Thursday, January 28, 2016

மலையக மக்களை அடையாளப்படுத்துவதற்கு தவறியதால் விளைவுகளுக்கு முகம் கொடுக்கும் நிலை

மலை­யக மக்கள் உரி­ய­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­த­ப்ப­டா­மையின் கார­ண­மாக பாத­க­மான விளை­வு­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்­தி­ய­வம்­சா­வளி மலை­யக தமி­ழர்கள் என்ற பொது வரை­ய­றையின் மூலம் மலை­யக மக்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நிபுணர் குழு­விலும் இவ்­வி­டயம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரி­வித்தார்.
அதி­காரப் பகிர்வு மற்றும் அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்­தத்­திற்­கான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் முத­லா­வது அமர்வு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மலை­யக புதிய கிராமம், உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சில் இடம்­பெற்­றது.
நிபுணர் குழுவின் தலைவர் பெ.முத்­து­லிங்கம் தலை­மையில் இடம்­பெற்ற இவ்­வ­மர்வு குறித்து கருத்து வின­வி­ய­போதே லோறன்ஸ் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் மலை­யக மக்கள் விழிப்­புடன் செயற்­பட தேவை காணப்­ப­டு­கின்­றது. சீர்­தி­ருத்த விட­யத்தில் எம்­ம­வர்கள் அச­மந்தப் போக்­குடன் நடந்து கொண்டால் பின்னால் வருத்­தப்­பட வேண்­டிய நிலைமை உரு­வா­வதை தவிர்க்க முடி­யாது.
அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த விட­யத்தில் மலை­யகம் சார்ந்த பல்­வேறு கருத்­துக்­க­ளையும் முன்­வைப்­ப­தற்கு தனி­ம­னி­தர்­களும் குழுக்­களும் தயா­ராகி வரு­கின்­றன. இந்­நி­லையில் இது தொடர்பில் ஆராயும் பொருட்டு தமிழ் முற்­போக்கு கூட்­டணி நிபுணர் குழு­வினை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இக்­கு­ழுவின் முத­லா­வது அமர்வு செவ்­வாய்க்­கி­ழமை நிறைவு பெற்­றுள்ள நிலையில் நாங்கள் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் ஆராய்ந்­தி­ருக்­கின்றோம்.
மலை­யக மக்கள் இந்­நாட்டின் மிகப்­பெரும் சக்­திகள். இவர்­க­ளது அடை­யாளம் உரி­ய­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இல்­லா­த­பட்­சத்தில் பல்­வேறு பாதக விளை­வுகள் ஏற்­ப­டு­வ­தனை தவிர்க்க முடி­யாது. மலை­யக மக்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வதில் குழப்­ப­நிலை காணப்­ப­டு­கின்­றது. மலை­யக மக்கள், இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் என்­றெல்லாம் இவர்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றார்கள். இவை மாற்­றப்­பட்டு ஒரே பெயரில் மலை­யக மக்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மலை­யக மக்­களின் உண்­மை­யான சனத்­தொகை 4.3 சத­வீதம் என்று சில ஆவ­ணங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.
எனினும் மலை­யக மக்­களின் தொகை ஏழு சத­வீ­த­மாக உள்­ளது என்­பதே உண்­மை­யாகும். இத்­த­கைய நிலை­மைகள் குள­று­ப­டி­யினை தோற்­று­விக்கும். எனவே மலை­யக மக்­களை பொது­வான வரை­ய­றையின் கீழ் இந்­திய வம்­சா­வளி மலை­யக தமி­ழர்கள் என்­ற­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­வது பொருத்­த­மாகும்.
இந்த அடை­யா­ளத்தின் ஊடாக நாம் எமது பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தோடு மேலும் பல நன்­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும்.
இலங்­கையில் பல்­லின மக்கள் வாழு­கின்­றார்கள். அவர்­களின் உரி­மைகள் யாப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் மேல்­சபை, கீழ்­சபை என்று இரண்டு சபைகள் உரு­வாக்­கப்­ப­டுதல் வேண்டும் என்ற கருத்தும் நிபுணர் குழுவின் அமர்வில் முன்­வைக்­கப்­பட்­டது. இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸும் நிபு­ணர்கள் குழு ஒன்­றினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே கருத்­துகள் ஆரா­யப்­பட்டு பொது­வான இணக்­கப்­பா­டுகள் எட்டப்படுவதும் வரவேற்கத்தக்கதாகும். பல்வேறு தரப்பினரும் முன்மொழிவுகளை அரசியல் யாப்பு சீர்த்திருத்தக் குழுவிடம் முன்வைப்பது அவசியமாகும். ஒத்த கருத்துகளை முன்வைப்பதும் மிகவும் முக்கியமாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழுவில் எதிர்வரும் காலங்களில் மேலும் பல விடயங்கள் இது தொடர்பில் ஆராயப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்

புதிய அர­சியல் யாப்பில் இந்­திய வம்­சா­வளி தமிழர் இருப்­பையும் உரி­மை­களையும் பாது­காப்­பது பற்­றிய ஆலோ­ச­னை­களை முன்­மொ­ழி­வ­தற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் நுவ­ரெ­லியா மாவட்ட அபி­வி­ருத்தி குழுத் தலை­வரும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் செய­லா­ள­ரு­மான ஆறு­முகம் தொண்­டமான் தலை­மையில் நிய­மிக்­கப்பட்ட நிபுணர் குழுவின் புதிய அர­சி­ய­ல­மைப்­பு பற்­றிய குழு நிலை விவா­தங்கள் இடம்­பெற்­றன.
இந்த நிகழ்வு கடந்த திங்­கட்­கி­ழமை வெள்­ள­வத்தை குளோபல் டவர் ஹோட்­டலில் இ.தொ.கா வின் தலைவர் முத்து சிவ­லிங்கம், நுவ­ரெ­லியா மாவட்ட அபி­வி­ருத்தி குழுத் தலை­வரும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் செய­லா­ள­ரு­மான ஆறு­முகம் தொண்­டமான், கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர், மாகாண சபை உறுப்­பினர் சதா­சிவம், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ராதா­கி­ருஷ்ணன் உள்­ளிட்­டோரின் பங்­கேற்­புடன் இடம்­பெற்­றது.
இதன்­போது உரை­யாற்­றிய கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பி.பி.தேவராஜ் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களின் இருப்­பையும் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கு மாவட்ட சுயாட்சி சபை­யொன்று அவ­சியம் என தெரி­வித்தார். இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான தயார்­ப­டுத்­தல்­களை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. காலம்­கா­ல­மாக இந்­திய வம்­சா­வளி மக்கள் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க யோச­னை­களின் போது புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனர் வர­லாற்றை நோக்கும் போது அது புரி­கி­றது.
சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பு முதல் 2 ஆம் குடி­ய­ரசு யாப்­பு­வரை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்­கான பிரத்­தி­யேக சொற்­பதம் கூட பாவிக்­கப்­ப­ட­வில்லை.பல்­லின மற்றும் பல் கலா­சார நாடு என அடை­யா­ளப்­ப­டுத்தும் இலங்கை தமிழ் மக்­களை மாத்­தி­ரமே சிறு­பான்­மை­யாக கருத்­திற்­கொண்­டுள்­ளது என்­பதே உண்மை. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் தமக்­கான தனி­யான அடை­யா­ளங்­க­ளையும் வரலாற்றுப் பாரம்­ப­ரி­யங்­க­ளையும் பேணி வந்­துள்­ளனர் சோல்­பரி யாப்பில் சிறு­பான்­மையின் காப்­பீ­டாக 29 (2) சரத்து அமைந்­துள்­ளது. இதனைத் தழுவி 1972 யாப்பில் அடிப்­படை உரி­மைகள் குறிப்­பி­டப்­பட்­டாலும் அவை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு எந்­த­ளவு பய­னு­டை­யது என்­பதை கடந்த கால அனு­பவங்­களில் உணர முடிந்­தது.
13 ஆம் திருத்தத்தில் மாகா­ண­சபை அதி­கா­ரங்கள் கொண்­டு­வரப்­பட்­டாலும் நுவ­ரெ­லி­யாவில் பெரும்­பான்­மை­யாக வாழும் இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­களின் கருத்துச் சுதந்­தி­ரத்தை பயன்­ப­டுத்த முடிந்­ததா என்­பதும் கேள்­விக்­கு­றியே. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் மலை­யகத் தமி­ழர்கள் உள்­வாங்­கப்­பட்­டாலும் இந்­தியத் தமி­ழர்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்று பிரத்­தி­யே­க­மான வசனம் பாவிக்­கப்பட்டால் சாலச் சிறந்­தது.
தந்தை செல்­வா­வினால் வரை­ய­றுக்கப்­பட்ட வடக்­க­ு, கி­ழக்கு தமி­ழர்கள் மற்றும் சிங்­க­ள­வர்கள் என்ற இரு பிரி­வுகள் மாத்­திரம் உள்­ளதால் வடக்­கு, கி­ழக்­குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வாறு அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்ற கேள்­விக்­குறி எழு­ந்­துள்­ளது. அதனால் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என்ற தனி அடை­யாளம் இருக்­கு­மாயின் வர­வேற்­கத்­தக்­கது.
இதன்­படி 1996 ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்க புதிய அர­சி­யல­மைப்பு சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான மக்­களின் நல­னுக்­காக வரை­யப்­பட்ட முதன்­மை­யான யாப்­பா­கின்­றது. குறித்த யாப்பில் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான சுதந்­திரம் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் அர­சியல் உரி­மைகள் பாது­காக்கப்­ப­டு­வ­தற்­கென விட­யங்கள் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன.
தென்­னா­பி­ரிக்க யாப்பின் மாதி­ரியை உள்­வா­ங­்கி இலங்­கையின் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும் மேலும் அந்த அர­சியல் யாப்பில் உள்ள அடிப்­படை உரிமை பற்­றிய விட­யங்­களும் அவ­சியம் உள்­வாங்­கப்­பட வேண்டும். அதேபோல் கணி­ச­மா­ன அளவு வாழும் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களின் எமக்கு நியாயம் தரும் வகை­யி­லான தேர்தல் முறை­மை­யொன்­றினை உரு­வாக்­கப்­பட வேண்டும்.
வட­ப­கு­தியை கருத்­திற்­கொண்டு மாத்­திரம் முன்­னெ­டுக்­கப்­படும் அதி­கா­ரப்­ப­கிர்வு இனி­வரும் காலங்­களில் இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரையும் கருத்திற் கொண்­ட­தாக அமைய வேண்டும்.
இந்­திய வம்­சா­வளி­யி­னரின் தனிப்­பட்ட கலா­சாரப் பின்­ன­ணியும் பாது­காக்­கப்­படும் வகையில் அரசியலமைப்பு வரையப்பட வேண்டும் என்றார்.

Saturday, January 9, 2016

லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி

தெஹியோவிற்ற, டென்ஸ்வர்த் தோட்ட மக்கள் தமது குடியிருப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் மலையக புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்துடன் இணைந்து உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேற்படி மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சப்ரகமுவ மாகாண கேகாலை மாவட்ட தெரணியகலை டென்ஸ்வர்த் தோட்டத்தில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களாகிய நாம் கடந்த 200 வருட வரலாற்றைக் கொண்டதுடன் தேயிலை உற்பத்தியின் மூலம் அந்நிய செலாவனியை ஈட்டித்தருவதற்கு காரணமாக இருந்த எமது வாழ்வாதாரம் இன்றும் அதே நிலையில் இருக்கிறது. கவனிப்பாரற்ற நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றோம்.

தோட்ட தொழிலாளர்களின் வரலாற்றில் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறோம். அரசியல் ரீதியில் மலையகம் பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் எமது பகுதி மக்கள் அரசியல் அநாதைகளாக வாழ்ந்து வருகின்றனர். பெருந்தோட்டப்புறங்களுக்கு பல நன்மைகள் கிடைத்தும் கூட எங்கள் தோட்டத்திற்கு எந்தவித வசதி வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வரும் நமது தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக்கொண்ட பின்னர் எங்களைக் கண்டுகொள்வதே இல்லை. வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை. எமது தோட்டப்பகுதிகளுக்கு அண்மித்த கிராமப்பகுதி மக்கள் 20 வருடங்களுக்கு முன்னரே தனிவீட்டு உரிமையைப் பெற்றுக் கொண்டார்கள். கிராமப்பகுதிகள் பல அபிவிருத்திகளை கண்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களான நாம் இன்னும் அதே லயன் காம்பராக்களில் சிறிய அறைகளில் குடும்பத்தில் 10 பேருக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஒன்றாக வசிக்கும் துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலை தொடருமானால் எங்கள் எதிர்கால சந்ததியினரின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கப்போகிறது. டென்ஸ்வர்த் தோட்டத்தில் தரம் 7 வரையான ஆரம்ப பாடசாலையும் இருக்கிறது. இப்பாடசாலை எவ்வித அபிவிருத்தியும் இல்லாத நிலையிலேயே இயங்கி வருகிறது. சில தேவைகள் உங்கள் கவனத்திற்கு கீழே குறிப்பிடுகின்றோம். பாடசாலை அபிவிருத்தி, பாதை அபிவிருத்தி, வாசிக சாலை வசதியின்மை, ஆலய திருத்த வேலை, மைதானம் இவ்வாறான பல தேவைகள் உள்ளன. இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றில் சில விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அத்துடன் மிக முக்கிய விடயமான கிராமிய வீட்டு வசதி தொடர்பில் தோட்டத்தில் தற்போது இறப்பர் பால் சேகரிக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு நிலப்பரப்பில் இருந்த இறப்பர் மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அவ்விடத்தில் இடமோ பாதை, பாடசாலை, கோயில் பிள்ளை பராமரிக்கும் நிலையம், மின்சார வசதி, நீர் வசதி போன்ற பல முக்கிய தேவைகளை இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி இருக்கிறது.

அது மட்டுமல்லாது எந்தவித மண்சரிவு அபாயமும் அறிவிக்கப்படாத இடமாக இருக்கின்றது. இவ்விடத்தில் இருக்கும் மரங்களை அகற்றி மீண்டும் இறப்பரோ அல்லது வேறு எந்த பயிர்களோ பயிரிடும் முன்பதாக அந்த இடத்தை பெற்றுக் கொடுத்து லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிவீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்குமாறு பணிவோடும் மிக தாழ்மையோடும் எங்கள் தோட்ட பொது மக்களாகிய நாங்கள் எங்களுடைய கையொப்பங்களை இட்டு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹேவா­ஹெட்­டையில் மண்­ச­ரிவு

அங்­கு­ராங்­கெத்த ஹேவா­ஹெட்டை தோட்­டத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை ஏற்­பட்ட பாரிய மண்­ச­ரிவு, தாழி­றக்கம் மற்றும் பாறைகள் புரண்­டதன் கார­ண­மாக 25 தொழி­லாளர் குடும்­பங்­களைச் சேர்ந்த 65 பேர் பாதிக்­கப்­பட்டு பாது­காப்­பான இடங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

சுமார் ஐந்து ஏக்கர் நிலப்­ப­ரப்பில் இவ்­வாறு நிலத்­தா­ழி­றக்கம், மண்­ச­ரிவு, வெடிப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­துடன் மலை­யி­லி­ருந்து கற்­களும் புரண்டு கொண்­டி­ருக்­கின்­றன. சீரற்ற கால­நி­லை­யுடன் தொடர்ச்­சி­யாக மழை பெய்­வதன் கார­ண­மா­க இடம்­பெ­யர்ந்த மேற்­படி 65 பேரும் ஹேவா ஹெட்டை விவே­கா­னந்தா தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

நேற்­று­முன்­தினம் வியா­ழக்­கி­ழமை பாரிய சத்­தத்­துடன் பாறை ஒன்று உருண்டு வந்­ததைத் தொடர்ந்து நேற்­றைய தினமும் பாராங்­கற்கள் வரத் தொடங்­கின. இதே­நேரம் மண்­ச­ரிவும், நில­வெ­டிப்பும், நிலத்­தா­ழி­றக்­கமும் சுமார் ஐந்து ஏக்கர் நிலப்­ப­ரப்பை ஆக்­கி­ர­மித்­தி­ருந்­த­ன.
நிலை­மை­யு­ணர்ந்து உட­ன­டி­யாக செயற்­பட்ட தோட் ட முகா­மை­யாளர் மக்­களை பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டார். கிராம உத்­தி­யோ­கத்தர் வி. நந்­த­குமார் மற்றும் அங்­கு­ராங்­கெத்த பிர­தேச செயலாளர் பரதிப் சும­ன­சே­கர உள்­ளிட்டோர் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அவ­சர அவ­சிய உத­வி­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

இதே­வேளை சம்­பவ இடத்­திற்கு வரு­கை­தந்­தி­ருந்த இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் கண்டி உப.தலைவர் சின்­னையா வேலு மற்றும் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் மானில பிரதிநிதி கறுப்பையா ராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் நிலைமைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அங்கு தொடர்ந்தும் சீரற்ற காலநிலையே காணப்பட்டு வருகின்றது.

பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் தீ விபத்து

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இன்று பிற்பகல்  12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 16 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.
பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், சிறிது சிறிதாக சேகரித்த தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Friday, January 8, 2016

சாத்வீக போராட்டத்துக்கு தயாராக வேண்டும்

மலையக இளைஞர் - யுவதிகளும் வடக்கு, கிழக்கு இளைஞர் - யுவதிகளும் ஒன்றிணைந்து, உரிமைகளை வென்றெடுப்பதற்கான சாத்வீக போராட்டத்துக்கு தயாராக வேண்டுமெனவும் அதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலவிய யுத்தம் காரணமாக நாம் இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எமது மக்கள் மீது சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலை அன்று இருந்ததன் காரணமாக நாங்களும் மிகுந்த பயத்துடன் வாழக்கூடிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினோம்' என்றார். 'தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. எனவே, இந்த சூழ்நிலையை நாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மலையக இளைஞர், யுவதிகளையும் வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகளையும் ஒன்றிணைத்து சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்து, அதன்மூலம் எமது உரிமைகளைப் பெறுவதற்கு முன்வரவேண்டும். 

மலையக இளைஞர்களுடைய பிரச்சினைகளும் வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுடைய பிரச்சினைகளும் வேறுபட்டவை. ஆனாலும், நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்பட்டால் அனைத்துவிதமான விடயங்களையும்; வெற்றிகொள்ள முடியும்.  நாங்கள் தற்போது சமூக ரீதியாக ஒன்றுபட்டு செயற்படுகின்ற நிலைமை உருவாகியுள்ளது. அதனால், வடக்கு - கிழக்கு இளைஞர்களை இணைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.மலையக இளைஞர்களை ஒன்றிணைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்' என்றும் அவர் கூறினார்.  '

மலையகத்தை பொறுத்த வரையில் எமக்கு கல்வி ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளன. மலையகத்தில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான குறைபாடுகள் நிலவுகின்றன. அவ்வாறான விடயங்களில் வடக்கு, கிழக்கில் இருந்து எமக்கு உதவி செய்ய முடியும். இந்த நாட்டில் நாம் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும்; செயற்பட்டால்  மாத்திரமே எமது இலக்கை அடைய முடியும். மலையகத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்பு தற்போது ஓர் அமைப்பாக அதாவது தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம். 

எதிர்காலத்தில் தமிழ்; தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் கனிந்து வருகின்றது. அதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே, எதிர்கால எமது இளைஞர்கள் ஒற்றுமையாக செயற்படுவதற்காக நாம் இன்று அதற்கான அடித்தளத்தை இடவேண்டும். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழு ஒத்துழைப்பையும் எமக்கு வழங்க வேண்டும்' என அவர் கூறினார்.

மலையக பல்கலைக்கு கெட்டப்புலாவில் காணி

புதிய ஆட்சியில், மலையகத்தின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கவும் மலையகத்தில் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகக் கல்லூரியை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாவலபிட்டி, கெட்டபுலா தோட்டத்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றை நிர்மாணிப்பாதற்காக 5 ஏக்கர் காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நுவரெலியா மாவட்டத்தில் தமிழ், சிங்கள மொழி மூலமான மாணவர்கள், ஆங்கில மொழியில் கல்வி கற்பதற்காக புதிய பாடசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. 2016 தொடக்கம் 2020ஆம் ஆண்டுக் காலத்துக்கான புதிய கல்விக்கொள்கையில், மலையகக் கல்வி அபிவிருத்தி தொடர்பில் தேசிய கல்வி நிறுவனம் புதிய நடைமுறைகளையும் அதற்கான பிரிவையும் ஆரம்பிக்கவுள்ளது' என்றார். 'அதேபோல் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு, ஆளனி பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர்தரத்தில்  கணித, விஞ்ஞானப் பிரிவுகளை அபிவிருத்தி செய்யவும் அதற்கான ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்தாக அவர் மேலும் கூறினார்.

மெத்தகந்த தோட்ட மக்களுக்கு பலவந்தமாக காணிகள்

பலாங்கொடை மெத்தகந்த தோட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் அமைத்துகொடுத்தக்கப்படவுள்ள வீடுகளுக்கு தோட்ட நிர்வாகம் காணிகளை ஒதுக்கி கொடுப்பதற்கு முன்வராவிட்டால் அத்தோட்டத்திலே பலவந்தமாக காணிகளை பிரித்துகொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். 

இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், இரத்தினபுரி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலாங்கொடை பிரதேச செயலாளர் சம்பிக நிரோஷ் தர்மபால, 'மெத்தகந்த  தோட்டத்தில் மண்சரிவால பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் அவர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான போதிய காணிகளை மேற்படி தோட்ட நிர்வாகம் வழங்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க முடியாதுள்ளது' என்றார்.   

'மேற்படி தோட்டத்தில் போதிய காணிகள் கிடைக்குமாக இருந்தால் விரைவில் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும். எனவே காணிகளை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று  அவர் கூறினார். இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே  சப்ரகமுவ மாகாண முதலமைச்சருமான மஹிபால ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'தோட்ட மக்கள்  வியர்வை சிந்தி, அரும்பாடுபட்டு கம்பனிக்கு இலாபத்தை பெற்று கொடுக்கின்றார்கள். ஆபத்தான நிலைமைகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம்  முன்வந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் அதற்கு இடையூராக உள்ளன. 

குறிப்பாக தோட்ட மக்கள் தமக்கான மலசலகூடங்களை அமைத்துகொள்வதென்றாலும் அதற்கான இடத்தை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை என நான் அறிந்துகொண்டேன். பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற தோட்ட தொழிலாளர்களும் மனிதர்கள்தான். அவர்களின் முன்னேற்றத்துக்கு தோட்ட நிர்வாகம் தடையாகவுள்ளது.   தோட்ட மக்கள் குறித்து தோட்ட நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை. இம்மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுக்க தோட்ட நிர்வாகம் முன்வராவிட்டால் மக்களால் நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகள் என்ற வகையில்,  மெந்தகந்த தோட்ட மக்களுக்கு அந்த தோட்டத்திலே காணிகளை பலவந்தமாக பெற்றுகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இதுகுறித்து தோட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்' என அவர் கூறினார்.

Tuesday, January 5, 2016

தோட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொத்­மலை எல்­பொடை தோட்டத் தொழி­லா­ளர்கள் நேற்று திங்­கட்­கி­ழமை ஒரு மணி நேர பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டனர். தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்­கையை குறைக்கும் நட­வ­டிக்­கையை கண்­டித்தே இப் பணிப் பகிஷ்­க­ரிப்பு இடம்­பெற்­றது. எல்­பொடை தோட்டம் நான்கு பிரி­வு­களைக் கொண்ட ஒரு தோட்­ட­மாகும். இத்­தோட்­டத்தின் பரப்பும் அதி­க­மா­னது. இங்கு ஒரு தோட்டப் பிரிவில் 5 தொடக்கம் 6 உத்­தி­யோ­கத்­தர்கள் ஏற்­க­னவே கட­மை­யாற்­றி­யுள்­ளனர். எனினும் அண்மைக் கால­மாக உத்­தி­யோ­கத்தர் குறைப்பு கணி­ச­மாக இடம்­பெற்­றது. இதன் கார­ண­மாக தோட்­டங்களை பரா­ம­ரிப்­பது முதல் நிர்­வாக ரீதி­யான செயற்­பா­டுகள் வரை அனைத்து மட்­டங்­க­ளிலும் திருப்­தியற்ற நிலைமை மேலெ­ழுந்­துள்­ளது.
 
மேலும் தேயிலைச் செடிகள் முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டாமை கார­ண­மாக உற்­பத்தி வீழ்ச்சி நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் சில தேயிலை மலைகள் காடாக இருப்­ப­தா­கவும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் உப தலைவர் எம்.எஸ்.எஸ். செல்­ல­முத்து சுட்­டிக்­காட்­டு­கின்றார். அத்­தோடு கம்­ப­னி­யி­னரின் சில முறை­யற்ற போக்­குகள் எல்­பொடை தோட்­டத்தின் எதிர்­கா­லத்தை கேள்விக் குறி­யாக்கி இருப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரிவிக்­கின்றார்.
 
தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டு­வதன் கார­ண­மாக தாம் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வரு­வ­தாக தொழி­லா­ளர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர். இதனால் பாரிய பின்விளை­வுகள் ஏற்­படும் என்­பதும் அவர்­களின் கருத்­தாக உள்­ளது. இந்­நி­லையில் தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் எண்­ணிக்கை குறைக்­கப்­ப­டு­வதை கண்­டித்து தொழி­லா­ளர்கள் காலை ஒரு மணி நேர பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டனர். இந்­நி­லையில் இ.தொ.கா. வின் உப தலைவர் எம்.எஸ்.எஸ். செல்­ல­முத்து தோட்ட நிர்­வா­கத்­துடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டார். இப் பேச்­சு­வார்த்­தையின் போது விரைவில் கம்­ப­னி­யி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தோட்ட உத்­தி­யோ­கத்­தர்­களின் வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தாக தோட்ட நிர்­வாகம் செல்­ல­முத்­து­விடம் உறு­தி­ய­ளித்­தது. இதனை தொடர்ந்து பணிப் பகிஷ்­க­ரிப்பு கைவி­டப்­பட்­டது. தோட்ட நிர்வாகம் தோட்ட உத்தியோகத்தர்களின் வெற்றிடத்தை விரைவில் உறுதியளித்தவாறு நிரப்பவில்லையாயின் எதிர்காலத்தில் தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியும்

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும். அதனை மறுக்­கின்ற அல்­லது 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்க முடி­யா­தென்றும் தோட்­டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் என்றும் பெருந்­தோட்டக் கம்­ப­னிக்­கா­ரர்கள் கூறு­வார்­க­ளே­யானால் தோட்­டங்­களை ஒப்­ப­டைத்­து­விட்டு தாரா­ள­மாக அவர்கள் வெளியேறிச் செல்­லலாம் என்று உயர் கல்வி, நெடுஞ்­சா­லைகள் போக்­கு­வ­ரத்து அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல புஸல்­லாவை நக­ரத்தை அண்­மித்த பிர­தே­சங்­களில் நடை­மு­றை­ப்ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்கும் அபி­வி­ருத்­திப்­ப­ணிகள் தொடர்­பா­கவும் புதிய பாதை­க­ளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும்  இடம்­பெற்­ற கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே  தெரி­வித்தார். இங்கு மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எஸ். இரா­ஜ­ரட்ணம், நகர வர்த்­த­கர்கள், பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர். அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்கு தோட்டக் கம்­ப­னி­க­ளுக்கு வச­தி­களும் போதிய பணமும் இருக்­கின்­றது. ஆகவே 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும்.
 
அதனால் தொழி­லா­ளர்­களின் காலத்­தையும் நாட்டின் காலத்­தையும் வீணாக்­காமல் கட்­டாயம் 1000 ரூபா சம்­ப­ளத்தை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்டும் என்று கம்­ப­னி­க­ளுக்கு கூறு­கிறேன். தற்போது தோட்­டங்­களை குத்­கைக்கு பெற்று முறை­யாக நிர்­வ­கித்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பளம் வழங்க தயா­ரான நிலையில் பல நிறு­வ­னங்கள் போட்டி போட்­டுக்­கொண்டு இருக்­கின்­றன. அவர்­களைக் கொண்டு தோட்­டங்­களை நிர்­வ­கித்து தோட்ட மக்­களின் வாழ்­வா­த­ாரத்தை உயர்த்த முடியும். தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை தாரா­ள­மாக வழங்க முடியும். அதனை மறுக்­கின்ற அல்­லது 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்க முடி­யா­தென பெருந்­தோட்டக் கம்­ப­னிக்­கா­ரர்கள் கூறு­வார்­க­ளே­யானால் தோட்­டங்­களை கொடுத்­து­விட்டு தாரா­ள­மாக வீடு செல்­லலாம். 
 
நாட்டில் நல்­லாட்சி நடை­பெ­று­வதால் ஊட­கங்­க­ளுக்கு தற்­போது செய்­திகள் இல்லை. முன்னர் அப்­படி அல்ல. தினந்­தோறும் கடத்­தல்கள், கொலைகள். வெள்ளை வேன் கலா­சாரம் என அனைத்தும் இருந்­தன. அப்­போது செய்தி இருந்­தது. தற்­போது அவை இல்லை. 1977 ஆம் ஆண்டு கிளி­நொச்­சியில் விஞ்­ஞான பிரி­விற்­கான பல்­க­லை­க்க­ழக பிரிவு அமைப்­ப­தற்கு அடிக்கல் நாட்டப்­பட்டு 30 வரு­டங்­க­ளுக்கு பின் 2015 ஆம் ஆண்டே திறக்­கப்­பட்­டது. 
 
பல்­க­லை­க்க­ழகம் அமைத்து திறக்க 30 வரு­டங்­க­ளுக்கு மேல் காலம் செல்ல காரணம் யுத்தம் இடம்பெற்று வந்தமையாகும். இதனால் இளைஞர், யுவதிகள் பலர் இறந்துள்ளனர். இவ்வாறான நிலைமைகளை முடிவுக்கு கொண்டு வரும் முகமாகவே ஜனாதிபதியும் பிரதமரும் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழும் புதிய நாட்டை உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.

நன்றி- வீரகேசரி
 

Saturday, January 2, 2016

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது காலத்தின் கட்டாய தேவை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் அவர்களின் சேமநலன்கள் தொடர் பாக  தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு மிடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்படு ம்  கூட்டு ஒப்பந்தம் வரலாற்றில் முதல் தடவையாக ஒன்பது மாதங்கள் கடந்தும் கைச்சாத்திட முடியாத நிலை இன்னும் தொடர்கிறது. 

ஏனைய தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடாமல் புள்ளிவிபரச் சான்றுகளை ஆராயாமல் தன்னிச்சையாக இ.தொ.கா. எடுத்த முடிவின் விளைவுதான் இந்தக் காலதாமதத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. அன்று கம்பெனிகளுக்கு பெருந்தோட்டங்களை தாரை வார்க்கும்போது இ.தொ.கா. வும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், கூட்டுத்தொழிற்சங்கமும் வாழ்க்கைச் செலவுப் புள்ளியை நிறுத்த துணை போகாமல் இருந்திருந்தால் இன்று தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைத்திருக்கும். 

2013 ம் ஆண்டு ஒரு அ.மெ டொலர் 90 ரூபாவிலிருந்து 140 ஆக கூடியுள்ளது.இதன் மூலம் பணவீக்கமும், பணப்பெறுமதி குறைப்பும் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இன்று மக்களுடைய வாழ்க்கைச்சுமை கூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம் பலவிதமான சம்பள முறையை உருவாக்கியுள்ளது. 

தோட்டங்கள் தனியார் மயமாக்களின் பின்னர் வாழ்க்கைச் செலவுப் புள்ளியினை நிறுத்தி முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இச் சம்பள முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. 

1) அடிப்படைச் சம்பளம்
2) பெயரளவிலான சம்பளம்
3) கேள்விக்குட்படுத்தப்பட்ட சம்பளம்
அடிப்படைச் சம்பளம்

2001 தொடக்கம் 2009 வரையும் அடிப்படைச் சம்பளம் 33 வீதமாக கூட்டப்பட்டது. ஆனால் 2011 தொடக்கம் 2013 வரை இது 18 வீதமானது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது இந்த 18 வீதமும் உண்மையான சம்பள உயர்வு அல்ல. இன்று அடிப்படைச் சம்பளமாக அரச துறையில் 20086 +10000 வழங்கப்படுகின்றது. அதேபோல தனியார் துறையில் 9660 + 2500 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஆனாலும் தனியார் துறையினருக்கு இவ் அடிப்படைச் சம்பளம் போதாது எனவும் 15000 ஆக உயர்த்தப்பட வேண்டும் எனவும் போராடுகின்றனர். ஆனால் தோட்ட தொழிலாளர்கள் 20 நாட்கள் வேலை செய்தால் கிடைக்கும் சம்பளமும், 25 நாட்கள் வேலை செய்தால் கிடைக்கும் சம்பளமும் பின்வருமாறு.
450 x 20 = 9000.00
450 x 25 = 11250.00

இதிலிருந்து தெரிவது என்னவெனில் ஏனைய தொழிலாளர்களை விட தோட்டத் தொழிலாளர்களுக்கு 66 வீதம் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. அடிப்படைச் சம்பளத்திற்கு மட்டும்தான் ஈ.பி.எப், ஈ.ரி.எப். வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

சம்பள ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் பின்போடப்பட்டு வருவது கம்பெனிகளுக்கே ஆதாயமாகின்றது. புதிய ஒப்பந்தத்தில் கூட்டப்பட்ட தொகைக்கு ஊழியர் சேமலாப நிதியும், ஊழியர் நம்பிக்கை நிதியும் கிடைக்க வாய்ப்பில்லை. அதே சமயம் கூட்டப்பட்ட தொகை நிலுவை மொத்தமாக கிடைக்கப்போவதில்லை. நிலுவைக்கான வட்டியும் சேர்க்கப்படப் போவதில்லை. இவை கம்பெனிகளுக்கே இலாபத்தைக் கொடுக்கும்.
 
நிறை அதிகரிப்பு

1970ல் 14 இறாத்தல் கொழுந்து பறிக்கவேண்டும் என்றிருந்த நிலை படிப்படியாக 14 கிலோவாக மாறி இன்று ஒரு நாட்சம்பளத்திற்கு 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் 3 முறை கொழுந்து நிறுக்கும்போது ஒவ்வொரு முறைக்கும் 2 கிலோ வீதம் கழிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் 5 கிலோ கழிக்கப்படுகிறது. ஆகவே ஒருநாட் சம்பளத்திற்கு தொழிலாளி ஒருவர் 24 கிலோ கொழுந்தெடுக்க வேண்டியுள்ளது. 

24 கிலோ பச்சை கொழுந்து தேயிலையில் 6 கிலோ கறுப்புத் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தையில் ஒரு கிலோ தேயிலை “டஸ்ட் நம்பர் 1” 600 ரூபாவாக விற்கப்படுகிறது. அதனடிப்படையில் தொழிலாளியொருவர் நாளொன்றுக்கு ரூபா 3600 கம்பெனிகளுக்கு உழைத்துகொடுக்கிறார். சந்தையில் 50 கிராம் தேயிலைப் பொதி ஒன்றின் விலை 55 ரூபாவாகவுள்ளது. அதன்படி ஒரு கிலோ தேயிலையின் விலை ரூபா 1100. பதனிடப்பட்ட பச்சைத் தேயிலை ஒரு கிலோ 1000 ரூபாவிற்கு விற்கப்படுகிறது. பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை 1.8 கிராம் வீதம் பைகளுக்குள் அடைக்கப்படும்போது அதன் எடை 2 கிராமாக மாறுகின்றது.- 

20 பைகளை கொண்ட பெட்டியொன்றின் எடை 40 கிராமாக உள்ளது. இதன் சந்தை விலை ரூபா 150 ஆகவுள்ளது. அதன்படி ஒரு கிலோ (25 பெட்டிகள்) ரூபா 3750இற்கு விற்கப்படுகின்றது. தேயிலை சிறிய பக்கெட் ஒன்று 10 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. இதன்மூலம் ஒரு கிலோ தேயிலை ரூபா 5000இற்கு விற்கப்படுகின்றது. ஏலத்திலோ இடைத்தரகர்களோ இன்றி நேரிடையாக தொழிற்சாலைகளிலும் தேயிலை இதே விலைகளின் அடிப்படையில் விற்கப்படுகின்றது. 

இதனால் கம்பெனிகள் நோகாமலே இலாபம் பெறுகின்றனர் என்பதே உண்மையாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும்போது இதன் விலை 8 மடங்காக அதிகரிக்கின்றது. உற்பத்தியில் மட்டுமல்லாது சந்தைப்படுத்தல், மதிப்புக்கூட்டல் என்ற தலங்களிலும் இதே கம்பெனிகள்தான் பின்னணியில் இயங்குகின்றன. ஆகவே கம்பெனிகளுக்கு நட்டம் என்ற நிலை ஏற்பட வாய்ப்பேயில்லை. தொழிலாளருக்கோ நுகர்வோருக்கோ எவ்வித இலாபமுமில்லை. 

உள்நாட்டில் ஒரு தனிநபர் சராசரி வருடமொன்றிற்கு 1.33 கிலோ தேயிலையை நுகர்கின்றார். இலங்கையின் சனத்தொகை 21 மில்லியன் என எடுத்துக்கொண்டால் 279,300,000 (28 மில்லியன்) கிலோ தேயிலை வருடமொன்றிற்கு விற்பனையாகின்றது. இதன்படி ஒரு கிலோ ரூபா 600 வீதம் எதுவித வரியுமின்றி விற்கப்படுவதன் மூலம் வருடத்திற்கு 16.800 மில்லியன் ரூபா வருவாயாக பெறப்படுகின்றது. மொத்த தேயிலை உற்பத்தியில் இது 10 வீதமும் இல்லை. மிகுதி 90 வீதமும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
 
ஏற்றுமதி வருமானம்

2014ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 11 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. இதில் தேயிலை மூலமாக 1.7 பில்லியன் அமெரிக்க டொலரும், 35 வீதம் இறப்பர் மூலம் 460 மில்லியன் அமெரிக்க டொலரும், 65வீதம் உள்நாட்டு தெங்கு பொருட்கள் மூலம் 538 மில்லியன் அமெரிக்க டொலரும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. இதைத் தவிர குத்தகைக்கு காணி வழங்கல், இரத்தினக்கல் அகழ்வதற்கு குத்தகைக்கு விடுதல், மரங்களை விற்பனை செய்தல், போன்ற பல்வேறு வழிகளிலும் வருமானத்தை தேடுகின்றனர்.

அதுமட்டுமல்ல சாலை ஓரங்களில் தேயிலை நிலையங்களை அமைத்து தேநீர், தேயிலை என வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த விற்பனை மூலம் கிடைக்கும் பணத்திலேயே தொழிலாளருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாக ஒரு முகாமையாளர் கூறினார். ஆகவே நஷ்டத்தில் இயங்குகின்றோம் என்று அங்கலாய்ப்பதில் உண்மையில்லை என்பது தெளிவாகிறது.
 
விடுமுறை நாட்கள்

இலங்கையில் கூடிய நாட்கள் வேலை செய்து குறைந்த சம்பளம் பெறும் ஒரு சமூகமொன்று உள்ளதென்றால் அது மலையகத் தொழிலாளர்களேயாவர். வருடத்திற்கு 4 நாட்கள்தான் சம்பளத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படுகின்றது. இதைத் தவிர ஆகக்கூடிய வேலை நாட்களுக்கு 17 நாட்கள் சம்பளத்துடன்கூடிய போனஸ் விடுமுறை வழங்கப்படுகின்றது. பொதுத் துறையினருக்கு 171 நாட்கள் விடுமுறையும், தனியார் துறையினருக்கு 119 நாட்கள் விடுமுறையும் மாதச் சம்பளத்துடன் அளிக்கப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளருக்கு ஆகக்கூடியது 21 நாட்கள்தான் சம்பளத்துடன்கூடிய விடுமுறை உரித்தாகின்றது. 347 நாட்கள் வேலைக்கு செல்லும் கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. கடின உழைப்பை பொறுத்தவரை ஒரு மனிதனால் 300 நாட்களுக்குகூட முழுமையாக ஈடுபட முடியாது.
 
ஒன்றரை நாட்சம்பளம்

ஒரு சில மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் போயா, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வேலை வழங்கப்படுகின்றது. ஏனைய நாட்களில் 18 கிலோ பறிக்க வேண்டியவர்கள் இத்தினங்களில் 25 கிலோ கொழுந்தெடுக்கவேண்டும். எடை போடும்போது 6 கிலோ கழிக்கப்பட்டால் மொத்தம் 31 கிலோ கொழுந்தெடுக்கவேண்டும். அடிப்படைச் சம்பளம் 450 உம் அதனுடன் அந்தச் சம்பளத்தின் பாதியும் சேர்த்து ரூபா 675 கொடுக்கப்படுகின்றது. வேறு கொடுப்பனவுகள் இதனுடன் சேர்க்கப்படுவதில்லை.

இந்த நாட்களில் இவர்கள் 7.75 கிலோ கறுப்புத் தேயிலையை பெற்றுக்கொடுக்கின்றனர். இதன்மூலம் நிறுவனத்திற்கு ஒருவர் 4650 ரூபாவை ஈட்டிக்கொடுக்கின்றார். மேதின போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட 8 மணித்தியால வேலை, ஞாயிறு ஓய்வு போன்ற நன்மைகளை இழப்பது பற்றி தொழிலாளர்கள் சிந்திக்க வேண்டும். மே தினத்தன்றும் வேலைக்குப் போவது அவர்களின் உரிமையை கேளிக்குள்ளாக்குகின்றது என்பது பற்றியும் அவர்கள் சிந்திக்கவேண்டும்.
 
மேலதிக கொழுந்து

வருமானத்தை கூட்டுகின்றது என்ற எண்ணத்தில் மேலதிகமாக கொழுந்தெடுக்கும் தொழிலாளருக்கு ஒன்று புரிய வேண்டும். வழக்கமாக பெயருக்கு எடுக்கும் கொழுந்துக்கு (18 கி) ரூபா 620 கிடைக்கின்றது. அதன்படி ஒரு கிலோவிற்கு 34.4 ரூபா கிடைக்கின்றது. மேலதிக கிலோவிற்கு ரூபா 20 கிடைக்கின்றது. இதனால் ஆதாயம் பெறுவது கம்பெனிகள்தான். உழைப்பு சூறையாடப்படுவதேயன்றி ஊதியம் அதிகரிப்பதில்லை. புதிய சம்பள ஒப்பந்தத்தில் மேலதிக கிலோவிற்கு 40 ரூபா வழங்கப்படவேண்டும்.
 
ஒப்பந்தங்கள் தேவையா?

சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு உள்வாங்கப்பட்டுள்ளது. 80 வீதமான தொழிலாளர்களால் இதைப் பெற முடிவதில்லை. இதனால் கம்பெனிகளுக்கே ஆதாயமாகும். அத்துடன் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த ஒப்பந்தத்தில் உள்வாங்கப்படுவதில்லை. இதனால் தொழிற்சங்க பிளவுகளும் அவற்றிற்கு இடையே முரண்பாடுகளும் ஏற்படும். தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்துப்போகின்ற நிலைமைக்கும் இது வித்திடுகிறது. ஆகவே இந்த தேவையற்ற அநீதியான முறைமையை தொடர்வது தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதாகவேயிருக்கும். 

தொழிலாளர்கள் இன்று தங்களுக்கு 800 ரூபா அடிப்படைச் சம்பளமும் வாழ்க்கைச் செலவு புள்ளியை மீண்டும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இம்மாதத்திற்குள் இந்த கோரிக்கை உள்வாங்கப்பட்டு தீர்வுகாணப்படாவிட்டால் போராட்டங்களில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டால் சம்பள ஒப்பந்தங்களுக்கு தேவையிருக்காது. விலைவாசி உயரும்போது சம்பளமும் தானாக கூடும்.
 
அரசாங்கம்

நல்லாட்சி, வெளிப்படையான செயற்பாடுகள், கணக்கு காட்டுதல் எனக்கூறிவரும் அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினையில் தலையிட வேண்டும். ஆரம்பத்தில் 19 வீதமான தங்கள் பங்குகளை அரசாங்கம் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது 100 வீதமான பங்குகளை அநேகமான கம்பெனிகள் தம்மகத்தே வைத்துக்கொண்டுள்ளன என்பதுதான் உண்மை. ஆகவே பெருந்தோட்ட சட்டபூர்வமான அதிகாரச் சபை ஒன்றை நிறுவி கம்கெனிகள் கூறும் நட்டம் உண்மையானதா என்று ஆராய வேண்டும். 

இந்தக் கம்பெனிகள் தங்கள் அங்கத்துவ கம்பெனிகளுக்கு கொடுக்கும் நிருவாக முகவர் கட்டணம் எவ்வளவு? உயர் மட்ட அதிகாரிகளுக்கு கொடுக்கும் சலுகைகளும் (வாகனம், பங்களா,வெளிநாட்டுப்பயனங்கள்) சம்பளமும் எவ்வளவு என்பது தொழிலாளருக்கத் தெரியாது. இவை உற்பத்திச் செலவில் காட்டபபடுகின்றது. அதனால் உற்பத்திச் செலவு அதிகரித்தும் இலாபம் குறைக்கப்பட்டும் காட்டப்படுகின்றது என்பதும் அவர்கள் அறியாத ஒன்று. குறுந்தோட்டத் தொழிலாளருக்கு இந்தச் செலவுகள் எதுவுமில்லை.
 
அணுகுமுறையில் மாற்றம் 

 பெருந்தோட்டத்துறையை தக்கவைப்பதானால் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். ஒரு குடும்பத்திற்கு 1ஹெக்டயர் வீதம் 35 வருட குத்தகை அடிப்படையில் தேயிலைக் காணிகள் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலமாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலமாக தற்போது ஒரு ஹெக்டயருக்கு 1300 கிலோ உற்பத்தியை 3000ம் கிலோவாக அதிகரிக்க முடியும். வேற்றுக் காணிகளில மாற்றுப் பயிர்களை பயிர் செய்ய முடியும். 

தனிப் பணப்பயிர் நாட்டில் கால நிலை மாற்றத்துக்கு ஏதுவாகின்றது. அதுமட்டுமல்ல மேல் மண் அரிப்புக்கும் வித்திடுகிறது. இதனால் பாரிய மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் தோன்றுகிறது. பாரிய அளவில் பயன்படுத்தும் கிருமிநாசினிகள், இரசாயன கலவைகள் மண் வளத்தைக் குறைப்பதுடன் நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றது. ஆகவே சிறு தோட்டங்களின் நிருவாக அமைப்பு முறையை அமுல்படுத்தி சம்பளம் முதல் அனைத்து இயற்கை அனர்த்தங்களில் இருந்தும் விடுபட முடியும். 

இது தொடர்பான விழிப்புணர்வை தொழிலாளருக்கு வழங்குவதும் கூட்டுறவு அமைப்பு முறையில் பயிற்சி அளிப்பதும் காலத்தின் தேவையாக உள்ளது. நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி தேர்தல் வரை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் இழுத்தடிக்கப்படு​ேமா என்ற கேள்வி எழுகிறது. அப்படி நடக்குமானால் தொழிலாளர் வெளியிடங்களுக்கு வேலைக்காக செல்லும் நிலையில் அதிகரிப்பு ஏற்படும். 

ஒரு கால கட்டத்தில் வேலைக்கு ஆளே இல்லாத நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு நல்லாட்சி அரசாங்கம் இதில் உடனடியாக தலையிட்டு எதிர்வரும் மாத்திற்குள் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். முன்பிருந்தது போல் முக்கூட்டு ஒப்பந்தமாக, தொழிலாளரின் அருமையையும் காணியின் பெருமையையும் உணர்ந்த ஒப்பந்தமாக வெளிவர நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
நன்றி- தினகரன் வாரமஞ்சரி

Friday, January 1, 2016

அமரர் பெ.சந்திரசேகரனின் 6ஆவது சிரார்த்த தினம்

மலையகத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு மலையக தமிழ் மக்களின் குறிப்பாக, மலையக தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு, காணிப்பிரச்சினை மிக முனைப்பாக பேசப்படுகின்ற கால கட்டமிது. வீட்டுரிமையும், காணியுரிமையும், மலையகத் தலைவர்களினதும், மலையக அமைப்புக்களினதும் மலையக தமிழ் மக்களினதும் ஏகோபித்த கோரிக்கையாக மாறியுள்ள இன்றைய கால கட்டத்தில், மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும், மலையக தலைவர்களின் தனித்துவமானவருமான பெ.சந்திரசேகரனின் 6ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்படுவது சாலப் பொருத்தமானதாகும்.

மலையக வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பாக மலையக மக்களினதும், சந்திரசேகரன் உட்பட மலையக தலைவர்களினதும் கவனம் கடந்த இரு தசாப்தங்களாக முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பான பிரச்சினைக்கு உந்து சக்தியாக அதனை தேசிய, சர்வதேச மயமாக்குவதற்கு மீறியாபெத்தை மண்சரிவு அவலம் மிக முக்கிய உந்துசக்தியாக விளங்கியது. இந்த நிகழ்வே மலையக மக்களின் காணியுரிமை, வீட்டுரிமை தொடர்பாக இன்னொரு பாய்ச்சலை ஏற்படுத்தியது.

முதன் முதல் மலையக தமிழ் மக்களுக்கு மலையக வரலாற்றில், இலவசமாக காணியுரிமையும் வீட்டுரிமையும் வழங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஏற்பட்டது. மீறியபெத்தை அனர்த்தம் மலையக வீடமைப்பில், லயன்முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தோட்ட நிருவாகங்களுக்கும் அரசுக்கும் ஏற்படுத்தினாலும், இந்தத் தோட்டப்புற வீடமைப்பு அல்லது மலையக வீடமைப்பு, காணியுரிமை என்ற விடயத்தில் மலையக மக்கள் முன்னணியினதும், அதன் தலைவர் பெ.சந்திரசேகரன் தனி நபர் பாத்திரமும், ம.ம.முயின் பங்களிப்பும் குறைத்து மதிப்பிடமுடியாதது.

ஆனால் படிப்படியாக இந்த காணியுரிமை, வீட்டுரிமை விடயங்களில் தலைவர் சந்திரசேகரனினதும், மலையக மக்கள் முன்னணியினதும் பங்களிப்பு மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருது புலப்படுகின்றது.

அண்மையில் வீட்டுரிமை, காணியுரிமை தொடர்பான ஒரு ஆய்வு கலந்துரையாடல் நடைபெற்றபோது மலையகத்தின் காணியுரிமை வீட்டுரிமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதிலுள்ள தடைகள், பிரச்சினைகள் மற்றும் கட்டப்பட்ட வீடுகள் தொடர்பாக ஆய்வாளரொருவர் ஆவணத்தையும் சமர்ப்பித்தார். அப்போது மலையகத்தில் மூத்த தலைவர் ஒருவரின் பெயர் சிலாகித்து பேசப்பட்டு, மறைந்த தலைவர் சந்திரசேகரனின் பெயர் குறிப்பிடப்படாத போது, கட்டுரையாசிரியர் அதனை சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட ஆய்வு கலந்துரையாடலை ஒழுங்கு படுத்தியவருக்கு சந்திரசேகரனின் பாத்திரத்தை மறக்க வேண்டிய, மறுக்க வேண்டிய தேவை இல்லாத போதும், ஒரு விடயம் தெளிவாக தெரிகின்றது.

மலையக வீட்டுரிமை, காணியுரிமை விடயங்களில் ம.ம.மு தலைவர் பெ. சந்திரசேகரனின் பெயர் படிப்படியாக மறைந்தும், மறைக்கப்பட்டும் வருகின்றது. மலையக வீடமைப்பில் காணியுரிமையைப் பொறுத்தவரையில், மறைந்த தலைவர் சந்திரசேகரனின் பெயர் மறக்கமுடியாது. அது மலையக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்ட ஒன்றாகும். மலையக வீடமைப்பு பற்றி ஆய்வு செய்யும் போது, எந்த ஆய்விலும் மறைந்த தலைவர் சந்திரசேகரனின் வீடமைப்பு திட்டத்திற்கு நிச்சயமாக ஆய்வில் ஒரு அத்தியாயம் ஒதுக்கப்படும். சந்திரசேகரனின் பாத்திரத்தை புறந்தள்ளிவிட்டு மலையக காணியுரிமை, வீட்டுரிமை வரலாற்றை பார்க்க முடியாது.

ஆகவே அவரது 6வது சிரார்த்த தினம் எதிர்வரும் 2016 ஜனவரி முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும்போது, காணி வீட்டுரிமையில் அவரது பங்களிப்பு நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட மூத்த தொழிற்சங்க, அரசியல்வாதி 1977ம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டுவரை அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் 17 வருடங்கள் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருந்தபோதும், கொட்டக்கலையில் சௌமியபுரத்தில் 20 வீடுகளையும், ரொசால்லை மாணிக்கவத்தையில் 20 வீடுகளுமாக 17 வருடங்களில் 40 வீடுகளையே வீடமைப்பில் இலங்கையில் சாதனை நிகழ்த்தியதாக கூறப்படும் பிரேமதாச ஆட்சிக் காலத்தில் நிர்மானித்திருந்தார். அது மாத்திரமன்றி தோட்டப்புற வீடமைப்பு பற்றி அவருக்கு ஒரு தொலைநோக்கு இருக்கவில்லை.

லயன்முறை ஒழிக்கப்படவேண்டுமென்று பலராலும் வலியுறுத்தப்பட்டபோது அவர் லயன் வீடுகளையும், அதனை சூழவுள்ள காணிகளையும், தோட்டத் தொழிலாளருக்கு உரிமையாக்க வேண்டுமென்று கோரியிருந்தார். ஆனால் 1994ம் ஆண்டிலிருந்து 1998ம் ஆண்டுவரை சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்தில் வீடமைப்பு நிர்மானத்துறை பொது வசதிகள் அமைச்சின், தோட்டப்புற வீடமைப்பு பிரதியமைச்சராக இருந்த மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் கிட்டத்தட்ட 20,000 வீடுகளுக்கான காணிகளை பெற்று தனித்தனி வீடுகள் காணியுரிமை, வீட்டுரிமையுடன் அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.

 எந்த புள்ளிவிபரமுமின்றி எழுந்தமானமாக அவர் இந்த நான்கு வருடங்களில் (94- முதல் 98 வரை) ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிமுடித்தார் என்று துணிந்து கூறலாம். அவர் கட்டிய வீடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

இவ்வீடுகள் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அமைக்கப்படவில்லை. காலி, மாத்தறை, மொனராகலை, பதுளை, கண்டி, மாத்தளை குருநாகல், களுத்துறை, இரத்தினபுரி, போன்ற பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் கூறுவது போல மலையகம் என்றால் நுவரெலியா மாத்திரம் என்று அர்த்தப்படுத்துவது போல் அல்லாமல் பல மலையக மாவட்டங்களில், கொழும்பு மாவட்டத்தில் கூட தோட்டப்பகுதிகளில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. தனது குறுகிய கால வாழ்க்கையில் மூத்த மலையகத் தலைவர்களால் சாதிக்க முடியாதவற்றை சாதித்தவர் மறைந்த தலைவர் சந்திரசேகரனாவார்.

 அமரர் பெ.சந்திரசேகரன் மலையக மக்களின் மிக அடிப்படையான பிரச்சினைககளான காணி, வீட்டுரிமை மட்டுமன்றி, 1948ம் ஆண்டிலிருந்து இழுபறியாக 2003ம் ஆண்டுவரை இழுத்தடிக்கப்பட்ட பிரஜா உரிமை பிரச்சினை தொடர்பாகவும், இந்திய கடவுச்சீட்டு பெற்று இந்தியா செல்ல விரும்பாத ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் கடவுச்சீட்டு பெற்றவர்களின் பிரச்சினையிலும் துணிகரமாக குரல்கொடுத்து வந்தார்.

1991ம் ஆண்டு தலவாக்கலையில் இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களின் கடவுச்சீட்டை சேகரித்து எரித்து, அதன் காரணமாக 02 வாரங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிவந்தது.

இதன் பிறகு நாடற்றோர் பிரச்சினையை தீர்ப்பதிலும் பிரஜா உரிமை பிரச்சினையை முற்று முழுதாகத் தீர்ப்பதிலும் இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டியது, தலைவர் சந்திரசேகரன் மலையக மக்களின் மிக அடிப்படையிலான பிரச்சினைகளில் துணிவாகவும் தீர்க்க தரிசனத்துடனும் செயல்பட்டவர்.

மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் தனி நபர் என்ற அடிப்படையில், மலைய மக்களின் பிரச்சினையில் கூடுதலான அக்கறை கொண்டவராகவும் மலையக மக்கள் முன்னணி என்ற அடிப்படையில், மலையக மக்கள் பிரச்சினைகளில் தலைமைப் பாத்திரம் ஏற்றவராகவும்செயல்பட்டார்.

இதில் மலையக மக்களின் காணி, வீட்டுப் பிரச்சினையும் பிரஜா உரிமை பிரச்சினையும், மிக முக்கியமானது. இதில் வீட்டுரிமை காணியுரிமை பிரச்சினையை பொறுத்தவரையில் மலையகத்தில் ஏனைய தலைவர்களைவிட, முன்னோடியாக செயல்பட்டவர் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. இவ்வகையில் அமரர் சந்திரசேகரனின் பங்களிப்பு காத்திரமானது. 

அ. லோறன்ஸ்