Tuesday, May 26, 2009

அரச பெருந்தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை

அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்வதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொள் வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் கூட்டு ஒப்பந்தம் காலாவதி யானதால் சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுலுக்கு வருவதாகவிருக்க வேண்டும் என்பதையும் முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான தோட்டங்கள் ஆரம்ப காலங்களில் மிகவும் நல்ல முறையில் இயங்கிவந்த போதும் தற்போது முறையாகப் பராமரிக்கப் படாமல் சீரழிந்த நிலையில் அவை தற்போது காடுகளாகியுள்ளன. இத் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களிடமிருந்து மாதாமாதம் அறவிடப் படும் சேமலாப நிதியைக் கூட நிர்வாகங்கள் மத்திய வங்கிக்கு அனுப்புவதில்லை. சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்காலப் பணம் போன்றவற்றை தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற் சங்கங்கள் தொடர்ந்தும் தொழிற்காரியாலயங்களின் மூலம் நீதிமன்றங்களையே நாடவேண்டியுள்ளது.
இதன் காரணமாகத் தொழிலாளர்கள் தங்களின் கொடுப்பனவுகளை காலக்கிரமத்தில் பெற்றுக் கொள்வதில் வீண் தாமததிற்கும் அசௌகரியங் களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடாது. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்து பாதுகா ப்பதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் உரிய முறையில் பெற்றுக் கொடுப்பதற் கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தோட்டங்களை அரச நிறுவனங்களால் முறையாக நடத்த முடியாதென்றால், இவற்றை முறையாக நடத்தக்கூடிய சிறந்த தனியார் கம்பனிகளை இனங்கண்டு இத்தோட்ட நிர்வாகங்களை அவர்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வது உசிதமானதாகும்.
ஏட்டிக்குப் போட்டியான அறிக்கைகள் தொழிலாளர்களுக்கு நன்மையும் இல்லை

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கு மிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு அழுத்தங்களும் போராட்டங்களும் இடம்பெற்ற போதும் முடிவில் அவை புஸ்வானமாகிவிட்டன. ஆனால், ஏட்டிக்குப் போட்டியாக தொழிற்சங்கங்கள் அறிக்கைகளை விடுவதால் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காதது வருத்தத்துக்குரியது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் பி.பி.கந்தையா தோட்ட கமிட்டி தலைவர்கள் மத்தியில் பேசும் போது குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கிய அமரர் எஸ்.நடேசன் சங்கத்தின் தலைவராக விளங்கிய காலத்திலேயே கூட்டு ஒப்பந்தம் தொடர்பான வேலைகள் ஆரம்பமாகின. இரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் நன்மையையும் தீமையையும் கொண்டது.எனினும், அடிமைச்சாசனம்,தீங்கிழைக்கும் மரணசாசனம் என்றெல்லாம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மாற்றீடான சரியான முடிவினை அவை முன்வைக்காதது விசனத்துக்குரியது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகள் கூட்டு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளன. மேலும் வாழ்க்கைச் செலவுப்புள்ளி உயர்வுக் கொடுப்பனவு தோட்டத்தொழிலாளருக்கு வழங்குவது அவசியம் என்பதைக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள தொழிற்சங்கங்களுடன் தொடருகின்றன.இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களினது விலையும் அதிகரித்துள்ளன. தற்போது கிடைக்கும் ஊதியம் எந்த வகையிலும் போதுமானதல்ல.எனவேதான் வாழ்க்கைச் செலவுப் புள்ளியோடு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதை எமது சங்கம் வலியுறுத்துகின்றது என்றார்.