Tuesday, August 11, 2015

மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய சம்பளம் இல்லை

1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி முதல் 16ம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் 4ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததால், அப் பேச்சுவார்த்தையிலிருந்து இ.தொ.கா. வெளிநடப்பு செய்ததுடன் ஜூலை 6ம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தது.

இதற்கமைவாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக் காலப் பகுதியில் வழமையாக எடுக்கும் கொழுந்தின் நிறைக்கு பதிலாக 3 கிலோ கிராம் கொழுந்தே எடுத்தனர். இது தோட்ட கம்பனிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தோட்ட அதிகாரிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தொடங்கினர்.

இருதரப்பு போரட்டங்களும் நீடித்ததில் எடுக்கப்பட்ட கொழுந்துகள் பிரயோசனமற்ற நிலையில் குப்பைகளில் கொட்டப்பட்டன.

நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும் 23 கம்பனிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 15ஆம் திகதி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தையில் மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய வேதனத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா வலியுறுத்தியது.

இப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தேர்தலுக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ´இம் மாத வேதனம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுள்ளதாகவும் மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய வேதனத்தை தவிர்த்தே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தமது பிள்ளைகளை வழியனுப்புவதற்கு கூட பணம் வழங்க முடியாத நிலையில் அவல வாழ்வை எதிர்கொண்டுள்ளதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.  சில தோட்டங்களில் இன்று (10) மாதாந்த சம்பளம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு இம்முறை சம்பளம் 40 வீதம் குறைவாக காணப்பட்டிருப்பதாகவும் அத்தோடு தோட்ட கம்பனியால் மேலதிகமாக முற்கொடுப்பனவாக 2000 ரூபாய் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட கம்பனி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.