Wednesday, August 27, 2014

தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான 4 தோட்ட பிரிவுகளை சேர்ந்த சுமார் 1000ற்கும் அதிகமாக தொழிலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை முதல் மஸ்கெலியா தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டங்களில் கடமையாற்றும், தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரிக்கைவிடுத்து, தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தோட்ட அதிகாரி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்தவர் எனவும் அவர் சிறந்த முறையில் தனது கடமைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவரை இடமாற்றம் செய்வதனை ஏற்றுகொள்ள முடியாது என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டடுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் மேற்படி தோட்ட அதிகாரியை அவரின் தனிப்பட்ட காரணத்திற்காக இடமாற்றம் செய்துள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்பு

பெருந்­தோட்­டங்­களில் பணி­யாற்றும் தொழி­லா­ளர்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்தும் வகையில் ஹற்றன், நுவ­ரெ­லியா, இரத்­தி­ன­புரி, கேகாலை, காலி, கண்டி மற்றும் பதுளை ஆகிய பிர­தே­சங்­களில் புதிய குடி­மனைத் தொகு­தி­களை நிர்­மா­ணிக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பெருந்­தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ளனம் அறி­வித்­துள்­ளது. கால்­நடை மற்றும் கிரா­மிய அபி­வி­ருத்தி அமைச்சர் ஆறு­முகம் தொண்­டமான் மற்றும் அமைச்சின் வழி­காட்­ட­லுக்கு அமை­வாக இந்த திட்டம் பெருந்­தோட்­ட­ம­னி­த­வள அபி­வி­ருத்தி நிதி­யத்தின் மூலம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.
 
இந்த குடி­ம­னைத்­தொ­கு­திகள் நிர்­மா­ணித்து கைய­ளிக்கும் திட்­டத்­துக்கு அமை­வாக 855 தனி வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன. இவை இந்த ஆண்டின் இறு­தி­யினுள் பூர்த்­தி­ய­டையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. பெருந்­தோட்ட கம்­ப­னி­களின் மூலம் நிர்­வ­கிக்­கப்­படும் பெருந்­தோட்­டங்­களை சேர்ந்த தொழி­லா­ளர்­க­ளுக்­காக பழங்­கால வீடு­களில் 60 வீத­மா­னவை புதுப்­பிக்­கப்­பட்­டுள்­ளன அல்­லது கூரைகள் வேயப்­பட்டும், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு மெரு­கேற்றம் செய்­யப்­பட்­டுள்­ளன.
 
நவீன வடி­வ­மைப்பில் அமை­ய­வுள்ள இந்த குடி­ம­னைகள், ஒவ்­வொன்றும் 7 பேர்ச் காணியில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன. 550 சதுர அடியில் அமை­ய­வுள்ள இந்த மனைகள் ஒவ்­வொன்­றையும் நிர்­மா­ணிக்க 515,000 ரூபா வீதம் செல­வாகும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
 
2 படுக்­கை­ய­றைகள், வசிப்­பிட பகுதி, சமை­ய­லறை, குளி­ய­லறை மற்றும் குழாய் நீர் வச­தி­யுடன் இந்த புதிய வீடுகள் அமை­ய­வுள்­ளன. வீட்­டைச்­சூழ காணப்­படும் 3 பேர்ச் காணியை தோட்டச் செய்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும். மேலும், புதிய வீட்­டுத்­திட்­டத்­துக்கு மேல­தி­க­மாக, தற்­போது காணப்­படும் வீடு­களின் கூரை­களை மாற்றம் செய்­வ­தற்­காக 94 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
 
இதற்­க­மை­வாக சுமார் 1700 அல­குகள் புதி­தாக வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த புதிய வீடு­களின் மூலம் அனு­கூலம் பெறுவோர், அவற்றின் உரி­மை­யா­ள­ரா­வார்கள். இந்­த ­கு­டி­ம­னை­களின் நிர்­மா­ணப்­ப­ணி­களின் போதும், நிர்­மாண நட­வ­டிக்­கை­களில் ஓர­ளவு உத­வி­க­ளை­வ­ழங்­கு­வார்கள். நிர்­மா­ணப்­ப­ணி­களின் ஓர­ளவு பங்­க­ளிப்­புக்­காக கடன் வச­தி­களும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.
 
இவை அனைத்தும் சொந்த உரி­மையை உறுதி செய்­வ­தற்கு முக்­கி­ய­பங்­க­ளிப்பை வழங்­கு­வ­தாக அமையும். மேம்­ப­டுத்­தப்­பட்ட சுகா­தாரம் மற்றும் தூய்மை, கல்­வி­செ­யற்­பா­டு­க­ளுக்­கான தனிமை போன்­றன சமூக ரீதி­யான அனு­கூ­லங்­களும் இதன் மூலம்­ கு­டும்­பத்­தா­ருக்கு கிடைக்கும்.
 
இந்த புதிய குடி­ம­னைத்­தொ­கு­திகள் கைய­ளிப்பின் மூலம் பெருந்­தோட்­டத்­து­றையை சேர்ந்த மக்­க­ளின் ­வாழ்க்கை முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும் என்­பதில் பெருந்­தோட்ட கம்­ப­னி­கள்­ நம்­பிக்­கையை கொண்­டுள்­ளன.
 
இதன் மூலம் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் மேலும் அர்ப்­ப­ணிப்­பு­டன்­ த­மது தொழில்­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பார்கள் எனவும் எதிர்­பார்க்­கி­றது. எமது துறையை பொறுத்­த­மட்டில் மனி­த­வ­ளங்கள் என்­பது முது­கெ­லும்­பாக அமைந்­துள்­ளது.
 
வெவ்­வே­று­வீ­ட­மைப்­புத்­திட்­டங்­களின் மூலம் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வது தொடர்பில் தமது அர்ப்­ப­ணிப்பை கம்­ப­னிகள் வெ­ளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. பெருந்­தோட்ட கம்­ப­னி­களின் மூலம் வழங்­கப்­படும் சமூக பொறுப்­பு­ணர்வு வாய்ந்த செயற்­பா­டு­களின் மூல­மாக பெருந்­தோட்­டங்­களில் வசிக்கும் மக்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும் என்ற நம்­பிக்­கையை நாம் கொண்­டுள்ளோம்.
 
இந்த திட்டம் மற்றும் ஏனைய நிகழ்ச்­சி­களின் மூல­மாக இந்த துறையில் சிறந்த பெறு­பே­று­களை நாம் எதிர்­பார்க்­கிறோம் என பெருந்­தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் தலைவர் ரொஷான் ராஜ­துரை தெரிவித்தார்.
 
இலங்­கையின் பெருந்­தோட்ட கம்­ப­னிகள் எப்­போதும் பெருந்­தோட்ட மக்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வதன் முக்­கி­யத்­துவம் பற்றி தொடர்ந்து வலி­யு­றுத்தி கவனம் செலுத்தி வரு­கின்­றன. 200,000க்கும் அதி­க­மான தொழி­லாளர் சனத்­தொ­கைக்கு வீடுகள் வழங்­கு­வது என்­பதன் மூலம் 1 மில்­லியன் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு அனு­கூ­லங்­களை வழங்­கு­வ­தாக அமைந்­தி­ருக்கும்.
இதில் பெரும்­பா­லா­ன­வர்கள் வெளி­யி­டங்­களில் பணி­யாற்­று­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். இலங்­கையின் தேசிய பொரு­ளா­தா­ரத்தின் மூன்­றா­வது மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்­பா­ள­ராக திகழும் தேயி­லைத்­து­றையின் பிர­தான சவா­லாக, வினைத்­திறன் வாய்ந்த தொழி­லா­ளர்­களை பேணு­வது அமைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக நாம் இதை உணர்ந்து, பெருந்­தோட்­டங்­களில் முன்­னெ­டுத்­துள்ள அபி­வி­ருத்தி திட்­டங்கள் பற்றி சம்பந்தப்பட்ட துறைசார்ந்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என ராஜதுரை மேலும் குறிப்பிட்டார்.
 

Tuesday, August 19, 2014

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா சினிசிட்டா மைதானத்திற்கு அருகாமையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தாதிகள் பற்றாக்குறை

கண்டி மாத்தளை நுவரெலியா ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளின் சுகாதார சேவையில் வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையில் ஈடுபடும் தாதிகள் அடங்களாக 485பேருக்கு பற்றாக்குறை காணப்படுவதாக மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலேகம தெரிவித்துள்ளார்.
 
அவர் இது குறித்து மேலும் கூறுகையில் இம்மாவட்ட வைத்தியசாலைகளில் விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் 28, வைத்தியர்கள் 163, வைத்திய சேவையாளர்கள் 294, சத்திர சிகிச்சை வைத்தியர்கள் 5, பொது சுகாதார சேவைகள் அதிகாரிகள் 56, குடும்ப சுகாதார சேவைக்கான தாதிகள் 150 என்ற வகையில் பற்றாக்குறை காணப்படுகின்றது
 
மத்திய மாகாண சபையினால் மத்திய நாட்டு சுகதேகிகள் என்ற கொள்கை திட்டம் மேற்கொள்ளப்பட்ட போதும் இவ்வாறான வைத்திய பற்றாக்குறையினால் அது செயலிழந்து காணப்படுகின்றது என்றார்.

வேன் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

ஹப்புத்தளை பண்டாரவளை பிரதான வீதியில் ஹப்புத்தளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த வேன் ஒன்று தியத்தலாவ காகொல்ல பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 குறித்த விபத்து நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
 
விபத்தில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் படுங்காயமடைந்து தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவ்விபத்து தொடர்பில்   பண்டாரவளை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை விஜயபாகுகந்த மாவெலிகம பகுதியில் சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடுவதற்கு பொருத்தப்பட்ட மின் வேலியில் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் இன்று (19-08-2014) காலை 6.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.


 64 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தை ஓருவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, August 18, 2014

வருமானத்தில் 25 சதவீதம் தாங்களுக்கு வேண்டும்

மாணிக்கக்கற்களை அகழ்வதற்காக அனுமதிப் பத்திரங்களை வழங்கும் ஏலத்தின் ஊடாக பெறப்படும் வருமானத்தில் 25 சதவீதம் குறித்த தோட்ட தொழிலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டுமெனக்கோரி பொகவந்தலாவை சீனாகொல தோட்ட தொழிலாளிகள் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

 
பொகவந்தலாவையில் மாணிக்கக்கற்களை மீண்டும் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு தேசிய மாணிக்கக்கல் அகழ்வு திணைக்களத்தினால் இம்மாதம் 28ஆம் திகதி ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
 
இந்த மாணிக்கக்கல் அகழ்வை மேற்கொள்வதற்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை ஆனால் இதில் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவீதம் தாங்களுக்கு வேண்டும் என்றும் இதை கொடுத்தால்தான் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட தாங்கள் இடமளிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகள் தெரிவித்தனர்.
 
ஆனால் தேசிய மாணிக்ககல் அகழ்வு திணைக்களம் 10 சதவீதத்தையே தொழிலாளிகளுக்கு தருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Sunday, August 17, 2014

மாறிவரும் மலையகம்

மலையகம் இன்னும் மாறவில்லை, மாற்றம்பெறவில்லை என கொக்கரிப்பதில் எவ்விதமான நியாயங்களும் யதார்த்தத்தில் இல்லை. மலையகம், ஒவ்வொரு துறைகளிலும் ஏதோவொரு மாற்றத்தை கண்டுகொண்டுதான் இருக்கின்றது.
கல்வி, விளையாட்டு, இலக்கியம், பொருளாதாரம் மற்றும் மலையக மக்களின் வாழ்க்கை முறைமை இவையாவற்றிலும் ஏதோவொரு மாற்றங்கள் ஏற்பட்டுகொண்டுதான் இருக்கின்றன.

மலையக மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள். மக்களின் மாற்றம் தங்களுடைய இருப்புக்கு ஆப்பாகிவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.

அரசியல் வாதிகளே! மலையகம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது என கூறிகொண்டிருக்கின்றனர்.

மலையக மக்களை படம்பிடித்து காட்டுகின்ற அரச சார்ப்பற்ற நிறுவனங்களும் மலையக மக்களின் மாற்றம் ஏற்படவில்லை என்ற தோரணையிலிருந்து மீளவில்லை எனலாம்.

ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் மலையக மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போதுமானதாக இல்லை. ஆனால். மலையகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்கள் ஆலமர விருட்சமாகவேண்டும் என்பதே, மலையகத்தின் பால் கருணை கொண்டிருக்கின்றவர்களின் எதிர்பார்ப்பாகும்.

மதுவுக்கு மலையக மக்கள் அடிமையாகிவிட்டனர் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிகொண்டே செல்கின்றது.

மதுபான சாலைகளை மூடுமாறும் புதிதாக மதுபான சாலைகளை திறக்கவேண்டாம் என்றும் கோரிக்கைகளை விடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற அளவுக்கு மலையக மக்கள் விழிப்படைந்துள்ளனர்.
 நாட்டில் போதைப்பொருட்களின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையிலும் கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்படுகின்ற நிலையில், மலையகத்தில் மது பாவனையின் வீதம் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற முதுமொழிக்கு ஏற்றவகையில், மஸ்கெலியா பகுதியில் செய்யப்பட்ட கள ஆய்வுகளின் ஊடாக மலையகத்தில் மது பாவனையாளர்களுக்கு  மதுபானம் கசக்கின்ற உண்மை வெளியாகியுள்ளது.

மது தொடர்பில் பல உற்சாகமான அபிப்பிராயத்தை கொண்டிருந்த அந்த மக்களின் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி மதுச்சாலைகள் திறப்பதற்கு எதிராக மக்கள், குறிப்பாக வீட்டுச்சுமையை தங்களுடைய தலையில் சுமக்கின்ற பெண்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை மலையகத்தில் அன்றாட செய்தியாகிவிட்டது.

குறிப்பாக ஹட்டன், மஸ்கெலியா, தலவாக்கலை போன்ற பகுதிகளில் மதுபான சாலைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுபாவனைக்கு எதிராகவும் பெண்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டாலும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவிடாமல் தடுக்கப்பட்ட சம்பவமொன்று பொகவந்தலாவையில் அண்மையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவையில் தற்போது தலைவிரித்தாடுகின்ற சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றே அண்மையில் அங்கு நடத்தப்படவிருந்தது. அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அங்குள்ள மதுபான சாலைகளுக்கு எதிராக நடத்தப்படவிருப்பதாக கூறியே பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மலையகத்தில் இருக்கின்ற மதுபானசாலைகளில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளுக்கும் அவர்களுடைய அடியாட்களுக்கும் சொந்தமானவையாகும்.

அவ்வாறிருக்கின்ற நிலையில், மதுபானசாலைகளுக்கு எதிராகவும் மதுபாவனைக்கு எதிராகவும் மக்கள் குரல் கொடுக்கின்றார்கள் என்றால் அவர்களுடைய துணிச்சலை நாமெல்லாம் மதிக்கவேண்டும்.

மது உணர்வூட்டும் பொருள் அல்ல. உணர்வை, உடலை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மது அருந்துவதால் சுதந்திர உணர்வு தோன்றுவதாகவும், அதிக சக்தி கிடைப்பதாகவும், களைப்பு நீங்குவதாகவும் பலர் நினைக்கின்றார்கள்

அந்த நினைப்பு மலையக மக்களிடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி கொண்டிருக்கின்றது.

மதுவினால் பாதிப்புகள் ஏராளம். மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்துக்கு உற்சாகம் பிறக்கிறது.

மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது என்பது மட்டுமே ஆய்வுகளிலிருந்து வெளியான உண்மையாகும்.

மதுவின் தீமைகளை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் 'மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும், தீய செயல்' என்றும் கூறுகிறது. மது, உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.

கூலித் தொழிலாளர்கள், கடின உழைப்பாளிகள், ஏழைகள், கவலைப்படுகின்றவர்கள், மன நிம்மதி இழந்தவர்கள் போன்றவர்களே, மதுவுக்;கு அடிமையாகின்றவர்கள் என புள்ளி விவரங்கள் கூறுகிறன.

குடிக்க ஆரம்பித்தவர்கள் மதுவுக்;கு அடிமையாகி விடுவதோடு குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள். குடிப் பழக்கம் உள்ள வீட்டுக் இளைஞர்களும் நாளடைவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி கெட்டுப் போகும் நிலை ஏற்படுகிறது.

சரி மதுவால் ஏற்படும் பிரச்சனைகளை பார்த்தோமேயானால், மது மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதித்து உடல் நலத்தை சீர்குலைக்கிறது.

மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் ஏற்படுகிறது. பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.

மது, வயிற்றுக்குள் செல்லும் போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி ஏற்பட்டு குடலில் புண் ஏற்படுகிறது. வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது. தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது. உடலில் சர்க்கரை சத்தைச் சீர்படுத்தும் கணையம் பாதிக்கப்படுகிறது. அடிக்கடி மறதி ஏற்பட்டு சோர்வு ஏற்படும்.

மது அருந்துபவர்களுக்கு மன நோய்கள் பல ஏற்பட்டு மன நோயாளிகளாகி விடும் வாய்ப்பு அதிகமுண்டு. மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு தஇந்நிலையில் மலையகத்தில் மதுவொழிப்பு வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ள தொண்டர்;கள், மஸ்கெலியா பகுதியிலுள்ள சில தோட்டங்களில் மது அருந்துவோர், இளைஞர்கள் மற்றும் குடும்ப தலைவிகளிடம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து வெளியான தகவல்கள், மலையக மக்கள் மதுபிரியர்கள் இல்லை என்பதனை வெளிப்படுத்தியுள்ளது.

மாற்றத்தின்  விரும்பி  என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட மஸ்கெலியாவைச் சேர்ந்த  நிதர்ஷனா செல்வதுரை என்பவர், மேற்கொண்ட கள ஆய்வுகளிலிருந்து பல்வேறு விவரங்கள் வெளியாகியுள்ளன.

மலையகத்தில் அதிகரித்துள்ள மதுபாவனையே மலையகம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளமைக்கு காரணமாக கூறப்படுகின்றது.

மதுவினால் தான் மலையகத்தில் வறுமை குடி கொண்டுள்ளது. மலையகத்தில் மதுபானம் அருந்துபவர்கள்  அதிகரித்து வருகின்றனர்  என்றெல்லாம் செய்தி வெளியாகியது.

இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து மலையகத்தை விடுவித்து பார்ப்பதே நல்லுள்ளங்களில் நோக்கமாக இருந்தது.

எனினும், மலையகத்தில் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறுவது  மதுபானங்களை தயாரிக்கும் கம்பனிகளுக்கு விலையில்லா விளம்பரமாக அமைகின்றது எனலாம்.

போதைக்கு முற்றுப்புள்ளி என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினால் மது பாவனையில் கடந்த இரண்டு வருடங்களாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது  ஆய்வுகளிலிருந்து தெளிவாகின்றது.

நாடளாவிய ரீதியில் 2012ஆம் ஆண்டு 55 உரிமங்களும் 2013ஆம் ஆண்டு 62 உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. 2004ஆம் ஆண்டு 402 உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

செறிவு கூடிய மதுபானங்கள் 2012ஆம் ஆண்டு 49.7 மில்லியன் லீற்றரும், 2013ஆம் ஆண்டு 43.3 மில்லியன் லீற்றருமே உற்பத்தி செய்யப்பட்டன.
தானிய மதுபானம் (செறிவு குறைந்தது) 2012ஆம் ஆண்டு 99.3 மில்லியன் லீற்றரும் 2013ஆம் ஆண்டு 120.2 லீற்றருமே உற்பத்தி செய்யப்பட்ட என்று கலால் திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

மதுபானத்தை அருந்தும்; அளவிலும், தொகையிலும் மாத்திரமே உயர்ச்சி அல்லது வீழ்ச்சியை நாம் கணித்து கொண்டிருக்கின்றோம். மதுபானத்தை பற்றி இளைஞர், யுவதிகள் என்ன நினைக்கின்றார்கள்,  உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளின் நிலை என்ன? மதுபானம்  பற்றி சிறுவர்கள் மத்தியில் இருக்கின்ற நிலைப்பாடுகள்? என்பன பற்றி நாம் சற்று சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

தோட்ட புறங்களில்  சமூக  இடையீட்டாளராக தொழில் புரிந்து கொண்டிருக்கும் என்னால் சில மாற்றங்களை  தோட்ட புறங்களில் கண்டு உணரக் கூடியதாக இருக்கின்றது.

மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள சில  தோட்டங்களில்  கடந்த ஜூன் மாதம் செய்யப்பட்ட ஆய்வுகளிலிருந்து எண்ணங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆரம்ப காலங்களில் ஆண்கள் மத்தியில் இருந்த ஒரு மூட நம்பிக்கை, மதுபானத்தை குடித்தால் உடல் வலியை போக்கும், உடலில் உள்ள சோர்வு  போகும், மதுபானம் உற்சாகம்  கொடுக்கும் என்றொரு கதையாகும்.

ஆனால், இந்த கேள்விகளை 50  ஆண்களிடம் தொடுத்தபோது 15 ஆண்கள் மாத்திரமே இம் மூட நம்பிக்கைகள் ஏற்றுக்கொள்ள  கூடியது என்று  ஒத்துக்கொண்டனர். மிகுதியானவர்கள், இக் கூற்றுக்கள் யாவும் வெறும் மூட நம்பிக்கையே அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

மதுபானம் குடிப்பதால் உடல் வலி போய் உற்சாகத்தை உடலுக்கு ஒருபோது கொடுக்காது  என்று விடையளித்தனர். கிட்டத்தட்ட 70 வீதமான  ஆண்கள் மதுபானத்தின் மீது கொண்டுள்ள மூட நம்பிக்கைகளை  துளியும் நம்பவில்லை.

இது  தோட்டபுறங்களில் உழைக்கும்  ஆண்களின் கருத்து என்றாலும், தோட்டபுற பெண்கள், இளைஞர், யுவதிகள், சிறுவர்களின் எண்ணங்களில்  மாற்றம்  மேலும் ஆய்வின் சுவாரஸ்யத்தை  அதிகரிக்ககூடியதாகவே இருந்தது.   

இளைஞர்கள்,  கூலித் தொழில் செய்யும் இளைஞர்கள், மேற்படிப்பை தொடர்வோர்  போன்ற சில தோட்டங்களில் வசிக்கும்  இளைஞர்களிடம்  சாராயம் பற்றி எவ்வாறான கருத்து நிலவுகிறது என்பதை  தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தமை காரணமாக அவர்களிடம் எங்களது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மதுபானத்தை அருந்தினால் கவலை தீரும். சந்தோஷத்தை   வெளிப்படுத்த மதுபானத்தை அருந்த வேண்டும்; என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்த இளைஞர் கூட்டம் இப்பொழுது  தோட்டப்புறங்களில் அழிந்து வருகின்றது என்ற உண்மை இவர்களின் பதில்களில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. 

நாம் சந்தித்த 60  இளைஞர்களில் 08 பேர்  மாத்திரமே மேற்குறிப்பிட்ட கூற்றுக்களை ஏற்றுக்கொண்டனர். மிகுதி 52 இளைஞர்களும்  இல்லை  அக்கூற்றுக்கள் எம்மை ஏமாற்ற முட்டாள்களினால்  உருவாக்கப்பட்ட கூற்றுக்கள், அவை பொய்யானவை அவற்றை  ஏற்றுக்கொள்ள முடியாது  என பதிலளித்தனர்.

அது மட்டுமல்ல, வித்தியாசமான வடிவங்களில், ஈர்க்கப்படும் வகையில் மதுபான நிறுவங்கள்  வெளியிட்ட மதுபான போத்தல்கள்  எம்மை போன்ற இளைஞர்களை ஏமாற்ற போட்ட அலங்காரம் என்றும் அவ் இளைஞர்கள் உணர்ந்து கூறினார்கள்.

சில காலங்களுக்கு  முன்பு இளம் பெண்களை ஈர்க்கவேண்டுமானால் போதையில் மிதக்கவேண்டும் என்று  காதில் பூச்சுற்றிக்கொண்டிருந்த   ஆண்களை பார்த்து இளம் பெண்கள் கேலி செய்கின்றனர்.

மது அருதுகின்ற   இளைஞர்களை பார்த்து  நீங்கள் கிழவன் போல இருக்கின்றீர்கள், உங்கள் முகம்  அவலட்சணமான தோற்றத்தை  ஒத்ததாக இருக்கின்றது, கண்கள் சிவந்து  அசிங்கமாக இருக்கின்றது. உங்கள் மத்தியில் துர்நாற்றம் வீசுகிறது, சிரிக்காதீர்கள்! உங்கள் வாயில் துர்நாற்றம் வீசுகிறது என்றெல்லாம் கூறி கேலி செய்து சிரிக்கின்றனர். இவ்வாறான  ஆண்களை  கண்டு கொள்ளாமல் செல்கின்ற பெண்களும் இல்லாமல் இல்லை.

மதுபானத்தை பயன்படுத்துவதனால் செலவு அதிகம், வறுமைக்கு வழிவகுக்கின்றது என்று   அனைவரும்  தோட்டபுறங்களை பார்த்து கூறிக்கொண்டிருக்கும்  நிலையில், தோட்டங்களில் கல்வி கற்கும் சிறுவர்கள் மதுபானம் அருந்துகின்ற தங்களுடைய  தந்தைமார்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்கின்றனர்.

30 வீடுகளில் 20 வீடுகளில் சிறுவர்கள் மதுபானத்துக்காக செலவிடும் கணக்கை எழுதி  அக்கணக்கை வீட்டில் காட்சிப்படுத்துகின்றனர். இதனை அடிப்படையாக கொண்டு வீடுகளில் 'சந்தோஷ நாட்காட்டி' தயாரித்து காட்சிபடுத்துகின்றனர். 

கணவன் போதையில் வந்தால் தன்னை அடிப்பார் அந்த நேரத்தில் எதுவுமே பேச கூடாது, போதையில் இருக்கும் போது அவரிடத்தில் மிகவும் பணிவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்த பெண்கள் கூட்டமல்ல இப்பொழுது  தோட்டப்புறத்தில் இல்லை.

அவையெல்லாம் எம்மை ஏமாற்ற சொல்லி கொண்டிருந்த  பொய்கள், எங்களிடம்  வீரத்தை காட்டும் ஆண்கள் ஏன் பொலிஸ் காரர்களை கண்டால் மாத்திரம் தலையை சொறிந்து நல்லவர்கள் போல நடிக்கின்றாகள்? அதிலிருந்து தெரியவில்லையா மதுபானம் அருந்தும் கணவன்மார்கள் எம்மிடம் காட்டுவது பொய் வீரம் என்று, இனியும் நாங்கள் அந்த  பொய் நடிப்புக்கு ஏமாற மாட்டோம்  என தோட்டப்புற பெண்கள் தைரியமாக கூறுகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'மவுசாகலை'  தோட்டத்தில் திறக்கவிருந்த சாராய பாரை திறக்கவிடாமல்   போராட்டம் செய்து  தடுத்ததும் இதே தோட்டத்து மக்கள் தான்.

இப்பொழுதும் பாடசாலைகளுக்கு மத்தியில் இருக்கும் மதுபான சாலைகளை அகற்ற அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து கடிதங்கள் எழுதிவருகின்றனர்.

'புத்தர் பூமி' என்று வர்ணிக்கும் பிரதேசங்களில் காணப்படும்  அலங்கரிக்கப்பட்ட மதுபான சாலைகளை அகற்றக்கோரி  அரசியல் தலைவர்களுக்கு  அழுத்தம் கொடுத்து கோரிக்கை கடிதங்களை எழுதுகின்றனர்.

எம்மால் காணக்கூடிய மாற்றங்களையும் வெளிக்கொணர்ந்து  உங்கள் அபிலாஷைகளையும் வெளிப்படுத்தினால் மது அருந்துவோராயும் மதுபான சாலைகள் திறப்பதையும் முறியடிக்கலாம்.

மதுவை பருகுவதற்கு அல்லது அடிமையாவதற்கு துடிக்கின்றவர்களுக்கு மேற்கூறப்பட்ட விடயங்கள் ஒரு படிப்பினையாக இருந்தாலும் மதுவினால் அடிமையானவர்களை அவற்றிலிருந்து மீட்டுவிடலாம்.

ஹோமியோபதி மருத்துவமானது மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும்.

மதுவுக்கு அடிமை என்பது உடல் ரீதியான பிரச்சனை மட்டுமல்ல. மனரீதியான, சமூக ரீதியான பிரச்சனையாகும். ஆகவே, இவர்களை குணமாக்க உளவியல் ரீதியாகவும் அணுக வேண்டியது அவசியம்.

அந்த வகையில் ஹோமியோபதி மருந்துகள் உடலில் மதுவினால் உண்டான நலக்கேடுகளை சீர்படுத்துவதோடு மனரீதியான தூண்டுதல்களையும் சரி செய்து நல்வாழ்வுப்படுத்த உதவுகிறது.

நோய் வந்ததன் பின்னர் அல்லறுவதனை விடவும் வருமுன் காப்பதே சிறந்தது என்று அறிஞர்களின் அறிவுரைகளை ஞாபக்கப்படுத்திகொள்வது எமக்கெல்லாம் சிறந்ததாகவே அமையும்.



ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

பொகவந்தலாவை நகரில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டமொன்றுக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் மீண்டும் மாணிக்கக்கல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் ஏலத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்தது தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையினரால் நடத்தப்படவுள்ள ஏலத்திற்கு ஒருசில தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் பொகவந்தலாவை நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பட்சத்தில் பிரதேசத்தில் அநாவசிய குழப்ப நிலை ஏற்படலாம் என பொகவந்தலாவை பொலிஸார் ஹட்டன் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இது குறித்து கவனம் செலுத்திய ஹட்டன் நீதவான் பொகவந்தலாவையில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பழமை வாய்ந்த கருமலையூற்று ஜும்மா பள்ளிவாசல் இடித்து தரை மட்டம்

400 வருடம் பழமை வாய்ந்த திருமலை வெள்ளை மணல் கருமலையூற்று பள்ளிவாசல்  இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கி  தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
அவர் இதுபற்றி விபரிக்கையில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தைப் பயன்படுத்தி தற்பொழுது படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வரும் பள்ளிவாசல் கனரக இயந்திரத்தை பயன்படுத்தி உடைத்து முழுமையாக தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. தற்போது பள்ளி இருந்த இடமே தெரியவில்லை. நாங்கள் பள்ளிவாசலை பார்வையிடுவதற்காக அனுமதி கேட்டபோதும் அதற்கு பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க வில்லை
 
2007 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளிவாசல் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளதன் காரணமாக அங்கு குடியிருந்த 350 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்கள் வீடு வாசல் களை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.
 
400 வருடங்களுக்கு மேல் அங்கு குடியிருந்து மீன்பிடித் தொழிலை செய்து வந்த எம்மை 2009 ஆம் ஆண்டு முதல் செல்ல விடாது படையினர் தடுத்துள்ளமையால் 350 குடும்பங்கள் தமது மீன்பிடித் தொழிலையும் குடியிருப்புக்களையும் இழந்துள்ளனர்.
 
கருமலையூற்று ஜும்மா பள்ளிவாசல் 1885 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு மீண்டும் அது 1985 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. அதுவுமின்றி தற்போதைய கிழக்கு மாகாண முதல் அமைச்சர் 2007 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த வேளையில் மீலாநபி நிதியத்திலிருந்து 5 லட்சத்து 80 ஆயிரத்தை ஒதுக்கியதன் பேரில் மீண்டும் அது புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
 
2009 ஆம் ஆண்டு முதல் கருமலையூற்றுப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் மற்றும் ஏனைய இடங்கள் கடற்படைக் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கின்றன. நேற்றைய தினம் கனரக இயந்திரமொன்றின் சத்தம் பள்ளிவாசலை அண்டிய பகுதியில் கேட்ட போது என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய மக்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் படையினர் அனுமதிக்கவில்லை. கடல் பிரதேசத்தை அண்டிய பகுதி ஆகையால் தோணியொன்றை எடுத்து கடல்வழியாக சென்று பார்த்த போது பள்ளிவாசல் இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி தரைமட்டமாக்கப்படுவதைக் கண்டோம்.
 
இந்த நாசகார செயல் பற்றி கிழக்கின் முதல் அமைச்சருடனும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கினுடனும் தொடர்பு கொண்டு தெரிவித்தமைக்கமைய முதல் அமைச்சர் நஜீப் இராணுவத் தளபதியோடு தொடர்பு கொண்டு உரையாடினார். இராணுவத் தளபதி அப்படியொரு பள்ளி இருக்கவில்லையென தெரிவித்ததாக தன்னிடம் கூறியதாக முதலமைச்சர் எம்மிடம் தெரிவித்தார் என பள்ளிவாசல் தலைவர் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு இராணுவத்தினர் கருமலையூற்றுப் பகுதியில் இப்பள்ளிக்கு அருகில் இராணுவ முகாமொன்றை அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நஜீப் அமைச்சராகஇருந்த காலத்தில் 2007 ஆம் ஆண்டு நிதி யொதுக்கி மேற்படி பள்ளிவாசலை புனரமைத்துள்ளனர்.
 
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மொஹமட் மஹ்ரூப் இம்ரான் தெரிவிக்கையில் 1926ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசல், 1947ம் ஆண்டு ஜும்மா பள்ளி வாசலாக பதிவு செய்யப் பட்டு, அந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அடையாளமிடப்படும் வரை இஸ்லாமியர்களின் வழமையான தொழுகைகளும் அங்கு இடம்பெற்று வந்தன என்றார்

காணி ஆட்சியுரிமை சட்டமூலம் வன்னிவாழ் மலையக மக்களையே பாதிக்கும்

கேள்வி – ஆட்சியுரிமை சட்ட மூலத்தின்படி வழக்குத் தொடர வழங்கப்பட்டுள்ள ஒரு வருட கால அவகாசத்தை 6 மாதங்களாக குறைக்கும்படி நீங்கள் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தது ஏன்?

இந்தக் கேள்விக்கு நான் பாராளுமன்றத்தில் ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான விவாதத்திலே தெரிவித்திருந்த விடயத்தை இங்கே நினைவுபடுத்துவது நல்லதென்று கருதுகிறேன். இச்சட்டமூலத்தினூடாக 12 மாதங்களோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ கால அவகாசம் வழங்கும்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் 3,101 குடும்பங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,300 குடும்பங்களும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளன. இக் குடும்பங்களில் கிட்டத்தட்ட 90 வீதமானவர்கள்  இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ், வீடுகளைப் பெறுவதற்குப் பயனாளி களாகத் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் காணி உரிமம் அற்றவர்கள் என்று இனங் காணப்பட்டுள்ளமை யினால், அந்த வீட்டுத் திட்டத்தினூடாகவும் ஒரு வீட்டைப் பெறமுடியாத துர்ப்பாக்கிய நிலைமையில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். எனவேதான் இந்தச் சட்டமூலத்தில் வழங்கப்படும் கால அவகாசத்தை ஆறு மாதங்களாக நிர்ணயிக்குமாறு கேட்கிறேன்.

ஏனென்றால், இந்தக் குடும்பங்கள் கடந்த 30 – 35 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற காணிகள், 1970களில் ஆட்சியிலிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் மத்திய வகுப்புத்திட்டம், படித்த வாலிபர் திட்டம், படித்த மகளிர் திட்டம் போன்ற பல்வேறு விசேட திட்டங்களுக்கூடாக வழங்கப்பட்டவை. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில்தான்  காணிகள் இப்படி வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலும் அரச உத்தியோகத்தர்கள்தான் அந்தத் திட்டங்களினூடாக அன்று காணிகளைப் பெற்றிருந்தார்கள். அவை சிறிய காணிகள் அல்ல! 10 ஏக்கர் மேட்டு நிலம், 10 ஏக்கர் வயல் காணிகள் என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டன. அன்றைய அரசு ஏன் இந்தக் காணிகளை வழங்கியது என்றால் இந்தக் காணிகளை அபிவிருத்தி செய்து, நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்து, அபிவிருத்தியின் பங்காளர்களாக வேண்டும் காரணத்துக்காகத்தான். ஆனால், அன்று காணிகளைப் பெற்ற பலர் அந்தக் காணிகளைப் பயன்படுத்தவில்லை.

ஏனென்றால், அவர்கள் வேறுகாணிகளின் உடைமையாளர்களாக அல்லது வசதி படைத்தவர்களாக இருந்த நிலையிலேயே அந்த திட்டங்களுக்கூடாகவும் காணிகளைப் பெற்றிருந்தார்கள். பலர் அந்தக் காணிகளைச் சென்று பார்க்காமலேயே  அவற்றை விட்டுவிட்டுப் போய் விட்டார்கள். இந்நிலையில் 1977 மற்றும் 1983 இனக்கலவரங்களின்போது மலையகத்திலிருந்து விரட்டப்பட்ட தமிழர்கள் இந்தக் காணிகளைத் துப்பரவு செய்து அதில் குடியேறினார்கள். இப்போது அவர்களின் குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டன. இவர்கள் அனைவரும் இன்று காணி உரிமைத்துக்காகவும் வீட்டுத்திட்டத்துக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதேவேளை இந்த காணிகளின் உரிமையாளர்களில் 90 சதவீதமானவர்கள் இன்றுவரை – யுத்தம் முடிந்து 5 வருடங்களாகியும்கூட -  இந்தக் காணிகளுக்கு உரிமை கோரவில்லை. ஏனென்றால், இவர்கள் அப்பொழுதும் இப்பொழுதும் வசதிபடைத்தவர்களாகவே உள்ளனர். அத்துடன், பலர் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். காடுகளாக இருந்த இந்தக் காணிகளை வளப்படுத்தி  நாட்டின் விவசாய உற்பத்தியில் பங்கு வகித்த இந்த மலையகத்திலிருந்து வந்த மக்களுக்கு இன்று காணி சொந்தமாக இல்லை. ஆனால், அதே காணியில்தான் இன்றும் அவர்கள் வாழ்கின்றார்கள். ஆகவே, இந்த விடயத்தை அனைத்துத்தரப்பினரும் நியாயமாகப் பார்க்க வேண்டும். அப்படியில்லையென்றால், இந்த மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். 

இவர்களுக்கான வீட்டுத்திட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மலையகத்திலிருந்த வந்த மக்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப் படுவதாக அண்மையில் வடக்கு மாகாணசபையின் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். உண்மையான பிரச்சினை இந்த மக்கள் காணி உரிமத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதேயாகும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனால், அன்று இந்தக் காணிகளைப் பெற்றவர்கள் இந்த நாட்டின் உற்பத்தியில் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, யுத்தத்துக்குப் பின்பு காணிச் சந்தையிலே காணி விலை பல மடங்கு பெருகியிருக்கின்ற நிலையில் இப்போது அந்தக் காணிகளில் இருப்பவர்களை விரட்டிவிட்டு அவற்றை விற்றுவிட்டு மீண்டும் வெளிநாடு செல்வதில்தான் அக்கறையாக இருக்கின்றார்கள். அப்படியான சில சம்பவங்கள் அங்கு நடந்து கொண்டிருக்கின் றன.  எனவேதான் இந்தச் சட்டமூலத்தை ஆறுமாத கால அவகாசமுள்ளதாக மாற்றுங்கள் என்று இந்த மக்களின் சார்பாகக் கேட்கிறேன்.

இதேவேளை இந்தக் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிருக்கிறார். இது இந்தக் காணி உரிமையாளர்களான – வசதிபடைத்தவர்களின் நலனை மட்டுமே குறியாகக் கொண்டதாகும். பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும், இதுவரைகாலமாக இன்னல்களைச் சந்தித்து வாழும் இந்தக் காணிகளில் குடியிருக்கும் ஏழைகளுக்கு எதிராக எடுக்கப்படும் நிலைப்பாடாகவும் இருக்கும். இந்த இடத்தில் நீங்கள் ஒரு விடயத்தைக் கவனிக்கலாம். முதலமைச்சர் சொல்கிறார், மலையக மக்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று. அதே கட்சியைச் சேர்ந்த இன்னொரு முக்கியஸ்தரான சுமந்திரன் சொல்கிறார், இந்த மக்களுடைய நலன்கள் முக்கியமானதல்ல, இந்த மண்ணை விட்டு வெளியேறிச் சென்றவர்களின் நலனே முக்கியமானது என்று. இதை நீங்களும் மக்களும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
  • கேள்வி – 1977 மற்றும் 1983 வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியேறிய இந்திய வம்சாவளி மலையக மக்கள் தாங்கள் வாழ்ந்த, பயிர் செய்த காணிகளை மீளப் பெற இந்த சட்ட மூலம் வழி செய்யாதா?
இல்லை. அதனால்தான் இந்தச் சட்டமூலத்தை நான் எதிர்ப்பதோடு அதில் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். பாராளுமன்றத்தில் இந்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் காணி உரிமம் கோருவதற்குத் தகமையாகத் திட்டங்களுக்கு ஊடாக வழங்கப்பட்ட இந்தக் காணிகளில் குடியிருப்பவர்கள் இந்தச் சட்ட வரம்புக்குள் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என்ற ஒரு சட்டத்திருத்தத்தை ஆட்சியுரிமைச் சட்டமூலத்தில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்திப் பேசியிருந்தேன்.
1977 மற்றும் 1983 காலப்பகுதிகளில் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியேறிய இந்திய வம்சாவழி மலையக மக்கள், அந்தக் காலப்பகுதிகளில் சொந்தமாக காணிகள் வழங்கப்படாது இவ்வாறான திட்டக் காணிகளிலேயே குடியமர்த்தப்பட்டார்கள். இன்றுவரை இவர்கள் இந்தக்காணிகளில்தான் தொடர்ச்சியாகக் குடியிருந்து வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே அந்தக் காலப்பகுதிகளில் இந்த மக்களுக்கு அரச காணிகளைக் குடியிருப்பதற்காக பகிர்ந்தளித்திருக்க முடியும். இதனை அக்காலப் பகுதியில் இருந்த எவரும் செய்யவில்லை. இது அந்த மக்கள் மீது காட்டப்பட்ட பாரபட்சமாகும். அநீதியாகும்.

பெரும் நிலச்சொந்தக்காரர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட காடுகளாக இருந்த இந்தக் காணிகளை துப்பரவு செய்து வளப்படுத்தி பாதுகாப்பதற்காக இந்த மக்களை இந்தக் காணிகளில் குடியமர்த்தினார்கள். கிட்டத்தட்ட இற்றைக்கு 30 வருடங்களுக்கு மேலாக இந்தக் காணிகளில் குடியிருக்கும் மலையக வம்சாவழி மக்களே இந்தக் காணிகளை அபிவிருத்தி செய்து பெறுமதிமிக்க நிலமாக மாற்றியிருக்கிறார்கள்.

எந்த நோக்கத்திற்காக இந்தக் காணிகள் வழங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை காணிகளைப் பெற்றவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் காணிகளில் குடியமர்த்தப்பட்ட மலையக வம்சாவழி மக்களே தேசிய உற்பத்திக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் அந்தக்காணிகளை மாற்றியமைத்திருக்கிறார்கள். குடியிருப்புகளை உருவாக்கியுள்ளனர்.

யுத்தகாலத்திலும் கூட இந்த மக்கள் குடியிருப்பதற்கு என்று சொந்தமாக ஒரு துண்;;டு காணியேனும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. எனவே தற்போது அதிரடியாகக் கொண்டுவரப்படும் இந்தச் சட்டமூலமானது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்படி காலப்பகுதிகளில் வந்து குடியேறி வாழ்ந்து வருகின்ற மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டுவிடும்.

எனவே இந்த சட்டமூலம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியேறி இவ்வாறான காணிகளில் வசித்துவரும் இந்திய வம்சாவழி மலையக மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மையளிக்கப்போவதில்லை. முழுமையான அளவில் பாதிப்பையே தரும். ஆகவே நீண்ட காலமாக குடியிருக்கும் அந்த மக்களைப் பாதிக்காத வகையில் சட்டமூலம் அமையவேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.
  • .கேள்வி – தற்பொழுது காணி உரிமை இல்லாது இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகளை பெற முடியாத இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு இந்திய வீடுகளை பெற மாற்றுத் திட்டத்தை அரசிடம் பேசி பெற்றுக் கொடுப்பீர்களா?
இது ஒரு கடினமான விடயம். மாற்றுத்திட்டங்களை இலகுவில் செயற்படுத்த முடியாது என்பதால்தான் நாங்கள் இந்த மக்களை அவர்கள் தற்போது குடியிருக்கின்ற காணிகளிலேயே வீட்டுத்திட்டத்தைப் பெறக் கூடியவகையில் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்று கூறுகின்றோம். ஏற்கனவே யுத்தத்தினாலும், இடம்பெயர்வுகளினாலும் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் மேலும் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது. அது நியாயமுமல்ல. இவ்வளவு குடும்பங்களுக்கும்  புதிய காணிகளைத் தெரிவுசெய்து, வழங்குவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதுடன், அவ்வாறு வழங்குவது நியாயமும் அல்ல. ஏனெனில், 30-35 வருடங்களாக இந்தக் காணிகளை வளப்படுத்தியவர்களை தூர இடங்களில் உள்ள காணிகளில் குடியேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அது ஏற்புடையதுமல்ல. எனவே, தற்பொழுது அவர்கள் குடியிருக்கின்ற காணிகளுக்குள்ளேயே இதற்குத் தீர்வு காணப்படவேண்டும். இவ்வளவு தொகையான குடும்பங்களுக்கும் புதிய இடங்களைத் தெரிவ செய்து புதிதாக அந்த இடங்களில் குடியேற்றம் செய்வது இலகுவான காரியமும் அல்ல. அற்கேற்றவாறு மக்கள் வாழக்கூடிய காணிகளைத் தேர்ந்தெடுப்பதும் சாத்தியமானதல்ல.

எனவே இந்தக் காணிகளை அவற்றில் குடியிருக்கும் வறிய மக்கள் பெற்றுக்கொள்ளக் கூடியவிதத்தில் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதே பொருத்தமானதாகும். இல்லையெனில் இந்த ஏழை மக்கள் மேலும் பல காலம் குடிசை வீடுகளில் அடிப்படை வசதியற்ற நிலையில்தான் வாழவேண்டியிருக்கும். காணி உரிமம் இல்லையென்றால் ஒரு மலசலகூடத்தைக் கூட இந்த மக்களுக்கு நிர்மாணித்துக்கொடுக்க முடியாது. மின்சாரத்தை இந்த மக்கள் பெறுவதற்கு வழியிருக்காது. எனவே மேலும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் வாழவேண்டியிருக்கும். எனவேதான் இந்த மக்களின் நியாயமான பிரச்சினையைக் கவனத்திற் கொண்டு, விசேட ஏற்பாட்டை இந்தச் சட்டமூலத்தில் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
  • .கேள்வி – நீங்கள் கோரிக்கை விடுத்துள்ளதைப்போன்று இந்தச் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வரப்படாது, ஒரு ஆண்டுகால அவகாசமோ இரண்டு ஆண்டுகால அவகாசமோ காணி உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்படுமாக இருந்தால் இந்த மக்களின் அடுத்த கட்ட  நிலை எப்படி இருக்கும்?
வசதி படைத்தவர்கள் மீண்டும் இந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வார்கள். செலவில்லாமல் நல்ல வளமான காணிகளாக அவர்களுக்கு இந்தக் காணிகள் கிடைக்கலாம். அதேவேளை காடாகக் கிடந்த காணிகளைக் கழனிகளாக்கி, நல்ல குடியிருப்புகளாக்கி, பயிர்வளர்த்துப் பாடுபட்ட மக்கள் நிலமற்றவர்களாக – நாதியற்றவர்களாக வெளியேறி வீதியில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும். இதனை இந்த மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த மக்களிடம் இன்று ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு இவர்களைப் போராடத்தூண்டும். ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட அனுபவத்தை உடைய மக்கள் இவர்கள். இந்த மக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களும் அல்ல. ஏறக்குறைய 8,401 குடும்பங்கள் வரையில் உள்ளவர்கள். ஆகவே இந்த மக்களுக்கான நிவாரணத்தை, நீதி, நியாயத்தை அரசாங்கமும் அனைத்துத் தரப்பினரும் வழங்கியே ஆகவேண்டும்.

இதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஒரு கோரிக்கையை இந்தக்காணிகளை அரசாங்கத்திடமிருந்து முன்னர் பெற்றிருந்தவர்களிடம் விடுக்கிறேன். ‘இந்த மக்கள் புலம்பெயராமல், இந்த மண்ணிலிருந்து கொண்டு போராட்டத்தில் பங்கேற்றவர்கள். யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள். இன்னல்களைச் சந்தித்தவர்கள். இப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையில் பல பாடுகளைச் சந்தித்த மக்களின் நிலையைக் கருத்திற்கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கு இந்தக் காணிகளை வழங்குங்கள். இப்படிச்செய்வதன்மூலமாக நீங்கள் இந்த மக்களின் வாழ்க்கையை ஈடேற்றுவதற்கு உதவுவதுடன் இந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பங்களித்தவர்களாகவும் இருப்பீர்கள்’ என்று.
என்னுடைய இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த மக்களின் நிலையைக் கருத்திற்கொண்டு இந்த மக்களுக்கு உதவும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுமானால் 8400 க்கு மேற்பட்ட குடும்பங்களும் நல்லதோர் எதிர்காலத்தைப் பெறும்.

பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமாா்  ஊடகமொன்றுக்கு வழங்கிய நோ்காணல்.

Monday, August 11, 2014

மலையக மக்கள் உழைக்க மட்டும் வந்தவர்கள் அல்ல- கண்டி ராச்சியத்தை ஆளவந்தவர்கள்

மலையக மக்கள் இந்நாட்டுக்கு உழைக்க வந்த வரலாற்றுக்கு முன்னரே, இந்திய வம்சாவளி தமிழருக்கு இந்நாட்டை ஆண்ட வரலாறும் இருக்கின்றது. ஆனால், மலைநாட்டு தமிழன் ஒரு போதும் யுத்தம் செய்து, ஆளைக்கொன்று, நாடுபிடிக்க இங்கே வரவில்லை. இரண்டு சந்தர்ப்பங்களில் இந்திய வம்சாவளி தமிழன் இங்கே அழைத்துதான் வரப்பட்டான். முதலில் சிங்கள பிரதானிகள் கண்டி இராஜ்யத்தை ஆள அழைத்து வந்தார்கள். இரண்டாம் முறை வெள்ளையர்கள் நாட்டை உருவாக்க அதே கண்டிக்கு மலைநாட்டு தமிழனை அழைத்து வந்தார்கள் இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வடகொழும்பு நாவலர் மண்டபத்தில் இடம்பெற்ற இரா. சடகோபனின்; கசந்தகோப்பி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் உரைநிகழ்த்துகையில் மலையக உழைப்பாளர்களின் கதை, சோகம் செறிந்த வரலாறு. வெள்ளையர்களால் 1823ம் ஆண்டில் மலையகத்தமிழர்கள் கோப்பி பயிரிட இங்கே அழைத்து வரப்பட்டார்கள்.

இறப்பருக்கு முன் தேயிலை. தேயிலைக்கு முன் கோப்பி. இப்படி ஏற்றுமதி விளைபயிர் தோட்டங்களை மலையக தமிழர்கள் தங்களை காணிக்கையாக்கி உருவாக்கினார்கள்.

இந்நாட்டுக்கு உழைக்க வந்த வரலாற்றுக்கு முன்னரே, இந்திய வம்சாவளி தமிழருக்கு இந்நாட்டை ஆண்ட வரலாறும் இருகின்றது. கண்டியிலே அரச வம்சத்தில் நரேந்திரசிங்கனின் ஆயுள் முடிவுக்கு வந்த பின்னர் கண்டி சிங்கள பிரதானிகள், மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்த விஜய ராஜசிங்கனை அழைத்து வந்து கண்டி ராஜ்ய சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள்.

விஜய ராஜசிங்கன், இறந்த நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரன். அக்காலத்தில் கண்டி ராஜ்யத்துக்கும், மதுரை நாயக்க வம்ச ராஜ்யத்துக்கும் இடையில் திருமணபந்தம் இருந்தது.

குறிப்பாக ஒருபுறம் கண்டி, மதுரை ராஜ்யங்களும், மறுபுறம் தஞ்சாவூர், யாழ்ப்பாண ராஜ்யங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், பரஸ்பரம் உறவு கொண்டும் செயல்பட்டன.

1739ம் ஆண்டு முதல் நான்கு நாயக்க வம்ச மன்னர்கள் 1815 வரை கண்டியை ஆண்டார்கள். அவர்கள்தான் இலங்கையின் கடைசி மன்னர்கள். ஆளவந்த இந்திய வம்சாவளி மன்னனின் ஆட்சி 1815ம் ஆண்டு கண்டியில் முடிவுக்கு வருகிறது.

அதையடுத்து எட்டே வருடங்களில் 1823ம் ஆண்டு  இலங்கைக்கு உழைக்க வந்த முதல் இந்திய வம்சாவளி தமிழன் கண்டிக்கு  வருகிறான். ஆகவே மலைநாட்டு தமிழர் இந்நாட்டுக்கு உழைக்க மட்டும் வரவில்லை, இந்நாட்டை ஆளவும் வந்தவர்கள்.

இந்த வரலாற்றை இந்நாட்டில் வாழும் தமிழர்கள், குறிப்பாக மலையக இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உழைக்க வந்த எங்களை பார்த்து எவனாவது, கூலிக்கார்கள் என்று சொன்னால், அவர்களிடம், 'முட்டாளே நாம் இந்நாட்டை ஆண்ட இனமும்கூட. இந்நாட்டின் கடைசி மன்னனின் இனம். அதுவும் இந்நாட்டை காட்டிக் கொடுக்காத, வெள்ளையர்களை கடைசிவரை எதிர்த்து நின்ற இனம்' என்று சொல்ல வேண்டும். கடைசியில் எஹலபோல நிலமே என்ற துரோகியால் வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, உயிரை இழந்த, ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் இனம் என்று தைரியமாக சொல்ல வேண்டும்.

இலங்கை தீவின் வரலாற்றை, இன்று பேரினவாதம், இன்றைய அரசியலுக்கு ஏற்ற முறையில் மாற்றி எழுதுகிறது. இந்நிலையில் உண்மை வரலாற்றை எடுத்து சொல்ல தயக்கம் ஏன்? ஆளுமையுடன் தைரியமாக உரக்க சொல்லுங்கள்.

நமது உழைப்பு, வெள்ளையர் நிர்வாகம், இவைதான் பெருந்தோட்டங்கள். இந்த வரலாற்றில் உழைக்க வந்தவர்களை நிர்வாகம் செய்த வெள்ளையரின் மன அழுத்தங்களை இங்கே சடகோபன் இந்த கசந்த கோப்பியின் மூலம் அரங்குக்கு கொண்டு வருகிறார் என நினைக்கின்றேன்.

இது ஒவ்வொரு தமிழனின் கரங்களிலும் இருக்க வேண்டிய நூல். இது மலையக மண்ணுக்கு அவரது பங்களிப்பு. இதை அவர் முதன் முறையாக செய்யவில்லை. 'கண்டிச்சீமையிலே' என்ற இன்னொரு நூலையும் அவர் எழுதியுள்ளார். இங்கே வருகை தந்துள்ள மலையக சிந்தனையாளர்கள் வாமதேவன், தெளிவத்தை ஜோசப்,  சிவலிங்கம் உட்பட பலரும் இத்தகைய பங்களிப்புகளைதான் வழங்கி வருகிறார்கள். இந்த மண்ணைப்பபற்றி, மனிதர்களை பற்றி எழுதும் இவர்களை நாம் கௌரவிக்க வேண்டும்.
 
ஒரு சமூகம் வளர அரசியல், சமூக, பொருளாதார, கலாசார துறைகளில் சமச்சீரான வளர்ச்சி தேவை. இதற்கமைய மலையக இளைஞர்கள் சமூகத்துக்கான பங்களிப்புகளை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளிடம் அனைத்தையும் ஒப்படைக்காதீர்கள். எல்லோராலும் தெருவில்  இறங்கி போராட முடியாது.

எழுத முடியாது. கல்வி பணி செய்ய முடியாது. ஆகவே நீங்கள் எங்கெங்கு இருக்கின்றீர்களோ, அங்கே இருந்தபடி உங்களுக்கு இயன்ற பங்களிப்புகளை வழங்குங்கள். இதன்மூலம் மலையகம் சிந்தனையாளர்களின் கரங்களுக்கு மாறுவதை மலையக இளைஞர்கள் உறுதிசெய்ய வேண்டும். இந்த மலையக மறுமலர்ச்சி மாற்றத்தை மலையக இளைஞர்கள் இனவுணர்வுடன் உறுதி செய்ய வேண்டும்.

இதை தவிர மலையக விடிவிற்கு வேறு வழியே கிடையாது. விடிவு வேண்டுமென்றால் விலை கொடுக்க வேண்டும். விலை கொடுத்தால்தான் விடிவு வரும். இந்த உண்மையை அறிந்து கொள்ள நீங்கள் அமெரிக்க, ஐரோப்பிய வரலாறுகளை படிக்க தேவையில்லை. கண்ணை திறந்து எமது வடகிழக்கு உடன்பிறப்புகளை பாருங்கள்' என்றார்.

சிறுத்தை பிடிபட்டது

நாவலப்பிட்டி பார்கேபல் தோட்டப்பகுதியில் சுமார் ஏழு வயது நிரம்பிய சிறுத்தை ஒன்றை ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
 

இதே பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி பெண் ஒருவரை தாக்கி கொன்ற சிறுத்தையே இதுஎன  வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

பிடிக்கப்பட்ட சிறுத்தையை அப்பிரதேச காட்டுப்பகுதியில் விடுவித்தால் அப்பிரதேச மக்கள் பெரும் ஆபத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதால் சிறுத்தையை கொழும்பு தெஹிவளை மிருககாட்சி சாலைக்கு ஒப்படைக்க தீர்மானித்துள்ளனர்.

ரதல்ல மதுபானசாலையை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா ரதல்லை நகரில்  பிரதேச மக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்

நகரில் உள்ள மதுபானசாலை ஒன்றை அங்கரிருத்து அப்புறப்படுத்துமாறு கோரி ரதல்லை நகரை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இடத்தில் மதுபானசாலையால்   மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ரதல்லை நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆரப்பாட்டத்தினால்   வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டிருந்தது

இன்று  காலை 10 மணி தொடக்கம் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரை தமது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.