Sunday, May 3, 2009

பெருந்தோட்டப் பகுதிகளில் நிரந்தர குடிநீர் விநியோக திட்டம் அவசியம்

பெருந்தோட்டப் பகுதிகளில் குடிநீரை இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி வாய்ப்புகள் இருந்த போதிலும் அவற்றை அம்மக்கள் பயனடைவதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இதுவரை காலமும் குடிநீரை விநியோகிப்பதற்கான உறுதியானதும் நிரந்தரமானதுமான திட்டம் எதுவும் மேற்கொள்ளப்படாமையே இதற்கான பிரதான காரணமாகும்.
தோட்டங்களை நிர்வகித்து வந்த ஆங்கிலேயர் காலத்தில் தொழிலாளரின் குடிநீர்;வசதி கருதி நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்ததை யாரும் மறந்துவிட முடியாது. இரும்புக் குழாய்கள் பொருத்தப்பட்டு லயன் குடியிருப்புகளுக்கு நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் இதனை முறையாகப் பேணிப் பாதுகாக்காததாலும் தோட்டங்கள் கைமாறிய பின்னர் பொறுப்பேற்றவர்களின் கவனயீனத்தாலுமே காலப் போக்கில் தொழிலாளருக்கான குடிநீர் விநியோகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனினும் தோட்ட அதிகாரி உதவி அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களுக்கான குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி சீராக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். யுனிசெப், சீடா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களினால் தொழிலாளரின் குடிநீர் வசதி கருதி பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவையும் வெற்றியளித்ததாகத் தெரியவில்லை. தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆறு, கிணறு, குளம், குட்டை, நீரோடை, நீரூற்று போன்ற இடங்களிலிருந்து தேவையான குடிநீரைப் பெற்று வருகின்றனர்.
அண்மைக் காலங்களில் பெருந்தோட்ட நம்பிக்கை நிதியத்தினால் தோட்டங்களில் கிணறுகள் கட்டப்பட்டுள்ள போதிலும் அவை பொருத்தமான இடங்களில் கட்டப்படவில்லை. நீரின்றி கட்டப்பட்ட நாள் முதல் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
தொழிலாளர்களுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களில் கூட குடிநீர் விநியோகத் திட்டமில்லை. வசதியுள்ள வாய்ப்புள்ள சிலர் தமது சொந்த முயற்சியினால் கிணறுகளை அமைத்துக் கொண்டுள்ளதுடன் நீரிறைக்கும் இயந்திரத்தின் மூலம் நீரைப் பெற்றுக் கொள்ளும் வசதியையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
குடிநீர்த்திட்டம் என்ற பெயரில் பெருந்தோட்ட நிதியத்தின் பணம் வீணாக விரயமாகிறதே தவிர தொழிலாளர்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை.
கிராமப்புர மக்களின் குடிநீர் வசதி கருதி இன்று பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பலனடைந்து வருவதுடன் அதற்கான கட்டணமும் அவர்களிடமிருந்து அறவிடப்படுகிறது. இது போன்ற திட்டம் தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படுமாயின் தொழிலாளர் எதிர் நோக்கிவரும் குடிநீர்; பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியதாகவிருக்கும்.மலையக மக்களுக்கு சேவையாற்றக்கூடிய மூன்று அமைச்சுக்கள் இயங்கி வருகின்றன. இந்த அமைச்சுக்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆகக் கூடிய சேவைகளைப் பெற்றுக் கொடுக்க நல்லதொரு வாய்ப்பு கிட்டியுள்ளது. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, இளைஞர் வலுவூட்டல், சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சமுதாய அபிவிருத்தி, சமூகச் சீரழிவு ஒழிப்பு அமைச்சுகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் தோட்டப் பகுதிகளில் நிரந்தரமானதும் நீடித்து நிலைக்கக் கூடியதுமான குடிநீர்த் திட்டத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும். களுத்துறை மாவட்ட தோட்டப்பகுதிகள் கவனிப்பாரின்றி காணப்படுகிறது. அப்பகுதிகளில் இவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த மாவட்டமே எல்லா வகையிலுமே பின்னடைந்த நிலையில் இருந்து வருகின்றது.
மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூற எந்தவொரு பிரதிநிதியும் முன்வராமல் இருப்பது வேதனை தரும் விடயமாகும். பிரச்சினைகளை எடுத்துக் கூறுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கத் தலைவர்கள் அவ்வப்போது அறிக்கை விடுக்கின்றனர். அவர்களைச் சந்திக்க தலைமைக் காரியாலயத்துக்குச் சென்றால் அங்கிருப்பவர்கள் தலைவர்மாரைச் சந்திக்க விடாது தடுத்து ‘நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்’ எனக் கூறி திருப்பியனுப்பி விடுவதாகத் தொழிலாளர் தெரிவிக்கின்றனர்.