Saturday, October 20, 2018

வாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்!

மலையக மக்களின் பார்வையில் சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல; கானல் நீரும்கூட!
மலையக மக்களின் உரிமைகளுக்காக ஜே.வி.பி தொடர்ந்து வெளிப்படையாகவே குரல்கொடுத்து வந்திருக்கிறது. அதாவது இதயசுத்தியுடன், ஆனாலும் மலையகப் பிரதேசங்களில் ஜே.வி.பியை ஆதரிக்கும் தமிழர்கள் குறைவு. ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா அல்லது கம்யூனிசம், சமதர்மம் என்பதை இம்மக்கள் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்களா?
அருமையான கேள்வி! மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம் மலையக மக்களின் உரிமைகளுக்காக மட்டுமல்ல, சலுகைகளையும் வழங்க மேண்டுமென குரல் கொடுப்பவர்கள். இருந்தபோதும் மலையக மக்கள் அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்களை தமது விருப்பத் தெரிவாக எப்போதும் வைத்துக் கொண்டுள்ளனர். அதன் பின்னணியில் இருந்தே அரசியலைத் தெரிவு செய்கின்றனர்.
தமக்கான அரசியல் தெரிவை, கட்சிகளின் கொள்கை அடிப்படையிலும் சமூகத்தை கட்டியெழுப்பும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டு அடிப்படையிலும் தூர நோக்குடனும் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, வெல்லப்போவது யார் என்று உன்னிப்பாக அவதானித்து அதன் பின் அணிதிரளும் சாமர்த்தியமும் உள்ளது. சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல, கானல் நீரும்கூட, அவர்களின் கருத்தியலில்!
தோட்டத் தொழிலாளியின் ஒருநாள் அடிப்படைச் சம்பளம் குறைந்தபட்சம் அரச ஊழியரின் ஒருநாள் சம்பளமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளீர்கள். ஆனால் 19 வருடங்களில் 399 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியிருக்கக்கூடிய கம்பனிகள் இதற்கெல்லாம் அசரும் என நினைக்கிறீர்களா?
கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கரிசனை காட்டுகிறார்களோ இல்லையோ, தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை பெறும், கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கரிசனை காட்டுகிறார்களா என்பதுதானே முக்கியம்! ஆனால் அப்படி இல்லை என்பதுதான் முதல் பிரச்சினை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஆழமான கருத்தை முன்வைத்து இதயசுத்தியுடன் செயற்படுவதில்லை. அதுதான் உண்மையும் பிரதான காரணமும் ஆகும், பெருந்தோட்டத்தை தற்போது நிர்வகிக்கும் கம்பனிகள் அனைத்துமே பல்தேசிய கம்பனிகளாகும். அவை இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பதால் சம்பளத்தை உயர்த்தி வழங்குவதில் பின்வாங்குகிறார்கள்.
கம்பனி எனும் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி என்ற தொழிற்சங்கங்கள் இடம் கொடுக்காது. உதாரணத்திற்கு 1999 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு தொழிலாளியின் அடிப்படை நாட் சம்பளம் 2001 ஆம் ஆண்டு வரைக்கும் 101 ரூபாவாக இருந்தது. 2002 இல் புதிய கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி இருவருட இடைவெளியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் எந்தளவுக்கு தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டுகின்றன என்பதை தோட்டத் தொழிலாளர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.
சம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சங்கத் தரப்பு, முதலாளிகளுக்கு பழகிப்போன தரப்பாகிப் போய்விட்டால் ஆணித்தரமாக பேசக்கூடிய நிலையில் அத்தரப்பு இல்லை என்றும் எனவே வேறு சங்கங்களும் சங்கத்தரப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் சங்கத் தரப்புக்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஆலோசனை சபை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உண்மையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுடன் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைந்து பங்குதாரர்களாக இருக்க வேண்டும், அப்போதுதான் பழைய தொழிற்சங்கங்கள் வளைந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இல்லாவிட்டால் பழைய குருடி கதவை திறவடி என்ற கதைதான். அண்மையில் தனியார் வானொலியொன்றில் நடைபெற்ற கருத்தாடலின்போது என்னுடன் கலந்து கொண்ட தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர என்னிடம் நீங்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுங்கள் என்றார். 75 வீதம் என்ற வரையறை இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து தொழிற்சங்க தரப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்கூட.
கம்பனிகளை பனங்காட்டு நரிகள் என்று வைத்துக்கொண்டால் தொழிலாளர் தரப்பு எப்படியிருக்க வேண்டும்?
கம்பனிகள் பணங்காட்டு நரிகளாயின் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் குள்ள நரிகள்தான்!
கூட்டு ஒப்பந்தம் என்பது சம்பள உயர்வை மட்டும் பேசும் ஒரு உடன்படிக்கையல்ல. ஆனால் சமீப காலமாக அப்படித்தான் அது பார்க்கப்பட்டு வருகிறது. நீங்கள் எப்படி இதனை அவதானிக்கிறீர்களா?
உண்மையில் சம்பள உயர்வுக்கு மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்புரி சேவை மற்றும் தொழிலாளர்களின் சலுகை போன்றவற்றில் தொழிற்சங்கங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டிய ஒன்றாக இருந்தபோதும் தற்போது 75 வீதமான தொழிலாளர்களின் நலன்புரி சேவைகள் வெட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள உயர்வு என்ற கோட்பாடு மட்டும் பழக்கத்தில் உள்ளது.
இது முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். தற்போதைய பூகோளமய பொருளாதாரத்துக்குள் சிக்குண்டு இருக்கும் இலங்கை வாழ் தோட்ட மக்கள் பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சேவைக் கட்டண உயர்வு என்பவற்றால் ஏனைய சமூகத்தை விடவும் தோட்டத்து சமூகம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறது. அதற்கு தற்காலிக தீர்வாக வாழ்க்கைச் செலவுக்கேற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
உற்சாகம் பெற்றிருக்கும் மலையக வீடமைப்பு பற்றி...?
வீடுகள் வழங்குவதை பாராட்ட வேண்டும், இதில் உரித்து என்னும் உரிமையும் உள்ளடக்கப்பட வேண்டும். தற்போது ஏனைய சமூகத்துக்கும் வீடுகள் வழங்கும்போது ஏதாவதொரு காணி உரித்து பத்திரம் வழங்கப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த உரித்து பத்திரமும் வழங்கப்படுவதில்லை. வீடு வழங்குவது தொழிலாளர்களின் காதில் பூ வைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கக்கூடாது.
தற்போது வெளிவாரி முறை நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த வெளிவாரிமுறை தொடரும்போது கம்பனிகள் சம்பளம், விடுமுறை, சலுகைகள் என்பனவற்றை வழங்க வேண்டிய அவசியமே இல்லாது போய்விடும் அல்லவா? இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது என்றால், தொழிற்சங்க அரசியல் கட்டமைப்பும் இல்லாமல் போய்விடும், அப்படித்தானே?
இந்த முறையானது தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் ஒரு முறை. இம்முறையால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியையும், இழப்பையும் சந்திக்க நேரிடும். ஏன் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றையும் கூட. இதனால் தொழிற்சங்கங்கள் பாரிய பின்னடைவை அரசியல் ரீதியாக சந்திக்க நேரிடும்.
இம்முறை தொடர்பாக கம்பனிகளுடன் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அர்த்தபுஷ்டியான கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும். அதனுடன் அவர்களுக்கு வழங்கப்படும் காணி சம்பந்தமாக ஒரு உடன்படிக்கைக்கு வருவதோடு அதற்கான காலத்தையும் நிர்ணயிக்க வேண்டும். அது மட்டுமல்ல, முடிவில் அந்த காணிகளை தொழிலாளர்களுக்கே உரிமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்தோட்டக் குடியிருப்புகள் புதிய கிராமங்களாக மாறுவது பற்றி ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன?
வரவேற்கத்தக்கது. நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல் காணி உரித்துடன் அமையப்பெற வேண்டும். ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய காலப்பகுதியில் தமிழ் முற்போக்கு முன்னணி பெருந்தோட்ட சமூகத்துக்காக பல காரியங்களைச் செய்துள்ளது. எனினும் இ.தொ.கா.வின் செல்வாக்கு அப்படியேதான் இருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இரண்டையும் வெவ்வேறாக பார்ப்பதும் பிழையானதாகும். ஏனென்றால் மலையக தமிழ்த் தலைமைகள் ஆட்சி பீடத்திலிருக்கும் அரசாங்கத்தில் ஒரு காலையும் மலையகத் தலைமையில் மறு காலையும் வைத்துள்ளன. இதில் யாரும் விதிவிலக்கல்ல. குறிப்பாக 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் ஆட்சியமைப்பதற்கு அமரர் பெ. சந்திரசேகரன் முட்டுக்கொடுத்தார். அதற்கு முன்னரும் மலையக அரசியல் முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் மகிந்தவின் அரசில் முற்போக்கு அணி, பிறபோக்கு அணி என அனைத்து தலைவர்களும் அனைவருமே அமைச்சர்கள். எனவே, இவர்களில் யார் மலையக மக்களுக்கு சேவை செய்தவர்கள் என்பதை விட எவர் கட்சி தாவாதவர்கள் என்பதே முக்கியமானது. உதாரணத்துக்கு கடந்த அரசில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், திகாம்பரம், போன்றோரை குறிப்பிடலாம்.
மலையக தமிழ் சமூகத்துக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
மலையக சமூகம் அரசியல் ரீதியில் அணித்திரள வேண்டும். இது வரைக்கும் இச்சமூகம் அரசியலை முன்னிறுத்தி அணிதிரளவில்லை. சந்தர்ப்பத்துக்கும், பழக்க தோசத்துக்காகவுமே அணிதிரண்டார்கள். அதனால் அனைத்து பக்கமும் தோல்வியுற்றவர்கள் தோட்ட தொழிலாளர்களே, அத்துடன் பொருளாதார ரீதியில் கவனம் செலுத்த வேண்டும். மாறிவரும் உலக பூகோளமய பொருளாதார முறைக்கு தாம் எவ்வாறு முகம் கொடுப்பது என்பதை யோசித்து நீதியான தேசம், நியாயமான சமூகத்தில் அடிமையில்லா மனிதனாக வாழ தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதோடு தேசிய அரசியல் நீரோட்டத்தில் தம்மை பங்காளியாக்கிக் கொள்ள வேண்டும்.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்
பேட்டி கண்டவர்- பி.வீரசிங்கம்
நன்றி- தினகரன் வாரமஞ்சரி

Wednesday, October 17, 2018

மலையகத்தில் மேலும் மண்சரிவு அபாயம்

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை சில தினங்களுக்கு தொடரும் அதேநேரம் மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை,கண்டி, மாத்தளை பகுதிகளில் தொடர்ந்தும் சுமார்100 முதல் 150 மில்லிமீற்றர் வரை கடும் மழை பெய்யுமென்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மலையகத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் இயலுமானவரை அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இப்பிரதேசத்திற்கூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அவசர தேவைகளின் நிமித்தம் பிரதேச அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மத்திய , ஊவா, வடமத்திய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் 100 மில்லிமீற்றர் வரை கடும் மழை பெய்யுமென்றும் இக்காலப்பகுதியில் மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வயல்வெளிகள், மைதானங்கள்,குளங்கள், நீர் நிலைகள் போன்ற திறந்த வெளிகளில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மின்சார உபகரணங்களை கவனமாக கையாளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நன்றி- தினகரன்

இலங்கை தேயிலை குறித்து பிரசார நடவடிக்கை

இலங்கை தேயிலை குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை தேயிலை சபை தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், அடுத்த மாதம் ஆரம்பமாகும் பிரசார நடவடிக்கைகள் ரஷ்யாவிலும் அதனைத் தொடர்ந்து சீனாவிலும் நடைபெறும் என இலங்கை தேயிலை சபையின் தலைவர் லுசிலி விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக 350 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, October 16, 2018

ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுத்தே தீருவேன்

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனம் அடிப்படைச் சம்பளத்தை 100 ரூபாவாக உயர்த்த இணக்கம் தெரிவித்துள்ளப்போதிலும், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதில் இம்முறை உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள இ.தொ.காவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், நூறு ரூபாய் அதிகரிப்பைத் தாம் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.  
ராஜகிரியவில் நேற்று (15) நடைபெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரயைாடலின் பின்னர், அதில் கலந்து கொண்ட அனைத்துத் தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஆயிரம் ரூபாய் பெற்றுத் தருவதற்குத் தேவையான தொழிற்சங்க நடவடிக்கைகளையும் அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்” எனத் தெரிவித்தார்.  
சம்பள உயர்வு விடயத்தில் அழுத்தம் கொடுத்தால் மாத்திரமே, முதலாளிமார் சம்மேளனம் இறங்கி வருவார்கள் எனத் தெரிவித்த அவர், முதலாவது பேச்சுவார்த்தையில் 10 சதவீத அதிகரிப்பிலிருந்து தற்போது மூன்றாவது பேச்சுவார்த்தையின்போது 20 சதவீத அதிகரிப்புக்கு முதலாளிமார் சம்மேளனம் வந்திருக்கிறார்கள் என்றும் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பதுபோல தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் மாத்திரமே, ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற ந​ம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். 
இந்நிலையில்,கொழுந்து பறிக்கும் அளவுக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் எனும் கோரிக்கையையும் தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், எனினும் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். 
மேலதிக கொடுப்பனவுகள் எமக்கு வேண்டாம், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக்கிவிட்டு பிறகு ஏனையவற்றைப் பேசிக் கொள்ளலாம். ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றோடு சேர்த்து, நாள்சம்பளத்தை 940 ரூபாயாக ​கம்பனிகள் கணக்குக் காட்டுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். 
ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார். இதன்போது அடுத்த  கட்டப் பேச்சுவார்த்தை எப்போது என வினவப்பட்டமைக்கு, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களோடு கலந்துரையாடித் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
இதன்போது கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்துகொள்ளப்பட வேண்டும் என்றோ, நிலுவைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றோ தேவைப்பாடுகள் இ.தொ.கவுக்கு இல்லை என நீங்கள் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறீர்களே என வினப்பட்டமைக்கு, நீதிமன்ற விடயத்தை நீதிமன்றில் பேசுவோம் என அக்கட்சியின் உப தலைவர் சட்டத்தரணி மாரிமுத்து பதிலளித்தார். 

Wednesday, October 10, 2018

தொழிலாளர் சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும்

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு ஒரு பொறியாக மாறியிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.  
சென்ற முறை இந்தக் கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போது அரசாங்கத்தின் அமைச்சர்கள் தலையிட்டு இந்தச் சிக்கலைத் தோற்றுவித்திருப்பதாகவும் இதனால், கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் மேலும் ஈராண்டுகளுக்குத் தொடர்வதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு வழிவகுக்கப்பட்டிருப்பதாகவும் அருள்சாமி தினகரனுக்குத் தெரிவித்தார்.
1992ஆம் ஆண்டிலிருந்து கைச்சாத்திடப்படும் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள அனைத்துச் சரத்துகளும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பையும் தொழில் உத்தரவாதத்தையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளபோதிலும், கடந்த    2016ஆம் ஆண்டு ஒக்ேடாபரில் உடன்படிக்ைக கைச்சாத்திடப்பட்டபோது உடன்படிக்ைகயில் இரண்டாவது சரத்தாக, ஏதாவதொரு காரணங்களுக்காக உடன்படிக்ைக கைச்சாத்திடப்படுவது தாமதமாகும் பட்சத்தில், அதே உடன்படிக்ைக அமுலில் இருக்கும் என்ற விடயம் சேர்க்கப்பட்டுள்ளது. இது நிலுவைச் சம்பளம் பெறுவதையும் பேரம்பேசுதலையும் பலவீனப்படுத்தியிருப்பதாக அருள்சாமி சுட்டிக்காட்டினார்.  
ஆகவே, இம்முறை எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்கள் அடிபணியாதென்றும் அவர் தெரிவித்தார். தொழிலாளர் நலனில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதற்குக் காங்கிரஸ் தயாராக உள்ளதென்றும் அவர் கூறினார்.  
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்க கம்பனிகள் மறுத்துவிட்டால், அதனைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கே உண்டென்று தெரிவித்த அருள்சாமி, இதற்காகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஆதரவையும் பெற்றுக்ெகாண்டு அடுத்த கட்ட நடவடிக்ைகக்குத் தயாராகவுள்ளதாகவும் கூறினார்.  
வெள்ளிக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பெறுபேற்றைப்பொறுத்து வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின்போது, தொழிலாளர்களுக்கு 1200 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்குமாறு கம்பனிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டுமெனக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  
தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதாக தலவாக்கலையில் நடைபெற்ற கூட்டமொன்றில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததைச் சுட்டிக்காட்டிய அருள்சாமி, இம்முறை ஆயிரம் ரூபாய் அதிகரிப்பை கம்பனிகளாக முன்வந்து வழங்கினால், ஏற்றுக்ெகாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாகவும் இல்லையேல் அரசாங்கத்தைக் கொண்டு 1200 ரூபாய் அதிகரிப்புக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.  
அவ்வாறு அரசாங்கம் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கம்பனிகளுக்கு உத்தரவிட்டாலும், கூட்டு ஒப்பந்தத்தில் சங்கங்கள் கைச்சாத்திட்டதன் பின்னரே அந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே, கூட்டு ஒப்பந்தம் இருப்பது தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பானது என்று அருள்சாமி மேலும் குறிப்பிட்டார்.  
தொழிலாளர்களுகுத் தற்போது நாளொன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாய், விலைக்கேற்ற கொடுப்பனவு 30 ரூபாய், உற்பத்தி ஊக்குவிப்பாக 140 ரூபாய், 75 வீதம் பணிக்குச் சென்றால் 60 ரூபாய் என மொத்தம் 730 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 60 ரூபாயும் 140 ரூபாயும் வழங்காதிருப்பதற்காகத் தோட்ட நிர்வாகங்கள் நேர்மையற்ற விதத்தில் செயற்படுவதாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறித்த இலக்கு வேலையைப் பூர்த்தி செய்தால் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்காதிருப்பதை நிர்வாகங்கள் உறுதிசெய்துகொள்ளும் அதேவேளை, மாதம் ஒன்றுக்கு 75 வீதம் வேலை வழங்காமல் தவிர்த்து 60 ரூபாயையும் தவிர்த்துவிடுவதில் நிர்வாகங்கள் சாமர்த்தியமாகச் செயற்படுவதாகத் தொழிலாளர்கள் குறைகூறுகிறார்கள். ஆக, 630 ரூபாய் மாத்திரமே நாட்சம்பளமாகக் கிடைக்கிறது.  
எனவேதான், இந்தக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து மொத்தமாக ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைக் கோரியிருப்பதாகத் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் சுட்டிக்காட்டினார். இந்தக் கோரக்ைகயை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம் கடந்த (17/08/2018) பேச்சுவார்த்தையில் ஐம்பது ரூபாய் அதிகரிப்பு வழங்குவதாகவும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மேலும் 25ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- தினகரன்

Saturday, October 6, 2018

குட்டக் குட்டக் குனிந்தது போதும் என்ற உரத்த சிந்தனை மலையக சமூகத்தில் எழ வேண்டும்!

மலையகத்தின் வரலாறு இந்தியத் தமிழர்கள் ஈழமண்ணைத் தழுவியபோது ஆரம்பித்ததல்ல; அதற்கும் நூறு ஆண்டுகள் பழை மையானது. உலக காலனித்துவம் தலைவிரித்தாடியபோது கீழைத்தேய நாடுகள் அதற்கு கட்டுண்டு வாழ்ந்த காலமது. 1700 களில் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் பல்வேறு மேலைத்தேய நாடுகள் ஆபிரிக்க, இந்திய நாடுகளை கைப்பற்றிக் கொண்டு தங்கள் நாடுகளின் பொருளாதார துறையை மேம்படுத்திக் கொண்டன. இக்காலகட்டத்தில் ஆபிரிக்க நாடுகள் காலனித்துவத்தில் விடுதலை பெறவே! பிரிட்டிஷ் மாத்திரம் இந்திய, இலங்கை போன்ற நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தமது பலத்தை பிரயோகித்தன.
பூர்வீக இந்திய மக்கள் நூல் நூற்பதையும், நிலத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தையும் நம்பி வாழ்க்கை நடத்தினர். இதனை முதலில் ஊக்குவித்த பிரிட்டிஷ் அரசாங்கம் உற்பத்திகளை உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது. பிரிட்டிஷ் ஏற்றுமதியை விட இந்திய ஏற்றுமதி உலக சந்தையை ஆக்கிரமிப்பதை பார்த்த பிரிட்டிஷ் அரசு, உடனடியாக சுயதொழில் முறையை ஒடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கோரிக்கையொன்றை முன்வைத்தது. இவற்றோடு பிரிட்டிஷாரின் கைத்தொழிலை விரும்பாத மக்களாக இந்தியர்கள் இருந்தமையும் இதற்கு காரணமாகும்.
நிலத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய முறையை குறைக்க வேண்டி பிரிட்டிஷ் அரசு நிலத்தினை அடிப்படையாக கொண்ட விவசாயம் செய்பவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் தாக்குப்பிடிக்க முடியாத வரியை அறவிடவே அதிகமானோர் தன் நிலத்தினையும், பூர்வீக விவசாய முறையையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
1835- - 1840 கால கட்டங்களை நிலப்பிரபுத்துவ முறையும், ஜாதி அடிப்படையாக வர்ணாச்சிர தர்மமும் இவற்றோடு உணவுப் பஞ்சம் ஏற்பட ஆரம்பித்தது. பிரிட்டிஷார் கொண்டுவந்த வரிவிதிப்பு முறைகள் இதற்கான காரணமாகும். 1770, 1784, 1804, 1937, 1801ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்த பஞ்சத்தில் தஞ்சாவூர் மாவட்டம் நாற்பது இலட்சம் தமிழர்களை இழந்தது. இவற்றுடன் இந்தியாவில் தலைவிரித்தாடிய ஜாதி முறை, தான் விரும்பிய தொழிலை செய்யவும் வழிகொடுக்கவில்லை. இதனை பிரிட்டிஷார் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
இதே காலகட்டத்தில் ஈழத்தில் பொருளாதாரத்துறையை மேம்படுத்தவும், பெருந்தோட்டப் பொருளாதாரத்துறையை வளர்ச்சி செய்யவும் பிரிட்டிஷார் எத்தனித்தனர். பிரிட்டிஷில் உள்ள பணம் படைத்த முதலாளிகள் இலங்கையில் நிலம் மலிவாக கிடைக்கவே அதிகமானோர் இலங்கையில் முதலிடு செய்தனர்.
இதேவேளை இந்திய தமிழ் மக்கள் வறுமையில் வாடியபோது இவர்களுக்கு பல காரணங்களைக் கூறி வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஊக்குவித்தனர். 150 ரூபாய்க்கு நல்ல நிலம் கிடைத்த காலத்தில் 200 தொடக்கம் 500 ரூபாய் சம்பாதித்து வரலாம் என்றும், நல்ல உணவு. தங்குமிடம் கிடைக்கும் என்றும் இலங்கை சென்றோர் ஜாதி முறையை விரும்பாதவர்களாக இருப்பர் என்றும் பல காரணங்கள் கூறி ஏமாற்றினர் என்பதே உண்மை. உதாரணமாக கூறினால் தேயிலை மரத்திற்கு அடியில் பொன்னும், மாசியும் கிடைப்பதாக கூறினர் என்பதும் வரலாற்று உண்மையாகும். இவ்வாறு இந்தியத் தமிழர்களை கொடித்தடிமைகளாக இலங்கைக்கு கொண்டுவர முயன்றது பிரிட்டிஷ் அரசாங்கம்.
உலக சந்தையில் கோப்பி விலை முன்னிலையில் காணப்பட்டது. எனினும் ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றுவிடவே கோப்பித் தோட்டங்களில் வேலைச் செய்தோரும் அதைக் கைவிட்டனர்.
ஆனால் பிரிட்டிஷ் அரசு மட்டும் சில நாடுகளை தன் வசம் வைத்திருந்தமையால் கோப்பிப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தது. இதற்காக முதன் முறையாக இந்தியாவிலிருந்து 14 இந்தியத் தமிழர்களை வேலைக்கமர்த்தினர். இது கம்பளையில் சிங்கபிட்டிய என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு 1835- - 1840 ஆண்டுகளுக்கு இடையில் பெருந்தொகையான மக்களை கோப்பித் தோட்டங்களில் இறக்கியது பிரிட்டிஷ் அரசு. இருப்பினும் கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட ஒருவகை நோயின் காரணமாக இப் பயிர்ச் செய்கை ஆரம்பித்த அதே வேகத்தில் மண்ணைக் கௌவியது.
இவ்வாறான காலகட்டத்திலேயே 1867ஆம் ஆண்டு தெல்தோட்டை லூல்கந்துர என்ற இடத்தில் ஜேம்ஸ் டெய்லர் இலங்கையில் தேயிலையை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்தே ஈழமண்ணுக்கு பல்லாயிரம் மக்களை தோணிகளில் ஆட்டுமந்தைகளாய் கொண்டு வந்து இறக்கினர். 1827ஆம் ஆண்டு 10,000 தொழிலாளர்களும், 1877ஆம் ஆண்டுகளில் 145,000 தொழிலாளர்களும், 1947ஆம் ஆண்டு வரை எட்டு லட்சம் இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களும் இலங்கை மண்ணை வந்தடைந்தனர். இந்தியாவில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு தோணிகள் மூலம் இவர்களை கொண்டு வந்தனர். 100 பேர் வரை ஏற்றக் கூடிய தோணிகளில் 500 பேர்வரை ஏற்றி வந்தனர். இவ்வாறு வந்த பலர் தோணிகள் மூழ்கி இறந்தோரும் உளர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் மூழ்கி 120 பேர் வரை இறந்து போன காலகட்டமும் இதுவே.
தலைமன்னாரில் கொத்தடிமைகளாக வந்திறங்கியவர்கள் மலைகளும், பற்றை வனாந்தரமுமாக இருந்த மலைநாட்டை கால் நடையாக வந்து பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். இவ்வாறு கால்நடையாக வந்த மக்களும் கடுங்குளிர் காரணமாகவும், அதிக மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகவும், பாம்பு, அட்டை, பூராண் போன்ற பூச்சி இனங்கள் மற்றும் விலங்குகள் காரணமாகவும் மாண்டுபோயினர். 1867ம் ஆண்டு புறப்பட்ட 639 பேரில் 186 பேர் மட்டுமே மலையகத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தவர்களே இந்த மண்ணை தேயிலை வளரும் பொன் பூமியாக மாற்றினர்.
இது மட்டுமா? மலையக மக்களை தாக்கிய கொடுமைகள் முடிந்து விட வில்லை. 1948ம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கையர், 1920ம் ஆண்டு இலங்கையில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்ட வாக்குரிமையைப் பறித்துக் கொண்டனர். இதனால் எட்டு லட்சத்து ஐம்பதாயிரமாக இருந்த மலையக மக்களின் வாக்குரிமையில், 7 லட்சம் பேர் வாக்குரிமையை இழந்தனர். பிரட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 33 சதவீதமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக குறைந்தது.
அப்படியும் விட்டுவிடவில்லை. இந்த மலையகத் தமிழர்களை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் என்றபேரில் மீண்டும் கத்தியை வீசினர். 1964ம் ஆண்டு 8 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த இந்தியத் தமிழர்களை அரைவாசியாகக் குறைக்கும் ஒப்பந்தமே இது.
வளரவளர கவ்வாத்து செய்யப்படும் தேயிலை மரங்களைப் போல இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களும் அவ்வப்போது கவ்வாத்து பண்ணப்பட்டு வந்துள்ளனர்.
கண்டி, ஹற்றன், நுவரெலியா, பதுளை, மாத்தளை, புஸல்லாவை என்று பல்வேறு பிரதேசங்களில் பரவிக் காணப்படும் பெருந்தோட்ட சமூகம் இன்றைக்கும் பாட்டாளி வர்க்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
உலகச் சந்தைகளில் அதிக இலாபத்தை ஈட்டித்தரும் இலங்கைத் தேயிலையுடன் சம்பந்தப்பட்ட மக்களின் நிலை மட்டும் மாறாதுள்ளது. எத்தனையோ அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டும் லயன் வீடுகள் மட்டும் இன்னும் மாறாமல் இருப்பது கவலைக்கிடமானதே. இவ்வாறான நிலையை மாற்றி அமைப்பது இந்தியாவின் 4000 வீடமைப்புத் திட்டாமா? இல்லை 1000 ரூபாய் சம்பளமா? எதுவாயினும் இவை மட்டும் மலையகத் தமிழர் வாழ்வை மாற்றியமைக்காது.
இலங்கை நாட்டில் ஏனைய மக்களுடன் ஒப்பிடும் போது வாழ்க்கைத்தரம் குறைந்திருக்கும் இம் மக்களின் நிலையை முழுமையாக மாற்ற வேண்டியது எல்லோரினதும் கடமையாகும்.
இது தனிபட்ட அரசாங்கத்திற்கோ அல்லது தொழிற்சங்கங்களுக்கோ உரியதல்ல. இன்றைய இளைய சமுதாயத்தினரையும் இதுசாரும். எனவே இவ்வாறு மலையக மக்களின் சமூக, பொருளாதார வாழ்வியல் உயர்த்தப்படும்போதே இவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது ஐயமில்லை.
தயா. தினேஸ்குமார்,  கண்டி
நன்றி- தினகரன் வாரமஞ்சரி


Friday, October 5, 2018

தொழிற்சங்க வரலாற்றில் அழிக்க முடியாத பெயர் ஏ. அஸீஸ்

சுதந்திரத்துக்கு முன்னரும் அதற்கு பின்னருமான இலங்கையின் அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றினை பின்னோக்கிப் பார்க்கின்ற போது அந்த போராட்ட வரலாற்றுப் பதிவில் ஏ. அஸீஸ் என்ற நாமம் தனித்துவம் மிக்கதாகவே காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டுத்துக்காக முதலில் தலைமை ஏற்ற ஒரு தலைவராக போற்றப்படுகின்ற அஸீஸ் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்த வர்த்தக குடும்பத்தில் பிறந்தவராவார்.
இலங்கை தோட்ட தொழிலாளர் போராட்ட வரலாறு வெறுமனே இங்கு வாழ்ந்த இந்திய தோட்ட தொழிலாளரை மட்டும் வைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் இந்த வரலாற்றின் ஆரம்பமே ஒரு சிங்கள தோட்டத் தொழிலாளியின் உயிர்த்தியாகத்துடனேயே ஆரம்பமாகின்றது. அக்கரப்பத்தனையில் பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பலியான ஏப்ரகாம் சிஞ்ஞோ என்ற சிங்கள தோட்டத் தொழிலாளியே தொழிற்சங்க வரலாற்றின் ஆரம்பமெனலாம்.
அந்த மரணம் காரணமாக எழுந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஏ. அஸீஸ் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அணிதிரட்டி ஏப்ரகாம் சிஞ்ஞோவின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று உரிமைப்போராட்டுத்துக்கான ஆரம்பப் புள்ளியை இட்டார்.
1943 ஆம் ஆண்டில் ஒரு நாள் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பிரதிவாதியாக நிறுத்தப்பட்ட அஸீஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் உரையாற்றியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டார். என்றாலும் நீதிமன்றத்தின் ஜுரி சபை அவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியது. இந்த ஜுரி சபையின் முடிவை பிரிடிஷ் பிரஜையான நீதிபதி ஏற்றுக்கொண்டு கசப்பான மருந்தை அருந்துவது போன்று அந்த தீர்ப்பை விருப்பமின்றியே வழங்கினார்.
1959 இல் பலாங்கொடையிலுள்ள பிடியாகல தோட்டத்துக்குள் அனுமதியின்றி நுழைந்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது அஸீஸ் உட்பட ஏனையவர்களை இரண்டு மாதங்களுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அந்தத் தீர்ப்புக்கு எதிராக அஸீஸ் உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டு அதே தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. அஸீஸ் அதிலும் சேர்ந்து போகவில்லை அந்தத் தீர்ப்புக்கு எதிராக இங்கிலாந்தில் பிரிவுக்கவுன்ஸிலுக்கு மேல் முறையீடு செய்தார். அந்த நீதிமன்றம் அஸீஸுக்கு சார்பாக தீர்ப்பளித்தது. அன்று முதல் எந்த ஒரு தோட்டத்திற்குள்ளும் தொழிற்சங்கங்கள் நுழையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இது அஸீஸின் போராட்டக் குணத்தின் மேன்மையை பறைசாற்றி நிற்கின்றது.
இந்தியாவின் மகாத்மா காந்தி பிறந்த போர்ப்பந்தரில் 1912 ஒக்டோபர் மாதம் 06ம் திகதி வர்த்தகர் குலாம் ஹுசையின் ரேமுக்கு மகனாகப் பிறந்தார். சொந்த ஊரில் படித்துப் பட்டம் பெற்ற அஸீஸ் இலங்கையில் தனது தந்தையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இலங்கை வந்தார். ஆனால், இங்கு வந்த அஸீஸ் வந்த நோக்கத்தை கைவிட்டுவிட்டு பாட்டாளி வர்க்கமான தோட்டத் தொழிலாள மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அஸீஸின் ஆங்கிலப் புலமையும் உறுதியான மன நிலைப்பாடும் அன்று ஏகாதிபத்திய ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக காணப்பட்டது. எதற்கும் அஞ்சாத அஸீஸ் அதே பயணத்தை முன்னெடுத்துச் சென்றார்.
1939 இல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இந்திய தொழிலாளர் சங்க கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார். அது அவரை மலையக மக்களின் மனங்களை ஈர்த்தெடுத்துக்கொண்டது. அஸீஸுடைய பணி இன, மத, மொழி கடந்த மனித நேயமிக்கதாகவே காணப்பட்டது. அவருடைய ஆற்றல் இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமல்ல ஆசிய, ஆபிரிக்க பிராந்திய மெங்கும் வியாபித்துக் காணப்பட்டது. ஒருதடவை மகாத்மா காந்தியை சந்தித்த அஸீஸ் நீண்ட நேரம் நடந்த வண்ணமே பேசிக்கொண்டிருந்தார். அப்போது மகாத்மா காந்தி அஸீஸ் அவர்களிடம் கேட்டார். இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவை தேர்ந்தெடுப்பது நல்லதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அஸீஸ் இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையை புறந்தள்ளி செயற்பட முடியாது. இதனாலேயே இலங்கையினுடைய அபிப்பிராயத்தையும் எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதற்குப் பதிலளித்த அஸீஸ் பாரத நாட்டை பொறுத்த வரையில் நேருஜியை விட்டால் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இதனை இங்கு சுட்டிக்காட்டுவதற்கு காரணம் அஸீஸின் அறிவாற்றல் குறித்து மகாத்மா காந்தி எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவேயாகும்.
ஏ. அஸீஸ் தனது இறுதிக்காலம் வரை முழுக்க முழுக்க தோட்டத் தொழிலாளர் வர்க்கத்திற்கே தன்னை முழுமையாக தியாகம் செய்தார். சுதந்திர போராட்டம் நடந்த காலகட்டத்தில் இலங்கைக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அஸீஸ் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் எமது நாட்டிற்கு சுதந்திரத்தினை தாருங்கள். எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்வோம். சிங்கள மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.
இலங்கை உழைக்கும் வர்க்கத்திற்காக மே தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்று உரத்துக் குரல் எழுப்பிய அஸீஸ் அதில் வெற்றி கண்டார். ஆசிய ஆபிரிக்க ஒத்துழைப்பு இயக்கத்தின் உபதலைவராக 1985 இல் தெரிவு செய்யப்பட்ட அஸீஸ் தனது மரணம் வரையில் அந்தப் பதவியில் நீடித்தார். 1947 மஸ்கெலியா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வகட்சி மாநாட்டில் தொடர்ச்சியாக பங்கேற்று முன்வைத்த யோசனைகள் இனவாதத்திற்கும் அடிப்படை வாதத்திற்கும் சாட்டை அடி கொடுக்கும் விதத்தில் மனிதாபிமானத்தை உயர்த்திப்பிடித்து பேசினார். இதன் காரணமாக ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகிய ஜனாதிபதிகளின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.
தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் சம்பளம் ஏனைய உழைக்கும் வர்க்கத்தின் சம்பளத்திற்கு சமனாக இருக்க வேண்டும் என்று அஸீஸ் வலியுறுத்தி வந்தார். தோட்ட மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வீடு, கல்வி உட்பட அனைத்து விடயங்களும் ஏனைய மக்களுக்கு உள்ளது போன்று சமனாக இருக்க வேண்டும் என்பதை அரசாங்கத்துக்கு வலியுறுத்தி வந்தார். 1970 முதல் 1977 வரை உள்ள காலப்பகுதியின் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் நியமன எம்.பியாக நியமனம் பெற்றார்.
அஸீஸ் தனது 78வது வயதில் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி காலமானார். அவருக்கு 4 பிள்ளைகள். டாக்டர் லைலா ஹஸ்வானி, டாக்டர் செய்பூன் பட்டேல், ஆகிய இரண்டு புத்திரிகளும் அஷ்ரப் அஸீஸ், அன்வர் அஸீஸ் ஆகிய இரண்டு புத்திரர்களும் உள்ளனர். தந்தை வழியில் சமூக தொழிற்சங்க பணிகளில் அஷ்ரப் அஸீஸ் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். இந்தியாவில் பிறந்து இலங்கையில் உழைக்கும் வர்க்கத்திற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திய ஏ.அஸீஸின் நாமம் சதா காலமும் நீடித்து நிலைக்கும் என்பது உறுதி.
நன்றி- தினகரன்

Thursday, October 4, 2018

நியாயமான சம்பளம் இன்றேல் மலையகம் தழுவிய போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அத்துடன் அன்றைய தினம் நியாயமான சம்பள உயர்வொன்றுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை யென்றால் மலையகம் தழுவிய மாபெரும் தொழிலாளர் போராட்டம் இடம்பெறுமென இ.தே.தோ.தொ.சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான  வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். சம்பள உயர்வு தொடர்பில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்தநிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையை அரசியலாக்காமல் அனைத்து தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இதற்கு பூரண ஆதர வழங்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்தும் முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட கம்பனிகளும் தொழிலாளரை ஏமாற்ற முடியாதெனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள உயர்வு அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் இராஜ கிரியவிலுள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தில் விசேட செய்தியாளர் மாநாடொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இம் மாநாட்டில் ஊவா மாகாண சபை உறுப்பினர் ருத்ரதீபன் மேற்படி சங்கத்தின் இணைப்பாளர் விஜயகுமாரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த வடிவேல் சுரேஸ் எம்.பி.,
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான தொழிற்சங்க மட்ட பேச்சுவார்த்தைகள் பல இடம்பெற்ற நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒரு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது 10 வீத சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான சம்மேளனத்தின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட நிலையில் நாம் அதை ஏற்கவில்லை.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அது கைகூடவில்லை. இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ.கா, இ.தே.தோ.தொ.ச, தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துடனும் செயற்படுகின்றன. இதன்மூலம் 1000 ரூபாவுக்கு மேற்பட்ட சம்பள உயர்வொன்றை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.
இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவுறுவதால் 14 ஆம் திகதி சம்பள உயர்வு தொடர்பில் முடிவொன்று எட்டப்படாதவிடத்து அதற்கு பின்வரும் காலங்களுக்கான நிலுவையையும் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2020 ஆம் ஆண்டுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கும். எனினும் இந்த இடைப்பட்ட காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதோடு வாழ்க்கைச் செலவு பெருமளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. இதனைக் கருத்திற்கொண்டே சம்பள உயர்வின் தொகை நிர்ணயிக்கப்படும்.
அதுதொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் ஒரு முடிவை எடுத்திருந்தாலும் 14 ஆம் திகதிக்குப்பின்னரே கூட்டாக அந்த முடிவை அறிவிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நன்றி - தினகரன்