Thursday, April 23, 2009

தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கருத்தரங்கு

தோட்டத் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கும் சம்பள உயர்வு தொடர்பாக தெளிவுபடுத்தும் பொது கருத்தரங்கு ஒன்றை எதிர்வரும் 26-04-2009 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பதுளையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஐக்கிய தோட்ட தொழில் சங்கக் கூட்டமைப்பின் உப தலைவர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்
தோட்டத் தொழிலாளர்களின் மிக முக்கிய பிரச்சினையான சம்பள உயர்வு சம்பந்தமாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு போன்றவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. அதேவேளை இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாத தொழிற் சங்கங்கள் ஊடகங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை தெரிவித்த வண்ணமுள்ளன. தற்போது தோட்டங்களில் பல்வேறு தொழிற் சங்கங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சில காலங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பல சங்கங்களும் மறைந்துவிட்டன. தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தொழிற் சங்கங்கள் சம்பள உயர்வு மற்றும் ஏனைய பொதுப் பிரச்சினைகள் சம்பந்தமான கோரிக்கைகளை ஒன்றிணைந்து முன்வைத்தால் நிச்சயமாக வெற்றி காணமுடியும். இதையே பெரும்பாலான தொழிலாளர்கள் விரும்புகின்றனர். இதை விடுத்து பல்வேறு கோஷங்களை கடந்த காலங்களைப்போல முன்வைத்துக் கொண்டிருந்தால் அது தோட்டக் கம்பனிகளுக்கு வசதியாக அமைந்துவிடுவதுடன் அப்பாவித் தொழிலாளர்களையும் பாதித்துவிடும். ஆகவே இவற்றைத் தெளிவுபடுத்தும் இக் கருத்தரங்கில் தொழிற் சங்கத் தலைவர்கள், தோட்டத் தலைவர்கள், தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்புத் தலைவர்கள், சட்டத்தரணிகள், சர்வகலாசாலை விரிவுரையாளர்கள் போன்றோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.