Monday, December 28, 2009


கண்ணீர் அஞ்சலி!
மன்னார் பரியாரிகண்டலை பிறப்பிடமாகக் கொண்ட திரு பாவிலு யாக்கோபு செல்வம் ஜே.பி (76) அவர்களின் மறைவு (25-12-2009) எமக்கு மிகுந்த வேதனையையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்துவந்த கால்நூற்றாண்டுகளில் ஒரு சமூக மனிதன் என்ற வகையில் அவர் அனுபவித்த துன்பங்களும், துயரங்களும் இழப்புக்களும் மிகப் பாரியவை. அவரது புதல்வர் அருமை ரஞ்சன் சமூகத்தின் விடிவிற்காகவும், நீதிக்காகவும் போராடி 1985 இல்; உயிர் நீத்தவர். அவரது புதல்வியொருவர் சமூக இயக்கத்தில் பங்களித்தவர்.

மனிதாபிமானமும், நல்லியல்பும், நீதி உணர்வும், துணிச்சலும் கொண்ட மனிதர்.

மிக ஆபத்தானதும் நெருக்கடியானதுமான காலகட்டங்களில் அவரும் அவரது குடும்பத்தினரும் எம்மை அரவணைத்து பாதுகாத்தவர்கள்.

மானிட தர்மம் சார்ந்த தனது நம்பிக்கைகளில் இறுதி மூச்சுவரை உறுதியாக நின்றவர்.

நிமிர்ந்த நன்நடை, நேர்கொண்ட பார்வைக்கு உதாரண மனிதராகத் திகழ்ந்தவர்.

அவர் நம்பிக்கை வைத்திருந்த மனிதாபிமானம் சார்ந்த நிலைப்பாடுகளுக்காகவே பல்வேறு இன்னல்களை, துன்பங்களை எதிர்கொண்டவர்.

அவர் ஆறு பிள்ளைகளின் தந்தையாவார்.

அவரது பிரிவால் துயருறும் அன்னாரின் மனைவியார், பிள்ளைகள் உற்ற சுற்றத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.”- குறள்


பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

(பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்)

தொழிலாளியின் பிள்ளையென்றால் தோட்டத் தொழில் செய்ய மட்டும் உரிமை உள்ளவர்களா?

மலையக சமூகம் இன்று சகல துறைகளிலும் ஏதோவொரு வகையில் பின்தங்கியுள்ளது. கல்வி, சுகாதாரம், போஷாக்கு, குடியிருப்பு, பொருளாதாரம், விளையாட்டு, அரசியல், தொழில்துறை என்று இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கையின் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது மிகவும் பின்தள்ளப்பட்ட சமூகமாக மலையக சமூகமே உள்ளது. இச் சமூகத்தின் விடுதலைக்கு மலையக தொழிற்சங்கங்கள், அரசியல் வாதிகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பது சகலரும் அறிந்த விடயமே.

தேயிலை, இறப்பர் தோட்டங்களில் நாட்கூலிக்கு தொழில் செய்ய மட்டுமே இம் மக்கள் உரிமை உள்ளவர்களா? ஏன்ற வினாவை எழுப்ப வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அரச துறையில் வேலை வாய்ப்புப் பெறுவதென்பது பெரும் சாதனையாக பேசப்படும் இந் நாட்களில் பெருந்தோட்டத்துறையிலுள்ள படித்த பிள்ளைகளை நியமிப்பதில் தயக்கம் காட்டப்படுவது பற்றி மலையகத் தொழிற்சங்கங்களோ அரசியல் தலைவர்களோ நடவடிக்கை எடுப்பதில்லை என்று தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தோட்ட அலுவலகங்களில் எழுதுவினைஞர்களாக, தொழிற்சாலை அலுவலர்களாக வெளிக்கள உத்தியோகத்தர்களாக, வாகன சாரதிகளாக, தொழிற்சாலை அதிகாரிகள் போன்ற பல பதவிகள் பெருந்தோட்டத்துறையில் இருக்கின்றன. இப் பதவிகளில் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகள் உள்வாங்கப்படுவதில்லை.

இருந்த போதிலும் கடந்த பல ஆண்டுகளாக பெருந்தோட்டத்துறையில் தமிழர் அல்லாதவர்களைக் கொண்டே இப் பதவிக்கு ஆட்சேர்க்கப்பட்டு நியமனம் வழங்கப்படுகின்றது. பெருந்தோட்டத்துறையிலுள்ள பதவி வெற்றிடங்களுக்கு போட்டிப் பரீட்சையோ, நிபந்தனைகளோ எதிர்பார்க்கப்படுவதில்லை. வெறும் சிபாரிசு கடிதங்களே நியமனத்திற்கு போதுமானதாக உள்ளன.

பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக நாட் கூலிக்கு தொழில் செய்பவர்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு வருமானம் கூடியவர்கள் அல்லர். குடியிருப்பு, குடிநீர், மலசலகூட வசதி, மின்சாரம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளின்றி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர். ஆனால் தோட்டத்துறையில் பதவி வசிப்பவர்களுக்கு அரசாங்கத்துறையில் தொழில் செய்பவர்களைவிட கூடிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக திகழும் பெருந்தோட்டத்துறை தமிழ்த் தொழிலாளர்களின் படித்த இளைஞர், யுவதிகளுக்கு உரிய தொழில் கிடைக்க மலையக அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்விமான்கள் அக்கறை செலுத்த வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒரு மாணவன் கல்வி கற்றுவிட்டால் அந்தக் குடும்பம் தலைநிமிர்ந்து விடும் ஒதுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சிலர் கல்வியை கற்றுவிட்டால் அந்தச் சமூகம் தலை நிமிர்ந்து விடும். ஆனால் மலையகத்தில் தற்போது கல்விமான்கள் பலர் இருந்த போதிலும் அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி தங்களுக்கு தாமே ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.

இந்நிலை மலையகத்தில் தொடருமேயாயின் எமது சமூகம் எப்போது தலை நிமிரும் என்பது விடைகாண முடியாத விளைவாகவே இருக்கும். இலங்கையில் மிகவும் பின் தள்ளப்பட்ட சமூகமாக மலையக சமூகம் உள்ளது. இச் சமூகத்தின் விடுதலைக்கு உறுதுணை புரிய வேண்டும்.

மலையகத்தின் கல்விமான்களும் படித்த இளைஞர் யுவதிகளும் சமுதாயத்தை பற்றி அக்கறையுள்ளவர்களும் இன்று ஏனையோரை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர தான் இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்தில் எமது பங்களிப்பை நிறைவேற்றியுள்ளோமா என்பதைப் பற்றி மறந்தவர்களாகவே உள்ளனர். மலையக சமூகத்தின் விடுதலைக்கு உண்மையாக பாடுபட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல. கல்வியாளர்களும், இளைஞர் யுவதிகளுமே.

பின்தள்ளப்பட்ட சமூகத்திற்கு வழிகாட்ட கிடைத்த இந்தத் தருணத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கல்வியாளன் நினைத்தால் பாறையிலும் பயிர் வளரச் செய்யலாம். மலையகம் இன்று ஒரு பாறையைப் போன்று காட்சி தருகின்றது. நாட்டின் ஏனைய இனங்களோ சரி நிகராக வாழ்வதற்கும் சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் சிறந்த இனமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இந்த நிலையை முறையான வகையில் முறையான விதத்தில் செயற்படுத்த கல்விமான்களே வழிகாட்ட வேண்டும். அவர்களின் சிந்தனை வெளிப்பாடுகள் மூலமே ஒரு திடகாத்திரமான சமூகத்தை உருவாக்கி காட்ட முடியும்.


சிவா ஸ்ரீதரராவ்

வீரகேசரி.


முகவர் தபால் நிலையங்கள் உப தபாலகங்களாக மாற்ற நடவடிக்கை

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுமார் 126 முகவர் தபால் நிலையங்களை அரசாங்கத்தின் உப தபாலகங்களாக மாற்றியமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம். எஸ் செல்லச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, இது தொடர்பில் விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் ஜனாதிபதி ஆட்சிக் காலத்திலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 150 வருடகாலத்திற்குப் பின்னர் நேரடித் தபால் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தபால் துறையில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் மேலும் 100 தபால் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தபால் ஊழியர்களாக 500 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்தபோது 400 பேர் மாத்திரமே கடமைகளைப் பொறுப்பேற்றனர். சில தோட்டங்கள் விடுபட்டதால், 100 பேருக்கு நியமனம் கிடைக்கப்பெறவில்லை.

இவர்களுக்குத் தேர்தலுக்குப் பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், மலையகத்திலுள்ள அனைத்துத் தபாலகங்களையும் சகல வளங்களையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செல்லச்சாமி தெரிவித்தார்

Sunday, December 27, 2009

உழைப்புக்கு மரியாதை

வரலாற்றில் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளருக்கு சிலை

உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதும் உயர்ந்த இடங்களில் இருந்து தோன்றுவதில்லை. எப்போதும் சாதாரண மக்களிடத்திலிருந்தே ஆச்சரியப்படத்தக்க சிந்தனைகள் தோன்றும் என்பார்கள்.

ஊண்மைதான் பலரும் நினைத்துப் பார்க்காத, ஆனால் வரவேற்கத்தக்க சிந்தனை சாதாரண தோட்ட மக்கள் மனதில் உதித்திருக்கிறது.

நாட்டின் முதுகெலும்புகள், தேசிய பொருளாதாரத்தின் ஆணி வேர்கள், ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கர்கள் என தோட்டத் தொழிலாளர்கள் பற்றி பல வார்த்தை ஜாலங்களுண்டு.

வர்ணனைகள் மட்டும் வாழ்க்கையாகி விடுமா? தோட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான உழைப்புக்கு சமமான வருமானம் கிடைக்கிறதா? வாழ்க்கை வசதிகள் கிடைக்கிறதா? உழைப்புக்கேற்ற கௌரவம்தான் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குரியது.

தோட்டத் தொழிலாளர்கள் ஏணிகளாக இருந்து பலரை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். பலரை ஆட்சி பீடம் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்கள். பலருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். முதல் தடவையாக தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் உழைப்புக்கு கௌரவம் வழங்கும் வகையில் தொழிலாளருக்கு சிலை அமைக்கும் எண்ணம் கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மனதில் உதித்திருக்கிறது.

தேயிலை உற்பத்தித் தொழிலை மேற்கொள்கின்றவர்களை வருடாந்தம் நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினம் கடந்த ஐந்து வருடங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்த தேயிலை தினம் தோட்டத் தொழிலாளர்களை முழுமையாக உள்ளடக்கி உள்ளது எனக் கூறுவதற்கில்லை. பரவலாகத் தேயிலைத் தொழிலாளர்கள் இத் தினம் பற்றி போதிய விளக்கமின்றியே உள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் இவ்வருட தேயிலை தினம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை அறிந்த பத்தனை கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஓர் உன்னத உணர்வு ஏற்பட்டது. இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக பாடுபடுகின்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் முன்னோர்கள் உரிய முறையில் நினைவு கூரப்பட வேண்டும். இந்த மண்ணுக்கு உயிரையும் உடலையும் நீத்த எமது முன்னோர்களின் நினைவாக எமது தோட்டத்தில் தொழிலாளர் சிலைகளை ஏற்படுத்தினால் என்ன? என்பதுதான் அந்த எண்ணம்.

உடனடியாக இவ்விடயம் தொடர்பாக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடினர். கேலிவத்தைத் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை முன்றலில் தொழிலாளர் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இவ்விடயம் தொடர்பாக தோட்ட அதிகாரியான மஹிந்த ரணவீரவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை தொடர்பாகத் தோட்ட அதிகாரி தோட்டக் கம்பனியின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதன் பின்பு கம்பனியின் சிலைகள் ஏற்படுத்துவதற்கான அனுமதியும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச தேயிலைத் தினத்தன்று தோட்ட அதிகாரியின் தலைமையில் தோட்டத் தொழிற்சாலையின் முன்றலில் சிலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆண், பெண் தொழிலாளர் உருவங்களைக் கொண்ட சிலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இந்தச் சிலையைத் திறந்து வைக்கவுள்ளதாகவும் இந்த உயரிய பணிக்கும் ஏனைய தோட்டத் தொழிலாளர்களும் உதவுவதற்கு முன்வரலாமென்று கெலிவத்தைத் தோட்டத் தொழிலாளியான மாரிமுத்து தெரிவித்தார். தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இத்தகைய சிந்தனைகள் போற்றுதற்குரியதாகும்.

சோ. ஸ்ரீதரன்

மலையகப்பார்வை

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு தனவந்தர்கள் உதவ வேண்டும்


இன்று மலையகப் பிரதேசங்களிலிருந்து க. பொ. த உயர்தரப் பரீட்சைகளில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பிரிவுகளிலிருந்து குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் வருடா வருடம் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பது மகிழ்ச்சியானதும் வரவேற்கத்தக்கதுமான விடயமாகும்.

உயர்தரப் பரீட்சைகளில் கலை, வர்த்தகம் ஆகிய துறைகளிலிருந்து ஓரளவு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையானோர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டாலும், சட்ட பீடத்திற்கும் முகாமைத்துவ பீடத்திற்கும் தெரிவாகும் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படவில்லை. அதிகரிக்கின்ற எண்ணிக்கை உயர்தரப் பாடசாலைகளிலிருந்து ஒரு சில பாடசாலைகளைத் தவிர போதாதாக இருக்கின்றது. அதேவேளை விஞ்ஞானம், கணிதம் துறையிலும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் இருந்து மருத்துவம், பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்படும் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. இதுவரையும் எமது இலக்கை அடைய முடியாமல் உள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் இன்று பல்கலைக்கழகங்களில் மேற்கூறிய துறைகளுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு எத்தனையோ புதிய புதிய கற்கை நெறிகள் சகல பாடப் பிரிவுகளுக்கும் இருக்கின்றது என்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.

க. பொ. த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் ஒரு சிலர் குடும்ப வறுமை காரணமாக பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாமல் இருக்கின்றனர். இதில் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், தோட்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகள், குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான குடும்பங்களிலுள்ள பிள்ளைகளினால் தொடர்ந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கும், பல்கலைக்கழகங்களில் காணப்படும் செலவுகளை (உணவு, விடுதி, போக்குவரத்து, இதர செலவுகள், போன்றவற்றை சமாளிக்க முடியாமல் எத்தனையோ ஏழை மாணவர்கள் கஷ்டப்படுவதோடு, இதில் ஒரு சில மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பு கிடைத்தும் கூட வசதி இல்லாததற்கு தொடர்ந்து படிக்காமல் இடை நடுவே பல்கலைக்கழக கல்வியை விட்டு விலகி விடுவதோடு, ஏதாவது ஒரு வேலைக்கு செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது. சிலருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தும் கூட செல்லாமல் இருப்பதை சாதாரணமாகஎ அவதானிக்கலாம்.

ஒரு பக்கத்தில் பல்கலைக்கழக அனுமதியை மலையகம் அதிகரிக்க வேண்டும் என கோசம் போடுகின்றோம் அது வரவேற்கத்தக்க விடயமாகும். நிச்சயமாக மலையகத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்றும் படிக்க வேண்டும். இதற்கு யாரும் தடைபோட மாட்டார்கள். ஆனால் இதற்கான வேலைத் திட்டங்கள் எந்தளவிற்கு வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

இப்பிரச்சினைகள் இருந்தபோதும் கூட வறுமையில் இருக்கும் மாணவர்கள் சித்தி பெற்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து படிக்கின்ற, படிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பும் கடமையும் ஆகும்.

இவ்வாறு சித்திப் பெற்ற மாணவர்களின் தகவல்களைத் திரட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதன் பின் இவர்களுடைய பல்கலைக்கழக செலவிற்காக ஒரு தொகைப் பணத்தை எமது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அரசியல்வாதிகள், தொழிற்சங்க வாதிகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பிரதேச சபை, மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், தனவந்தர்கள், செல்வந்தர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் பழைய மாணவர்கள், கல்வி மன்றங்கள், சமூக நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், லயன்ஸ்கழகங்கள், ரோட்டரி கழகங்கள், பொதுமக்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், அரச தனியார் வங்கிகள், கோயில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள், போன்ற பல்வேறு தனிநபர்களும், அமைப்புக் களும், நிறுவனங்களும் ஏதோ ஒரு வகையில் இச்சமூகத்தில் படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும். குறிப்பாக கூடுதலான புலமைப் பரிசில்களை இவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதோடு தனவந்தர்கள், இவ்வாறான மாணவர்களைத் தத்தெடுக்க வேண்டும். இவ்வாறு ஏனைய மாணவர்களுக்கு உதவிச் செய்வதன் மூலம் எமது மலையகச் சமூகத்தில் இருந்து இன்று இருப்பவர்களை விட மேலும் பல பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், இன்னும் பலதுறைப் சார்ந்தவர்களையும் உருவாக்க முடியும். இவ்வாறானவர்கள் எமது சமூகத்தில் உருவாகும்போதே ஒரு சமூகம் விழிப்படையும்.

ஒரு சமுகத்தின் விடியலுக்கு கல்விதான் அடித்தளம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே பெருந்தோட்டச் சமூகத்திலிருந்து சென்று நல்லத் தொழில், வசதி வாய்ப்புக்களோடு இருக்கின்ற நபர்கள், 10 பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒரு பல்கலைக்கழக மாணவனை தத்தெடுத்து அவரை தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு உதவி செய்வதன் மூலம் எத்தனையோ வசதி குறைந்த மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்க முடியும்.

இன்று இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் மலையகச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏதோ ஒரு கற்கை நெறியில் படிக்கின்றார்கள்.

இவர்களில் சிலர் தொடர்ந்து படிப்பதற்கு வசதியில்லாத சந்தர்ப்பத்தில் இடை நடுவில் பல்கலைக்கழக கல்வியை விட்டுவிட்டு தொழிலுக்கு சென்றுவிடுகின்றார்கள். இதனால் குறிப்பிட்டக் காலத்தில் படித்து பட்டம் பெறுவதும் தடைப்படுவதோடு வாழ்க்கையில் எதிர்பார்த்த எத்தனையோ கனவுகளும் உடைந்து சுக்கு நூறாகிப் போகின்றது. எனவே இவ்வாறு பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து இருக்கும் வறிய மாணவர்களையும் இனம் கண்டு உதவி செய்ய முன்வர வேண்டும்.

இரா. சிவலிங்கம்... -

Sunday, December 20, 2009

மலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்!

எமது நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்த தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்டவர்கள் மலையகத் தொழிலாளர்கள். தேயிலையின் பசளை தொழிலாளியின் வியர்வை எனும் கூற்று அவர்களின் உழைப்புக்கு நல்லதொரு சான்றாகும்.

இந்த நிலையிலும் தமது பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற உறுதியான போக்கு அவர்களை இடைவிடாது உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதற்கு தடையாகக் காணப்படுவது அவர்களின் வறுமை. தமது பிள்ளைகளின் படிப்பை இடையில் நிறுத்தி வறுமை எனும் கொடிய அரக்கனுக்கு அவர்களைப் பலியிடும் நிலை மலையகத்தில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

மலையகச் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவேண்டும், தமது பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதை பெற்றோர் நிறுத்த வேண்டும் என்ற பல கோஷங்கள் விழிப்புணர்வுடன் எழுப்பப்பட்ட போதிலும் இது சாத்தியமாகாத ஒரு விடயமாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளினால் குடைசாயும் மலையகச் சிறுவர்களின் எண்ணிக்கை, சமுதாயம் சார்ந்தவர்களை விழிப்புணர்வூட்டியதாகவும் தெரியவில்லை.

ஜீவா, சுமதி ஆகியோரின் துயரமான சம்பவங்களின் ஈரம் எமது நெஞ்சில் ஆறாத நிலையில், இப்பொழுது மற்றுமொரு 15 வயது சிறுமி குமுதினியின் துயரமிக்க சம்பவம் எம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.

தெல்தோட்ட லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமையா, மாரியாயி ஆகியோரின் அன்பு மகள் சிறுமி குமுதினி. இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி மர்மமான முறையில் மரணமானார்.

தெல்தோட்ட மத்திய கல்லூரியில் 8 ஆம் தரத்தில் படித்துவிட்டுத் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக, அடிமை சேவகம் செய்ய புறப்பட்ட தனக்கு இவ்வாறான செயல் நிகழும் என அவள் அறிந்திருக்கவில்லை.

தரகர்களின் தவறான செயல்கள்

மலையகப் பகுதிகளில் இவ்வாறு வேலைக்கமர்த்துவதற்குச் சிறுவர்களை அவ்வப்பகுதியிலிருந்து அழைத்துச் செல்லும் தரகர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்று.. தரகர் ஒருவர் மூலம் ஹேவாஹெட்ட முல்லேரிய தோட்ட அதிகாரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளிலிருந்தே குமுதினியின் அவலநிலை தொடர ஆரம்பித்துவிட்டது.

தனது மகள் தூக்கிட்டுக் கொண்டாள் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கடந்த 10 ஆம் திகதி, ஒரு மர்மமான குரலே ராமையாவுக்குத் தெரியப்படுத்தியது. அந்தச் செய்தி அவளது பெற்றோரின் நெஞ்சை பிளக்கச் செய்தது.

ஒரு வீட்டில் வேலை செய்துவந்தவள் இறுதியில் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்?

மனித நேயமற்ற சிலரின் செயற்பாட்டால், அந்தப் பிஞ்சு மனதின் கனவுகளும் ஆசைகளும் ஒரு நொடியில் சிதைந்துபோயின. இவ்வாறாக பலி கொள்ளப்படும் உயிர்கள் இன்னும் எத்தனை... எத்தனை...?

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையே இவை போன்ற சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது. வறுமைச் சூழல் அவர்களைச் சூழ்ந்து கொண்ட போதிலும் வளமான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் ஏற்படாமலில்லை. மலையக சமூகம் ஏன் அதை நாடிச் சென்று பெற்றுக் கொள்ள முயலவில்லை? இதனாலேயே மலையக சிறுமிகள் மட்டுமன்றி முதியவர்கள், நடுத்தரவயதினர் கூட வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.

கொத்தடிமைகள் அல்லர் மலையகச் சிறுவர்கள் கொத்தடிமைகளாகவே என்றும் இருக்க பிறந்தவர்கள் அல்லர். அவர்களுக்கென ஓர் எதிர்காலம் நிச்சயமாக உள்ளது என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதற்குப் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகம் சார்ந்த விடயங்களும் கூட காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களூடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. என்றாலும் பெற்றோரின் அசமந்தத்தால் அது செயலிழந்து போகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளை, அவை தொடர்பாக முழுமையான விசாரணைகளைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினருக்கே உள்ளது.

குமுதினியைப் போன்று கறுகிப் போய்விடாது, மலையக சிறுவர்களின் வாழ்வை மீட்டுத் தர கல்வியாளர்கள், பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் பாதுகாப்புச் சட்டங்களும் உறுதுணை புரிய வேண்டும்.

எதிர்காலத்தில் இது நிழல் ஆகுமா? அல்லது நிஜமாகுமா?

-சுவாதி

நன்றி- வீரகேசரி

Monday, December 14, 2009

திகனயில் அதிர்ச்சி தரும் ஒரு கிராமம் - கசிப்பு காய்ச்சுவது இங்கே குடிசைத் கைத்தொழில்

காலை மாலை என்ற வேறுபாடு இல்லாமல் மக்கள் வருவதும், போவதுமாக களைகட்டி காட்சியளிக்கும் திகன அலுத்வத்த 8ம் இலக்க கிராமம்

வெற்றுக் கேன்களுடனும், சில ஆயிரங்கள் பணத்துடனும் இக் கிராமத்துக்கு வரும் ஆண்கள்( சில சமயம் பெண்களும்) சுமக்க முடியாத பாரத்துடன் சில சமயம் கொஞ்சம் தள்ளாட்டத்துடன.; திருப்பிச் செல்வது வழக்கம். தினமும் பல ஆயிரக்கணக்கில் இங்கே வியாபாரம் நடக்கும்.

ஆம் இங்கே வியாபாரம் செய்யப்படுவது கசிப்பு. அதுவும் இந்தக் கிராமத்தில் சொந்த உற்பத்தி. நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்க சோறு போடுவது இந்த வருமானத்தான். கசிப்பு காய்ச்சுவதும், விற்பதும்தான் நூற்றுக்கணக்கான ஆண்களுக்கும், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பிரதான தொழில்

இந்தத் தொழில் சட்ட விரோதம் என்பது எங்களுக்குத் தெரியும் இருந்தும் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லை. இத் தொழிலை நாங்கள் ஒன்றும் இலாபத்திற்காக செய்யவில்லை. இதில் இலாபமும் கிடைப்பதில்லை. தினம் தினம் வயிற்றுபாட்டுக்காக இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எமக்கிருக்கிறது என மனம் திறந்து சொல்கிறார்கள் இக் கிராம மக்கள்.

இவ்வாறான தொழல் செய்து பிழைக்கும் இவர்கள் பிழைக்க வக்கற்ற மக்கள் கூட்டம் அல்ல. ஒரு காலத்தில் வீடு, நிலம், தொழில் என வசதியாக வாழ்ந்தவர்கள்தான்.

இலங்கைக்கு (மின்சார) ஒளி கொடுப்பதற்காக உருவான விக்டோரியா நீர்த்தேக்கத் திட்டமே இவர்களின் வாழ்வு இருளாகக் காரணமாகியிருக்கிறது.

1982இல் விக்டோரியா நீர்த்தேக்கம் இவர்கள் வாழந்த காணிகளையும், வீடுகளையும் விழுங்கி விட திகன அலுத்வத்த பகுதியில் இவர்களுக்கென 20 பேர்ச்சஸ் காணியும் சில ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டது.

வுழங்கப்பட்ட காணியோ சுண்ணாம்புக் கற்பாறைகள் நிறைந்தது. வீடு கட்டவோ விவசாயம் செய்யவோ பொருத்தமற்றது. நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட காலத்தில் சிலருக்கு தொழில் கிடைத்தது. அதனால் இம்மக்களுக்கு மோசமான காணியின் நிலை பெரிதாகத் தெரியவில்லை.

அதன்பின் தொழில் வாய்ப்பு இல்லை. வாழ்க்கைக்கான வசதியில்லை. மலசலகூடம், குடிநீர்வசதி இல்லாத இம் மக்களின் வாழ்க்கை

அதேபோல இலங்iகின் பல பாகங்களுக்கும் மின்சார ஒளி கொடுக்கும் பொருட்டு இடம்பெயர்ந்த இந்த மக்களின் குடியிருப்புக்கள் இன்றுவரை மின் ஒளி காணாது இருண்டு கிடக்கின்றன.

இங்கிருந்து பெரும் பாடுபட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற சில விரல் விட் எண்ணக்கூடிய சில குடும்பங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளன. தினக்கூலி வேலைகளை நம்பி வாழ்க்கை நடத்தும் ஏனையவர்களின் வீடுகள் குடிசைகளாகவே காட்சி தருகின்றன.

பிழைக்க வேறு வழியில்லை. கசிப்புக் காய்ச்சும் தொழில் இங்கு தொடங்கப்பட்து. ந்ல வரவேற்பு இருந்தது. வியாபாரம் ஓகோ என நடக்கும். தினமும் ஆயிரக் கணக்கில் பணம் குவியும். ஆனால் பணம் கிடைத்ததென்ன எல்லாம் பொலிசாருக்ம் தண்டம் செலுத்துவதற்குமே சரியாக இருக்கும் என்கிறார் இப்பகுதி பெண் ஒருவர்.

வாரத்திற்கு ஒருமுறையாவது பொலிசார் இக் கிராமத்தை சுற்றி வளைத்து விடுவார்கள். கசிப்பு விற்ற பணம் தவிர வீட்டில் இருக்கும் தங்க நகைகளை விற்று கூட பொலிசாருக்கு தண்டப்பணம் கட்டிவிடுவோம் என்று கூறும் குடும்பஸ்த்தர் ஒருவர் தான் கட்டுக்கட்டாக வைத்திருக்கும் பணம் கட்டியதற்கான ரசீதுகளை காட்டுக்கின்றார். இதன் உண்மைத் தன்மையை அவர் வாழும் மண்ணால் கட்டப்பட்ட குடிசைவீடு நியாயப்படுத்துகிறது.

இக் கிராமத்தில் சுமார் 10 இடங்களில் கசிப்பு காய்ச்சப்பட்டது. இதில் நேரடியாக சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புக்களை பெற்றிருந்தனர்.

இங்குள்ளவர்களில் அநேகமானோர் கல்வியறிவு பெறதாவர்களாகவே உள்ளனர். எங்கள் பிள்ளைகளையாவது பாடசாலைக்கு அனுப்பலாம் என்றால் இங்கே பாடசாலையில்லை. திகன, இரஜவெல பகுதி பாடசாலைகளில் எங்கள் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பாடசாலை அனுமதியின் போது வீட்டுப்பத்திரம், மின்சார கட்டணப்பட்டியல் என்பன கேட்கப்படுகிறது. எம்மிடம் அவை எதுவும் இல்லை என தம் பிள்ளைகளின் கனவு ஈடேறாத வேதனையை பெற்றோர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.


வேண்டாம் இந்த அவலம்

கசிப்பு காய்ச்சி சுமார் ஒரு தசாப்தகாலமாக வாழ்க்கை நடத்திய இந்த மக்கள் இன்று இந்த தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் பொலிசாருக்கு பயந்து ஒளிந்து நாங்கள் அலுத்து விட்டோம். பணம் சம்பாதித்தாலும் அதைத் தண்டப்பணமாக செலுத்திவிட்டு வாழ்வதில் என்ன பயன்? ஆதனால் கசிப்பு காய்ச்சுவதை ஒட்டு மொத்தமாக நிறுத்தி விட்டோம் என்கின்றனர்.

ஆனால் இத்தனைக் காலம் இம் மக்களிடம் பணப்புழக்கம் இருந்தது. இப்போது இங்கே வறுமை தாண்டவமாடுகிறது.

எங்களுக்கு மாற்றுத் தொழில் ஏதுமில்லை. தொழில் தொடங்கவும் ஏதும் வசதியில்லை. எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. நாம் என்ன தொழில் செய்வது? எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது? ஏன இங்குள்ள குடுமபத் தலைவர்கள் மனங்கலங்கி நிற்கின்றனர்.

ஏமக்கு ஏதாவது தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கமோ அல்லது அமைச்சர்களோ, அரச சார்பற்ற நிறுவனங்கயோ முன்வர வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தவறு செய்யும் மக்களை தட்டிக் கேட்கவும், தண்டிக்கவும் எம் சட்டம் தன் பணியை செய்தது. இன்று தவறான தொழிலை கைவிட்டு நிற்கும் இம் மக்களுக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து கைதூக்கி விட வேண்டிய சமூகப் பணியை பொறுப்புடையவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஆர். நவராஜா

நன்றி- மலையக பார்வை

பாரிய மண்சரிவினால் மக்கள் இடம்பெயர்வு

பதுளை நமுனுகுல பிரதேசம் நல்லமலை கிராம சேவகர் பிரிவு, ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் ஏறட்ட பாரிய மண்சரிவு காரணமாக அப் பகுதியில் சுமார் 35 தோட்டக் குடியிருப்புக்களில் வாழ்ந்த 150 பேர் இடம்பெயர்ந்து நல்லமலை வித்தியாலயத்தில் தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் நிமல் பியசிறி பண்டார தெரிவித்துள்ளார்

கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றாலும் இரண்டு தோட்டக் குடியிருப்புக்கள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், ஏனையவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இம்மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இம் மணிசரிவு சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் அரை கிலோ மீட்டர் தூரம் வரை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்

Sunday, December 13, 2009

சர்வதேச தேயிலை தின மாநாடு டிசம்பர் 15 ஆம் திகதி


சர்வதேச தேயிலை தின மாநாடு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு பிரதான மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு 2005ஆம் ஆண்டு புது டில்லியில் நடைபெற்றது. அன்றையத் தினம் சர்வதேச தேயிலை தினப் பிரகடனமும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேயிலை உற்பத்தி செய்யும் எல்லா நாடுகளும் மேற்படி தினத்தில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பரப்புரை செய்து வருகின்றன.

தொழிலாளர்களின் வேதன உயர்வு, வீட்டுரிமை, கல்வி, நிலவுரிமை, சுகாதாரம், கலாசாரம், பெண்கள் தலைமைத்துவம், பால்நிலை சமத்துவம் குறித்து பேசப்பட்டு வருகின்றன. பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை அட்டனில் நடைபெறும் இம்மாநாட்டில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் ஐக்கிய நாட்டுச் சபையின் அபிவிருத்தி திட்ட நிறுவனமும் இணைந்து தயாரித்த பெருந்தோட்ட சமூக பத்தாண்டு அபிவிருத்தி திட்டத்தை பூரணமாக அமுல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

சர்வதேச தேயிலை தின ஊர்வலமும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்தளை நகரிலும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதான மண்டபத்திலும் நடைபெறும் என்று பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் இணைப்பாளர் எஸ். முருகையா தெரிவித்தார்

மது பாவனையை கட்டுப்படுத்த மாற்று சிந்தனைகள் அவசியம்
முற்றாக ஒழிக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம் - புத்திரசிகாமணி

மலையகப் பகுதிகளில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளிலேயே மதுபாவனை அதிகரித்து காணப்படுகிறது. மலையக நகர்ப்புறங்களில் மதுபானச் சாலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மலையக நகர்ப்புற மதுபானச் சாலைகளுக்கு முன்னால் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இது ஒரு புறமிருக்க தோட்டப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனைகள் லயன் குடியிருப்பு தொகுதிக்கு ஒன்றாக காணப்படுகிறது. இந்த எண்ணிக்கை தீபாவளி மற்றும் புதுவருட கொண்டாட்ட காலங்களில் பல மடங்காக அதிகரித்து விடுகிறது.

மலையக சமூகத்தின் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படும் இவ்வேளையில் மது பாவனையை முற்றாக ஒழிக்க முடியாவிடினும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மலையக அரசியல் தலை¨மைகள், புத்தி ஜீவிகள், படித்த இளைஞர்கள், நலன்புரி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. கடந்த தீபாவளி நாட்களில் பிரிடோ உட்பட சில அமைப்புகள் மது இல்லா தீபாவளியை கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் மது ஒழிப்பு பிரசாரத்தை மேற்கொண்டது.

‘மத்தட தித்த’ மது ஒழிப்புத் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது. பெருநாள் மற்றும் விசேட நாட்களில் குறிப்பாக போயா தினங்களில் மது விற்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. பெருநாள் கொண்டாட்டங்களின் போதும் உற்சவ காலங்களின்போதும் மது விற்பதற்கு தடை விதிக்கப்படுகின்ற போதிலும் பாவனையாளர்கள் மதுவிற்கு பதிலாக கசிப்பு மற்றும் போதைவஸ்துக்களை பாவிப்பதாக கூறப்படுகிறது. அல்லது சட்ட விரோதமாக விற்கப்படும் மது, கசிப்பு வகைகளை பல மடங்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.
பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் தொழிலாளர்கள் அதிகளவில் மதுவை பாவிக்கின்றனர். பெண்கள் உட்பட குடும்பத்திலுள்ள அனைவரும் மதுவை பயன்படுத்தி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. மதுபோதையால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கிறது. சண்டை சச்சரவுகள் ஒருபுறமிருக்க குடும்பங்கள் பிரிந்து அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. நன்றாக கற்கக்கூடிய மாணவர்கள் தொடர்ந்து தமது கல்வியைத் தொடர்வதற்கான சூழல்கள் இல்லாத நிலையில் கல்வியை இடைநிறுத்த நேரிடுகிறது. இந்நிலை தொடர்ந்தால் சமூகச் சீர்கேடுகள் நிறைந்த சமூகமாக மாறலாம். சில தோட்டப் பகுதி ஆசிரியர்களே மது விற்பனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. திருமணம், மரணம், சமயச் சடங்குகளின்போது மது அதிகளவில் பயன்படுத்தப்படுவதை சமூக நலன்புரி அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

கிராமப்புறங்களை அண்டிய தோட்டத் தொழிலாளர்கள் அதிகளவில் கசிப்பை பயன்படுத்துவதாக அறியப்படுகிறது. களுத்துறைப்பகுதியில் தோட்டமொன்றில் பெருநாள் கொண்டாட்டத்தின் போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் லயன்குடியிருப்புகள் அடித்து நெறுக்கப்பட்டன. அவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டதுடன் தொழிலாளர்கள் நான்கு நாட்களுக்கு மேலாக அச்சத்தின் காரணமாக மறைவிடங்களில இருந்ததை தோட்ட மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தோட்டப் பகுதிகளில் இன்று வரையிலும் சில சில சம்பவங்கள் மது பாவனையால் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. நண்பர்களாக இருந்தவர்கள் விரோதிகளாக மாற்றிவிடும் வல்லமை இந்த மது விற்கு இருக்கிறது.
மரண வீடொன்றில் எட்டாம் நாள் சமயக் கிரியைகள் நடந்து முடிந்த பின்னர் வந்திருந்தவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஆண்கள் இன்னொரு அறைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு மதுசாரத்தை பகிர்ந்து கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து இதுவும் ஒரு சம்பிரதாயமா எனக் கேட்டபோது, இல்லை அங்கிள் இவர்கள் அனைவரும் என் அப்பாவின் நண்பர்கள். அப்பா உயிருடன் இருக்கும்போது ஒன்றாக இருந்து மது அருந்துவது வழக்கம். அதனையே நானும் செய்கிறேன். வந்தவர்களை வரவேற்று உபசரிக்காவிட்டால் அது அப்பாவின் பெயருக்கே களங்கமாகிப்போய்விடும் என்றார். இந்த நிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை.

தொழிலாளர்கள் நாள் முழுதும் கடுமையாக உழைத்து மாலை வேளையில் தினமும் மதுபானத்தை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை இன்னும் உணராதவர்களாவே இருக்கின்றனர். போதைக்கு அடிமையான பலர் நோயாளர்களாக மாறி அவர்களின் வாழ்வதற்கான காலம் குறைந்து மரணத்தில் முடிந்து விடுகிறது.

பெருந்தோட்டப் பகுதிகளில் மதுபாவனையை முற்றாக ஒழிக்க முடியுமா?

மதுபாவனையை தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்கான மாற்று தீர்வு குறித்து நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணியிடம் கேட்டோம்.
உலகில் அதிகம் மது அருந்தும் நாடுகள் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலைத் தேய நாடுகளைப் பொறுத்தவரையில் மதுவை பயன்படுத்துவது ஒரு கௌரவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது மது பெருமளவில் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு அளவுக்கு மேல் குடித்து வீதிகளில் கிடப்பதெல்லாம் கிடையாது.

மது ஒழிப்பு என பேசுவதற்கு முன் மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் இருப்பவர்கள் அனைவரும் குடிகாரர்கள் என்று அவமானப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களை நாம் அதிகளவில் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு விதத்தில் பார்க்கும்போது குறைந்த எண்ணிக்கையானோரே குடீக்கிறார்கள்.

அவர்களுடைய வருமானம் போதாமல் இருப்பதன் காரணமாக விரக்தியில் சிலர் மதுவை நாடலாம். அதிக வேலைப்பளு ஓய்வின்றிய உழைப்பால் களைப்படைவருக்கு மது எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுவதாக எண்ணலாம். மது அருந்திய பின்னர் அவர்கள் உட்கொள்ளும் உணவு போதாமையால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. எது எப்படி இருப்பினும் மது அருந்துவதால் ஏற்படும் தீமையை உணர்ந்து படிப்படியாக குறைக்க வேண்டும்.மது அருந்துவதை முற்றாக ஒழிக்க முடியாது. எனினும் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் குடிப்பவர்கள் மதுவால் ஏற்படும் தீமைகளை அவர்களே உணர்ந்து திருந்த வேண்டும் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த முடியாதிருந்தது. ஆனால் தற்போது பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் தாங்களாகவே நிறுத்திக் கொண்டனர். அது போலத்தான் இந்த மது பாவனையையும் கட்டுப்படுத்த முடியும்.

பி. வீரசிங்கம்
தினகரன் வாரமஞ்சரி

Saturday, December 12, 2009

கொழுந்தின் அளவு அதிகரி;க்கப்பட்டுள்ளதால் முழுமையான சம்பளத்தை பெற முடியாத நிலை

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே அண்மையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறுபட்ட சர்ச்சைகளும் பிரச்சினைகளும் எழுந்த வண்ணமாகவே உள்ளன. புல துறையினரும் பல்வேறு கருத்துக் கணிப்புக்களையும் வெளியிடுகின்றனர்.

தங்களது துறைகளையும் தங்களது சுய இலாபங்களையும் கருத்திற்கொண்டு பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிடும்போது அவை பல விதத்திலும் திரிபடைந்து தொழிலாளர்களை சென்றடைகின்றன. இவ்வாறான நிலை தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை காட்டிக் கொடுப்புச் செய்துள்ளன என்ற கருத்து ஆணித்தரமாக வேரூண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களது நடவடிக்கைகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

இன்று இக் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதும், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுவதும் தொழிற்சங்கங்களினாலேயே ஆகும். மேலும் தொழிலாளர்கள் வென்றெடுத்துள்ள தொழில்சார் உரிமைகளும் தொழிற்சங்கங்களினாலேயே பெறப்பட்டன என்பதையும் நாம் இங்கு மறக்கக்கூடாது.

அண்மையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிகளுக்கமைய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்று பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அது மாத்திரமன்றி ஒரு நாளுக்குரிய 30 ரூபாவை இழக்கும் போது நாட் சம்பளத்தை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பெரும்பாலும் பெண் தொழிலாளர்களே பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகி;ன்றது. இது தொடர்பாக சற்று விரிவாக நோக்குவோமாயின்

கூட்டு ஒப்பந்தத்தின் பின் அநேகமான தோட்டங்களில் தொழிலாளர்கள் எடுக்கும் கொழுந்தின் அளவை நிர்வாகங்கள் தங்களுக்கேற்ற வகையில் மாற்றியுள்ளன. ஊதாரணமாக கூட்டு ஒப்பந்தத்தின்று முன்னர் 16 கிலோ கொழுந்து எடுக்கப்பட்டு வந்த தோட்டங்களில் தற்கோது 18 முதல் 20 கிலோ வரை கொழுந்து எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

(உதாரணமாக பதுளை, நிவ்பர்க், குயின்ஸ்டவுன், மஸ்கெலியா, தலவாக்கொல்லை, ஆகிய தோட்டப்பகுதிகளில் 18 கிலோ கொழுந்து எடுக்க வேண்டும். அதேநேரம் தெனியாய போன்ற பகுதிகளில் 23 கிலோ வரையில் ஒரு நாளைக்கு கொழுந்து எடுக்க சொல்கின்றார்கள். ஏன்பதை அறிய முடிகின்றது) அவ்வாறு அவர்கள் கூறும் அளவை எடுக்காவிட்டால் சம்பளத்தில் 30 ரூபா குறைக்கப்படும் எனத் தொழிலாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

எனவே தொழிலாளர்கள் குறிப்பிட்ட நிர்வாகம் கூறும் அளவில் கொழுந்தை எடுக்கின்றார்கள். எதிர்த்துப் பேசும் தொழிலாளர்களிடம் உங்கள் சங்கத்தினர் கூட் ஒப்பந்தத்தில் இந்த நிபந்தனைகளுக்கு இணங்கியே கையொப்பம் இட்டுள்ளனர் என்று கூறுகின்றார்கள். இவ்வாறான நிலையால் தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இன்னும் சில தோட்டங்களில் ஒரு நாள் சம்பளமான 405 ரூபாவிற்கு வேலை செய்துள்ள தொழிலாளர்களிடம் நிர்வாகம் சற்று பின் தங்கி இருக்கின்றது. முழு சம்பளத்தையும் கொடுக்கக்கூடிய அளவில் தோட்டம் இயங்கவில்லை. எனவே உங்களது சம்பளத்திலிருந்து ஒரு பகுதி குறைக்கப்பட்டு பின்னர் அச்சம்பளம் எதிர்வரும் காலங்களில் சம்பளத்தோடு இணைக்கப்படும் எனக் கூறுவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊதாரணமாக பதுளையில் பல தோட்டங்களில் தொழிலாளாகள் 405 ரூபாவிற்கு வேலை செய்கின்ற போதும் 385 ரூபாவையே வழங்குவதாகவும் மீதிச் சம்பளத்தைக் கேட்கும் போது அடுத்த மாதச் சம்பளத்துடன் சேர்த்துத் தருகிறோம் முற்கொடுப்பனவுடன் தருகின்றோம் என்று கூறுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளை தொழிற்சங்கத்திடம் யாரும் தெரிவிப்பதில்லை. இது நிர்வாகத்திற்கு சாதகமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது என்பதை கண்டும் காணாதது போல அவர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலைக்கு தொழிற்சங்கமே காரணம் என்று தொழிலாளர்கள் எண்ணுகின்றார்கள்.

எனவே தொழிலாளர்களின் இந் நிலைப்பாட்டை மாற்றும் வகையிவல் தொழிலாளர்களுக் சிறந்ததொரு தெளிவுப்படுத்துதல் அவசியமாகும். தொழிலாளர்கள் இவ்வாறு தனித்துப் போகும் தன்மையும் தொழிற்சங்கங்களுடன் முரண்பட்டிருக்கும் நிலையும் மாற்றமடைய வேண்டும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ஆனால் இன்று மூன்று நான்கு பிரிவுகளாக தொழிலாளர் சமூகம் பிரிந்துள்ளது. இந் நிலையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

ஆனந்தி

Friday, December 11, 2009

தொழிலாளர் உழைப்பில் மின் உற்பத்தி
லிந்துலை மெராயா நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது எல்ஜின் தோட்டத்தின் மிக உயரமான இரு மலைத் தொடரையும் கிழக்குப்புற எல்லையாக அம்பேவலை காடும் அமைந்துள்ளது. எல்ஜின் நீர்வீழ்ச்சியை கடந்து பாயும் எல்ஜின் ஓயா எல்ஜின் தோட்டத்திற்கு ஊடாகவே பாய்கின்றது. இத்தோட்டமானது வெயில், மழைக் காலங்களில் புவியியல் அமைவிடம் காரணமாக இருள் மயமானதாக காட்சியளிக்கின்றது.

குண்டும் குழியுமாகக் காணப்படும் பாதைகளுடன் உட்கட்டமைப்பு வசதிகள் எதுவுமற்ற நிலையில் சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட எல்ஜின் தோட்டத்தில் மின்சார வசதிகள் இல்லை. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக இங்கு வாழ்ந்து வரும் மக்கள் இருளில் மூழ்கியே வாழ்ந்து வருகின்றனர்.

எந்தவிதமான பயனும் பெறாத நிலையில் பல அரசியல்வாதிகளிடம் தீர்வு பெற்றுத் தர வேண்டியும் பயன் கிட்டவில்லை. இனியும் மின்சாரம் கிடைக்காது என்ற விரக்தியில் இம்மக்கள் வாழ்ந்து வந்தனர்.

2005ஆம் ஆண்டு வரை தொடர்ந்த இந்நிலை அந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் நடுத்தர சிறிய கிராமிய மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளைச் செயற்படுத்தும் தனியார் நிறுவனம் தொடர்பாக மக்கள் கேள்விப்பட்டனர். அவர்களுடன் தொடர்பு கொண்ட மக்கள், எல்ஜின் மின்சார கூட்டுறவு சங்கம் ஒன்றை நிறுவி பணிகளை ஆரம்பித்தனர்.

எல்ஜின் ஓயாவிற்கு குறுக்கே அணைக்கட்டினை அமைப்பதும் இதிலிருந்து நீர்படுகையினூடாக (றுயவநச டீநன) நீரைச் செலுத்தி மிகுதி தூரத்திற்கு குழாய்களில் நீரைச் செலுத்தி எல்ஜின் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மின் உற்பத்தி நிலையத்திற்கு நீரை கொண்டு வந்து சேர்ப்பது இத்திட்டத்தின் இலக்காக அமைந்தது.

இதற்கு தொழில்நுட்ப ஆலோசனைகளையும் திட்ட முன்மொழிவையும் தனியார் நிறுவனமொன்றிடம் பெற்று சிரமதானம் மூலம் 70மூ வீதமான பணிகளை தற்போது மக்கள் நிறைவேற்றியுள்ளனர். இச்சிறிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 25 ஆறு மின்சாரம் பெற எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மின்சாரம் எல்ஜின் தோட்ட 125 வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட ஏற்பாடாகியுள்ளது. இத்திட்ட பணிகள் கடந்த 4 வருடங்களில் மக்களின் உழைப்பும் பெருந்தொகையான பணமும் இதற்காக செலவிடப்பட்டுள்ளது. 300 தொழிலாளர்கள் 500 நாட்கள் இதற்காக சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை நிறைவேற்றப்பட்ட பணிகளுக்காக கிட்டதட்ட 45 லட்சம் பணத்தொகை செலவிடப்பட்டது

நன்றி - வீரகேசரி

Tuesday, December 1, 2009

அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்கள்
வேதனை தரும் மலையகத்தின் நிலை


மலையகப் பாடசாலைகளில் மாணவர் தொகை வெகுவாக வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்னும் பத்தாண்டு காலப்பகுதியில் மாணவர் தொகை 40,000 ஆல் வீழ்ச்சியடையும் எனும் அதிர்ச்சித் தகவலை கல்வித் திணைக்களங்களின் மூலமாக அறிய முடிகின்றது.


மலையகம் கல்வியில் வீறுகொண்டு எழப் புறப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மாணவர்கள் தொகை இவ்வாறு வீழ்ச்சியடைவதற்கான காரணம் என்ன? என ஆராய்ந்து பார்த்தபோது கிடைத்தத் தகவல்கள் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவுள்ளன.

பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள துரித சரிவுகள், மாணவர்களின் இடைவிலகல் என்பன இதற்கான காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன. மலையகம் என்னதான் கல்வியில் கரிசனையோடு புறப்பட்டாலும் மறுபுறம் வறுமை எனும் கொடூரப்பிடி அவர்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவு மலையக பெருந்தோட்டப்புற பகுதிகளிலுள்ள சிறுவர்கள் கொழும்பு மற்றும் வெளியிடங்களில் வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றது.

பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களில் பெருந்தொகையானோர் தோட்டப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருக்கின்றனர்.

தோட்டப்புறங்களில் கல்விக்கான வளங்கள் இல்லாமை, பொருளாதார நெருக்கடி, பெற்றோரின் அறியாமை என்பன மலையக சிறுவர்களின் கல்விக்கு முட்டுக்கமடடையிடுவதுடன் சிறுவர் தொழிலுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது.

இதனால் மலையக கல்வி மாத்திரமல்லாது பெருமளவான பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த மோசமான நிலையிலிருந்து மலையகத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் அவசியமும் மலையகத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் உண்டு.

முதலில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து உணர்வது அவசியமாகிறது. பதினான்கு வயதுக்குக் குறைவான எவரையும் வேலைக்கு அமர்த்துவது குற்றம் என்ற சட்டம் நடைமுறையில் இருக்கின்றது. இவ்வாறு இருந்த போதிலும் பெருந்தோட்டப் புறங்களிலிருந்து 10,12 வயது சிறுவர்களையே வேலைக்கு வெளியிடங்களுக்கு அனுப்பும் கொடுமைகளை காணமுடிகிறது.

அது மாத்திரமல்லாது அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள் பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தப்படுகின்றனர்.

பிள்ளைகள் கல்வி கற்கும் வயதில் அவர்களது கல்வி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை படிக்க வைக்க வேண்டும். கல்வியறிவு மூலம் பிள்ளைகள் உலகத்தை அறிந்து கொள்வதுன் நற்பிரஜைகளாகவும் உருவாகின்றனர்.

அத்துடன் கல்வித் தரத்தை அடைவதன் மூலம் வேலை வாய்ப்பும் கிடைக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் தொழிலாளியாக வேலை செய்யும் நிலைமையும் இதனால் மாற்றம் ஏற்படுகின்றது.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவதானத்துடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.

உங்களது பிள்ளைகள் தொழில் செய்யும் இடங்களில் அவர்களுக்கு வயதுக்கு மீறிய வேலை வழங்கப்படுகின்றது. போதிய ஓய்வு கொடுப்பதில்லை. சில இடங்களில் முறையாக உணவு வழங்கப்படுவதில்லை. அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் கொடுக்கப்படுவதில்லை. அதிலும் ஒரு பகுதியை தரகர்களே பெற்றுக் கொள்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகளால் சிறுவர்களின் உடலும், உளமும் பாதிப்புக்குள்ளாகிறது. ஆத்துடன் எதிர்காலத்தில் அவர்களும் வன்முறையாளர்களாகவோ தவறான நடத்தையுடையவர்களாகவோ மாறிவிடும் அபாயம் உண்டு.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிச் சிந்தித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். ஏனைய இனத்தவர்கள் போல உங்கள் வாழ்வில் உயர்வு ஏற்பட வேண்டுமாயின் கல்வியில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.

இதேவேளை மதுபாவனையை மட்டுப்படுத்தி பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கூடியளவு அக்கறை செலுத்த வேண்டும்.

மலையகத்தில் அவதானிக்கக்கூடிய வேதனை தரும் விடயமொன்றையும் இங்கு சுட்டிக்கர்ட வேண்டியுள்ளது. அதாவது சட்ட விரோத கசிப்பு காய்ச்சல் நடவடிக்கைகளிலும் சில சிறுவர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதாகும்.

பாடசாலை செல்லும் மாணவர்கள் சட்ட விரோத போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர் என்பது கசப்பான உண்மை. இவ்வாறு சிறுவர்களின் எதிர்காலம் பாழடைவதற்கு பெற்றோர்களும் உடந்தையாக இருக்கின்றனர். இதனால் இது தொடர்பாக எம்மால் எவ்வித நவடிக்கைகளையும் எடுக்க முடியாதுள்ளது என சமூக முக்கியஸ்தர்கள் கையை விரிக்கின்றனர்.

பெற்றோர்கள் தரப்பிலும் நியாயமில்லாமல் இல்லை. அவர்களின் அறியாமையும் வறுமை நிலையும் இந்த நிலைமைக்கு காரணம் என்று கூற முடியும். எது எப்படியோ மலையகத்தின் நிலை உயர இவ்வாறான முட்டுக் கட்டைகளை களைய அனைவரும் முன்வர வேண்டியது அவசியம்

சிவா ஸ்ரீதரராவ்
இறக்குவானை

மலையக சமூக முன்னேற்றத்துக்காக போதை அரக்கனை ஒழிப்போம்!


மனிதனது இயல்பான நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய போதைவஸ்துக்களாக மதுபானம், கசிப்பு, கள், புகையிலை, பீடா, பாபுல், மயக்கமூட்டும் பாக்கு வகை, தூள் வகைகள், மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய வில்லை வகைகள், திரவங்கள், நாட்டு வைத்திய முறைகளில் தயாரிக்கப்படுகின்ற மாத்திரை வகைகள் என்பன உள்ளன. அதனைவிட தீவிரம் கூடிய போதைவஸ்து வகைகளான ‘கஞ்சா, ஹெரோயின், அபின், மர்ஜுவானா போன்றன உள்ளன.

இவ்வாறான போதையூட்டும் பொருட்கள், தீவிரத்தன்மையான போதைவஸ்துக்கள் என்பன இலங்கையிலும் பாவனையில் உள்ளன. இவற்றைப் பாவிப்போர் நாடெங்கிலும் பரந்து வாழ்கின்றனர். இவ்வாறு போதைக்கு அடிமையான நபர்களால் அவருக்கும் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நாட்டுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்ச்சி, சமூக முரண்பாடுகள், வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினைகள் என்பவற்றுக்கும் போதைப் பொருட்கள் காரணமாக அமைகின்றன.

இவற்றின் பாரதூர விளைவுகளை அறிந்தே ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக ‘மதுவுக்கு முற்றுப்புள்ளி’ என்ற செயற்றிட்டமும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் வளர்ந்தோர்களை விட இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனைப் பழக்கம் அதிகம் உள்ளது. பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் போதைவஸ்துப் பழக்கம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகரப் பிரதேசங்களில் மாத்திரமன்றி கிராமங்களிலும், பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் இந்நிலை காணப்படுவதாக அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன. இதனை விரைவாகத் தடுக்காதுவிடின் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெருந்தீங்குகளை யாராலும் தடுக்கமுடியாது

எனவே இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை சகலரும் மேற்கொள்ள வேண்டும்.
மதுப் பாவனையினால் மலையகத் தோட்டங்களில் சமூகப் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. அங்கு மது அரக்கன் ஒழிக்கப்படுவது அவசியம். மலையகத்தை மதுவை ஒழிக்கும் முயற்சிகளாக பொலிஸ்நிலைய அதிகாரங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் தெளிவூட்டல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆகவே மாணவர்களும் இவற்றின் பாதக விளைவுகளை அறிந்து கல்வியில் கூடிய கவனத்தை செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தனது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு பிரயோசனமற்ற பிரஜையாக வாழ்வதில் எவ்வித பயனும் தனக்கோ பிறருக்கோ ஏற்படப் போவதில்லை.

த. குவேனி


நன்றி- தினகரன் வாரமஞ்சரி

Saturday, November 28, 2009

மலையகத்தை அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்!

மேலைநாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த பன்றிக் காய்ச்சல் இப்போது இலங்கையில் மலையகப் பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக மத்திய மாகாண பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

இதேவேளை சில பிரதேசங்களில் முன் பள்ளிகளும் கூட மூடப்பட்டுள்ளன. நுவரெலியா, கண்டி, பேராதனை, நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் 200 இற்கும் அதிகமானோர் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பன்றிக்காய்ச்சல் மேலும் பரவாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தோடு பொது மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் எனவும் சுகாதாரத் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல் வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டைவலி, சோர்வு உடல்வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும். இந் நோய்த் தாக்கத்தால் உயிரிழப்பும் ஏற்படும்.

இந்த நோய் ஏற்பட்டுள்ளதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனைகளின் பின்னரே நோயை உறுதிப்படுத்த முடியும். நோய் தாக்கியவரிடமிருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும்.

சளி மூலம் அதிகளவில் பரவும். நோய் தாக்கியவரின் உமிழ் நீர் அல்லது சளியை தொட்டுவிட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும்.

எனவே நோய் தாக்கியவரை தனிமைபடுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும். இந் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் தவறாது வைத்திய பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

Friday, November 27, 2009

நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் கிட்டும் : பசில் ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அதிக கூடிய வாக்குகள் கிடைக்கும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ கொட்டக்கலை காங்கிரஸ் தொழில்நுட்ப வளாகத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்தின் கடந்த நான்கு வருட ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமையை நீங்கள் கண்கூடாக பார்க்கின்றீர்கள். ஆமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைகளுக்கமைய மலையக மக்களுக்கு மேலும் பல சேவைகளை நாம் செய்து வருகின்றோம்.

வடக்கில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த போது இந்திய மக்கள் எமது நாட்டின் மீது தப்பான அபிப்பிராயத்தையே கொண்டிருந்தனர். இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசி இந்திய நாடாளுமன்ற குழுவினரை இலங்கைக்கு வரவழைத்தார்.

இவ்வாறு வருகை தந்த குழுவினர் வடக்கின் இடம்பெயர் முகாம்களுக்கும் சென்று அங்கு தங்கியிருந்த மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கும் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்தனர். இதன் மூலமாக இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு தொகை வீடுகள் அமைத்து கொடுப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன் இந்திய நாடாளுமன்ற குழுவினரின் மலையக விஜயத்தின் ஊடாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கேற்ப தோட்டப் பகுதி மக்களுக்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வீடுகள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெருந்தோட்ட மக்கள் அளப்பரிய சேவையாற்றி வருகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த சிந்தனையில் பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளார்.

கடந்த காலங்களில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு கணிசமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

எனவே எதிர்வரும் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து கூடுதலான வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார். இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த். சி.பி.ரத்நாயக்கா, முத்துசிவலிங்கம், எஸ் ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண கல்வி அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Thursday, November 26, 2009

தென் மாகாண தோட்டப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை – ஆளுநர்

13வது அரசியல் யாப்பிற்கு இணங்க கிடைக்கப்பெற்ற அதிகாரங்களின்படி பாதுகாப்பு அதிகாரங்களைக் கொண்டவர்களுடன் இணைந்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டுமென தென்மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய மகாணசபையின் கூட்டத்தில் கொள்கை விளக்கவுரை ஆற்றும் போது தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றும் போது நோயார்களுக்கான சிகிச்சை சேவைகளின் கீழ் இரசாயண வசதி கூடங்களிலுள்ள ஆஸ்பத்திரிகளை இனங்கண்டு மேம்படுத்தவும், சுற்று சூழல்களை பவித்திரமாக வைத்துக் கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வைத்தியர்களுக்காகவும், தாதியர்களுக்காகவும் ஆஸ்பத்திரி அருகே விடுதிகள் நிறுவுதல், விசர் நாய்கடி நோய் ஒழித்தல், டெங்கு, மலேரியா ஒழித்தல், தேசிய வேலைத்திட்டங்களின் கீழு; நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விசேடமாக தோட்ட மக்களின் சுகாதார திட்டங்களை மேம்படுத்த சுகாதார வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

தென் மாகாணத்தில் காலி, மாத்தறை மாவட்டங்களில் வாழ்கின்ற தோட்ட மக்களின் தேவைகளை இனங்கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆவண செய்தல்,

தோட்ட மக்களுக்கு சகாதார வசதிகளை அளித்தல் தோட்டங்களை சார்ந்த பகுதிகளுக்கு பாதைகளை அமைத்தல் போன்ற திட்டங்கள் தோட்டக்கட்டமைப்பு விடயங்களில் பங்களிப்பு செய்யப்பகிறது. அதேபோல்இதுவரை இனங்காணாத தோட்டக் குறைபாடுகளை 2010ம் ஆண்டில் அவைகளை பூரணத்துவப்படுத்தி அம் மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்தல்.

Sunday, November 22, 2009

வளர்ச்சி கண்டுவரும் மலையக கல்வி

மலையகம் கல்வித் துறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இலங்கையின் கல்வி வரலாறு பல தசாப்தங்களை கடந்துள்ளது. குருகுலக் கல்வி முதல் போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற வெளிநாட்டவர்கள்
இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலினார்கள். இலங்கையில் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1945 ஆம் ஆண்டு இக் கல்வி முறைமையில் ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. 1946 ஜூன் மாதத்தில் ‘இலவச கல்வி சட்டம்’ அமுல்படுத்தப்பட்டது. 1951 இல் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 6 வயது முதல் 16 வயது வரையான எல்லா பிள்ளைகளும் கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும் என்ற சட்டமும் அமுலுக்கு வந்தது.
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கல்வியானது மலையக மக்களுக்கு கிடைப்பதற்கு 30 வருடங்கள் சென்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 03 தசாப்தங்களுக்கு பின்னரே தோட்டப் பாடசாலைகள் அரசுடைமைகளாக்கப்பட்டன.
ஏனைய சமூகங்களுக்கு கிடைத்த கல்வி வாய்ப்புக்களை 30 வருடங்களின் பின்னரே நோக்கவேண்டும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட மலையகச் சமூகம் பல வழிகளாலும் பல துறைகளாலும், தொழில் துறை ரீதியாகவும், கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்களாலும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளாலும் மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது.
பாடசாலைக்கு மாணவர் அனுமதி, பெற்றோரின் பங்களிப்பு, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நிலை போன்றவற்றை சுட்டிக் காட்டலாம். இன்னும் 2ம் தர கல்வியை உயர்த்த வேண்டும். அத்தோடு உயர்தர கல்வி பெறுபேற்றையும், பல்கலைக்கழக அனுமதியையும் அதிகரிக்க கூடிய வகையில் வேலைத்திட்டங்களை அமைச்சு மட்டங்களில் முன்னெடுக்க வேண்டும்.
இன்று மலையகத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் ஆசிரியர்களாக, விரிவுரையாளராக, எஞ்சினியர்களாக, வக்கீல்களாக, நிர்வாக உத்தியோகத்தர்களாக, அதிபர்களாக, கல்வி சேவை உத்தியோகத்தர்களாக, கல்வி அதிகாரிகளாக, அரசியல்வாதிகளாக (அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களாக உள்ளார்கள்) வெளிநாட்டு தூதுவர்களாக, உலக வங்கி நிறுவனங்களில் வேலை செய்பவர்களை, அரச சார்பற்ற நிறுவனங்களை கொண்டு நடத்துபவர்களாக, உயர் அதிகாரிகளை, பொலிஸ் உத்தியோகஸ்தர்களாக, வர்த்தகர்களாக, உழைப்பாளர்களாக (தோட்ட தொழிலாளர்கள்) இன்று காணப்படுகின்றனர்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கூட வருடா வருடம் தேசிய மட்ட புள்ளிகளோடு போட்டி போடுகின்றார்கள். மாவட்ட, மாகாண, தேசிய மட்டத்தில் 2ம், 10ம் இடங்களையும் கூட பெற்றுக் கொள்கின்றார்கள்.
மலையகப் பிரதேசத்தில் இருந்து இன்று பெரும்பாலான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இம்முறையும் நுவரெலியா மாவட்டத்தில் 185, 181 புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் இருக்கின்றார்கள்.
இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நாங்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். க. பொ. த. சாதாரண பரீட்சையில் கூட 9 ‘ஏ’ சித்திகளை அதிகமான மாணவர்கள் பெற்றுக் கொள்வதைக் காணலாம். தற்போது உயர் தரத்திற்கு வரும் மாணவர்கள் கலை, வர்த்தகத்தை தெரிவு செய்வதை விட விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கு செல்வதே அதிகமாக உள்ளது.
உயர்தரப் பரீட்சையில் கூட கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் 3 ‘ஏ’ சித்திகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் மிக அதிகமாக உள்ளார்கள். மலையகத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் விகிதம் கூடியுள்ளது.
அண்மையில் ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் உலக ரீதியில் 5 ம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் கூட மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலகட்டத்தில் மலையக பிரதேசத்தில் ஆசிரியர்கள் கூட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று மலையகத்தில் பிறந்து வளர்ந்து இப்பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்றவர்களே ஆசிரியர்களாக அதிபர்களாக, விரிவுரையாளர்களாக, ஆசிரிய ஆலோசகர்களாக, பட்டதாரி ஆசிரியர்களாக () உத்தியோகத்தர்களாக கல்விப் பணிப்பாளர்களாக, ஆலோசகர்களாக உருவாகியிருப்பது மலையகத்தின் கல்வி வளர்ச்சியை ஒரு படி மேல் உயர்த்தி காட்டுகிறது.
எமக்கு கிடைத்த மனித பௌதிக வளங்களை பயன்படுத்திக் கொண்டு இச்சமூகம் இப்போது ஓரளவு கல்வித் துறையில் வளர்ந்து வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
யார் எந்த வகையில் விமர்சனங்களை முன்வைத்தாலும் பல அமைச்சர்களின் அயராத உழைப்பினால் பாடசாலை கட்டடங்களில், ஆசிரியர் நியமனங்களும் பௌதிக வளங்களும் கிடைத்திருக்கின்றன. இவற்றை நாம் போராடியே பெற்றுள்ளோம். பிரதிக் கல்வி அமைசச்ர், மாகாணக் கல்வி அமைச்சர் பதவிகளைப் பெற்றதும் கல்வி மறுமலர்ச்சியின் வெளிபாடே ஆகும்.
எனவே கல்வி வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்ற மலையகம் இன்று பூரணமாக வளர்ச்சி அடைய நீண்டகாலம் காத்திருக்க தேவையில்லை. மலையகம் கல்வியில் முன்னேற முடியும்.
முன்னேறும் இன்றைய ஆசிரியர்களின் அயராத உழைப்பின் மூலம் எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும்.மலையக அமைச்சர்கள், உறுப்பினர்கள் தொழிற் சங்கங்கள் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கான வேலைத் திட்டங்களை கட்சி, இனம், மதம், சாதி பார்க்காமல் மலையகத்தின் கல்வி வளர்ச்சியே எமது சமூகத்தின் வளர்ச்சி என்ற தொனிப் பொருளில் சேவையாற்ற வேண்டும். தற்போது பல அமைச்சர்கள் இவ் விடயத்தில் அதிக கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.
மலையகப் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதன் மூலம் மலையகத்தின் கல்வி அபிவிருத்தியை பிரசித்தப்படுத்தலாம். இதற்கு உயர் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஒரே நோக்கோடு செயற்பட வேண்டும்.
இன்று இருப்பதை விட பல மகா வித்தியாலயங்கள், மத்திய மகா வித்தியாலயங்கள், தேசியப் பாடசாலைகள், கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் மலையகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வியியல் கல்லூரிகளை மேலும் மலையகத்திற்கு நன்மை தரக்கூடியவாறு பல பயிற்சி நெறிகளையும் ஆரம்பிக்க வேண்டும். மலையகத்திற்கென வாசிகசாலை, அருங்காட்சியகம், கணனி வளநிலையம், ஆய்வு கூடங்கள், தகவல் மையங்கள் என்பன கல்வித் துறையை மையப்படுத்தி உருவாக்க வேண்டும். குறிப்பாக மலையகத்தில் இருந்து கற்று இன்று உயர் ஸ்தாபனங்களில் இருப்பவர்களின் சேவையை மலையகம் முழுமையாக பெறும் போது எமது கல்வி வளர்ச்சி வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி.
எமது, மக்களையும், ஆசிரியர்களையும், அதிபரையும் குறைகூறுவதை விட்டுவிட்டு செயற்பாட்டில் இறங்குவோம். அதற்காக சிறப்பாக சேவை செய்பவர்களையும், சிறந்த பெறுபேற்றை எடுத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்க வேண்டும். ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் உச்சாகப்படுத்த வேண்டும்.
வருடா வருடம் இவர்களை உற்சாகப்படுத்தல் செயற்திட்டங்களை உருவாக்க கல்வித் திணைக்களங்கள் கல்வி அமைச்சு உட்பட கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பும் முன்வர வேண்டும்.
பரீட்சை பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு பாடசாலை மட்டத்திலும், மாவட்ட, மாகாண மட்டத்திலும் (6 – 9) தேசிய மட்டத்திலும் பரீட்சைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு செயலமர்வுகளை செய்வதோடு மாணவருக்கும் வழிகாட்டல் கருத்தரங்குகளையும் பரீட்சைகளையும் நடத்தி பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை மட்டத்தில் மீள் பரிசீலனை செய்யப்பட்டு குறைபாடுகள், பிரச்சினைகள் காணப்படின் நிவர்த்தி செய்யவேண்டும். பாடசாலை சமூகத்தோடு தொடர்புடைய (SDS) பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள், அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் சேவைகளையும் பெற்றுக் கொள்வதோடு JSA SUBJECT AD வளவாளர்கள், கற்றோர்கள் நிபுணர்களின் சேவைகளை கூடுமானவரை பெற்றுக்கொள்ள வேண்டும். சாதாரண தரத்திற்கு ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள் போன்றோரை பாடசாலைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரா. சிவலிங்கம்
நன்றி- தினகரன் வாரமஞ்சரி