Tuesday, October 7, 2008

தொழிலாளர் வர்க்கத்தினரிடையே இன ஒற்றுமை (1890-1930)

இலங்கை தொழிலாளர் இயக்க வரலாற்றில் இன, மத உணர்ச்சிகளுக்கு மேலாக வர்க்க உணர்வு மேலோங்கி இருந்த காலகட்டங்களும் உண்டு. 19-ம் நூற்றாண்டில் பெருந்தோட்டத்துறை முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் வளர்ச்சியடையத் தொடங்கியது. தொழிலாளர் வர்க்கத்தில் சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்திய தமிழர், மலையாளிகள், முஸ்லீம்கள், மலாயர், பறங்கியர் போன்ற பல்வேறு இனத்தினரும் காணப்பட்டனர். இவர்கள் பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மதத்தினராவர். இது தவிர சிங்களவர், தமிழர், மலையாளிகள், ஆகியோரிடையே சாதி வேறுபாடுகளும் நிலவின. எனினும், ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்ற உணர்வும் குறைந்த சம்பளம், நீண்ட வேலை நேரம், மோசமான வேலை நிலைமைகள் போன்ற பொதுவான ஒடுக்கு முறைகளுக்கு உட்படுபவர் என்ற உணர்வும் யாவரிடமும் நிலவின. மேலும், சுரண்டப்படும் தொழிலாளர் என்ற வகையில் தமது நிலைமைகளை முன்னேற்றுவதற்காகத் தம்மை ஒழுங்கமைத்துப் போராட வேண்டும் என்ற விழிப்புணர்வும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகர்ப்புற தொழிலாளர்களிடையே வளர்ந்திருந்தது. 1890 ம் ஆண்டில் நிகழ்ந்த முதலாவது தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கும் 1930-ம் ஆண்டுகளின் பொருளாதார மந்தத்திற்கும் இடைப்பட்ட 40 ஆண்டுகளில் காணப்பட்ட வர்க்க உணர்வும் தொழிலாளரின் கூட்டு நடவடிக்கையும் குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும். 1880-ம் ஆண்டுகளிலிருந்து இக்காலகட்டம் வரை இனவெறி பிரச்சாரத்திற்கு இடம் தராது மத, சாதி, இன பேதங்களை மறந்து பொருளாதார கோரிக்கைகள் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒன்றிணைந்து போராடினர் இதற்கும் மேலாக பிரித்தானிய முதலாளிகள், உத்தியோகத்தர் ஆகியோருக்கு எதிராக மத்திய தர வர்க்க தேசியவாதிகளின் எதிர்ப்புக்களுக்கு முன்னோடியாகவும் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தினரின் போராட்டம் தீவிர நடைமுறை கொண்டதாகவும் இருந்தது.

இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள் -குமாரி ஜெயவர்த்தனா-

ஒத்துழைப்பு இன்மையால் வீடமைப்புத் திட்டம் நிறைவேறுவதில் தாமதம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புக்களை அமைத்துக் கொடுக்கும் தேசிய வீடமைப்பு திட்;டத்தினரால் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தை நிறைவேற்றும் போது தோட்ட முகாமையாளர் ஒத்துழைப்பு இன்மையாலும் இது தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதில் எவ்வித ஆர்வமும் காட்டுவதில்லை. இவ்வாறு தோட்ட அதிகாரிகளினதும், தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இன்மையாலும் அத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் சிரமமும் தாமதமும் ஏற்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு திணைக்களத்தின் மாவட்ட முகாமையாளர் கே.வி. எல்லாறவ உலக குடியிருப்பு தினமான நேற்று தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் கண்டி மாவட்டத்தில் இந்த ஆண்டு 1242 வீடுகள் நிர்மாணிப்பதற்கான திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 705 வீடுகளுக்கான பணி ஆரம்பமாகின. சுமார் 289 வீடுகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளபோதிலும் தோட்ட உட்கட்டமைப்பின் நிதி கிட்டுவதில் உள்ள தாமதத்தால் தடைபட்டுள்ளன.