Wednesday, June 13, 2018

தொழிலாளர் குடியிருப்பு தீயில் எரிந்தது

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று (13) காலை 09.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 (லயன் தொகுதியில்)தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த வீடுகளில் குடியிருந்த 12 குடும்பங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீயில் சிக்காமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. 

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. 

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.