குகள் சிறந்த முதலீடாக அமைகின்றது. மேலும் 10 ரூபா பெறுமதியான ஒரு பங்கு இப்போது 50 ரூபாய்க்கு மேல் பெறுமதியுள்ளதாக காணப்படுகின்றது.

எனவே தொழிலாளர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பெற்றுக் கொடுத்துள்ள பங்குகளுக்கான உரிமையை சதிகாரர்களின் வகைக்குள் வீழ்ந்து தொழிலாளர்கள் இழந்து விடாது அவற்றை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பானா தங்கம் - வீரகேசரி

Saturday, September 27, 2008

மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம்

மத்திய மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் யாவும் போட்டி பரீட்சை முடிவுகள் மூலம் உள்வாங்;கப்படும் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். மத்திய மகாணத்திலி; பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் தற்போது 1133 என அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டி பரீட்சை முடிவுகளின்படி 2187 பேர் பரீட்சையில் சித்தியெய்துள்ளனர்.

Friday, September 26, 2008

அரசு தீர்மானித்திருக்கும் தேர்தல் முறை மலையகத் தமிழ் சமூகத்தை 30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்லும்

விகிதாசார தேர்தல் முறையினால் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் சனத்தொகை அடிப்படையில் அமையாவிட்டாலும் அபூர்வமாக சில பகுதிகளில் மட்டும் ஒருசில அங்கத்துவத்தை பெறக்கூடிய நிலை இதுவரை இருந்தது.

தற்போது தொகுதிகளையும் உள்ளுராட்சிச் சபைகளில் வாட் முறையையும் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்ற அரசின் ஆலோசனை நடைமுறைக்கு வந்தால் இந்திய வம்சாவளி மக்கள் வாழுகின்ற நாட்டின் எந்தப் பகுதியிலும் எம்மால் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியாது.

1977 ஆம் ஆண்டு இ.தொ.கா.தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குக் காரணமாக அமைந்தது நுவரெலியா மாவட்டம் மூன்று அங்கத்தவர் தொகுதியாக ஆக்கப்பட்டதேயாகும். அவர் மூன்றாவது எம்.பி யாக தெரிவு செய்யப்பட்டார். விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் உள்ளூராட்சி சபைகளிலும் மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் அங்கும் இங்குமாக சில மலையக தமிழர்கள் பிரதிநிதிகளாகத் தெரிவாகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இப்போதைய தேர்தல் முறைகளில் அரசு ஏற்படுத்த முனைகின்ற மாற்றம் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தையே அடியோடு வேரறுத்து விடும். அது மலையகத் தமிழ் சமூகத்தை 30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்வதாகவே அமைந்துவிடும்.

எனவே சகல மலையக சக்திகளும் ஒன்றுசேர்ந்து எமது பிரதிநிதித்துவத்துக்கு வரும் ஆபத்துக்கு எதிராக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதில் அவசர தேவை ஏற்பட்டுள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு மலையக மக்கள் முன்னணி தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தலவாக்கலையில் ஹொலீரூட், ட்ரூப் தோட்டங்களில் அமைச்சு நிதி ஒதுக்கீட்டிலான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோது தெரிவித்தார்.
28,500 இந்தியா வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை

தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் நாடற்றவர்களாக நீண்ட காலமாக இருந்துவரும் 28,500 இந்திய வம்சாவளி மக்களுக்கும் உடனடியாக இலங்கைப் பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்த சட்ட மூலத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதி வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, September 25, 2008

பெருந் தோட்டத்துறை சிறுவர் உரிமை மீறல்கள்

-தொடர்ச்சி-

மிகக் குறைவான வருமானத்தைக் கொண்ட வீட்டுத் துறையினர் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துவது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். எனவே தொழிற் படையிலிருந்து சிறுவர்களை நீக்க வேண்டுமெனின் அவர்களின் குடும்ப வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். சிறுவர்களின் விருப்பத்திற்கு முரணான சூழ்நிலைகளினால் அவர்கள் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுகின்றனர். பெருந்தோட்டத் துறைச் சிறுவர்களின் உரிமை மீறல்கள் காலனித்துவக் காலங்களிலிருந்தே இடம்பெற்று வருகின்றன. இலங்கையில் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது பெருந்தோட்டத் துறையிலேயே அதிகளவான சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவது அண்மைக்கால ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களிலிருந்து 225 பிள்ளைகளிடமும் பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், தோட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் போன்ற பலரிடமிருந்தும் கலந்துரையாடி தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இங்கு 6-14 வயது வரையிலான சிறுவர்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்பட்டது. அதிலும் 14 வயதிற்கு கீழ்ப்பட்ட முழு நேரத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் பிரச்சினைகளே ஆராயப்பட்டன. இதில் 12 வீதமான சிறுவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகி தொழிலில் சேர்ந்துள்ளமை கவலைக்குரியதே. சிறுவர்கள் குடும்ப வறுமையின் காரணமாகவே தொழிலில் சேர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 60 வீதமான சிறுவர்கள் தரகர்களின் ஊடாகவே தோட்டத்திற்கு வெளியில் தொழிலில் சேர்கின்றனர். இவர்கள் மிக மோசமான சூழ்நிலையிலேயே தொழில் புரிய வேண்டியுள்ளது. பெருந் தோட்டத்துறையில் சிறுவர் தொழிலை ஊக்குவிக்கின்ற ஒரு காரணியாக குடும்ப பிளவும் காணப்படுகின்றது. எனவே தொழிலில் ஈடுபடுகின்ற சிறுவர்களது நலன் முழுமையாக பாதுகாக்க முடியாத நிலை காணப்பட்டதுடன் எந்த உரிமைகளையும் அனுபவிக்க முடியாத ஒரு பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்ப துயரங்களுடனேயே வாழவேண்டிய நிலை காணப்படுகின்றது. அவர்களது திறன்கள் சிறு வயதிலேயே அழிந்து விடுகின்றன. இதனை விடவும் சிறுவர்களின் எண்ணங்கள், அபிலாசைகள் என்பவற்றை வெளிப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது. இது காலப்போக்கில் அவர்கள் வாழ்க்கையில் விரக்தி நிலையும் சமூகத்தில் வெறுப்பும் தோன்றி அவர்களை தவறான வழியில் செல்லத் தூண்டுகின்றன. அண்மைக்காலமாக சமூக, தேசிய, சர்வதேச மட்டங்களிலிருந்தும் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இலங்கை அரசாங்கமானது ஒரு குடும்பத்திற்குள் பிள்ளையின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் ஊக்கப்படுத்தக்கூடிய வகையில் பல நிறுவன ரீதியான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இவற்றுள் இலவசக் கல்வி வசதி, இலவச மருத்துவ வசதி, தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கவையாகும். எனினும் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இவற்றை அனுபவிக்கக்கூடிய வாய்ப்பு மிகவும் குறைவாகும். பெருந்தோட்டதுறைச் சமூகத்தில் சிறுவர் தொழிலாளர்களை தடுப்பதற்கு தேசிய சர்வதேசிய ரீதியிலான ஒத்துழைப்புக்கள் அவசியமாகின்றன. பெருந்தோட்டத்துறையின் சிறுவர் தொழிலாளர்களை குறைப்பதற்கு பல செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெருந்தோட்டத்தில் சிறுவர் நலன் தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள கசல அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து சிறுவர் நல செயல்பாடுகள் தொடர்பான ஒரு பொதுவான செயற்திட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வமைப்பில் தோட்டத்தில் இருக்கின்ற பிரஜைகள் குழுக்களின் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுவர்கள் தொடர்பான செயற்திட்டங்களை முன் வைக்கும் போது முதலில் அவர்களது பிரச்சினைகள் சரியாக இனம் காணப்பட வேண்டும. சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம், அவர்களது உரிமைகள் தொடர்பான தெளிவான விளக்கம், உரிமை மீறல்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் போன்றவை தொடர்பான சிறந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தோட்டங்களில் பல மட்டங்களிலும் உள்ள மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கல்வியின் பெறுமதி பற்றி தோட்டங்களில் பெற்றோர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். இங்கு தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகள் மத்தியில் தொழில் நுட்ப பயிற்சிகளை பெறக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். சுயதொழிலை ஆரம்பிப்பதற்கான இலகு தவணைக் கடன்களை அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்களது உற்பத்திகளுக்கு சந்தை பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். இதனை விடவும் தற்போது தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை இனம் கண்டு அவர்களுக்கு புனர் வாழ்வு வழங்கக்கூடிய செயற்பாடுகளை நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் பெருந்தோட்டத்துறைச் சிறுவர் தொழிலாளர்களை தடை செய்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்தை வழங்குவதற்கு சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும். அப்பொழுதுதான் பெருந்தோட்டத்துறையில் ஒரு சுபிட்சமான எதிர்காலத்தை சிறார்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

அமரர் இரா. சிவலிங்கம் ஞாபகார்த்த நினைவு பேருரை
-ஷோபனாதேவி இராஜேந்திரன்-
பேராதனை பல்கலைகழக முதுநிலை விரிவுரையாளர்