Monday, May 4, 2009

சம்பள உயர்வை வழங்க மறுக்கும் நிர்வாகம் அதிகாரிகளுக்கு மட்டும் உயர்த்துகிறது –முத்துலிங்கம்

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை நஷ்டம் எனக்கூறி வழங்க மறுக்கும் நிர்வாகங்கள் அதிகாரிகளின் கொடுப்பனவுகளையும், ஏனைய சலுகைகளையும் மட்டும் உயர்த்துகிறதென ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஏ.முத்துலிங்கம் பதுளையில் நடைபெற்ற பொதுக் கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே தெரிவித்துள்ளார்.
ஆகக் குறைந்த நாட் சம்பளத்தில் தொழில் செய்யும் பெருந்தோட்ட மற்றும் சிறு தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றனர். ஆனால் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைக்கும்போது தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிப்பது முதலாளிகளின் வழமையான பதிலாக மாறிவிட்டது. தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் நிர்வாகங்கள் தொழிலாளர்களின் சேமநல அபிவிருத்திகள், தோட்ட அபிவிருத்திகள் போன்றவைகளுக்கு எதையும் செய்வதில்லை. உற்பத்தி செய்கின்ற தேயிலைத்தூள், இறப்பர் போன்றவைகளை விற்பனை செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதுடன் வெட்டியும் விற்கின்றனர்.
அடிமட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வுக் கோரிக்கைகளுக்கு மட்டும் நஷ்டம் எனக்கூறித் தட்டிக்கழிக்கின்ற நிர்வாகங்கள் அதிகாரிகளின் கொடுப்பனவுகளை பல்வேறு வழிகளில் உயர்த்தப்படுவதைப்பற்றி எதுவும் சொல்வதில்லை. தொழிலாளர்களின் இன்றைய அவசரக் கோரிக்கையான சம்பள உயர்வு மற்றும் பொதுக் கோரிக்கைகளில் தனித்தனியான கோஷங்கள் முன்வைப்பதை நிறுத்தி, தங்களது தனிப்பட்ட குரோதங்கள் அல்லது அரசியல் தொழிற்சங்கப் போட்டிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்ட கோரிக்கையை முன்வைக்க முன்வரவேண்டும்.
இதன் மூலம் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் பொதுக்கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அத்துடன் தேயிலை, இறப்பர் கைத்தொழில் மூலம் எமது நாட்டிற்கு அந்நிய செலாவணி கணிசமான அளவு கிடைப்பதால் அரசும் கூடிய கவனம் செலுத்தி தோட்டத் தொழிலாளர்களின் வறுமையை போக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சகல மலையகத் தலைமைகளும் ஒன்றுபடவேண்டும் என்றார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியும் -ஆறுமுகன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது ஆறுமுகன் தொண்டமான் பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த முறை சம்பள உயர்வின் போது உங்கள் ஒற்றுமையையும் கட்டுப்பாட்டினையும் இழந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித் தனி போராட்டங்களை மேற்கொண்டீர்கள் இதனால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பாரிய நட்டம் ஏற்பட்டது. மெதுவாக வேலை செய்யும் போராட்டம் காரணமாக, தனி நபர் ஒவ்வொருவரும் தலா 3000 ரூபா வரை மாதாந்தம் இழந்தார்கள். இம் முறை அவ்வாறான போராட்டங்கள் எதனையும் செய்ய வேண்டாம்.
ஒவ்வொருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்கப்படும். இது சம்பந்தமாக பல பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் 13 ஆம் திகதியும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். அதேபோல் சம்பளமும் நியாயமான முறையில் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்