Saturday, October 31, 2009

மவுசாகலை லெமன்மோரா தோட்ட அவல நிலை: சாதக முடிவு கிடைக்காவிட்டால் நிர்வாகத்தை தொழிலாளர்களே ஏற்பார்களாம்!

மஸ்கெலியா, மவுசாகலை லெமன்மோரா தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வேலை எதுவுமின்றி பெரிதும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தனியார் ஒருவருக்குச் சொந்தமான இத்தோட்டத்தில் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக தொழிலாளர்கள் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மவுசாகலை கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட லெமன்மோரா தோட்டம் 188 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. அமலசூரியகே என்பவருக்குச் சொந்தமான இத்தோட்டத்தில் 30 பெண் தொழிலாளர்களும் 21 ஆண் தொழிலாளர்களுமாக வேலை செய்து வருகின்றனர்.
சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டும் தேயிலை செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலப்பரப்புக்குள் இருக்கும் தேயிலைச் செடிகளுக்கு மேல் புற்களும், செடி கொடிகளும் வளர்ந்து காணப்படுகிறது.
28 குடும்பங்களைச் சேர்ந்த 150 இற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் இத்தோட்டத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. தோட்ட நிர்வாகம் சீர்குழைந்துள்ள நிலையில் அந்த மக்களுக்கு எந்தவிதமான சலுகைகளையும் செய்து கொடுப்பதில்லை என தொழிலாளர்கள் கூறினர்.
தொண்டு நிறுவனங்கள் அத்தோட்டத் தொழிலாளர்களின் குடிநீர், சுகாதார, மற்றும் சில அடிப்படைத் தேவைகளுக்கு உதவி வருகின்றன. லயன் குடியிருப்புகளின் கூரைத் தகடுகள் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்தன. தொண்டு நிறுவனங்கள் அவ்றறுக்குப் புதிய கூரைத்தகடுகளை மாற்றிக் கொடுத்துள்ளன.
இத் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது அடிப்படைச் சம்பளமாக 185 ரூபா வழங்கப்படுகிறது. இதில் ஊழியர் சேமலாப நிதி, தொழிற்சங்க சந்தா மற்றும் ஏனைய கழிவுகள் போக மிகுதி பணத்திலேயே அவர்களின் அன்றாட வாழக்கையை சமாளிக்கின்றனர்.
மாதமொன்றுக்கு 10 தொடக்கம் 15 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. தேயிலை கொழுந்து இல்லாத நாட்களில் வேலையில்லாமல் இருக்கும் இத்தொழிலாளர்கள் காடாகியிருக்கும் தரிசு நிலப்பகுதியை தோட்ட நிர்வாகம் வீட்டுத் தோட்டங்களை செய்வதற்கு வழங்க சம்மதித்தால் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கம் என்கின்றனர். ஒருவருக்கு மாதத்தில் ஆகக்கூடிய சம்பளமாக ஆயிரம் ரூபா தொடக்கம் 1500 ரூபா பெறும் தொழிலாளர்கள் இன்றைய பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க முடியாதுள்ளனர்.
சுமார் 51 தொழிலாளர்கள் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க உறுப்பினர்களாக இருப்பதாக தோட்டத் தலைவர் எம். சுப்பிரமணியம் தெரிவித்தார். சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அங்கத்தவர்களாக இருக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை. தொழிற்சங்கத் தலைவர்கள், பெருந்தோட்டத் துறை அமைச்சர் உட்பட பலரிடம் பேசியும் பலனில்லை.
இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. கடிதப்பரிமாறல்கள் இடம்பெற்றதே தவிர வேறு தீர்க்கமான முடிவு எதுவும் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 10, 15 நாட்களாக வேலை வாய்ப்பின்றி பட்டினியில் கிடக்கின்றனர். இவ்விடயம் குறித்து அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்கும்வரை வேலைக்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளனர். இந்நிலைமை தொடருமானால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கும் என அஞ்சுகின்றனர். அதேவேளை போக்குவரத்து, மருத்துவ வசதிகள் இல்லாமை இத்தோட்டத்தின் பாரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரத போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து தோட்ட நிர்வாகமும் தொழிற் சங்கங்களும் இதற்கு தீர்க்கமான முடிவினைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தாங்கள் தோட்ட நிர்வாகத்தினை தாமே நடாத்த தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர்.
க. விக்னேஸ்வரன்
மஸ்கெலியா.
தினகரன் வாரமஞ்சரி