Wednesday, July 28, 2010

தோண்டியெடுக்கப்பட்ட சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

கடந்த 12ம் திகதி வைத்தியசாலையில் தூக்கில்தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட வேலணை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவக்கச்சேரி, ஊhகாவற்துறை யாழ்ப்பாணம், ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் இச் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இப் பெண்ணின் மரணத்திற்கு இதே வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவரே காரணம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லயன் தொகுதி இடிந்து விழுந்ததில் 14 குடும்பங்கள் வெளியேற்றம்


நுவரெலியா, நானுஒயா, டெஸ்போட் தோட்டத்தில் நான்கு லயன் வீட்டுத்தொகுதிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் ஒரு லயன் வீட்டுத்தொகுதியில் உள்ள 14 வீடுகள் முற்றாக சேதமாகியுள்ளதோடு இவ் வீடுகளில் உள்ள அனைவரும் உடனடியாக அகற்றப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நுவரெலியா பிரதேச அனர்த்த நிவாரண முகாமைத்துவத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுடன் உரையாடினர். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இடம்பெற இருப்பதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

நன்றி- தமிழ் மிரர்

Tuesday, July 27, 2010

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது சவாலான விடயம் - ஸ்ரீகுமார்


இலங்கையில் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது பெரும் சவாலாகவே இருக்கின்றது என்று இலங்கைப் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஆலோசகர் எஸ்.ஸ்ரீகுமார் பெருந்தோட்டத் தொழிற்துறையின் இன்றைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நுவரெலியாவிலுள்ள பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிலையக்கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு பேசிய போது தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் பெருந்தோட்டத்துறையானது சம்மேளனங்களின் தலையீடற்ற துறை, தொழிற்சங்கங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கின்ற துறை, கூட்டுப்பேரம் பேசுதலின் அடிப்படையிலான உடன்படிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் துறையாகும்.

1998 ஆம் ஆண்டு முதல் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்படுகின்ற கூட்டு உடன்படிக்கையின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கும் முறை அமுல் படுத்தப்படுகின்றது.

இந்த உடன்படிக்கையின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயமும் ஏனைய சலுகைகள் தொடர்பான விடயங்களும் உறுதி செய்யப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான சம்பளம் 405 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடிப்படைச் சம்பளமாக 285 ரூபாவும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளாக நிபந்தனைக்கு உட்பட்டதாக 30 ரூபாவும் 90 ரூபாவும் வழங்கப்படுகின்றது.

மேலும் தோட்டத்தொழிலாளியின் மாதாந்த வருமானத்திற்கு மேலதிகமாக மாதாந்தம் 1500 ரூபா சலுகையை அனுபவிக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதும் அவர்களை வறுமை நிலையிலிருந்து மீட்பதும் பெரும் சவாலாகவே உள்ளது. எனினும் இலங்கையின் பெருந்தோட்டத்துறையைப் பாதுகாப்பது அனைத்துத்தரப்பினரதும் கடப்பாடாகும் என்றார்

Monday, July 26, 2010

பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் அருகில் அமைந்துள்ள மதுபான நிலையங்கள் அகற்றப்படும் - ஆறுமுகன் தொண்டமான்


மலையகத்தில் வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பில் தமக்கு இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான விடுத்த கோரிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் அகற்றும் நடவடிக்கையை அமைச்சர் முன்னெடுப்பாரானால் அதை வரவேற்பதுடன் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில் 32 வீதம் இலங்கையின் வறுமை நிலையியில் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தை வகிப்பது போலவே மதுபாவனையிலும் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தை வகிக்கிறது. இந்த இரண்டு விடயத்திற்கும் நேரடி சம்பந்தம் இருக்கிறது.

வணக்கஸ்தலங்களுக்கும், பாடசாலைகளுக்கும் அருகாமையில் மதுச்சாலைகளும், மது விற்பனை நிலையங்களும் அமைக்கப்படக்கூடாது என சட்டம் கூறுகின்றது. ஆனால் இச்சட்டம் நுவரெலியா மாட்டத்திலே மீறப்பட்டுள்ளது.

பெருந்தொகையான மதுபான விற்பனை நிலையங்கள், மதுபானசாலைகள் மலையகத்தின் தொழிற்சங்கவாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஊக்குவிக்கப்படுகின்றன என்ற பொதுவான குற்றச்சாட்டும் இருக்கின்றன. உழைக்கும் தொழிலாளியின் உடல் நலத்தையும், உழைப்பையும் இந்த மதுபானம் மலையகத்தில் அட்டையாய் உறிஞ்சுகின்றது.

இதேபோல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, ஆகிய ஏனைய மாவட்டங்களிலும் அதீத மதுபாவனை ஒழிக்கப்படுவதற்கு இது வழிகாட்டும் என்றார்

Sunday, July 25, 2010

பெருந்தோட்ட கல்வி நிலை

பெருந்தோட்டப் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் பெற்றோர்களின் பங்களிப்பும் என்ற ஆய்வு அறிக்கையை மலையகக் கல்வித்துறை சார்ந்தவர்கள் முன்னிலையில் முன்வைத்து அங்கீகாரம் பெறுவதற்கான செயலமர்வு ஹட்டன் சீடா வள நிலையத்தில் இடம் பெற்றது.

மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தச் செயலமர்வுக்கு மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் அனுஷியா சிவராஜா அமைச்சின் செயலாளர் ஷிராணி வீரக்கோன், அமெரிக்காவிலுள்ள டுலேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமரசிங்க, மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சின் ஆலோசகர் எல்கடுவ, ஆய்வு அறிக்கை சமர்ப்பித்த அமெரிக்க டுலேன் பல்கலைக்கழக மாணவர் மைக்கல் போல் மற்றும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பிரிவின் கல்வி அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட கல்வித்துறை சார்ந்த பலரும்கலந்து கொண்டனர். இந்த ஆய்வு மூலம்

மலையகத் தமிழ் மாணவர்களின் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாதது.

பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையிலான இடைநிலைப்பிரிவில் ஏற்படுகின்ற மாணவர் இடைவிலகலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

பெருந்தோட்டப்பகுதி மாணவர்களிடத்தில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான பரிகார திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஆகிய முக்கிய முடிவுகள் வெளிக்கொணரப்பட்டன.

இந்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயற்திட்டமொன்றினைத் தயாரித்து அதனை முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தும் வகையில் அரசாங்கம், மலையக அரசியல் தலைமைகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புக்கள் என்பனவற்றின் பங்களிப்பினைக் கோருவதற்கும் ஆலோசிக்கப்பட்டது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பெயர் மாறியுள்ளதே தவிர அபிவிருத்திப் பணிகள் அப்படியே தொடர்கின்றன- இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளரும், ஊடகப் பேச்சாளரும், எஸ். ஜெகதீஸ்வரன் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த நேர்காணல்.

நேர்கண்டவர்

பி. வீரசிங்கம்


கேள்வி: பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த அரசாங்கத்தில் மலையகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் அமைச்சர்களாக வும் பிரதியமைச்சர்களாகவும் இருந்தி ருக்கிறார்கள். புதிய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்புக்கென தனியொரு அமைச்சு இல்லாததுடன் ஒரு அமைச்சர், பிரதியமைச்சர் என்ற நிலையில் அந்த மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு உட்பட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது, மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றிய நீண்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இ. தொ.கா.வின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் என்ற வகையில் உங்களது கருத்தென்ன


மலையகத்தில் கல்வி: சிலுவை வேண்டாம், சிறகு கொடுங்கள்!

சிக்கல்களும் சவால்களும் நிறைந்த பருவமே இளமைப் பருவமாகும். இந்த இளமைப்பருவம் நெருக்கீடுகளுக்கும் உளக் கொந்தளிப்புகளுக்கும் பாத்திரமானது. தமது வாழ்வில் அடையாளத்தை வெளிப்படுத்த உதவுவது. சிறகு கிடைத்தால் பறப்பது மட்டுமல்ல, சிலுவை கிடைத்தால் சுமப்பதுதான் வாழ்க்கை என்பதை தெளிவு படுத்துவதும் இளமைப் பருவம்தான்.

தமது வாழ்வில் அடையாளத்தை காணக்கூடிய இளையவர்கள் சுதந்திரமும் பொறுப்பும் மிக்கவர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டியவர்கள் என்பது மாத்திரமின்றி தமது வாழ்வின் இலக்கை அடைய பல தெரிவுகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் என்ப தையும் எடுத்துக் கூறும் இந்த இளமைப் பருவத்தில் அவர்களை சரியான வழியில் இட்டு செல்ல வேண்டியதும், அவர்கள் காணும் சமுதாயத்தை படைப்பதற்கு ஊக்குவிப்பதன் மூலம் வாழ்வை அர்த்தமாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களிடம் மாத்திரமல்லாது வாண்மை விருத்தி கொண்ட கல்வியூட்டும் ஆசிரியர்களிடமும் காணப்பட வேண்டிய முக்கிய பங்காகும்.

இந்த அடிப்படை விடயத்தில் தவறு இழைக்கப்படுமேயானால் பின்தங்கிய கல்விக் கூட்டமான மலையக மாணவர்களின் கல்வியை விருத்தி செய்வதென்பது கனவுகளின் கற்பனையாக மாறிவிடும். ஒரு செடி வளர்வதற்கு என்னென்ன தேவையோ அதைப் போன்று மனிதன் பண்பாட்டையும், நாகரிகத்தையும் மேலான அறிவையும் பெறுவதற்கு கல்வி அவசியமென குறிப்பிடுகின்றார் ரூசோ. ஆகவே கல்வியும், அறிவு விருத்தியும் ஒரு மனிதனின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதும் அதற்கு தொட்டிலாகவும் துணையாகவும் பாடசாலைகளே விளக்குகின்றது என்பதனை நாம் எளிதில் மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு மனிதனும் தான் தன்னில் வளர்வதற்கும் முதிர்ச்சி பெறுவதற்கும் பல துறைகளில் சாதனை படைப்பதற்கும் பொதுவில் அனைத்து அம்சங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது கல்வியும் அந்த கல்வியை கற்றுத்தரும் பாடசாலையுமே என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

ஆனால் எந்த இளைமையைப் பற்றி பேசுகின்றோமோ அந்த இளமையின் வேராகவும் விழுதாகவும் விளங்கும் பாடசாலை பலவீனமான அம்சங்களை அடையாளப்படுத்துவதும் பெறுமதி மிக்க வாழ்வியலை வேறு திசைக்கு இட்டுச் செல்வதும் வாழ்வாங்கு வாழக் கூடிய சூழலிலிருந்து உண்மைத் தன்மைக்கு உரம் போடாமல் வெறுமனே வருமானம் சேர்க்கும் தொழிலாக கற்றுவித்தலை கடைபிடித்துக் கொள்ளுவதும் கவலைக்குரிய விடயமாகும். அப்புத்தளை பண்டாரவளை கல்வி வலயத்தில் பாடசாலைகளில் இடம் பெற்ற சில கசப்பான அனுபவத் திரட்டல்களேயாகும்.

மலையக சமுகத்தின் மேல் நோக்கிய அசைவியக்கத்திற்கு உந்து சந்தியாக விளங்குவது கல்வியே என்பதனையும் உலகில் பின்தங்கிய சமூகம் கல்வியினூடாகவே தமது சமூக பொருளாதார அரசியல் அபிவிருத்தியை முன்னேற்றிக் கொண்டார்கள் என்பதும் உணரப்பட்ட உண்மையாகும். லெனின் கூறுவது போல் போராடப் படியுங்கள் போராட்டத்தோடு படியுங்கள் என்ற கூற்று அடிமைச் சிலுவையில் அறையப்பட்டிருந்த இளமைக் கிறிஸ்துக்கள் வாழும் மலையகத்திலிருந்து நீக்கிவிட முடியாத ஒரு நிஜக் கூற்றாகும்.

அப்படியொரு சூழ்நிலையில் இளமை இரத்தம் ஓடும் இளசுகளான உயர் வகுப்பு மாணவர் களிடையே தூவப்படுகின்ற தீய எண்ணங்கள் அவர்களை ஒரு விதமான தன்னிணைப்புத் தன்மைக்கு தள்ளிவிடும் என்பதோடு நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற சவாலுக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர்கள் தனித்துவமான வர்கள். புனிதமானவர்கள், ஆளுமை மிக்கவர்கள்; தனக்கு வருத்தமோ, தோல்வியோ வருமென நினைக்காமல் உணர்ச்சிகளால் உந்தப்படுபவர்கள். அதனால் தோல்வியோ, துன்பமோ, புண்படுத்தலோ எவற்றையும் எதிர் பார்க்காமல் பிறருடைய பாராட்டை பெறவும் தட்டிக் கொடுத்தலை அடைய தன்னிணைப்பை (ஐனநவெகைiஉயவழைn) கையாளக் கூடியவர்கள் இவர்களிடம் காணப்படும் நம்பிக்கை மலையைக் கூட பெயர்க்க அடிகோலும், அப்படிப் பட்ட மாணவர்களை பிழையான திசைக்கு இட்டுச் செல்லுகின்ற சில துரதிஷ்டமான சம்பவங்கள் பெருங் கவலையைத் தருகின்றன.

அண்மையில் ஒரு பாடசாலையில் எவரும் எதிர்பாராத விதத்தில் ஆரம்பமான மாணவப் போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்ததோடு குறித்த அந்த பாடசாலைக்கு இருந்து வந்த கௌரவத்திற்கும் கறைபடியச் செய்திருக்கின்றது. இவர்களது மனத்திடத்தின் முயற்சிக்கு அடிகோலியவர்கள் யார், ஒரு நொந்து போயுள்ள சூழ்நிலையை தோற்றுவித்தவர்கள் யார்? எனக் கவனமாக ஆராய வேண்டியது மலையகக் கல்வியின் மீது அக்கறை கொண்டவர்களின அங்கலாய்ப்புமிக்க கடமையாகும்.

மாணவர்களின் போராட்டம் மந்திரி காதையும் எட்டியது போல் அவசரமாகக் கூட்டப்பட்ட அந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள், நகர வாசிகள் என பலரும் கலந்து கொண்டமையும் அங்கு தொடுக்கப் பட்ட கேள்விகணைகள் கவலைப்படுத்தும் காரணிகளாக அமைந்தமையும் வேதனைக்குரிய விடயங்களாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்கள் சூழ்ந்து கொண்டு மாகாண அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைகள் அவர்களிடம் ஒரு அசட்டு தைரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம். உணர்ச்சி வசப்பட்டு தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திய பெற்றோர்கள் வரிசையில் பெண்களே அதிகமாக இருந்ததையும், தீர்வு கேட்போர் அல்லது திரும்பவும் வந்து ரோட்டில் அமர்வோம் என்ற முடிவு எட்டிய நிலையில் அங்கு பேசப்பட்ட பெட்டிசன் விடயம் ஒரு மனிதாபிமானமற்ற நிலையை அடையாளப்படுத்தியது எனலாம். சில ஆசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களது குடும்பத்தாரையும், தனிப்பட்ட தகவல்களையும் அச்சாக்கி வெளியிட்டு அசிங்கப்படுத்தியவர்கள் பழைய மாணவர்கள் என்ற முத்திரையை குத்தி மாணவ ஒழுக்கத்திற்கு தீங்கு செய்திருக்கிறார்கள். நிச்சயம் இதை தயாரித்த பெருமை மாணவர்கள் அல்லாதவரையே சாரும். அதேபோன்று மத்திய கல்லூரி மாணவர்களினது கண்ணீர்த் துயரங்கள் என தயாரிக்கப் பட்டிருந்த பெட்டிகள் அறிக்கை ஊழலின் ஒப்பனைச் சான்றிதழாகவும் அமைந்திருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த விளப்பமுள்ள அறிக்கைகள் பல முக்கியஸ்தர்களுக்கு முகவரியிடப்பட்டு அனுப்பி வைக்கப் பட்டதாகும். போதாக்குறைக்கு வகுப்பு வாசல்களில் ஒட்டப்பட்டதும் காட்சிப் படுத்தப்பட்டதும் கவலைக்குரிய விடயமாகும். இதனை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. தவறுகள் செய்வது மனித இயல்பு. அதை பக்குவமாக தட்டிக் கேட்க வேண்டியது நல்ல குண இயல்பு. எனவே இனி மேலாவது இத்தகைய குற்றப் பத்திரிகைகள் எழுதப்படுவதற்கும் விமர்சிக்கப்படுவதற்கும் அனுமதிக்கக் கூடாது. என்பதை அனைத்து தரப்பினரும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

அரபு நாடுகளில் நடைமுறையி லுள்ள பழமொழியான

“நாம் ஒவ்வொருவரும் ஒரு நேர்மையாளரை உருவாக்க முடியும். அந்த நேர்மையாளர், நான்” என்பதை நினைவிற்கொண்டு விவேகம், சீராக்கம், செயற்பாடுகள் மிக்க மாணவ சமூகத்தை உருவாக்க அனைத்து ஆசிரிய சமூகமும் இதய சுத்தியோடு முன் வருதல் வேண்டும். நினைவுகளை நினைத்தல் எவ்வளவு அவசியமோ மறுத்தலும் மனிதனுக்கு முக்கியமானது.

ஆகவே நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை யின் தேசிய கல்வி முறையில் பெரும் பின்னடைவைக் கொண்டுள்ள மலையக சமூகம் காலத்தை வெல்வதற்கு ஆசிரியர்கள் உதவினால் தான் அசாத்தியங்கள் மறைந்து அசைவியக்கம் உருப்படியாகும்.

கந்தையா வேலாயுதம்...-


புசல்லாவையில் அதிகரித்துவரும் தற்கொலைகள் : யார் காரணம்


மலையகத்தில் பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் யார் என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது. இவ்வாறான தற்கொலை சம்பவங்களுக்குப் பாடசாலைகள் தான் காரணம் என்று ஒரு சாரார் கூறிக்கொண்டு உண்மை நிலைமைகளை மறைக்கும் சூழலும் நிலவுகிறது.

பாடசாலை மாணவிகள் அல்லது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது.

குறிப்பாக புசல்லாவை பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதக் காலத்துக்குள் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளில் ஒருவர் தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டும் மேலும் இருவர் கழுத்தில் தூக்கிட்டும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை இதே பிரதேசத்தைச் சேர்ந்த மேலுமொரு மாணவி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் பாடசாலைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தான் காரணமென்று சில தரப்புக்கள் நியாயம் கூறி, சமூகத்தின் பார்வையைத் திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்ற குற்றஞ்சாட்டும் நிலவுகின்றது.

Saturday, July 24, 2010

195 புதிய கிராம சேவகர் பிரிவுகள் மலையகத்திற்கு அவசியம்

பொது நிர்வாக அமைச்சுக்கு சமர்ப்பிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள ஆலோசனை அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டவை



புதிய கிராம சேவகர் பிரிவுகளை அமைத்தல், மற்றும் பிரதேச செயலகங்கள் தொடர்பாக யோசனைகளை முன் வைக்குமாறு பொதுநிர்வாக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மலையகத்தில் 195 புதிய கிராம சேவைப் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும் என்று மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் பொது நிர்வாக அமைச்சுக்கு சமர்ப்பிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட அறி;க்கை சம்பந்தமாக நடத்தப்பட்ட கலந்துரையாடப்பட்டது. பி.பி. தேவராஜ் அவர்களின் தலைமையில் வர்த்தகரும் மொறிசியஸ் நாட்டுக்கான கௌரவ தூதுவருமான தெ. ஈஸ்வரன், மற்றும் எக்ஸ் பிரஸ் நியூஸ் பேப்பர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் ஆகிய மூவர் கொண்ட இக் குழு அறிக்கையை தயாரித்தது

பி.பி. தேவராஜ் குழுவினர் மலையகத்துக்கு வெளிக்கள விஜயங்களை மேற்கொண்டு கிராமசேவையாளர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தியும், புள்ளி விபரவியல் திணைக்களம், மாவட்ட செயலகங்கள், உள்ளிட்ட பல அமைப்புக்களிடமும் தரவுகளை பெற்று அறிக்கையை தயாரித்துள்ளனர்.

இந்த அறிக்கை தொடர்பாக ஆராயும் நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றிய இலங்கை திறந்த பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளர் யசோதா கதிர்காமத்தம்பி இந்த அறிக்கை பல தரப்பினரின் ஆதரவுடனே தயாரிக்கப்பட்டது. முக்கியமாக பிரதேச செயலக பிரிவுகள், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள், தற்போது காணப்படும் கிராமசேவை பிரிவுகள் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டோம்.

அதனடிப்படையில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, கேகாலை, களுத்துறை, மற்றும் கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளை கருத்திற் கொண்டோம். ஆதன்படி பதுளை மாவட்டத்தில் புதிதாக 34 கிராம சேவைப்பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 94 புதிய கிராமசேவை பிரிவுகளும் (நுவரெலியா மாவட்டத்தில் தற்போது 487 கிராம சேவை பிரிவுகள் உள்ளன) கண்டி மாவட்டத்திற்கு 11 புதிய பிரிவுகளும்( கண்டி மாவட்டத்தில் தற்போது 1188 பிரிவுகள் உள்ளன) மாத்தளை மாவட்டத்திற்கு 15 புதிய பிரிவுகளும்,( மாத்தளை மாவட்டத்தில் 550 பிரிவுகள் உள்ளன) கேகாலை மாவட்டத்திற்கு 15 புதிய பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு 15 புதிய பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்திற்கு 9 புதிய பிரிவுகளும் தேவையாகும். கொழும்பில் மட்டக்குளி பதியை மட்டுமே ஆராய்ந்தபோது 20,000 பேருக்கு ஒரு கிராம சேவை பிரிவு உள்ளது என்றார்

பி.பி. தேவராஜ் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் மலையகத்தில் புதிதாக கிராம சேவையாளர் பிரிவுகளை அமைப்பது தொடர்பான யோசனை குறித்து ஆராயும் நோக்கில் பல தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து கலந்தரையாடக் கிடைத்தமை நாம் பெற்ற பாரிய வெற்றியாகும்.

இங்கு கூடியுள்ள அரசியல் கட்சிகள், சிpவல் சமூக அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் புத்திஜீவிகளும் வேறுபாடான கருத்துக்களை முன் வைத்தாலும் அனைவரினதும் நோக்கங்கள்ள் ஒன்றானதாகவே அமைந்துள்ளன. அதாவது இறுதியில் நாங்கள் பயணிக்க வேண்டிய இடம் ஒன்றாகவே உள்ளது.

மலையக மக்கள் நன்றாக வாழ வேண்டும். அவர்களுக்கு வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற பொதுவான நோக்கங்களே மலையகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கின்றன. முக்கியமாக இங்கு வித்தியாசமான கருத்துக்கள் மற்றும் வேறுபாடான அபிப்பிராயங்கள் இருந்தாலும் அனைவரும் ஒன்று கூடியுள்ளமை விசேட அம்சமாகும். வேறுபாடான கருத்துக்களை பல்வேறு தரப்பினர் ஒன்று கூடுமிடத்து எம்மால் உடனடியாக சிறந்த முடிவை எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒற்றுமையின் ஆரம்ப கட்டமாகவும் முதற்படியாகவும் எம்மால் எடுத்துக் கொள்ள முடியும். நாம் இந்த விடயங்களை கவனமாக ஆராய வேண்டும். கண்ணும் கருத்துமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சில இடங்களில் தமிழ் பேசும் கிராம சேவையாளர்கள் இல்லை. சில இடங்களில் 20,000 பேருக்கு ஒரு கிராம சேவகர் கடமையாற்றுகின்றார். கிராம சேவகரை காணாத மக்களும் உள்ளனர். எனவே நாம் இவை தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

இதேவேளை புதிதாக அமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் மக்கள் சபைகள் தொடர்பில் மலையக சமூகத்தினரும் அரசியல் கட்சிகளும் விழிப்புடன் இருப்பதாக தெரியவில்லை. இது தொடர்பில் நாம் அவசரமாக விழிப்படைய வேண்டிய நேரம் வந்துள்ளது.

மேற்படி அறிக்கை தொடர்பில் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய பல்கலைகழக விரிவுரையாளர் விஜயசந்திரன் இந்த முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். 2010 அம் ஆண்டில் நாம் இருக்கிறோம். எனவே அதற்கேற்ற வகையில் அறிக்கைக்கு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும். அடுத்து புதிதாக கிராமசேiயாளர் பிரிவுகளை பிரேரிக்கும் போது மக்களின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும். அப்போது எதிர்காலத்தில் மக்கள் சபைகளில் மக்களின் பிரதிநிதிகள் அதிகரிக்க முடியும் என்றார்.

திறந்த பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரபோஸ் இவ்வாறான ஆலோசனை அறிக்கைகளை தயாரிக்கும் போது தமிழ் மக்கள் என்று குறிப்பிடுவதைவிட தோட்ட மக்கள் என்ற பதத்தை முன் வைக்கின்றேன் என்றார்.

இ.தொ.கா தலைவர் முத்துசிவலிங்கம் நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருததிற்கொண்டே நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எம்மால் முடியுமானவரை கோரிக்கைகளை முன்வைக்கலாம். அதேநேரம் அவற்றின் சாத்திய தன்மைகளை ஆராய வேண்டும் என்றார்.

Thursday, July 22, 2010

தேர்தல் சீர்த்திருத்தங்களின் பாதிப்பிலிருந்து தமிழ்ப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு மலையக தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடுமா?

உத்தேச தேர்தல் முறையிலிருந்து தமிழ் அரசியல் பிரதேசத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முனைப்புகளில் மலையகத் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஒன்றுபட்டு இது தொடர்பில் இணக்கப்பாடு ஒன்று காணப்பட வேண்டும் என்ற நோக்கில் மலையகத் தமிழ்க் கட்சிகள் செயற்பட முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம். அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைமை அடிப்படையில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்குப் புதிய நிர்வாக அலகுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒருமித்த வலியுறுத்தல் தற்போது கட்சிகளுக்கிடையில் மேலோங்கியுள்ளது.

அந்த வகையில் பதுளை மாவட்டத்தில் மேலதிகமாக 5 பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் எனப் பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மலையக மக்கள் முன்னணியால் இந்தக் கோரிக்கை பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருவதாகக் கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளரும் ஊவா மாகாணசபை உறுப்பினருமான ஏ.அரவிந்குமார் தெரிவித்துள்ளார். புதிதாக உருவாக்கப்படுகின்ற பிரதேச செயலகப் பிரிவுகள்,தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் கோரிக்கையின்படி பதுளை மாவட்டத்தில் உள்ள பசறை பிரதேசத்தில் மடுல்சீமை மற்றும் லுணுகலையை உள்ளடக்கியதாக ஒரு பிரதேச செயலகப் பிரிவும் நமுனுகலையில் உள்ள தமிழ்த் தோட்டப்பகுதிகளை ஒன்றிணைப்பதன் ஊடாகவும் ஹாலிஎல பிரதேச செயலகப்பிரிவை இரண்டாகப் பிரிப்பதன் ஊடாக இரண்டு பிரதேசசபைகளும் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், பண்டாரவளைக்கு அருகில் உள்ள பூனாகலை, கொஸ்லாந்தை போன்ற பகுதிகள் தனிப்பிரதேச செயலகப் பிரிவுகளாக மாற்றப்பட வேண்டும். அவற்றுடன் அப்புத்தளைப் பிரதேச செயலகப் பிரிவையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதற்கான சாத்தியப்பாடுகள் எவ்வாறு அமைகின்றன என அவரிடம் வினவப்பட்டபோது, பாரிய நிலப்பரப்பில் அதிகளவிலான மக்கள் அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற நிலையில், புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படுவதில் சிக்கல் இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் க.வேலாயுதம்,மடுல்சீமை,
லுணுகலையை உள்ளடக்கிய தனிப் பிரதேச செயலகப் பிரிவொன்று உருவாக்கப்பட
விருப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், பண்டாரவளை மற்றும் அப்புத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளிலும் புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுவதுடன், ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவு இரண்டாகப் பிரிக்கும் அளவுக்கு விசாலத் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் நமுனுகலை குறித்து எதுவும் கூற முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அரசாங்கம் புதிய தேர்தல் முறைமை ஒன்றை அமுல்படுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பதுளை மாத்திரமின்றி மலையகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராமசேவையாளர் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அத்தியாவசியமான விடயம் என வேலாயுதம் சுட்டிக் காட்டியுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகப் பாரியளவில் பாதிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, புதிய நிர்வாக எல்லைகள் உருவாக்கப்பட வேண்டியதே தற்போதைய முக்கியமான தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்த ஊவா மாகாணசபை உறுப்பினர் ஏ.அரவிந்குமார், தற்போது அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறைமை மாற்றம் என்பன குறித்துப் பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டு வருகின்றன. எனினும் அடிப்படையில் பொதுமக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அவர்களுக்கான நிர்வாக எல்லைகளை அதிகரிப்பது குறித்து உயர்மட்டங்கள் சிந்திக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனை விடுத்து மேல் மட்டங்களில் கலந்துரையாடப்பட்டு ஒரு அரசியல் யாப்பினையோ அல்லது புதிய தேர்தல் முறைமையினையோ திடீரென அமுல்படுத்தும் பட்சத்தில் அது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது பொதுமக்கள் தயாராகாத நிலையில் அல்லது ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தாது புதிய தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவதனால் பல்வேறு சிக்கல்கள் தோன்றக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. புதிய முறை ஒன்றின் கீழ் தேர்தல் நடத்தப்படும்போது அதனால் எந்தத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலான சூழ்நிலையை முன்னதாக உருவாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உத்தேச தேர்தல் முறைமை அடிப்படையில் பாதக விளைவுகள் ஏற்படாத வகையில் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வை அல்லது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நிலைக்கு மலையக அரசியல் கட்சிகள் வந்துள்ளன. இதன்பொருட்டு நாளை 22 ஆம் திகதி மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், முன்னதாக மலையக எல்லை நிர்வாகக் கட்டமைப்பில் புதிய நிர்வாக அலகுகளை ஏற்படுத்தும் பொருட்டு சிரேஷ்ட அரசியல்வாதி பி.பி.தேவராஜ் தலைமையில் குழுவொன்று செயல்பட்டு வந்தது.

இந்தக் குழு தற்போது தமது முழுமையான அறிக்கையைத் தயார் செய்துள்ளதாக பி.பி.தேவராஜ் தெரிவித்துள்ளார். எனவே, இந்த அறிக்கை மலையகக் கட்சிகள் சந்திக்கும்போது முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பி.பி.தேவராஜின் தலைமையிலான இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வு மற்றும் மீள் எல்லை நிர்ணயிப்பு யோசனைகளில் முக்கிய சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற 5 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மேலதிகமாக மேலும் 12 பிரதேச செயலகப் பிரிவுகளை உருவாக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அங்கு புதிய நிர்வாக எல்லைகள் உருவாக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் தேர்தல் முறைமையினால் பாதிப்பு எவையும் ஏற்படாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஊவா மாகாணசபை உறுப்பினர் அரவிந்குமார் முன்வைத்த பதுளை மாவட்டத்தில் 5 மேலதிக பிரதேசசபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் கருத்துரைத்த பி.பி.தேவராஜ், அதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கூறினார். எனினும், இதற்கான சான்றுகள் மற்றும் சாத்தியப்பாடுகளுடன் எதிர்வரும் மலையகக் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போது யோசனை முன்வைக்கப்படும்போது அது தொடர்பில் மீளாய்வு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரமுகரும் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்,இந்தச் சந்திப்பின் பின்னர் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்திருப்பதாகத் தெரிவித்தார். பதுளை மாவட்டத்தையும் நுவரெலியா மாவட்டத்தையும் ஒன்றிணைத்து புதிய தமிழ் மாகாணமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாக அமைந்துள்ளது. இது தொடர்பில் நாளை 22 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சிகளின் சந்திப்பின்போது எடுத்துரைத்து கலந்தாலோசிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ஆலோசனை செய்யப்பட்டு இந்த விடயங்களும் உள்ளடக்கப்பட்ட அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இந்த யோசனையை மலையக மக்கள் முன்னணி முதல் முறையாக 1994 ஆம் ஆண்டு முன்வைத்ததாக மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் அ. லோரன்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த காலங்களில் பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் அரசியல் திருத்த யோசனைகள் கோரப்பட்டபோது மலையக மக்கள் முன்னணி இந்தக் கோரிக்கையையும் முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு புதிய மாகாணமாக மாற்றப்படும் பட்சத்தில் அது இந்திய வம்சாவளி மக்களுக்கான தனி மாகாணமாக இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது உள்ள மாகாண, பிரதேச மற்றும் கிராமசேவகப் பிரிவு கட்டமைப்பின் அடிப்படையில் மலையக மக்கள் தமது அவசர தேவைகளுக்கும் தங்களுக்குரிய பிரதேச செயலாளரைச் சந்திப்பதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியதாக இருப்பதாக ஏ.லோரன்ஸ் தெரிவித்தார். அவர் வழங்கிய தகவல்படி இலங்கையிலுள்ள சுமார் 300 இற்கும் அதிகமான பிரதேச செயலகப் பிரிவுகளில் 40 சதவீதமானவை 50 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டவைகளாகவே காணப்படுகின்றன.

எனினும் நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கு சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தற்போதுள்ள ஒரு பிரதேச செயலகப் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எனவே, அங்கு சராசரியாக இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச செயலகப்பிரிவு காணப்படுகின்றது. எனினும் கிழக்கு மாகாணத்தின் வாகரை பிரதேச செயலகப்பிரிவைப் பொறுத்தவரையில் அங்கு 8,000 மக்களே காணப்படுகின்றனர் என ஊவா மாகாணசபை உறுப்பினர் ஏ.அரவிந்குமார் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், வாகரைப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கிடையில் பகிரப்படுகின்ற வளங்களுக்கும் மலையகத்திலுள்ள பிரதேசசபை ஒன்றின் ஊடாகப் பகிரப்படுகின்ற வளத்துக்குமிடையில் பாரிய அளவு ரீதியான வேறுபாடுகள் அவதானிக்கப்படுகின்றன. இந்த நிலையில், கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளின் அபிவிருத்திகளை மலையகத்தில் எந்த அளவில் எதிர்பார்க்கலாம் என்பது கேள்விக்குறியாகிறது. இவ்வாறானதொரு நிலையில் மலையகத்தின் நிர்வாக எல்லைகள் புதிதாக வரையறுக்கப்படுவதும் புதிய எல்லைகள் உருவாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது.
எவ்வாறாயினும் இதற்கான சாத்தியப்பாடுகள் எந்தளவில் உள்ளன என்பது குறித்து ஆராயப்பட வேண்டிய மிக முக்கிய தேவையொன்று காணப்படுகிறது. இது தொடர்பில் கருத்துரைத்த மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் அ.லோரன்ஸ்,கடந்த காலங்களில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு எண்ணிக்கையிலா பிரதேச செயலகப் பிரிவு அதிகரிப்புகளைக் கோரி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அது அரசாங்கத்தினால் பெரிதாகப் பரிசீலிக்கப்படவில்லை. குறிப்பாக மலையக மக்கள் முன்னணியினால் கடந்த காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 14 பிரதேசசபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எனினும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டுமெனக் கோருகின்ற அதேவேளை, எவ்வாறாயினும் இதற்கான சாத்தியப்பாடுகள் எந்தளவில் உள்ளன என்பது குறித்து ஆராயப்பட வேண்டிய மிக முக்கிய தேவையொன்று காணப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். நுவரெலிய மாவட்டச் செயலாளர் டீ.பி.ஜே.குமாரசிறி அங்கு 10 பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையீனம் அல்லது ஒரே பொது இணக்கப்பாடின்றி இது தொடர்பில் வலியுறுத்தப்பட்டபோது அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என லோரன்ஸ் தெரிவித்துள்ளார். எனினும். தற்போது அனைத்து மலையகக் கட்சிகளும் ஒன்றுகூடி இது தொடர்பில் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் பட்சத்தில் இந்தக் கோரிக்கை சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டே பி.பி.தேவராஜ் தலைமையிலான குழு புதிய நிர்வாக எல்லை வரையறைகளை மேற்கொண்டது. இவற்றுடன் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் லோரன்ஸ் வழங்கிய மற்றுமொரு தகவல் மேலும் இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதாகும்.

பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்களை இணைத்து அல்லது பிரித்து மேலும் இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மலையகத்தில் காணப்படுகின்ற பல தோட்டப்பகுதிகளில் உள்ளூராட்சி நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்படுவதில்லை. இதன் காரணமாக தோட்டப்பகுதிகள் தனியான பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்படுவதன் ஊடாக அவர்களையும் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கிக்கொள்ளலாம். அவ்வாறு செய்தால் மாத்திரமே சிறுபான்மைத் தமிழ்ச் சமூகத்தைத் தேசிய அரசியல் நிர்வாக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்துசிவலிங்கம், இது தொடர்பில் உறுதியாக இல்லாதபட்சத்தில் மலையகத்தின் அரசியல் பிரவேசம் முற்றாக அழியும் அபாயமிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து வலியுறுத்தி வருவதாகவும் தற்போது அதனைச் சாத்தியப்படுத்த வேண்டிய தேவையிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் தேசிய முன்னணியைப் பொறுத்தவரையில் அது நிலத்தொடர்பில்லாத இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பாக புவியியல் சாத்தியமற்ற மாகாண அல்லது மாவட்டக் கொள்கைகளை முன்வைக்கவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தமது முன்னணி அரசாங்கம் ஏற்கனவே முன்மொழிந்துள்ள இருமொழிக்கொள்கை என்ற அடிப்படையில் மொழி ரீதியான மற்றும் உப பிரதேச செயலகங்களை உருவாக்குவதைத் தாம் முன்மொழிவாகச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து அவரிடம் கேட்டபோது; சோல்பரி யாப்பிற்கமைய 50 ஆயிரம் பேர் கொண்ட சிறுபான்மை மக்கள் குழுவொன்றுக்குப் பிரதேச செயலகப் பிரிவொன்றை உருவாக்கும் அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார். இதனடிப்படையிலேயே பி.பி.தேவராஜின் அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் வெறும் கோரிக்கைகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் சாத்தியப்பாடுகளுடன் கூடிய உசிதமான நடவடிக்கையை எடுப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் எதிர்வரும் கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணி,ஜனநாயக மக்கள் முன்னணி,இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற கட்சிகள் கலந்து பேசவுள்ளன. இதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அருள்சாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இவ்வாறு மலையகத்தில் தமிழ்ப் பிரதேசங்களை வேறுபடுத்தி புதிய மாகாணங்கள் அல்லது மாவட்டங்களை ஏற்படுத்துவது என்பது இன ரீதியான பிரிவினையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும் பலர் மத்தியில் நிலவுகிறது. அல்லது அவ்வாறு உருவாக்கப்படுகின்ற தமிழ்ப் பிரதேசங்கள் எதிர்காலத்தில் மேலும் புறக்கணிக்கப்பட்டுவிடுமோ என்ற கருத்தும் மேலோங்குகிறது. எனினும் இந்த நடவடிக்கைகள் அதிகாரப் பகிர்வினை அடிப்படையாகக் கொண்டமைவதால் புறக்கணிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால், அங்கு இனப்பிரிவினை ஏற்படலாம் என்ற கருத்து எஞ்சி நிற்கிறது. இது தொடர்பில் முன்னதாக கருத்துத் தெரிவித்திருந்த பி.பி.தேவராஜ், அதற்கான சூழ்நிலைகளும் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் எனத் தெரிவித்திருந்தார். அதாவது தனியான தமிழ்த் தோட்டப்பகுதிகளை மாத்திரம் இதணத்து ஒரு கிராமசேவகப் பிரிவாகவோ அல்லது பிரதேச செயலகமாகவோ மாற்றாமல் அனைத்து இனங்களையும் கலந்து ஆனால், தமிழ்ப் பெரும்பான்மை,சிங்களப் பெரும்பான்மை ஆகிய உள்ளடக்கங்களுடன் கிராம சேவகர் பிரிவுகள் உருவாக்கப்படும்போது இந்தச் சிக்கல் கலையப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது மாவட்ட மற்றும் மாகாண அலகுகளில் எவ்வாறு சாத்தியப்படும் என்பது குறித்து தெளிவற்று இருக்கிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான ஒருவர், நடைமுறைச்சாத்திய ரீதியாக அல்லது யதார்த்த ரீதியாகச் சிந்திக்கும் போது இது சாத்தியப்படுவதற்கான வாய்ப்பில்லையெனக் கூறியிருந்தார். மாவட்டங்கள் அல்லது மாகாணங்கள் தனித்தமிழர்களுக்காக உருவாக்க முற்படும்போது அதற்கு அரசாங்கம் எந்தளவில் ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டார். அத்துடன், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை இணைக்கும்போது சிங்கள மக்கள் அதிகம் வாழ்கின்ற பிரதேசங்களை எங்கு சேர்ப்பது அல்லது எவ்வாறு ஒதுக்குவது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில், எவ்வாறான ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்பது தெளிவற்ற நிலையில் உள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல சிங்களவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது சிங்களப் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கின்ற வகையிலான எந்த யோசனையையும் அரசாங்கம் தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளாது.

இவ்வாறு தனியான மாகாணங்கள் அல்லது மாவட்டங்கள் பிரிக்கப்படும் பட்சத்தில் அது சிங்கள அரசியல் பிரவேசத்துக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் என்ற கோணத்திலேயே பார்க்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. எனவே, யோசனை சமர்ப்பின்போது தமிழர்களுக்கு நன்மையான அதேவேளை, பெரும்பான்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தாத வகையில் முன்வைக்கப்பட வேண்டிய ஒரு கட்டாயம் காணப்படுகிறது.
நன்றி- தினக்குரல்

Tuesday, July 20, 2010

அம்மா நீங்கள் வரவே மாட்டீர்களா?

ஐந்து வருடங்களாக குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்யும் தாய்க்கு துயரத்துடன் மகள் எழுதிய மடல

அன்பின் அம்மாவுக்கு,

சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நீங்கள் நலமாயிருக்கிறீர்களா? உங்களின் நலத்திற்கு என்றும் குறைவரக்கூடாது என்பதுதான் எனது முதல் பிரார்த்தனையும் வேண்டுதலும். நம் குலதெய்வம் உங்களின் நலன் காக்கட்டும்.

நிற்க:

நீங்கள் குவைத் சென்று ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. இரண்டு வருடங்களில் வருவதாக சொல்லிச் சென்றீர்கள். ஒன்றும் அறியாத எட்டுவயது சிறுமியாய் இருந்தபோது நீங்கள், கடைசியாய் தந்த அன்பு முத்தம் இன்னும் இனிக்கிறது அம்மா. ஆனாலும் பல விடயங்களை பரிமாறி துன்பங்களைச் சொல்லி அழ என் அருகில் அம்மா இல்லையென்று நித்தமும் அழுது வாடுகிறேன்.

அப்பா சரியாக வீட்டுக்கு வருவதேயில்லை. அப்படி வந்தாலும் குடித்துவிட்டுத்தான் வருகிறார். நானும் தம்பியும் உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்று கூட அவர் கவலைப்படுவதில்லை. நீங்கள் பணம் அனுப்புகிறீர்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் கிடைக்கும் பணத்தில் எல்லாம் அப்பா கசிப்பு குடிக்கிறார். நேற்று அவர் வீட்டுக்கே வரவில்லை.

காலையில் வீட்டு வாசலில் விழுந்து கிடந்தார். அவருக்கருகில் கிழிந்த தாளில் எழுதப்பட்ட உங்களுடைய விலாசம் இருந்தது. இது உண்மையான விலாசமோ எனக்குத் தெரியாது. ஆனாலும் எழுதுகிறேன். வெளிநாட்டில் தங்களுடைய அம்மா வேலை செய்ய, என்னைப்போன்ற எத்தனை குழந்தைகள் இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்காறார்களோ தெரியவில்லை.

நீங்கள் சொல்லிவிட்டுச் சென்றது போலவே நான் இன்னும் பாடசாலைக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறேன். முடிந்தளவு படிக்கிறேன். தம்பி பாடசாலைக்குச் செல்வதில்லை. பார்ப்பார் யாருமின்றி அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுடைய எதிர்காலத்தை நினைத்தால்தான் எனக்குப் பயமாக இருக்கிறது.

பட்டினி கிடக்கும் நிலை

நான் பாடசாலையிலிருந்து வந்தவுடன், பெரிய ஐயாவின் வீட்டுக்கு வேலை செய்யச் சென்றுவிடுவேன். அடிக்காத குறையாக என்னிடம் வேலை வாங்குகிறார்கள். ஐயா ஒரு நாளைக்கு 20 ரூபா தருவார். அங்கேயே எனக்கும் தம்பிக்கும் சாப்பாடும் கிடைக்கும். அந்தப் பணத்தை வைத்துத்தான் என்னுடைய தேவைகளை நிறைவேற்றுகிறேன். எனக்கு சமைக்கத் தெரியாது. அம்மா, ஐயா வீட்டில் சாப்பாடு கிடைக்காவிட்டால் பட்டினியாகத்தான் இருப்போம்.

அம்மா,

உண்மையைச் சொன்னால் நான் வயதுக்கு வந்தது கூட எனக்குத் தெரியாது. அதையெல்லாம் சொல்லித்தரத்தான் நீங்கள் அருகில் இல்லையே? எனக்கென உடுதுணிகள் வாங்கியதுகூட இல்லை. அப்பாவுடன் வரும் அவருடைய நண்பர்கள்கூட என்னை குரூரப் பார்வையால் தான் பார்க்கிறார்கள். எனக்குப் பயமாக இருக்கும். வீட்டில் தனியாக இருக்கவே பிடிக்கவில்லை.

இந்த வருடம் நான் ஒன்பதாம் ஆண்டு. ஆனாலும் இதுவரை புத்தகங்கள் வாங்கவில்லை. நண்பிகள் கொடுக்கும் பழைய கொப்பிகளில் தான் எழுதி வருகிறேன். இருந்தாலும் நான் எப்போதும் வகுப்பில் முதலாம் பிள்ளைதான். அதனால்தான் இந்தளவுக்கு உங்களுக்கு கடிதம் எழுத முடிகிறது.

இந்தக் கடிதம் உங்கள் கையில் கிடைத்தவுடன் இலங்கைக்கு வர முயற்சி செய்யுங்கள். ஏனைய குழந்தைகளைப் போலவே தாய்ப்பாசத்தை நானும் முழுமையாய் அனுபவிக்க வேண்டும்.

எங்களுடைய தோட்டத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன அம்மா. நாங்கள் மட்டுமே அதே பழைய வீட்டில் இருக்கிறோம். டி.வி பார்ப்பதென்றால்கூட பக்கத்து வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும். கிழிந்த சட்டையுடன் அங்கு செல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது.

என்னால் முடியவில்லை அம்மா. உங்கள் மடியில் கிடந்து கண்ணீர்விட்டு இதுவரையான அத்தனை சோகங்களையும் கரைக்கவேண்டும். என்னையும் தம்பியையும் உங்களோடு அழைத்துச் சென்றிருக்கலாம்தானே?

சொல்ல மறந்துவிட்டேன். கடந்த வாரம் தம்பிக்கு கடுமையான காய்ச்சல். அப்போது உங்களது ஞாபகம் தான் எனக்கு வந்தது. எனக்கு ஓரளவு கிடைத்த தாய்ப்பாசம் கூட தம்பிக்குக் கிடைக்கவில்லையே என அழுதேன். நல்ல வேளையாக தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை செய்து குணப்படுத்தினார்கள்.

ஏன் அம்மா நீங்கள் இங்கு வருவதில்லை? நாங்கள் உயிரோடு இருப்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? இங்கு கழியும் ஒவ்வொரு நிமிடமும் முட்தூரிகையாய் மனதை குத்திக் குடைகின்றது. அடுத்த நாளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்றுகூட தெரியாமல் வாழ்கிறோம்.

உண்மையில், வெளிநாட்டில் வசிக்கும் தாய்மாரின் குழந்தைகளெல்லாம் இப்படித்தான் நொந்து வாழ்கிறார்கள் என நினைக்கும்போது கண்ணீர் நிறைந்து மனதும் ஈரமாகிறது.

நீங்கள் இங்கு வரும்போது சிலவேளைகளில் நான் மரணித்திருக்கக்கூடும். வீட்டின் மூலைமுடுக்கெங்கும் இருக்கும் என் சுவடுகளில் உங்கள் பாதம்படும்போது என் ஆன்மா குதூகலிக்கும். ஆனாலும் நான் அழுதுத் தவித்த ஓலக்குரல்கள் அப்போதும் சுவர் இடுக்குகளில் ஒலித்து, உங்களுக்கு சாபமிடுவதாய் உணர்வீர்கள்.

இந்தக்கடிதம் உங்களைப் போய் சேராவிட்டால், தாயை தூரதேசத்துக்கு அனுப்பித் தவிக்கும் ஒவ்வொரு குழந்தையின் வேதனை மடலாகவும் ,அந்தத் தாய்மாருக்கு நான் எழுதிய கடைசி வேண்டுகோள் மடலாகவும் இது இருக்கட்டும்.

அம்மா என்ற ஒரு வார்த்தையில் அனைத்துமே இருக்கின்றதென்கிறார்கள். எனக்கும் அதை அனுபவிக்க சந்தர்ப்பம் ஒன்று தாருங்கள். அல்லால் சாபங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை இப்படியே மரணத்தின் எல்லை வரை கடந்து உங்கள் அன்புக்குக் காணிக்கையாக்குகிறேன். அதில் உங்கள் உள்ளம் களிப்படையட்டும்.

விடைபெறுகிறேன் அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்
லட்சுமி.


நன்றி – வீரகேசரி

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற கால நிலை தொடர்கின்றது. இந்த மாவட்டத்தில் காற்றுடன் கூடிய அடைமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்கின்ற சீரற்ற கால நிலை காரணமாக பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீரத்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.

நுவரெலியா நகருக்கு அருகில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் பல முறிந்து விழுந்ததில் வீடுகளின் கூரைகள் பல சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

இதனைத்தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா நகரிலிருந்து நுவரெலியா நகரம் வரையிலுள்ள பகுதிகளில் காற்றினால் ஆபத்தை விளைவிக்க கூடிய சுமார் 600 மரங்களைத் தறிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர் வன இலாகா பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மரங்களைத் தறிக்கும் நடவடிக்கைளில் வன இலாகா பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது

Monday, July 19, 2010

மலையகப் பிரதிநிதிகளுக்கு மனிதாபிமான வேண்டுகோள்!

மலையகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் கொழும்பில் அநியாயமாக உயிரிழந்துள்ளார். தோட்டப் பிரதேசங்களிலிருந்து வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்குச் செல்கின்ற பெண்கள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இப்பரிதாபத்தின் தொடர்ச்சியானதொரு சம்பவமாகவே கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றுள்ள மர்ம மரணமும் அமைந்துள்ளது.

கொட்டாஞ்சேனை, புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள தொடர் மாடி வீடொன்றில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

இம் மரணத்துக்கான காரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து இன்னுமே உறுதி செய்யப்படவில்லை. இப்பெண்ணின் மரணம் மர்மமாகவே உள்ளது. இப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் பரவலாக நிலவுகிறது.

இம் மரணம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் வீட்டு எஜமானியும் அவரது தாயாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னரே இப்பெண்ணின் மரணத்துக்கான காரணத்தை சரிவரக் கூற முடியுமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செல்வந்த வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்ற மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் இன்று நேற்று உருவானதல்ல.... இப்பரிதாபமானது அக்காலம் தொட்டு நிலவி வருகிறது. பெரும் பாலும் சிறுவயது யுவதிகளே இத்தகைய அவலத்துக்கு முகம் கொடுக்கின்றனர்.

கொழும்பு நகரத்தை எடுத்துக்கொண்டால் இங்கு செல்வந்த வீடுகள் பெரும்பாலானவற்றில் மலையகத்தைச் சேர்ந்த சிறு பெண்கள் தொழில் புரிகின்றனர். இவர்களில் சிலருக்கு மாத்திரமே மனிதாபி மானமுள்ள எஜமானர்கள் கிடைக்கின்றனர்.

ஏனையோர் மிகவும் துன்பப்படுகின்றனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக வேலை வாங்கப்படும் அவலத்தை பலர் எதிர் கொள்கின்றனர். விடுமுறையென்பது இவர்களுக்குக் கிடையாது. போதிய வேதனம் பலருக்கு இல்லை. இடையிடையே வீட்டுக்குச் சென்று வர விடுமுறை வழங்கப்படுவதில்லை. ஒரு வீட்டின் அத்தனை வேலைகளையும் தனியொருத்தியாக நின்று செய்ய வேண்டிய கொடுமைக்கு சின்னஞ்சிறு பெண்கள் உள்ளாகின்றனர்.

இந்த அநீதிகளுக்கு அப்பால் ஒரு சில பெண்களுக்கு மற்றொரு கொடுமையும் இழைக்கப்படுவதாக அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகளைப் பார்க்கிறோம். பணிப்பெண்களாக வேலை செய்யும் சிறுமியர் மற்றும் யுவதிகளுக்கு உடல் ரீதியான இம்சைகள் அளிக்கப்படும் சம்பவங்கள் சில வீடுகளில் இடம்பெறுகின்றன.

கடுமையான முறையில் அடித்துத் துன்புறுத்துதல், பாலியல் ரீதியில் பலவந்தப்படுத்துதல் போன்ற கொடுமைகளை சில பெண்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இவற்றுக்கும் அப்பால் ஒருசில யுவதிகள் கொல்லப்பட்ட பரிதாப சம்பவங்களையும் நாம் அறிந்துள் ளோம். இது போன்ற மனதை உருக்கும் பரிதாபங்களுக்கு மலை யக யுவதிகள் உள்ளாவது உண்மையிலேயே வேதனை தருகிறது.

இந்தச் சமூக அநீதிக்கு அடிப்படைக் காரணம் வறுமையாகும். குடும்ப வறுமையின் நிமித்தம் சிறு வருமானம் ஈட்டிக் கொள்வதற்காக செல்வந்த வீடுகளுக்கு வேலைக்கு வருகின்ற அப்பாவிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியை இனிமேலும் அனுமதித்துக் கொண்டிருக்கலாகாது. வறுமையைக் காரணம் காட்டி எத்தனை காலத்துக்குத்தான் இக்கொடுமையைப் பொறுத்துக் கொண்டிருப்பது!

உண்மையில் கூறப்போனால் இந்தப் பரிதாபத்துக்கான அடிப்படைச் சூத்திரதாரிகளென குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் பெற்றோர் தான். அவர்கள்தான் தங்களது பிள்ளைகளை செல்வந்த வீடுகளில் வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் வறுமை!

பணம் ஈட்ட வேண்டுமென்பதற்காக தங்களது சின்னஞ்சிறு பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதை ஈவிரக்கமற்ற செயலென பெற்றோர் நினைத்துப் பார்ப்பதில்லை. கல்நெஞ்சம் படைத்தோரால் மட்டுமே இது முடியும்.

குழந்தையொன்று பிறந்ததிலிருந்து அதனை வளர்த்து, கல்வி ஊட்டி ஆளாக்குவது பெற்றோரின் கடமையாகும். குழந்தைக்குரிய மேற்படி வசதி வாய்ப்புகளை வழங்கத் தவறுவது அடிப்படை உரிமை மீறலாகும். ஆனாலும் இவற்றையெல்லாம் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர் பலர் கருத்தில் கொள்வதில்லை. இதற்குக் காரணம் தோட்டப் பகுதி குடும்பங்களில் நிலவும் வறுமை மட்டுமன்றி மதுபானப் பழக்கமும் தான்....

மலையகத் தோட்டங்களில் மதுவுக்கு அடிமையான பெற்றோரே பெரும்பாலும் தங்களது பிள்ளைகளை பணிப்பெண் வேலைக்கு அனுப்புகின்றனர். இது ஒருபுறமிருக்க செல்வந்த வீடுகளில் மலையக யுவதிகளை வேலைக்கென ஒழுங்கு செய்து கொடுக்கும் செயலில் தரகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பணம் கிடைக்கிறது. இதுவொரு சமூகப் பிரச்சினையென்பதை மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மலையக தொழிற்சங்கங்களுக்கு உண்டு. மக்கள் பிரதிநிதிகளான தொழிற்சங்கத் தலைவர் கள் மனிதாபிமானத்தின் பேரில் இந்த அவலத்துக்கு முடிவு காண முன்வர வேண்டும்.

நன்றி- தினகரன்

இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக தனி மாகாணம் : ஜனநாயக மக்கள் முன்னணி

இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற மலையகத்தின் பதுளை மாவட்டத்தையும், நுவரெலியா மாவட்டத்தையும் ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலையக தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின் போது முன் வைக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் அதனை அரசிடம் முன் வைக்கவுள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. மேலும்


இவ்வாறு உருவாக்கப்படும் நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை போல இது மலையக தமிழ் மக்களுக்கான தனி மாகாணமாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தில் தனியான மாகாண சபை, பிரதேச செயலகங்கள் என்பன உருவாக்கப்படுவதன் ஊடாக மலைய தமிழ் மக்களுக்கான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என முன்னணின் பா.உ பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக்கும் திட்டத்தை முதன் முதலில் மலையக மக்கள் முன்னணி கடந்த 1994ம் ஆண்டு முன்வைத்தது.

கட்சியின் உபத்தலைவர் அ. லோரன்ஸின் தகவல்படி, இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்வைத்த அரசியல் திருத்த யோசனைகளின் போதும் தமது கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அனுமதி கிடைக்கப்படும் பட்சத்தில் மலையக மக்களுக்கு கிடைக்கின்ற சிறந்த வரப்பிரசாதமாக அது அமையும் என அ.லோரன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியாவில் அடை மழை, மண்சரிவு அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வருகின்ற அடைமழையினால் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கினிகத்தேனை, நோட்டன், மஸ்கெலியா, வட்டவளை போன்ற பகுதிகளிலேயே மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தப் பிரதேசத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கினிகத்தேனை நகரிலுள்ள அம்பகமுவ பிரதேச சபை பணிமனைக்குச் செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வீதியின் மண்திட்டொன்று சரிந்து அட்டன் கினிகத்தேனை பிரதான வீதியின் ஒருபகுதியில் விழுந்துள்ளது. எனவே பிரதேச மக்கள் மிக அவதானமாக இருக்கும்படி பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


நுவரெலியா மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாகப் பெய்து வருகின்ற அடைமழையினால் காசல்ரீ, மவுசாகலை, கனியன், விமலசுரேந்திரபுர, பொல்பிட்டிய போன்ற நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றதோடு நுவரெலியா மாவட்டத்திலுள்ள லக்ஷபான, டெவன், சென்கிளாயர், றம்பொடை போன்ற நீர் வீழ்ச்சிகளிலும் நீர்ப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இம் மாவட்டத்தில்
சீரற்ற காலநிலை நிலவுவதால் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஏனையவர்களும் தமது வழமையான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதேவேளை, கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் இதன் வான்கதவுகளை எந்த நேரமும் திறந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளிலும் ஆற்றோரங்களிலும் வாழுகின்றவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கொத்மலை நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியியலாளர் எல்.எம்.ஜி.விஜேசேகர அறிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற கால நிலையைத் தொடர்ந்து காலை வேளையிலும் மாலை வேளையிலும் மேக மூட்டம் ஏற்படுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாணவி தற்கொலையைத் தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பிரதேச மக்கள் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். போராட்டத்தைத் தொடர்ந்து கற்பித்தல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

கொட்டாஞ்சேனை வீடொன்றில் மலையகயுவதி மர்மகொலை

கொழும்பு கொட்டாஞ்சேனை, புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள ‘கோல்டன் ரெசிடன்ற்ஸ்’ அடுக்கு மாடி வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பதுளை, நமுனுகல, கலுகல்ல தோட்டப்பிரிவைச் சேர்ந்த வெள்ளச்சாமி சீதா ஹெலன் ராணி(37) மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ள போதும் அப் பெண் தாக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினால் வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் கைது செய்யபட்டுள்ளனர்.

கொழும்பில் இவ்வாறு பணிப்பெண்ணாக பணிபுரிந்த பல மலையக பெண்களுக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

Sunday, July 18, 2010

கிராம சேவை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்

தேர்தல் தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்யவும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் பொது மக்களிடமிருந்தும் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்தும் ஆலோசனைகளை கோரியிருக்கிறது.

இக்கோரிக்கைக்கு இணங்க மலையகத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக இணைந்து அரசுக்கு ஆலோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது.அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது வரவேற்கத்தக்க விடயமாகும். கடந்த காலங்களில் ஆட்சி செய்த தலைமைகள் இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரஜா உரிமைப் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொள்ளாததால் வாக்குரிமையற்றவர்களாகவே இருந்த வரலாற்றை நாம் மறந்துவிட முடியாது.

இலங்கை சுதந்திரம் அடைந்த போது இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 7 ஆக இருந்தது. இந்திய வம்சாவழியினர் சார்பில் போட்டியிடாத தொகுதிகளில் இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஆதரித்தோம். இதனால் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சியால் பெறமுடியாமல் போனது. சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் டி.எஸ். சேனநாயக்கவின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

ஐ.தே.க. அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் செய்த முதல் வேலை இந்திய வம்சாவழித் தமிழர்களின் வாக்குரிமையை பறித்ததுதான். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947 இல் பாராளுமன்றத்தில் நூறு ஆசனங்கள் இருந்தபோது அதில் ஏழு ஆசனங்களை இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் சார்பில் பெறக்கூடியதாக இருந்தது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருக்கும்போது இந்திய வம்சாவளித் தமிழர்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 40 ஆயிரம் பேருக்கு 1 பிரதேச செயலகம் இருக்கிறது. ஆனால் அம்பகமுவ பிரதேச செயலப் பிரிவை எடுத்துக் கொண்டால் சுமார் 2 இலட்சம் மக்கள் உள்ளனர். இங்கு மேலதிகமாக 4 பிரதேச செயலகமும், 4 பிரதேச சபைகளும் அமைய வேண்டும். அதுபோலவே நுவரெலியா பிரதேச செயலக பிரிவிலும் சுமார் 2 1ஃ2 இலட்சம் மக்கள் உள்ளனர்.

இங்கு மேலதிகமாக 5 பிரதேச செயலகமும் 5 பிரதேச சபையும் அமைய வேண்டும் அத்துடன் பாதுக்கை, கண்டி, கேகாலை, புத்தளம், இரத்தினபுரி, தெனியாய, பன்னிகல், கொழும்பு, மொனராகல பகுதிகளுக்கும் எமது மக்களின் எண்ணிக்கைக்கேற்ப பிரதேச செயலகங்கள் அமைக்க வேண்டுமென அரசாங்கத்துக்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதுபோலவே கிராமசேவகர் பிரிவுகளும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். அதிகாரம் பரவலாக்கும் நோக்கில் அரசாங்கம், ‘கிராம வசம’ திட்டத்தை அறிமுகம் செய்யப்போவதாக அறிய வருகின்றது. அரச சேவையை மக்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ் ஆலோசனையை அரசு முன்வைத்துள்ளது. ஆகவே 1500 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் நியமிக்க வேண்டுமென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் நமது நாட்டில் குடிசன மதிப்பீடு செய்ய உள்ளனர். இதில் எமது இன அடையாளமான ‘இந்தியத் தமிழர்’ என்று நாம் எமது இன அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

நாம் இலங்கை தமிழர் என்று எம்மை குறிப்பிடுவதால் எமது இன விகிதாசாரம் குறைவடைய வாய்ப்புள்ளது. நாம் எம்மை மலையக மக்கள் என்றும் பேச்சி வழக்கில் கூறுகின்றோம். ஆனால் நமது இன அடையாளம் ‘இந்திய தமிழர்’ என்பதாகும். அது தொடர்பாகவும் நமது இளைஞர்களுக்கு இப்போதிருந்தே அறிவூட்ட வேண்டும். ஒவ்வொரு ஜுன் மாதமும் வாக்காளர் இடாப்பு திருத்தப்படும். இம் மாதம் வாக்காளர் இடாப்புப் படிவம் இப்போது விநியோகிக்கப்படுகின்றது. கிடைக்காதவர்கள் தோட்டத்துரையூடாகவும், கிராம சேவகர்களிடன் பெற்று பூரணப்படுத்தி வாக்காளர்களை பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் அநேகமாக தொகுதி வாரியான தேர்தலாக அமையலாம். அதில் வாக்குகள் கனிசமாக இருந்தால் கட்சி பேதமில்லாமல் சேவை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்யக்கூடியதாக இருக்கும்.

பி. மோகன் சுப்ரமணியம்
அட்டன்

Friday, July 16, 2010

சமூக அநீதிக்கு உள்ளாக்கப்படும் மலையகத் தமிழ்ப் பெண்கள்

உலகில் பெண்கள் உரிமைகள் பற்றி உரக்கப்பேசப்பட்டு வருகின்றது. மேடைப் பேச்சுகளுக்கும் அறிக்கைகளுக்குமே பெண்கள் உரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளனவா அல்லது நாட்டின் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே அந்த உரிமை வரையறுக்கப்பட்டுள்ளதாஎன்று நமது நாட்டில் உள்ள நிலைமையைக் கவனிக்கும்போது வினவத் தோன்றுகின்றது. சந்தேகம் எழுகின்றது.

நமது நாட்டில் பெண்களின் உரிமைகள்,தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்த மகளிர் விவகார அமைச்சென்ற ஒன்றுள்ளது. அத்துடன், தொழில் திணைக்களத்தில் பெண்கள் தொடர்பாக ஒரு பிரிவும் உள்ளது.

இவற்றை விடவும் அரசசார்பு,அரச சார்பற்ற பல அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் என்றும் பல பெண்கள் உரிமை, தேவை,பாதுகாப்பு என பல் தரப்பட்டவற்றை ஆய்வு செய்து கவனிக்க பல அமைப்புகளும் நமது நாட்டிலுள்ளன. பெண் உரிமைக்காகக் குரலெழுப்பி கூட்டம் போட்டு கலைவிழா நடத்தி விருந்துபசாரம், கேளிக்கைகள் நடத்தும் பெண்கள் அமைப்புகளுக்கும் பஞ்சமில்லை.

இருந்த போதிலும் இந்நாட்டின் உழைக்கும் பெண்களில் குறைந்த சம்பளத்தில் கூடிய வேலைப்பளுவைச் சுமந்து கடினமான வேலைகளில் வெயில், மழையென்று பாராது மலைகளில் ஏறி, இறங்கி வேலை செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகச் செயற்படும் மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண் தொழிலாளருக்குச் சட்ட ரீதியாக வரையறை செய்யப்பட்டுள்ள எந்தவொரு உரிமையும் கிட்டுவதில்லை என்பது வெளிப்படையானது. வேதனைக்குரிய இவ்வாறான புறக்கணிப்புத் தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதில்லை.

திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாடு கடந்த பல தசாப்தங்களாக மலையகப் பெருந்தோட்டப் பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது மறைக்கக்கூடிய விடயமல்ல. மலையகப் பெருந்தோட்ட ஆண் தொழிலாளர்களும் சிறுதொகைப் பணத்திற்காக் கருத்தடை அறுவை செய்து கொள்வதும் பிரசவித்த பெண்களுக்குப் பிரசவத்தின்போதே கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதும் சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகின்றது என்று கூறப்படுகின்றது. ஆய்வின்போது இது நடைமுறையிலிருப்பது உறுதியாகியுள்ளது.

பிரசவித்த தாய்மாரின் விரும்பமறியாமலே கருத்தடை சிகிச்சைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டு விடுவதாகவும் கூறப்படுகின்றது. அதாவது அவர்களின் சம்மதம் இன்றியே இது நடைபெறுகின்றது. இதுவொரு உரிமை மீறல் என்பதை அப்பாவித் தொழிலாளரும் புரிந்துகொள்வதில்லை. கருத்தடை செய்வோரும் தாம் செய்வது அடிப்படை மனித உரிமை மீறல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அல்லது திட்டமிட்டு ஆற்றும் செயற்பாடாக மேற்கொள்கின்றனர்.

இது இவ்வாறிருக்க அண்மையில் தோட்டங்களில் தொழில் வழங்குவதற்கு முன் பெண்கள் கருவுற்றிருக்கின்றனரா என்ற பரிசோதனை செய்யப்படுவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. கருவுற்ற பெண்களுக்குத் தோட்டங்களில் வேலை வழங்கப்படமாட்டாது என்பது இதன் வெளிப்பாடு. கருத்தடை செய்வது ஒருபுறமாக நடைபெற்று வருவதுடன் கருத்தரிக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்படுவது போன்ற நிலையே கருத்தரித்துள்ளனரா? என்று பரிசோதனை செய்து வேலை வழங்கும் செயலாகும். இது உலகிலே எங்குமில்லாத நிலை மட்டுமல்ல, நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாகவும் உள்ளது.

இது தொடர்பில் உரிய முறையில் உரிமைக்குரல் எழுப்பாது விட்டால் அடுத்த கட்டமாக திருமணம் செய்தால் வேலை வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்படலாம்.

கருத்தரித்த பெண்களுக்கு மாதாந்த வைத்திய பரிசோதனை, ஆலோசனை, ஊட்ட உணவு எனப் பல நமது நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன. மலையகப் பெருந்தோட்டக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இவ்வசதிகள் வழங்கப்படுகின்றனவா என்பது பற்றி எவரும் அக்கறை செலுத்துவதில்லை.

இவ்வாறான சுகாதார வசதிகள் உண்டு என்பதை மல்லயகத் தமிழ்த் தொழிலாளரும் அறிந்தவர்களாக இல்லை. இதுவொரு பரிதாப நிலை. நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேராகவுள்ள தொழிலாளர்கள் நாட்டின் தேசிய சுகாதாரக் கட்டமைப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களாகவேயுள்ளனர். இதுவே நடைமுறையிலுள்ள நிலைமை யதார்த்த நிலை.

இதுமட்டுமல்ல, பல பெருந்தோட்டங்களில் பிரசவிக்கவுள்ள தாய்மார்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல உரிய வசதிகள் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாகவுள்ளது. பெருந்தோட்டங்களுக்குச் செல்லும் பாதைகள் செப்பனிடப்படாது குன்றுங் குழியுமாக இருப்பது கூறித் தெரிய வேண்டியதொன்றல்ல. மத்திய மாகாண வீதி அபிவிருத்தியில் பெருந்தோட்ட வீதிகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றபோதும் வீதி அபிவிருத்திக்குப் பொறுப்பான எவரும் அக்கறை செலுத்துவதாயில்லை. இதேநிலை, ஊவா,சப்ரகமுவ மாகாண பெருந்தோட்ட வீதிகளுக்கும் பொருந்தும். இந்த நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களை தோட்டங்களிலிருந்து வைத்தியசாலைகளுக்குக் கூட்டிச் செல்வது ஆபத்துகள் நிறைந்ததாயுள்ளது.

தோட்ட நிர்வாகங்கள் பல சந்தர்ப்பங்களில் வாகன வசதி செய்து கொடுப்பதில்லையென்ற குற்றச்சாட்டுமுள்ளது. தேயிலைக் கொழுந்து,பசளை மூடைகள்,விறகு போன்றவை கொண்டு செல்லல் பயன்படுத்தப்படும் லொறிகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் வெறுமனே ஏற்றப்பட்டு அனுப்பப்படுவதும் நடைமுறையிலுள்ளது. சீரான பாதைகளிலேயே லொறிகளில் பயணம் செய்வது சிரமமானது. கர்ப்பிணித் தாய்மார்கள் பிரசவ வேதனையில் துடிக்கும்போது அவர்களை பொருட்கள் ஏற்றுவதுபோல் ஏற்றிக்கொண்டு செல்வது நியாயமானதா?மனிதாபிமானதா?. இதைப்பற்றி பொறுப்புடன் சிந்திப்பவர்கள் எத்தனை பேர்?

அண்மையில் இவ்வாறு லொறியில் ஏற்றி அனுப்பப்பட்ட கர்ப்பிணித்தாய் இடைவழியில் பிரசவித்த குழந்தை இறந்த செய்தியும் வெளியாகியது. பிரசவித்த குழந்தையை வீசியெறியும் பண்பாடு பெருகிவரும் நம் நாட்டில் அவ்வாறு வீசியெறிவதால் குழந்தை இறந்தால் அதன் தாய் கொலை செய்த குற்றத்திற்குள்ளாக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகின்றது.

பிரசவிக்கும் குழந்தை உரிய பாதுகாப்பான வசதிகள் செய்யப்படாமல் இறக்கும் நிலையேற்படும்போது அதுவும் ஒரு கொலையாகவே கொள்ளப்படக்கூடியதாகும். இதை எவரும் கருத்தில் கொள்ளாதிருப்பது கவலைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்கும் உரியது. எல்லை மீறிய குரூர செயற்பாடாகக் கொள்ளவும் முடியும்.

அண்மைய கணிப்பீட்டின்படி நாட்டின் உணவு இறக்குமதியில் அறுபது வீதம் தேயிலை ஏற்றுமதி மூலம் கிட்டும் வருமானத்திலிருந்தே மேற்கொள்ளப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் உணவு இறக்குமதிக்கு உழைத்து உதவும் தோட்டத் தொழிலாளரின் அவல நிலை மனித உணர்வுள்ளவர்களுக்கு உறுத்தாமல் இருப்பது புதுமையானது பரிதாபகரமானது.

நமது நாட்டில் மகளிர் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளுள்ளன. மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டுமென்ற கூக்குரலும் எழுப்பப்படுகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை என்று குரலிடப்படுகின்றது.

ஆனால், எவருக்கும் மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் துன்பம் தெரிவதில்லை. புரிவதில்லை.தெரிந்திருந்தும் அவர்களை மனித இனத்தவர்களாகக் கணிக்கும் பகுத்தறிவை மனிதப்பண்பை இழந்து விட்டார்களா? நமது நாட்டில் நிலவிவரும் காட்டுமிராண்டித் தனத்திற்கு மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண் தொழிலாளருக்கு இழைக்கப்படும் பாரபட்சம்,அநீதி ஒரு எடுத்துக்காட்டாகவுள்ளது என்றால் எவரும் வெட்கப்படத் தேவையில்லை. யதார்த்தம் அதுவாகவேயுள்ளது.

மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப்பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மனிதகுலம் வெட்கித் தலைகுனிய வேண்டியதொன்றாகும். இது தொடர்பில் குரல்கொடுத்து நியாயம்பெற முனையாமலிருப்பது மனிதகுலத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்குச் செய்யும் துரோகமாகும். எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம் என்பதுபோல் இன,வர்க்க ரீதியாக சிந்திப்போரின் செயல் அமைந்துள்ளது. கண்டிக்கப்பட வேண்டிய,களையப்பட வேண்டிய இந்த அயோக்கியத்தனமான செயல்களுக்கு முடிவு கட்டுவதற்கு மலையக அரசியல்,தொழிற்சங்க,சமூக,சமய அமைப்புகள் தம்மிடையேயுள்ள தனிப்பட்ட வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு தம்மை நம்பியுள்ள சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பேண வழிகாண வேண்டும். அதுவே இன்றைய தேவை. அவசர, அவசிய தேவை. உரியவர்கள் கவனம் இதில் செலுத்தப்படுமா?

நன்றி- தினக்குரல்