Sunday, June 17, 2018

இரத்தினபுரியில் மண்சரிவு அபாயத்தில் கலபட தமிழ் வித்தியாலயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழையின் காரணமாக கலபட தமிழ் வித்தியாலம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் தினேஸ் தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி கலபட பிரதான வீதியில் இருந்து 300 மீற்றர்  உயரத்தில்  அமைந்துள்ள  கலபட தமிழ் வித்தியாலய சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு பாடசாலைக்கருகில் இருக்கும் மண் திட்டுக்கள் தொடர்ந்து இடிந்து வருவதாகவும் தெரிவித்தார். 

மேற்படி பாடசாலையில் முதலாம்; வகுப்பு தொடக்கம் ஒன்பதாம் வகுப்புவரை 162 பாடசாலை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு அதிபர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

மேற்படி பாடசாலையில்  எந்த நேரத்திலும் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மழை காலங்களில் பாடசாலையை நடாத்த முடியாத சூழ்நிலையால் மழை காலங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும் தவிர்த்து வருகின்றார்கள்.

சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் பாடசாலை அமைப்பதற்கு பாதுகாப்பான இடத்தில் காணி கிடைக்காத காரணத்தால் மேற்படி பாடசாலையை அமைப்பதற்கு அப்புகஸ்த்தன்ன தோட்ட கம்பனிக்கு சொந்தமான கலபட தோட்டப் பிரிவில் தோட்ட கம்பனி காணி வழங்கப்பட்டிருந்தது. எனினும் M.B.R.O பரிசோதனையில் அந்த காணியில் பாடசாலை அமைப்பதற்கு தகுதியற்றது என தெரிவிக்கப்படுகிறது.

எனவே மேற்படி பாடசாலை அமைப்பதற்கு தேவையான காணியை பெற்றுதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் மேலும்  தெரிவித்தார்.