Friday, November 14, 2008

சந்தா பணத்திலிருந்து மலையக மாணவர்களுக்கு புலமை பரிசில் - மாகாண கல்வி அமைச்சர்

மலையக மாணவர்களுக்கு தொழிற்சங்க சந்தா பணத்திலிருந்து புலமை பரிசில் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு கடந்த 12-11-2008 அன்று ஹட்டன சீடா கல்வி நிலையத்தில் இடம் பெற்றது. தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும், மத்திய மாகாணசபை கல்வி அமைச்சருமான எஸ் அருள்சாமி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் அருள்சாமி தெரிவிக்கையில் தொழிற்சங்க சந்தா பணத்திலிருந்து மலையக மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கி அவர்களை சிறந்த கல்விமான்களாக உருவாக்குவதே தமது நோக்கம் என்றார். இம் முன்மாதிரியை பின்பற்றி ஏனைய தொழிற்சங்கங்களும் இவ்வாறு வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றார். வெளிநாடுகளிலுள்ள தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களுக்கு சுற்றுலா செல்வதற்கு நிதி உதவி செய்கின்றது. பெரும் நிதியை சந்தவாக பெற்றுக் கொள்ளும் எமது தொழிற்சங்கங்ளும் இதை கடைபிடிப்பதில்லை. வெறுமனே தொழிற்சங்க போராட்டங்களில் விரயமாக்காமல் கல்வி துறையில் தமது தொழிற்சங்கம் அக்கறை செலுத்துவது குறித்து குறிப்பிட்டார். 5ம் ஆண்டு புலமைப்பரிகா ரூ 500 ஆகவும், உயர்தர வகுப்பில் தேறியவர்களுக்கு 750 ரூபாயும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாயும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவோம் எனக் குறிப்பிட்டார். 70 ஆண்டுகளாக தொழிற்சங்கங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் யாராவது மாணவர்களின் கல்விக்காக புலமைப் பரிசுகளை ஏற்படுத்தினோமா? புலமைப் பரிசை பல்கலைக்கழகம் வரை செய்ய வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். அதை நாம் தொடர்ந்து செய்வோமென்றார்.
இனப்பிரச்சினைத் தீர்வுத் திட்டத்தில் மலையக மக்களின் அபிலாஷைகள் பற்றிய மலையக மக்கள் முன்னணியின் புதிய முன் மொழிவுகள்

இனப்பிரச்சினை தீர்வுக்காக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை கடந்த 10-11-2008 சந்தித்த மலையக மக்கள் முன்னணியினர் மலையக மக்கள் அரசியல் அபிலாசைகளை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஏற்கனவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் தாங்கள் முன்வைத்த முன் மொழிவுகளுடன் மேலும் சில புதிய முன்மொழிவுகளை முன் வைத்துள்ளனர். அந்த விடயங்கள் வருமாறு

இலங்கையில் வாழும் சகல தேசிய இனங்களினதும் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் உண்மையான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். (Genuine Power Sharing) மத்திய, ஊவா, சப்பரகமுவ ஆகிய மாகாணங்களில், மலையக தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து ஓர் அதிகாரப் பகிர்வு அலகு (POWER SHARING UNIT)உருவாக்கப்பட வேண்டும்.

தேவை ஏற்படின் மலையக தமிழர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை தனியாக மீள் வரையறை செய்து இந்தியாவின் பாண்டிச்சேரி முறை போன்று அல்லது உலக நாடுகளில் உள்ள நிலத் தொடர்பற்ற முறைகளை அடிப்படையாக கொண்டு இவ் அதிகாரப் பகிர்வு அலகு உருவாக்கப்படலாம். உதாரணமாக (பெல்ஜியம் முறை)

நாம் முன் மொழிந்திருக்கும் மேற்படி அதிகார பகிர்வலகில் உள்ளடங்காத மலையக தமிழ் மக்கள் பல்வேறு மாவட்டங்களிலும் பரந்து காணப்படுவதால் அவர்களது அரசியல் அபிலாஷைகளையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் ஓர் அபிவிருத்தி சபை (DEVELOPMENT COUNCIL) அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதற்கு பெல்ஜியத்தில் காணப்படும் முறையைப் பயன்படுத்தலாம்.

நாம் முன் மொழிந்த அலகு பின்வரும் விடயங்களை கொண்டிருக்க வேண்டும்: சட்டவாக்க அதிகாரம் முழு அதிகாரத்துடன் கூடிய முதல் அமைச்சரும்அமைச்சர்கள் சபையும், ஆளுநர், காணி அதிகாரத்தோடும், பொலிஸ் அதிகாரத்தோடும் ஏனைய அதிகார அலகுகளுக்கு வழங்கப்படும் அனைத்து அதிகாரங்களும் நாம் முன் மொழிந்துள்ள அதிகார பகிர்வலகுக்கு வழங்கப்பட வேண்டும்.

அபிவிருத்தித் தேவைகளுக்கு வெளிநாட்டு உதவியை பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

மலையக தமிழ் மக்களின் இன விகிதாசாரத்திற்கேற்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலான தேர்தல் முறைமை மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய எல்லை நிர்ணயக்குழு அமைக்கப்பட வேண்டும்.

மலையக தலைமைகள் வரவுசெலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்

2009 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம், நாட்டு மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, ஏற்கனவே பொருளாதார சுமைக்குள் சிக்கியிருக்கும், மக்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளவுயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டுக்கு பெருமளவு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தோட்டப்புற மக்களின் அத்தியாவசியப் உணவுப் பொருளான கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தோட்டத் தொழிலாளர்களே பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மலையக தலைமைகள் அம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது உண்மையானால் எதிர் வரும் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஐ.தே.க மாத்தளை மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாட்களில் வேலை வழங்கி தொழிலாளர்களை தோட்டக் கம்பனிகள் ஏமாற்றுகின்றனர்.

தோட்டக் கம்பனிகள் விடுமுறை நாட்களில் வேலை வழங்கி, ஆண், பெண் தொழிலாளர்களை ஏமாற்றி வருவதுடன் அவர்களது உழைப்பை சுரண்டுவதாக சுட்டிக்காட்டியுள்ள தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி.அய்யாத்துரை இதற்கு தோட்டக் கமிட்டித் தலைவர்கள் துணைபோவது கண்டிக்கத்தக்க விடயமாகும் எனத் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுமானால் சாதாரண நாட்களைப் போல 16 கிலோவிற்கான சம்பளப் பணமே வழங்கப்பட வேண்டும். இதுவே தொழிற்சங்கத்தின் சட்டமும் நீதியுமாகும். ஆனால் தோட்டக் கம்பனிகள் ஒன்றரை நாள் சம்பளத்திற்கு 24 கிலோ கொழுந்து பறிக்கும்படி தோட்ட நிர்வாகங்கள் நயவஞ்சகமாக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர்.

உலகச் சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி- தொழிலாளர்களுக்குரிய கொடுப்னவுகளை வழங்க நிர்வாகம் மறுப்பு

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டத் தொழிலாளர்களுக்குரிய வேலைவாய்ப்பினையோ அல்லது உரிய சம்பளத்தையோ வழங்குவதற்கு தோட்ட நிர்வாகங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மாதமொன்றுக்கு 24 நாட்கள் வேலை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 12 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்படும் 12 நாட்களுக்கு அரை நாள் சம்பளப் பணமே வழங்கப்படுகின்றன. மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. மாதத்தில் 20 க்கும் மேற்பட்ட நாட்கள் வேலை செய்தால் மாத்திரமே 75 சதவீத வரவு கொடுப்பனவு, மேலதிக கொடுப்பனவுகள் உட்பட நாளொன்றுக்கு தலா 290 ரூபா சம்பளமாக தொழிலாளியொருவருக்கு கிடைக்கப்பெறும். இல்லையெனில் நாளொன்றுக்கு தலா 200 ரூபா வழங்கப்படுகின்றன. தற்போது இந்த 200 ரூபாவிலும் 1/2 பேர் என்ற பெயரில் நாளொன்றுக்கு தலா 100 ரூபா சம்பளமாக வழங்கப்படுகின்றன. இரத்தினபுரி கலபட (கீழ்ப்பிரிவு) தோட்டம்நிவித்திக்கலை, தொலஸ்வலை தோட்டம், கரவிட்ட பகுதி தோட்டங்களில் நாளொன்றுக்கு 1/2 நாள் சம்பளமே (100ரூபா) வழங்கப்படுகின்றன. நாள் முழுதும் வெயிலும், மழையிலும் கஷ்டப்பட்டும் தமக்கு தலா 100 ரூபா சம்பளம் வழங்கப்படுவது என்பது மிகவும் கொடுமையான விடயமென சுட்டிக்காட்டும் தொழிலாளர்கள் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று கோரி, தத்தமது தொழிற்சங்களில் முறையீட்டுள்ளனர். இதேவேளை கலபட தோட்டத்தில் அக்டோபர் மாதம் 20 நாட்கள் வேலை செய்த போதிலும் நாளொன்றுக்கு (100 ரூபா) 1/2 பேர் என்றடிப்படையில் 10 நாட்களுக்கான சம்பளமே வழங்கப்பட்டுள்ளன இதனால் இத்தோட்டத் தொழிலாளர்கள் அக்டோபர் மாதச் சம்பளத்தை வாங்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க பெல்மதுளை ரில்ஹேன தோட்டத்தில் சுழற்சி முறையிலான வேலை வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.