Monday, November 12, 2018

தேசிய உற்பத்திகளான தேயிலை, இறப்பர் செய்கையை வளப்படுத்த கம்பனிகள் என்ன பங்களிப்பு செய்யப் போகின்றன?

1975 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் யாவும் ஆங்கிலேய கம்பனிகளின் பராமரிப்பின் கீழ் இருந்தபோது, பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் கிரனடா தொலைக்காட்சி தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும் தேனீரை விரும்பிப் பருகும் நாட்டினருக்கும் அதிர்ச்சி தரும் காட்சிகளையும் தகவல்களையும் அப்பட்டமாக வெளியிட்டு வைத்தது. அந்த விவரணங்களில் தேயிலையை உற்பத்தி செய்யும் தோட்ட மக்களின் வாழ்வியலின் யதார்த்தங்களைப் பார்த்து சர்வதேச நாடுகள் திகைத்துப் போயின. தாம் ருசித்து அருந்தும் தேநீரின் பின்னணியில் எத்தனை ஆயிரம் பேரின் கண்ணீரும் கலந்திருப்பதை அறிந்து கலக்கமும் கவலையும் வெளியாகின.
குறிப்பாக பிரித்தானியா பேதலித்துப் போனது. தமது நாட்டு கம்பனிகளின் பராமரிப்பின் கீழுள்ள தேயிலைத் தோட்ட மக்களின் பஞ்சம், பட்டினி நிறைந்த பரிதாப நிலைமை பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது சம்பந்தமான விசாரணை அறிக்கையொன்றை வழங்குமாறு பிரித்தானிய அரசாங்கம் பணித்தது. 1975 களில் அவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
இதன் பின்னர் உலக அபிவிருத்தி இயக்கம் (WDM) இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் குறித்ததான கவனயீர்ப்பு பரப்புரைகளை மேற்கொண்டது. சர்வதேச ரீதியில் இது பலரது அனுதாபத்தைத் தேடித்தந்தது. இதற்கான வேலைத்திட்டமொன்றை இலங்கையில் இயங்கிய தோட்டக் கம்பனிகள் நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படியேதும் நடக்கவில்லை. காரணம் 1972களில் ஆரம்பிக்கப்பட்ட தோட்டங்களை அரசுடைமையாக்கும் அரசின் வேலைத்திட்டம் 1975இல் நிறைவடைந்தது. அந்நிய கம்பனிகள் அரசிடம் தேயிலைத் தோட்டங்களைக் கையளித்து விட்டு காலக்கிரமத்தில் வெளியேறின. இச்சுவீகரிப்பு மூலம் பிரித்தானிய கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களும் இலங்கையருக்கு சொந்தமான தோட்டங்களும் அரசின் பொறுப்பின் கீழ் வந்தன. எனவே சர்வதேச ரீதியிலான அனுதாப அலையானது அறிக்கையோடு நின்றுபோனது. தோட்ட மக்களின் வாழ்வியலில் மாற்றம் ஏதும் ஏற்படுத்தப்படாமலே அவலம் நீட்சிபெற்றது. இதேவேளை இன ரீதியான புறக்கணிப்பு முயற்சிகள் காரணமாக தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளானது.
தேசிய மயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் தோட்டக்காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு பெரும்பான்மை இன மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அத்துடன் நகர விரிவாக்கம், கிராம அபிவிருத்தி திட்டங்களுக்காக பெருந்தோட்டக் காணிகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளால் பெருந்தோட்ட மக்கள் எவ்வித நன்மைகளையும் அடையவில்லை. குறிப்பாக, வீட்டு வசதி கூட ஏற்படுத்தித் தரப்படவில்லை. தோட்டக் காணிகள் வகைதொகையின்றி துண்டாடப்பட்டமையால் இதுவரை காலமும் இருந்துவந்த பெருந்தோட்டக் கட்டமைப்பு சிதறுண்டது.
கூட்டாக வாழ்க்கை நடத்தியவர்கள் சிறுசிறு குழுக்களாக பிளவுண்டனர். இதுவே சிறு தேயிலை தோட்ட உற்பத்தியாளர்கள் என்றொரு பிரிவு உருவாகக் காரணமாக அமைந்தது என்பர் ஆய்வாளர்கள். ஆனால் அந்தப் பிரிவில் தப்பித்தவறியேனும் தோட்ட மக்கள் எவருமே உள்வாங்கப்படாமையே சமூக ஆர்வலர்களின் ஆதங்கம். இதேநேரம் எதிர்பார்த்தபடி அரசுடைமையாக்கலின் கீழ் பெருந்தோட்டங்கள் சீர்மையாக பாராமரிக்கப்படவில்லை. உள்ளூர் துரைத்தனங்கள் உரிய முறையில் கரிசனை காட்டாததால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடையலானது.
அந்நியச் செலாவணி ஈட்டலில் முதன்மை நிலையிலிருந்த தேயிலை ஏற்றுமதி படிப்படியாக இரண்டாம் மூன்றாம் நிலைக்குப் பின் தள்ளப்பட்டது. இதனால் 1992 இல் மீண்டும் 449 பெருந்தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு 50 வருட கால குத்தகைக்கு விடும் முடிவுக்கு வந்தது அரசாங்கம். பல் தேசிய வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்பு கொண்ட இக்கம்பனிகள், பல்வேறு வாக்குறுதிகளை தொழிலாளர்களுக்கு வழங்கி வைத்தன. அதில் முக்கியமான ஒன்றுதான் இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுவந்த சகல சலுகைகளும் வரப்பிரசாதங்களும் தொடர்ந்து வழங்கப்படும் என்பது. ஆனால் பொறுப்பேற்ற சில காலத்துக்குள்ளேயே அந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. படிப்படியாக தொழிலாளர்கள் பெற்றுவந்த பல நன்மைகள் நிறுத்தப்பட்டன.
குறிப்பாக, அதுவரை தொழிலாளர்கள் பெற்று வந்த வாழ்க்கைச் செலவுப்புள்ளி கொடுப்பனவு இல்லாமல் ஆக்கப்பட்டது. அதுவே இதுவரை அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதில் தோட்டத் தொழிளர்களுக்கு பாரிய சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றது. நாளடைவில் ஆளணி குறைப்பில் தோட்டக் கம்பனிகள் நாட்டம் கொண்டதால் ஆண் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறையலாயின. தொழிலாளர்கள் வேறு வேலைதேடி தோட்டங்களை விட்டுப் புலம் பெயரச் செய்தது. இன்றைய நிலையில் பெருவாரியான தோட்டங்கள் பெண் தொழிலாளர்களை மட்டுமே கொண்ட தொழிற்துறையாக மாறியிருக்கின்றன. இத்துடன் தோட்ட மக்கள் நலன்புரி சேவைக்காக ஒதுக்கப்பட்டு வந்த நிதியில் பாரிய வெட்டு இடம்பெற்றது. 75 வீதத்தால் குறைக்கப்பட்டது.
இப்படி தோட்ட மக்களின் நலன் குறித்ததான சிரத்தை ஏதுமின்றி இலாபத்தை மட்டுமே இலக்காக கொண்டு இயங்கும் தனியார் கம்பனிகள் வாக்களித்தபடி தேயிலைத் துறையைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்கின்றன. முக்கியமாக மீள்பயிர்ச் செய்கைய முற்றாக கைவிட்டு விட்டன. இதனால் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. இதற்கான மாற்றீடாக அறிமுகப்படுத்தி வரும் செம்பனை என்று கூறப்படும் முள்ளுத்தேங்காய் பயிர்ச்செய்கை போன்றவை தேயிலைத் துறையின் எதிர்காலம் குறித்ததான அச்சத்தை ஏற்படுத்தவே செய்கின்றது.
இதே சமயம் கொழும்பில் அமைந்துள்ள கம்பனிகளின் தலைமைச் செயலகத்தை பராமரிக்கவென தோட்ட மக்களின் உழைப்பிலிருந்து பெருந்தொகையான பணம் செலவு செய்யப்பட்டு வருகின்றது. இது மட்டுமின்றி பெருந்தோட்ட மக்களின் வியர்வையின் விளைச்சல் கிரிக்கெட் போட்டிகளின் ஊக்குவிப்புகளுக்காக விரயமாக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவிர கம்பனிகள் தேயிலை, இறப்பர் மூலம் கிடைக்கும் இலாபத்தை கொண்டு பிற நிறுவனங்களோடு பங்குச் சந்தை பங்காளர்களாகுவதோடு இதனால் நட்டம் ஏதும் ஏற்படும் பட்சத்தில் அதை தேயிலை உற்பத்தி மீதான நட்டக் கணக்கில் காட்டும் தந்திரத்தைக் கடைப்பிடிப்பதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. தாம் குத்தகைக்கு எடுத்த காணிகளை வெளியாருக்கு உப குத்தகைக்கு விட்டு இலாபம் தேடப்படுகின்றது. இதேவேளை பெறுமதி வாய்ந்த மரங்கள் தறிக்கப்பட்டு காசாக்கப்படுகின்றன. தோட்ட தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு அவைகளிலிருந்த இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இவைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எவருக்குமே தெரியாது.
தோட்ட அதிகாரிகளுக்கென நிர்மாணிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ பங்களாக்கள் பல இன்று சுற்றுலா விடுதிகளாக பணம் தேடித் தருகின்றன. தோட்டத் தொழிற்றுறையில் எந்தவொரு முதலீடும் செய்யாமல் இலாபம் அடைந்து வரும் தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து மானியமும் வழங்கப்படும் விடயம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு பல்வேறு வழிகளிலும் தேயிலைத் துறையை மையப்படுத்தி ஆதாயத்தை அள்ளிக் குவிக்கும் தோட்ட நிர்வாகங்கள், அப்பாவி தோட்ட மக்கள் விவசாயம் செய்வதற்கோ, சின்னதாக வீடுகளை அமைத்துக் கொள்ளவோ நிலத்தைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கினை பதிவு செய்து தண்டிக்க முற்படுகின்றது. தற்போது இவ்வாறாக தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ்பெறும் வகையில் தோட்ட நிர்வாகங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட உள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தினகரன் வாரமஞ்சரிக்கு தெரிவித்திருக்கிறார். இது வரவேற்கப் படவேண்டிய விடயம். இதே நேரம் நாட்டில் ஆகக் கூடிய ஆளணி வளம் கொண்ட ஒரு தொழிற்றுறையாக பொருந்தோட்டப் பயிர்ச்செய்கை காணப்படுகின்றது. இத்துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான சம்பளம், மேலதிக முகாமைத்துவ செலவுகள், பொறுப்பற்ற நிர்வாகம், ஆடம்பரச் செலவு, காலனித்துவ முறையிலான முகாமைத்துவ முறைமை இன்றுவரை நிலவிவருவதை ஆய்வாளர்கள் பதிவிடுகின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளால் இன்று பெருந்தோட்ட மக்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் இடையிலான தொடர்பில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இத்துடன் நியாயமான அடிப்படைச் சம்பளத்துக்கு இணக்கம் காட்ட முன் வராத தோட்டக் கம்பனிகள் மீது மக்களின் அதிருப்தி அதிகரிக்கும் போக்கே காணப்படுகின்றது. இந்நிலைமையை மாற்றியமைக்க மலையக தலைமைகள் இன்று முயற்சி எடுத்து வருவதையும் காணமுடிகின்றது. தொழிலாளர்களும் விழிப்படைந்தவர்களாக தமது தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் அணிதிரண்டு போராட முன்வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிற்றுறையைப் பாதுகாத்து தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை காலத்துக்குக் காலம் வழங்கத் தவறுமாயின் தோட்டங்களை மீண்டும் அரசாங்கமே கையேற்க முன் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஏனெனில் கம்பனிகளின் மனமாற்றத்தின் பின்னணியில் இந்நாட்டின் ​ேதசிய வருமான மீட்டலின் பங்களிப்பும் இருப்பதை மறந்துவிட முடியாது. தோட்ட மக்களின் வாழ்வியலையும் தோட்டங்களையும் வளப்படுத்த வேண்டிய ஓர் பாரிய சவால் இன்று கம்பனி தரப்பின் முன் காத்திருக்கின்றது. அது அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தான் தற்போதைய கேள்வி?
நன்றி- தினகரன்