Tuesday, June 12, 2018

சீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

மலையகத்தில் மீண்டும் நிலவும் சீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய பலத்த காற்று, அதன் விளைவாக ஏற்படும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில், மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அப்பகுதியிலுள்ள மின் கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் (09) இரவு முதல், அப்பகுதிக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிப்பின் காரணமாக அக்கரப்பத்தனை, டயகம, மன்றாசி, ஹோல்புறுக், நாகசேனை, லிந்துலை, மெராயா ஆகிய பகுதி மக்கள், பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதோடு, வர்த்தக நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த ஊட்டுவள்ளி தோட்டப்பகுதியில் வீசிய கடும் காற்றால், வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.


இதேவேளை, நுவரெலியா கந்தப்பளையை அண்மித்த, ஹைபொரஸ்ட், பிரம்லி, லொரிஸ்டன், அல்மா கிரேமன், சீட்டன், குருந்தோயா உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட தோட்டப்பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக வீசிய கடும் காற்றால், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் கடந்த 4ஆம் திகதி முதல், அந்தப் பிரதேசங்களில் மின்விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளதென, பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டிக்கோயா பகுதியில் விசிய கடும் காற்றின் காரணமாக, ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா பகுதியில், பாரிய மரம் ஒன்று நேற்று (10) முறிந்து விழுந்ததில் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்ததென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
அத்துடன், மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்துள்ளமையால், டிக்கோயா பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளதென அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால், சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை, தொடர்ந்து அமுலிலிருப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில், இந்த அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருப்பதாக, நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதேவேளை, மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால், சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகளும், கேன்னியோன் நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் நேற்றுத் திறக்கப்பட்டன. இதேவேளை, நோட்டன் பிரிஜ் விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் நேற்று திறக்கப்பட்டன. காசல்ரீ மற்றும் மௌசாகலை நீர்த்தேக்கமும், வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளதெனத் தெரிவிக்கப்படட்டுள்ளது.
கடும் மழை காரணமாக ஹட்டன், வட்டவல பகுதியில் தாழ் நிலப் பிரதேசங்களில் அமைந்துள்ள வீடுகள் பல, வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை ஹட்டன் டன்பார் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், அந்த வீடு முழுமையாகப் பாதிப்படைந்துள்ளது.
நன்றி- தமிழ் மிரர்