Friday, January 8, 2010

அமரர் பெ. சந்திரசேகரனின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு எஸ்.அருள்சாமி

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு மத்திய மாகாணத்தின் முன்னாள் தமிழ்க் கல்வியமைச்சர் சந்தனம் அருள்சாமி நியமிக்கப்பட்டுள்ளதாக 08-01-2010 ம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதி விசேஷ அரசாங்க வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோஷலிஷக் குடியரசின் அரசியலமைப்பின் 99 ஆம் உறுப்புரையின் 13(ஆ)பிரிவின் கீழ், மறைந்த சந்திரசேகரன் பெரியசாமி வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா தேர்தல் மாவட்டத்திற்கான ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராக சந்தனம் அருள்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அரசாங்க வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்துப்போட்டியிட்ட போது அதன் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அருள்சாமி.

அருள்சாமி ம.ம.முன்னணியின் நிர்வாகச் செயலாளராகவும் மத்திய மாகாணசபை உறுப்பினராகவும் செயற்பட்டவர். 2004 ஆம் ஆண்டு முன்னணியிலிருந்து விலகி தனித்துச் செயற்பட்டு, மத்திய மாகாணத்தின் தமிழ்க் கல்வியமைச்சராகப் பதவியேற்றவர்.

தற்போது தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளராகவும் ஜனாதிபதி ஆலோசகர்களில் ஒருவராகவும் செயற்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் 40,000 வீடுகள் - முத்துசிவலிங்கம்

மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் மலையகத்தில் வருடாந்தம் ஐயாயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை 12,230 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு வீட்டைத்தானும் நிர்மாணிக்கவில்லையென்று சில அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் இதில் எவ்வித உண்மையுமில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 3,179 ஆசிரிய நியமனங்கள்; வழங்கப்பட்டுள்ளன. 500 தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதற் தடவையாக 300 தபால் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 100 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இணைந்து செயற்படுவதன் மூலமே இந்த நன்மை கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக எமது கட்சியே மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் இ. தொ. கா.வின் முடிவின்படி மலையக மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Saturday, January 2, 2010

மலையக மக்களின் தலைவர் பெ. சந்திரசேகரன் அவர்கட்கு எம் இதய அஞ்சலிகள் - தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.


மலையக மக்களின் மனம் கவர்ந்த இளம் சிரேஷ்ட தலைவரான திரு. பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் திடீர் மறைவு எம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

முற்போக்கு சிந்தனை கொண்ட சந்திரசேகரன் அவர்கள் மலையக மக்கள் உட்பட இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கு செய்த சேவை அளப்பரியவை. அவரது அரசியல் பயணத்தில் பல சவால்களை எதிர்நோக்கியவர். 1980 களின் இறுதி பகுதி தொடக்கம் 1990 களின் முற்பகுதி வரை சிறைவாசத்தையும் அவா அனுபவித்தார்.

மலையக தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக மாத்திரமல்லாமல் மலையக மக்கள் ஒரு சமூகம் என்ற வகையில் அம் மக்களின் தனித்துவ உரிமைகளுக்காகவும் குரல கொடுத்தவர். மலையகத்தில் லயன் காம்பிராவுக்கு மாற்றாக வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர். மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் கிராம சேவகர்களை நியமித்து பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை பெறுவதற்கு காத்திரமான முறையில் செயற்பட்டவர். மலையகத்தில் உள்ளக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் அயராது பாடுபட்டவர். குறிப்பாக இளந்தலைமுறையினரின் கல்வி தொழில் தொடர்பான விடயங்களில் கரிசனையை செலுத்தியவர்.

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமாதானத் தீர்வு காணப்தற்கு பாடுபட்டவர். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமது சகாக்களுடன்ஃ இணைந்து இடையறாது குரல் கொடுத்து வந்தவர்.


ஒரு அதிகாரப் பகிர்வு முறைமையொன்று மலையக மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று அதற்கான பங்களிப்பை வழங்கியவர். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிலும் அதற்கு அனுசரணையாக இருந்த நிபுணர் குழுவின் முன்னிலையிலும் அதற்கான நியாயங்களை எடுத்துரைத்தவர்.

துமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான நியாயங்களை சர்வதேச அரங்கிலும் குறிப்பாக இந்திய தமிழக முதல்வர், தலைவர்களை சந்தித்து எடுத்துரைத்தவர்.

திரு. பெ. சந்திரசேகரன் அவர்களின் மறைவு இலங்கையின் அரசியல் வானிலும் மலையக மக்களின் அரசியல் அரங்கிலும் பாரிய வெற்றிடமொன்றை தோற்றுவித்துள்ளது.

இலங்கையில் சகல சமூகங்களும் சமத்துவமாக ஐக்கியமாக வாழ வேண்டுமென்ற எழிலார்ந்த கனவுடன் வாழ்ந்தவர்.

குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைக்களுக்காக ஐக்கியமாகவும், நிதானமாகவும் புத்திசாதுரியமாகவும் செயற்பட வேண்டுமென்று தனது இறுதி மூச்சுவரை வலியுறுத்தியவர்.

அன்னாரின் குடும்பத்தினருக்கும் அவர் தலைமை வகித்த மலையக மக்கள் முன்னணிக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.



தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.