Monday, November 21, 2016

சம்பள ஒப்பந்தத்தில் முரண்பாடுகள் - தொழிலாளர்கள் போராட்டம்

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட சம்பளம் தொடர்பாக முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக ஹட்டனில் தொழிலாளர்கள் ஒன்று கூடிக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
17-11-2016ல்  ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள உற்பத்தித் திறன் கொடுப்பனவு 140 ரூபா நிபந்தனை இன்றி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன் வைத்து பேரணியொன்றையும் நடத்தினர்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் இ.தொ. கா தலைவர் முத்து சிவலிங்கம் , பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களும் தொழிற்சங்க தலைவர்களும் தங்களால் முன் வைக்கப்பட்ட கண்டனம் மற்றும் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகள் இரு வருடங்களுக்கொரு தடவை தொழிற்சங்கங்களுக்கும் தோட்டநிர்வாகங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் தான் நிர்ணயம் செய்கின்றது.
இறுதியாக 18 மாத கால இழுபறியின் பின்னர் கடந்த மாதம் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புதிய கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் அடிப்படை சம்பளம் - 500 ரூபா, உற்பத்தித் திறன் கொடுப்பனவு - 140 ரூபா உட்பட அனைத்துக் கொடுப்பனவுகளும் அடங்கலாக நாளொன்றுக்கு ரூபா 730 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் அக்டோபர் 15ம் திகதி தொடக்கம் நாளொன்றுக்கு 110 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற முடியும் எனத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்களினால் அவ்வேளைத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன.
வழமைக்கு மாறாக நாளொன்றுக்கு 18 தொடக்கம் 20 கிலோ வரை தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் எனத் தோட்ட நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு ஒப்பந்த்தில் எந்தவொரு இடத்திலும் நாளொன்றுக்கு 18 - 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை குறிப்பிடப்படவில்லை இ.தொ கா கூறுகின்றது.
நாளாந்தம் பறிக்கப்படும் கொழுந்து நிறையத் தோட்ட நிர்வாகங்களும் தோட்ட தலைவர்களும் பேசியே தீர்மானிக்க வேண்டும் என்று தான் கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறுகின்றார் இ.தொ கா தலைவரான முத்து சிவலிங்கம்.
தோட்ட நிர்வாகங்களின் இந்தச் செயல்பாடானது கூட்டு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் அவர் தெரிவிக்கின்றார் ;
கடந்த காலங்களிலும் 18 கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டதாக தொழிலாளர்களினால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
ஏற்கனவே 610 ரூபா சம்பளத்தை பெற்று வந்த தங்களுக்கு புதிய கூட்டு ஒப்பந்தம் மூலம் 730 ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 590 ரூபா தான் கிடைத்துள்ளதாகத் தொழிலாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
நன்றி- பி.பி.சி

Saturday, November 12, 2016

மண்சரிவு அபாயம்; 29 பேர் இடம்பெயர்வு

அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை  பெயார்லோன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 29 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சாமிமலை சின்ன சூரியகந்தத் தோட்ட லயன் குடியிருப்பில் வசித்து வந்த எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 7 சிறுவர்கள் 21 பெண்கள் உட்பட 29 பேர் சிறுவர் நிலையம் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (11) மாலை, பெய்த கடும் மழையினால் குறித்த லயன் குடியிருப்புப்  பகுதியில் 30 மீட்டர் தூரம் வரையில் வெடிப்புடன்  மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே, பாதுகாப்பின் நிமித்தம் இவர்கள் தற்காளிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியின் அயாயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு அறிவித்துள்ளதாக மஸ்கெலியாப் பொலிஸார் தெரிவித்தனர். 

140 ரூபாயை ஏப்பம்விட்ட நிர்வாகங்கள்

புதிய கூட்டொப்பந்தத்துக்கு அமைவாக ஒக்டோபர் மாத்துக்குரிய சம்பளம் தமக்கு வழங்கப்படவில்லை என தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கான மாதாந்த சம்பளம், 10ஆம் திகதி தோட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. புதிய கூட்டொப்பந்தத்தின்படியே இம்மாதம் சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சில தோட்டங்களில் 590 ரூபாய் என்ற அடிப்படையிலே தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்த கூட்டொப்பந்த பேச்சு, கடந்த மாதம் 19 ஆம் திகதியே முடிவுக்கு வந்தது. இதற்கமைவாக அடிப்படைச் சம்பளம் ரூ.500, உற்பத்தித்திறன் கொடுப்பனவு   ரூ.140,  நிலையான விலை கொடுப்பனவு  ரூ.30,  வருகைக் கொடுப்பனவு  ரூ.60, உள்ளடங்களாக மொத்தம் 730 ரூபாய் சம்பள தொகையுடன் புதிய கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இச்சம்பளம் ஒக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒக்டோபர் மாதத்துக்கான சம்பளம்,  தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அச்சம்பளமானது புதிய ஒப்பந்தத்துக்கு அமைவாக வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர். அடிப்படைச் சம்பளம் ரூ.500, வருகைக் கொடுப்பனவு ரூ.60, நிலையான விலை கொடுப்பனவு ரூ.30 இணைக்கப்பட்டு 590 ரூபாயே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தித்திறன் கொடுப்பனவான 140 ரூபாய்,  சம்பளத்தில் இணைத்துகொள்ளப்படவில்லை என தெரிவித்த தொழிலாளர்கள், 18 கிலோகிராமுக்கும் மேலதிகமாக கொழுந்து பறித்தால் மட்டுமே முழுமையான சம்பளத்தை வழங்க முடியுமென தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்ததாக கூறினர். 

Saturday, November 5, 2016

தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்னர் குறைந்த கிலோவில் கொழுந்து பறிக்கும்போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனத் தோட்ட நிர்வாகம் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரப்பத்தனை, பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த 100க்கும்; மேற்பட்ட தொழிலாளர்கள் கொழுந்து மடுவத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்துக்கு அரை நாள் சம்பளத்தை தோட்ட நிர்வாகம் தற்போது வழங்குகின்றது. கடந்த காலத்தில்; 18 கிலோவுக்கு குறைவாகக் கொழுந்து பறித்தபோது, முழு நாள் சம்பளத்தை  வழங்கியதாகவும் கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்னர் குறைந்த கிலோ கொழுந்து பறிக்கும்போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்தே நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும், கடந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் 4.30 மணியளவில் எங்களின் தொழிலை முடித்து வீடு திரும்பியதாகவும் தற்போது 5 மணிவரை கட்டாயம் தொழில் செய்ய வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் வலியுறுத்துகின்றது.  5 மணிவரை தொழில் செய்யும்பொழுது எமது பிள்ளைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளோம். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோதிலும், இதுவரையில் சம்மந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் எமக்கு விளக்கம் கொடுக்கவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பு நிலுவை சம்பளத்தை பெற்றுத்தருவதாக கூறிய தொழிற்சங்கம் எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது' என்றனர்.

12 மணித்தியாலங்கள் மழை பெய்தால் மண்சரிவு அபாயம் ஏற்படும்


நாடுமுழுவதும் தொடர்ச்சியாக பதிவாகும்;; மழை வீழ்ச்சியின் காரணமாக மண்சரிவு மற்றும் இடி, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்புள்ளதாகவும் அபாயம் நிலவ கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாகஸ்தோட்டை கந்தபொல கொன்கோடியா பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் சாத்தியம் இருப்பதனை தொடர்ந்து 18 பேர் தங்கள் இடங்களிலிருந்து இடம் பெயர்ந்துள் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இதுவரையில் பாரிய அனர்த்தங்கள் எவையும் பதிவாகவில்லை என்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். 

இது தொடர்பாக மத்தியநிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கண்டி, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட மததிய மாகாணத்தின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படட்டுள்ளது. 

எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு மலை தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதோடு மற்றும் நிலவெட்டுச் சாய்வுகள் இடிந்து விழக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கண்டி மாவட்டத்தில் கங்கதிகே கோரலை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எல்பத குருவிட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் தெரனியகல தெஹியோவிட்ட ருவன்வெல்ல, யட்டியாந்தோட்ட,புளத்ஹோபிட்டிய,அரநாயக்க, கேகாலை, மாவனெல்ல மற்றும் கலிகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டள்ளதால் அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர் மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும். இதனிடையே கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது. காலி உள்ளிட்ட கரையோரத்தை அண்டிய மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 30 தொடக்கம் 40 வரையில் இருக்கும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

Saturday, October 22, 2016

தொழிலாளர்கள் போராட்டம்

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணத்தை தோட்ட அதிகாரி கள் வழங்க மறுத்ததையடுத்து உடனடியாக தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி  லிந்துலை தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்று பிற்பகல் 2 மணிநேரம் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஏனைய பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் தீபாவளி முற்பணம் வழங்கியிருக்கின்ற போதிலும் இத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. நேற்றுக்காலை தோட்ட தொழிற்சங்க தலைவர்களும் மற்றும் தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்திற்கு சென்று தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரிய போது தோட்ட அதிகாரி வழங்க வேண்டிய தீபாவளி முற்பணம் கம்பனி வங்கியில் வைப்பு செய்யவில்லை எனவும், வைப்பு செய்தால் பணத்தை 24ஆம் திகதி தருவதாக கூறியதையடுத்து, தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களே இருப்பதால் 24ஆம் திகதி இப்பணத்தை பெற்று தங்களின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு தீபாவளி பண்டிகைக்காக மாதாந்தம் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்து சேமித்து வைத்திருக்கும் தொகையினை கூட வழங்க தோட்ட நிர்வாகம் மறுத்துள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
கூட்டு ஒப்பந்தத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று தருவதாக கூறிய மலையக அரசியல் தலைவர்கள் தம்மை ஏமாற்றியதாக தெரிவித்த அவர்கள், கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுப்படும் தொழிற்சங்க அதிகாரிகள் காட்டி கொடுத்துவிட்டனர்.20ஆம் திகதி தீபாவளி முற்பணம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக தெரிவிக்கின்றனர்.
எனவே தோட்ட நிர்வாகமும், தொழிற்சங்க அதிகாரிகளும் தமக்கு தீபாவளி முற்பணத்தினையும், ஏனைய கொடுப்பனவுகளையும் உடனடியாக பெற்று தருமாறும், அவ்வாறு தவறும் பட்சத்தில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படப் போவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தீபாவளி முற்பணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு,கிழ்பிரிவு மக்கள் இன்றைய தினம் தொழிலுக்கு செல்லாது தீபாவளி பண்டிகை முற்பணத்தினை வழங்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

தீபாவளி பண்டிகைக்கு வழங்கபட வேண்டிய 10,000 ரூபா இன்று வழங்குவதாக கூறிய வாக்குறுதி அளித்த தோட்ட நிர்வாகம் இன்று வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தமையினாலேயே ஆர்பாட்டம் முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை முற்பணத்தினை உடனடியாக வழங்கபட வேண்டுமெனவும் மலையக அரசியல்வாதிகள் இவ் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டகாரர்கள் தெறிவித்தனர்.

இதேவேளை இந்த ஆர்பாட்டம் குறித்து தோட்ட முகாமையாளரிடம் கேட்டபோது எதிர்வரும் 25ம் திகதி வழங்கபடுமென உறுதியளித்தார்.

கூட்டு ஒப்பந்தம் பற்றி கருத்துக்கள்


Thursday, October 20, 2016

2015 ஏப்ரல் முதல் ரூ. 730 வேண்டும்

தோட்டத் ​தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக ஏற்படுத்திக்கொண்ட கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வர வேண்டும் என்று, அகில இலங்கை தோட்டத் தொழலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.   
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை, ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென்று, அத்தொழிலாளர்களினால் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இருப்பினும், தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் தோட்டத் தொழிற்சங்கங்களும் இணைந்து, 730 ரூபாய்க்கான நாட்சம்பளத்துக்கு கைச்சாத்திட்டன. இது, தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை, மிதித்து நசுக்குவதற்கான ஒப்பந்தமாகவேய கருதப்படுகின்றது என, மேற்படி சம்மேளனத்தின் தலைவர் ஏ.பிரேமரத்தின கூறினார்.   
“மேற்படி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமையால், , 730 ரூபாயைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில், தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெற வேண்டும். 2015 ஏப்ரல் முதல், 2016 ஒக்டோபர் வரையான 19 மாதங்களுக்குரிய நிலுவைச் சம்பளம், தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனைப் பெற்றுக்கொடுக்க தவறும் பட்சத்தில், அது குறித்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

Wednesday, October 19, 2016

அரசியல் பினாமிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும்

தீக்குளிப்பு நாடகத்தை அரங்கேற்றியவர், சம்பள உயர்வுக்குப் பின்னரும் தொழிலாளர்களை திசைதிருப்ப முயல்கிறார். தமது பதவிகளையும் பட்டங்களையும் பாதுகாத்து, சுகபோகங்களை அனுபவிக்க நினைக்கும் அரசியல் பினாமிகளுக்கு, மலையகம் மிக விரைவில் பாடம் கற்றுத்தரும்” என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது. 
இது தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இ.தொ.காவின் உப தலைவர்களில் ஒருவருமான ஏ.பிலிப்குமார் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
“ஒளிவு மறைவின்றி, விட்டுக்கொடுப்புக்கு இடமில்லாதவாறு தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு இ.தொ.கா வழிவகுத்தது. 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை, இ.தொ.கா முன்னெடுத்திருந்தது. மற்றவர்கள் நினைப்பதைப் போன்று, இது விடயத்தில் இ.தொ.கா நாடகமாடவில்லை. 
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வானது, சமூகநய வஞ்சகர்களுக்குப் பேரிடியைக் கொடுத்திருக்கின்றது. முதலாளிமார் சம்மேளனத்திடம் பேரம் பேசுவதனூடாக, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, 1,000 ரூபாய் சம்பள உயர்வை இ.தொ.கா கோரியிருந்தது.  
இதனை, மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக, இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், இவ்விடயத்தில் மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்திருப்பது வேடிக்கையாகும். 
அச்சங்கத்தின் பொதுச் செயலாளர், மக்களைத் திசைதிருப்பும் நோக்கில், ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் முட்டுக்கட்டையாக இருந்தார். 
இடைக்காலக் கொடுப்பனவை மக்களுக்கு வழங்கும் நோக்கில், ஒரு நகைச்சுவைக் கூத்தை இரண்டு மாதங்கள் ஓட்டிமுடித்த அவர், எம்மீது குற்றம் சுமத்துவது எவ்விதத்தில் நியாயமாகும்?  
இழுத்தடிப்புக்கும் இழுபறிக்கும் காரணமாக அமைந்த பொதுச் செயலாளர், எம்மை பொறுப்புக்கூற வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றார். முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் பழக்கம், இ.தொ.காவிடம் இல்லை.  
ஒரு விடயத்தை இ.தொ.கா எடுத்துக்கொண்டால், அதை நிறைவேற்றியே தீரும். நிலுவைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கையை இ.தொ.கா எடுக்கும். குறித்த தொழிற்சங்கமொன்று, இதனைக் குழப்பியடிக்காமல் இருந்திருந்தால், நிலுவைக் கொடுப்பனவையும் பெற்றுக் கொடுத்திருக்கலாம். 
மலையக அரசியல் பாரம்பரியங்களுக்கு அப்பால் செயற்படும் நடவடிக்கைகளாலும் வெறும்வாய்ச் சவாடல்களாலும் பூச்சாண்டி காட்டுவதாலும், மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை காண முடியாது.  
கூட்டுப்பேரம் பேசும் தன்மையை புரிந்து கொள்ளாதவர்கள், தொழிலாளர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள்? இந்த 1,000 ரூபாயிலிருந்து 730 ரூபாய் கிடைக்கப்பெற்றது வரவேற்கக்கூடிய விடயமே. அதை விடுத்து, அதனை வியாக்கியானப்படுத்துவதோ அல்லது கொச்சைப்படுத்தி பேசுவதோ, தொழிலாளர் வர்க்கத்தை குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமானதாகும். 
இது இவ்வாறிருக்க, கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு ஓர் அங்கமாக, இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்வாங்கப்பட்டிருந்தபோதும், அதனையும் தாண்டி அவர் பேசியிருப்பது, தொழிற்சங்கத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மீறி இருப்பதுதான் உண்மை. இதுவிடயத்தில் அத்தொழிற்சங்கம், சட்ட நடவடிக்கையில் ஏன் ஈடுபடக் கூடாது என, இ.தொ.கா கேள்வி எழுப்புகின்றது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி- தமிழ் மிரர்

ரூ.500உடன் இரண்டு வருடங்களுக்கு மாரடிப்பதா

தோட்டத் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களே, 110 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கேனும் காரணமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ள விவசாயத் தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, “தொழிற்சங்கங்கள், தமது கடமைகளை உணர்ந்து செயற்படத் தவறியுள்ளன” என்றும் சாடியுள்ளார்.  
“இன்றுள்ள வாழ்க்கைச் செலவுக்கு, 500 ரூபாய் என்பது எவ்வகையிலும் போதாது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு, எவ்வித சம்பள அதிகரிப்புகளுமின்றி வாழும் தொழிலாளர்கள், வெறும் 500 ரூபாயில் எவ்வாறு வாழ்க்கையை ஓட்டப்போகின்றனர் என்பது கேள்விக்குறியே” எனவும் அவர் கூறியுள்ளார்.   
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,   
“கூட்டொப்பந்த விவகாரத்தில், 730 ரூபாய்க்கு இணக்கப்பாடு எட்டப்பட்டு கூட்டொப்பந்தமும் கைச்சாதிடப்பட்டுவிட்டது. 2015 மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிடைந்த கூட்டொப்பந்தம், கடந்த 18 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது.   
தொழிற்சங்கங்களோ, முதலாளிமார் சம்மேளனமோ, அரசாங்கமோ இதனை கவனத்தில்கொள்ளத் தவறியதன் காரணமாகவே, தொழிலாளர்கள் தாமாகவே முன்வந்து வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.  
இந்த தொடர் போராட்டங்கள் காரணமாக, முதலாளிமார் சம்மேளனத்துக்கு, கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது.   அத்துடன், வீதிகளை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதனால், அரச மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துக்கும் பல இலட்சம் ரூபாய் நட்டமேற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் முதலாளிமார் சம்ளேமனமும் தொழிற்சங்கங்களுமே காரணம்.  
2015ஆம் ஆண்டுக்கான கூட்டொப்பந்தம் நிறைவடைந்தவுடனேயே, புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் இடபெறாது தவிர்த்திருக்கலாம். தொழிற்சங்கங்களும் தமது கடமைகளை உணர்ந்து செயற்படவில்லை. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் நல்லாட்சி அரசாங்கமும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.   
ஆரம்பத்தில் 1 சதத்தைக்கூட சம்பள உயர்வாக வழங்க முடியாது என்று கூறிய முதலாளிமார் சம்மேளனம், 110 ரூபாயையேனும் சம்பள உயர்வாக வழங்குவதற்கு முன்வந்தமைக்கு தொழிலாளர்கள் கொடுத்த அழுத்தமே காரணமாகும்” என்றார்.   
“1,000 ரூபாய்க்கும் குறைவான தொகையையே தொழிலாளர்கள் தற்போது சம்பளமாக பெற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன், தொழிலாளர்களின் சம்மதமின்றியே கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தமானது, 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நடைமுறையில் இருக்கும். இதற்கிடையில், எவ்விதமான சம்பள உயர்வும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. வெறும் 500 ரூபாயில், இன்றுள்ள வாழக்கைச் செலவைகூட கொண்டு நடத்தமுடியாத தொழிலாளர்கள், இன்னும் 24 மாதங்களுக்கு இந்தத் தொகையுடன் எவ்வாறு வாழ்க்கை நடத்தபோகின்றார்கள் என்பது கேள்விக்குறியே” என அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய ஒப்பந்தத்தை ஜே.வி.பி எதிர்க்கின்றது

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் பெற்றுக்கொடுப்போம் என்று கூறிய தொழிற்சங்கங்கள், இறுதியில் 730 ரூபாயுடன் வாயை மூடிக்கொண்டன. இது அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதனை மக்கள் விடுதலை முன்னணி, வன்மையாகக் கண்டிக்கின்றது’ என ஜே.வி.பியின் பெருந்தோட்டத் தொழிற்சங்கமான அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.ஏ.பிரேமரத்தின தெரிவித்தார்.  
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,   
“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு, அவர்களது போராட்டங்களும் மக்கள் சக்தியுமே காரணம். இந்நிலையில், 730 ரூபாயை பெற்றுக்கொடுத்தவர்கள், தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிலுவைப் பணத்தையும் முதலாளிமார் சம்மேளனத்தின் சட்டைப்பைக்குள் வைத்துவிட்டு வந்துள்ளனர்.  
2014ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவை முன்னெடுக்க,நா​​ளொன்றுக்கு 1,450 ரூபாய் தேவையென எமது சங்கம் கூறியிருந்தது. ஆனால், 2016இல் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு 1,500ரூபாயும் போதாது.  
இந்நிலையில், 1,000 ரூபாயை கோரிக்கையாக முன்வைத்துவிட்டு இறுதியில் 730 ரூபாய்க்கு கூட்டொப்பந்தத்தை கைச்சாத்திட்டமை தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்”  என்றார்.  
நன்றி- தமிழ் மிரர்

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ‘730 ரூபாய்க்கு காட்டிக்கொடுத்துவிட்டன

தொழிற்சங்கங்கள் 730 ரூபாய்க்கு கையொப்பமிட்டு, தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக சாடி, மலையகத்தின் பொகவந்தலாவை, தலவாக்கலை, ஓல்டன், சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்றுப் புதன்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.   
50 ரூபாய் அடிப்படைச் சம்பளம் உள்ளடங்களாக 730 ரூபாய் சம்பளத்துடன் கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளப்போதிலும், அத்தொகைப் போதாது ‘1,000 ரூபாயே வேண்டும்’, ‘இரத்தத்தை உறிஞ்சும் கம்பனியே நிலுவைப் பணத்தைக்கொடு’ ‘தொழிலாளர் உழைப்பை காட்டிக்கொடுக்கதே’ ‘தீபாவளியா அல்லது தீபாவலியா’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் கறுப்புக்கொடிகளை ஏந்தியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.  
மஸ்கெலியா சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், மஸ்கெலியா வீதி ஒல்டன் சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
இதேவேளை, பொகவந்தலாவைக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பொகவந்தலாவை கொட்டியாகலை ஆலயத்தின் முன்றலில், சிதறுத் தேங்காய் உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை கடந்த 18 மாதங்களாக இழுத்தடித்த தொழிற்சங்கங்கள், இறுதியில் வெறும் 730 ரூபாய்க்கு தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.  
தொழிற்சங்க பிரதிநிதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த தாம், இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாது திண்டாடுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். 

நன்றி- தமிழ் மிரர்

Monday, October 17, 2016

போஷாக்கு மற்றும் காணி உரிமையை வலியுறுத்தி போராட்டம்

இலங்கையில் பெருந் தோட்ட மக்களின் போஷாக்கு மற்றும் காணி உரிமையை வலியுறுத்தி உலக உணவு தினமாகிய இன்று நுவரெலியா மாவட்டத்திலுள்ள தலவாக்கல்ல நகரில் பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
பெருந்தோட்ட மக்களுக்கு இரசாயனமற்ற உணவு மற்றும் போஷக்கு உணவு தொடர்பாக விழிப்புணர்வு தொடர்பான பிரச்சாரமும் இந்த போராட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்ட மக்களுக்கு போதிய வருமானம் இன்மையே அவர்களின் வறுமைக்கு பிரதான காரணம் என பெருந் தோட்ட சமூக காணி உரிமைக்கான இயக்கம் கூறுகின்றது.
''இந்த வறுமை காரணமாகவே போஷாக்கு உணவை பெற முடியாத நிலையில் அவர்கள் காணப்படுகின்றார்கள். '' என்கின்றார் அந்த அமைப்பின் பிரதான செயற்பாட்டாளரான எஸ். டி கணேசலிங்கம்நு வரெலியா மாவட்டத்திலே மந்த போஷனையுடைய கூடுதலான சிறார்கள் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
பெருந்தோட்ட மக்களுக்கு பயிர் நிலங்கள் இல்லாத காரணத்தினால் இரசாயனமற்ற உணவை அவர்களால் உற்பத்தி செய்ய முடியாதிருப்பதாகவும் கூறும் அவர், பெருந்தோட்ட மக்களுக்கு இரசாயனமற்ற மற்றும் போஷாக்கு கொண்ட உணவு கிடைப்பதற்கான சிறப்பு திட்மொன்றை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.
பெற்றோர்களை பொறுத்தவரை தங்கள் பிள்ளைகளுக்கு போஷாக்கு உணவு வழங்க வேண்டும் என ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள் . ஆனால் அதற்கு அவர்களின் வருமானம் பிரதான தடையாக காணப்படுகின்றது.

Friday, October 14, 2016

கூட்டொப்பந்தம் இன்றும் இல்லை?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், முதலாளிமார் சம்மேளனத்தினால் புதியதொரு நிபந்தனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான வேலைநாட்களைக் குறைக்கும் இந்த நிபந்தனையை, தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறிய தொழிற்சங்கங்கள், இன்று வௌ்ளிக்கிழமை (14), கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்படுவதென்பது சாத்தியப்படாது எனவும் சுட்டிக்காட்டின.
ஆரம்பத்தில், 3 நாட்கள் மாத்திரமே, அடிப்படைச் சம்பளத்துடன் வேலை வழங்குவோம் என்று கூறி வந்த முதலாளிமார் சம்மேளனமானது, தற்போது, 250 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுமெனவும் அதனை, கூட்டொப்பந்தத்தில் புதிய நிபந்தனையாக உள்ளடக்குமாறும் வலியுறுத்தின.
“இவ்விடயத்தை உள்ளடக்கிய மின்னஞ்சலொன்று, கடந்த புதன்கிழமையன்று, முதலாளிமார் சம்மேளனத்தினால், தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆராய்ந்துப் பார்த்த தொழிற்சங்கங்கள், இந்தப் புதிய நிபந்தனையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என, தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம், புதனன்றே அறிவித்துவிட்டன.
கடந்த 18 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டொப்பந்த விவகாரம், நாளையுடன் முடிவுக்கு வருமா? என்று, பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின்  பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதனிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், “கூட்டொப்பந்தத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு 300 நாட்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முறைமையை மாற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ள முதலாளிமார் சம்மேளனம், 250 நாட்களுக்கு மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தை, கூட்டொப்பந்தத்தில் உள்ளடக்குமாறு வலியுறுத்துகின்றது” என்றார்.  
“தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தப் புதிய முறைமையை, எந்த வகையிலும் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
மூன்று நாட்களுக்கு மட்டுமே 730 ரூபாய் சம்பளம் வழங்கப்படுமெனவும் மீதமுள்ள நாட்களுக்கு தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தின் நிறைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுமெனவும்  முதலாளிமார் சம்மேளனம் கடந்த 18 மாதங்களாக கூறிவந்தது.
இதனை தொழிற்சங்கங்கள் மறுத்ததன் காரணமாக, தற்போது குறுக்கு வழியை கையாண்டு 250 என்ற நாட்கணக்கை முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் கூடிய 17 நாட்கள் விடுமுறை மற்றும் 3 பொது விடுமுறைகளை உள்ளடக்கும்போது, வருடத்தில் 20 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகின்றது.  
முதலாளிமார் சந்மேளனத்தின் புதிய நிபந்தனைப் பற்றி சிந்திப்போமாயின், 250 நாட்களுக்கான வேலையிலிருந்து 20 நாட்கள் விடுமுறையைக் கழித்தால், 230 நாட்கள் மாத்திரமே, அவர்கள் வேலை செய்ய நேரிடும். இவ்வாறு, 230 நாட்களுக்கு வேலை வழங்கப்படுமென்றால், தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவர்.
எனவே, 250 நாட்கள் விடுமுறையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என அவர் கூறினார்.
“முதலாளிமார் சம்மேளனம், இவ்விடயத்தை தொடர்ந்து வலியுறுத்துமானால், கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் முக்கிய தொழிற்சங்கமொன்றின் பொதுச் செயலாளர், வெளிநாடொன்றுக்கு பயணமாகியுள்ளதால், இன்று கைச்சாத்திட எதிர்ப்பார்த்திருந்த கூட்டொப்பந்தம், கைச்சாத்திடப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையென, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பலகாலமாக, சம்பள அதிகரிப்பு விடயத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கொந்தளித்துள்ள மலையக மக்கள், கடந்த இரண்டு வாரங்களாக, நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததுடன், இவ்வாரமும் மலையகத்தின் சில இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர் வீதிமறியல் போராட்டங்களால்,  மலையகத்தின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரச மற்றும் தனியார் துறைக்கு பாரிய நட்டமேற்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தோட்டத்துறை, அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைக்கும், பல மில்லியன் ரூபாய்கள் நட்டமேற்பட்டுள்ளது.
இவ்வாரமும், மலையகத்தின் சில பகுதிகளில், தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா, இரத்தினபுரி, வெலிமடை, கேகாலைக்கு உட்பட்ட 22 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், போராட்டங்களில் பணிப் பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வடக்கு, கிழக்கு, கொழும்பு உள்ளிட்ட மாட்டவங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொறுமையிழந்துள்ளத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களுக்கு வழங்கி வரும் சந்தப்பாணத்தை நிறுத்தப்போவதாக கடுந்தொனியில் கூறியுள்ளதுடன், வாக்குறுதி வழங்கியதைப் போன்று 1000 ரூபாய் சம்பளத்துடன், ஆறு நாட்களுக்கான வேலையை வழங்குமாறும் கோஷமெழுப்பி வருகின்றனர்.
நன்றி- தமிழ் மிரர்

Thursday, October 13, 2016

கூட்டு ஒப்பந்த நகல் தொழிற்சங்கங்களால் நிராகரிப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைத்திருந்த புதிய ஒப்பந்த நகல் வரைவைத் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன.

ஆதலால் இன்று (14-10-2016 ) கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வாரத்தில் ஆறு நாள் வேலை வழங்க இணங்காவிட்டாலோ அல்லது பிரதான உடன்படிக்கையில் மாற்றங்களைச் செய்ய முனைந்தாலோ, இன்று உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை என தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துக்கு ஏற்கனவே அறிவித்திருந்தன.

வருடத்தில் 300 நாள் வேலை வழங்குவது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் அடங்கிய பிரதான உடன்படிக்கையை ரத்துச் செய்துவிட்டு, அதற்குப் பதிலாக 250 நாள் வேலை வழங்குவதென்ற உடன்பாட்டையும் சம்பள உயர்வு தொடர்பான உடன்படிக்கையில் உள்ளடக்கி புதிய ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு முதலாளிமார் சம்மேளனம் யோசனை முன்வைத்திருக்கின்றது.

அவ்வாறு பிரதான உடன்படிக்கை ரத்துச்செய்யப்படுமானால், தொழிலாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த விடயம் சம்பந்தமாக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினமும் நேற்றும் கூடி தீவிரமாக ஆலோசனை நடத்தியதன் பின்னர், உடன்படிக்கை நகல் வரைவை நிராகரிக்கத் தீர்மானித்ததாக, தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 730 ரூபாய்க்கு உயர்த்துவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கும் தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் (முதலாளிமார் சம்மேளனம்), வாரத்தில் மூன்று நாட்கள் வேலை வழங்க முடியும் என்று தெரிவித்திருந்தன. இதனை ஏற்க மறுத்த சங்கங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தன.

சங்கங்களின் இந்தக் கோரிக்கைக்கு ஏற்ப உடன்படிக்கையைக் கைச்சாத்திடுமாறு தொழில் அமைச்சரும் தெரிவித்திருந்தார். அதற்கிணங்க இன்றைய தினம் (14) உடன்படிக்கை புதுப்பித்துக் கைச்சாத்திடப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சம்மேளனம் அனுப்பியிருந்த புதிய உடன்படிக்கையின் நகல் வரைவை ஆராய்ந்தபோது, அதில் 300 நாள் வேலைக்குப் பதில், 250 நாட்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இராமநாதன் தெரிவித்தார். அதாவது, 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டுள்ள பிரதான உடன்படிக்கையின் -(சம்பள உயர்வுக்குப் புறம்பான உடன்படிக்கை) 8,9 சரத்துகளில், வருடத்தில் 300 நாள் வேலை உள்ளிட்ட சேம நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அந்த உடன்படிக்கை அவ்வாறு இருக்கவே சம்பள உயர்வுக்கான உடன்படிக்கை புறம்பாக இதுவரை கைச்சாத்திடப்பட்டு வந்தது.

அந்தப் பிரதான உடன்படிக்கையின் 8ஆம் 9ஆம் சரத்துகளை நீக்கிவிட்டுச் சில விடயங்களைப் புதிய உடன்படிக்கையில் உள்ளடக்க சம்மேளனம் யோசனை தெரிவித்திருக்கிறது.

அவ்வாறு செய்யப்பட்டால், தொழிலாளர்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், விடுமுறை கொடுப்பனவு, ஊக்குவிப்பு கொடுப்பனவு, பிரசவகால சகாய நிதியம் ஆகியவற்றிலிருந்து தொழிலாளர்கள் விலக்களிக்கப்படும் நிலை உருவாகும். இது பாரதூரமான விடயம். எனவே, இதற்கு உடன்பட முடியாது எனும் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட இராமநாதன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சங்கங்கள் தீர்மானிக்கும் என்றார்.

சம்மேளனத்தினர் 730 ரூபாய் சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவித்துவிட்டு, வேலை வழங்கும் நாட்களைக் குறைத்து, உற்பத்தியினை அடிப்படையாகக் கொண்ட ஓர் உயர்வினை வழங்குவதாகக்கூறி, மீண்டும் ஆரம்ப நிலைக்குச் சென்றிருப்பது வருத்தமளிப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, October 12, 2016

கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்

தமக்கு உடனடியாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறும் தமக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட  சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்தும் ஹட்டன் எபோட்சிலி பிரதேச தொழிலாளர்கள் டயர்களை எரித்து கறுப்பு கொடி ஏந்தி இன்றுகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இத்தோட்ட தொழிலாளர்கள் அங்கவகிக்கும்  மலையக கட்சிகள் அனைத்துக்கும், மாதாந்தம் சம்பளத்தில் சந்தாபணத்தினை தற்காலிகமாக அறவிட வேண்டாம் என தொழிலாளர்கள் தோட்ட அதிகாரியிடம் கையொப்பமிட்ட கடிதமொன்றினை வழங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எமக்கு ஆதரவாக போராடும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்றி, உடனடியாக கூட்டு ஒப்பந்தத்தினை இரத்துச் செய்,சந்தாப் பணத்தினை நிறுத்திவிட்டோம், உடனடியாக ஆயிரம் ரூபாவை வழங்கு, போராட்டம் வெடிக்கும்" என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு  ஆதரவு தெரிவித்து, அவிசாவளை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆரம்பித்து ஜனாதிபதி செயலத்திற்கு சென்று நிறைவடைய ஏற்பாடகியிருந்த நிலையில் பொலிஸார் வீதியில் தடைகளை போட்டு ஆர்ப்பாட்டத்தை தடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ள 10 பேரடங்கிய குழுவினர்  கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளனர்.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கும் வரை தாம் வேலைக்கு செல்லப்போவதில்லையெனவும் இப் போராட்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வித அக்கறையும் செலுத்தவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத ஒப்பந்தம் கைச்சாத்திட திட்டம்

தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் நவீன அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கில் தொழிலாளர் சட்டத்துக்கு முரணாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாக மலையக சமூக நடவடிக்கை குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 14ஆம் திகதி கைச்சாத்திடப்படலாம் என்றும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாளொன்றுக்கு 730 ரூபாவை வழங்குதல், வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்குதல் மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்தல் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை உள்ளடக்கியதாக இக்கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாக மலையக சமூக நடவடிக்கை குழுவின் இணைப்பாளர், சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.
தீபாவளியை காரணம்காட்டி தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை தோட்டக் கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் முன்னெடுக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மருதானை சி.எஸ்.ஆர் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சட்டத்தரணி இ.தம்பையா இதனைக் கூறினார். ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் துங்க ஜயசூரிய, மலையக சமூக ஆய்வு மையத்தின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பது என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம் முன்வைத்த கோரிக்கையல்ல. கடந்த தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரசாரங்களின் போதும் இதனைக் கூறியிருந்தார். இருந்தபோதும் 1000 ரூபாவை இதுவரை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவில்லை என்றார்.
மாறாக நாளொன்றுக்கு 730 ரூபாவை வழங்குவது தொடர்பான கூட்டு ஒப்பந்தமொன்று எதிர்வரும் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ கைச்சாத்திடப்படலாம். இந்த ஒப்பந்தமானது தொழிலாளர் சட்டத்துக்கு முரணான வகையில் அமையவுள்ளது. வாரமொன்றுக்கு மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்குவது, 3 வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது, பாக்கிச் சம்பளத்தை வழங்குவதில்லை ஆகிய விடயங்கள் இம்முறை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறுகின்றன. எனினும் அவர்களின் வருடாந்த நிதி அறிக்கையை எடுத்துப் பார்த்தால் அது உண்மை இல்லையென்பது தெளிவாகிறது. தீபாவளி என்பது மலையகவாழ் மக்களுக்கு பரம்பரையாகக் கொண்டாடப்படும் கலாசார நிகழ்வாகும்.
ஒவ்வொரு தடவையும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு வாரங்களில் தீபாவளி பண்டிகை வருவது வழமை. இம்முறையும் பண்டிகை முன்பணம் வழங்கப்படாது என தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் முயற்சிக்கின்றன. நரகாசுரனின் அழிவை தீபாவளியில் கொண்டாடுகிறோம். நரகாசுரன்கள் போன்று செயற்படும் கம்பனிகள் செயற்படுகின்றன என்றும் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் போராட்டங்களை காட்டிக் கொடுக்காது தொழிற்சங்கங்களும் செயற்பட வேண்டும். மாறாக தொழிலாளர் சட்டத்தை மீறும் வகையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமாயின் அதற்கு எதிராக மலையகம் தளுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். எவ்வாறான போராட்டம் என்பது அப்போது அறிவிக்கப்படும் என்றும் சட்டத்தரணி இ.தம்பையா மேலும் கூறினார்.

Friday, September 30, 2016

தொடரும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டம்


சம்­பள உயர்வு போராட்­டத்தில் குதித்­துள்ள தோட்டத் தொழி­லா­ளர்கள் வீதி­களை மறித்தும், டயர்­களை எரித்தும் பேர­ணி­களை நடத்­தியும் தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தி வந்த நிலையில் நேற்று நான்­கா­வது நாளா­கவும் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர்.


நேற்­றைய தினமும் டயர்­களை எரித்து வீதி­களை மறித்­த­துடன் உருவப் பொம்­மையை எரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தினர்.  

17 மாதங்­க­ளாக தமக்கு சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­காது முத­லா­ளிமார் சம்­மே­ளனம் தம்மை ஏமாற்றி வரு­வ­தா­கவும் தமது வாழ்­வா­தா­ரத்­தோடும் பொரு­ளா­தார நிலை­மை­க­ளு­டனும் பிள்­ளை­களின் கல்விச் செயற்­பாட்­டு­டனும் விளை­யாடி வரு­வ­தா­கவும் அதி­கா­ரிகள் மீதும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் மீதும் தமது விரக்­தி­யையும் அதி­ருப்­தி­யையும் தெரி­வித்து கோஷங்­களை எழுப்­பி­யதை அவ­தா­னிக்க முடிந்­தது.
இவ்­வாறு நேற்று நான்­கா­வது நாளாக இடம்­பெற்ற தோட்டத் தொழி­லா­ளர்­களின் எதிர்ப்பு போராட்­டத்தில் பதுளை, நுவ­ரெ­லியா மற்றும் கண்டி மாவட்ட தொழி­லா­ளர்கள், ஆத­ர­வா­ளர்கள் இணைந்து கொண்­டனர். இதன்­போது எதிர்ப்பு பதா­கை­களை ஏந்­தி­ய­வாறு கோஷங்­களை எழுப்­பி­ய­துடன் வீதி­களை மறித்து டயர்­களை போட்டு எரித்­தனர்.
அத்­துடன் போடை சந்­தியில் கூடிய தொழி­லா­ளர்கள் ஹட்டன் சாஞ்சி மலை பிர­தான வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­துடன் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தன் பிர­தா­னி­யொ­ரு­வரின் உருவப் பொம்­மையை வீதியில் நிறுத்தி தீயிட்டு கோஷ­மிட்­டனர்.

நுவ­ரெ­லி­யாவில்
நுவ­ரெ­லியா, கண்டி பிர­தான வீதியில் லபுக்­கலை பிர­தே­சத்தில் கூடிய லபுக்­கலை மேற்­பி­ரிவு, கீழ்­பி­ரிவு, கொண்­டக்­கலை, வெஸ்டோ, பம்­ப­ர­கலை ஆகிய தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்கள் வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதனால் குறித்த பிர­தே­சத்தில் சுமார் இரண்டு மணி­நேரம் போக்­கு­வ­ரத்து தடைப்­பட்­ட­துடன் பெரும் வாகன நெரி­சலும் பதற்ற நிலையும் உரு­வா­னது.
போராட்­டத்தில் கலந்து கொண்ட தொழி­லா­ளர்கள் தமக்கு 1000 ரூபா சம்­பளம் பெற்றுத் தரப்­பட வேண்டும் என்றும் இல்­லையெல் 850 ரூபா­வை­யேனும் தமக்கு பெற்றுத் தர முத­லா­ளிமார் சம்­மே­ளனம் சம்­ம­திக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்­பினர். தொழி­லா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட போராட்­டத்தின் போது நுவ­ரெ­லியா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரித் தலை­மையில் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
மஸ்­கெ­லியா
மஸ்­கெ­லி­யாவில் கூடிய தோட்டத் தொழி­லா­ளர்கள் 1000 ரூபா கோரிக்­கையை கொண்ட பதா­தையை ஏந்­தி­ய­வாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதன்­போது தமது எதிர்ப்­பி­னையும் வெ ளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். மஸ்­கெ­லியா எரி­பொருள் நிலை­யத்­திற்கு முன்­பாக கருப்புக் கொடி­களை ஏந்­தி­ய­வாறு போராட்­டத்தில் ஈடு­பட்ட தொழி­லா­ளர்கள் 1000 ரூபாவை பெற்றுத் தரு­மாறு இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் பொதுச் செய­லாளர் ஆறு­முகன் தொண்­ட­மானை கோரினர். இதன்­போது அனைத்து தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் எதி­ரான கோஷங்­க­ளையும் எழுப்­பினர்.
பத்­தனை, போகா­வத்தை
தலவாக்கலை நாவலப்­பிட்டி பிரதான வீதியின் போகா­வத்தை நக­ரத்தில் அணி­தி­ரண்ட பத்­தனை, போகா­வத்தை தோட்டத் தொழி­லா­ளர்கள் பிர­தான வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். தமக்கு நியா­ய­மான சம­ப­ளத்தை பெற்றுத் தரு­மாறு இதன்­போது கோஷங்­களை எழுப்பி நின்­றனர்.
பொக­வந்­த­லாவை வீதியில்
இதே­வேளை அட்டன் தர­வலை, சலங்­கந்தை, இன்­வரி, அட்லி, மாணிக்­க­வத்தை, பட்­டல்­கலை, என்சீ ஆகிய தோட்­டங்­களைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான தோட்டத் தொழி­லா­ளர்கள் சாலை மறியில் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். தொழி­லா­ளர்கள் கம்­ப­னி­க­ளாலும் தொழிற்­சங்­கங்­க­ளாலும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வ­தாக தமது கவ­லை­யையும் கோபத்­தையும் வெ ளியிட்­டனர்.
தல­வாக்­கலை
தல­வாக்­கலை, இரட்­ன­க­ரிய, பாமஸ்டன் ஆகிய தோட்டத் தொழி­லா­ளர்கள் பாமஸ்டன் சந்­தியில் ஒன்­று­கூடி 1000 ரூபா கோரிக்­கையை முன்­வைத்த போராட்டம் நடத்­தினர். இதன்­போது 400 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் கலந்து கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கூட்டு ஒப்­பந்­தத்தை உட­ன­டி­யாக புதுப்­பித்து தமக்கு சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுத் தரு­மாறு இதன்­போது வலி­யு­றுத்திக் கூறினர்.
இதே­வேளை லிந்­துலை ஹென்போல்ட் தோட்­டத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் தல­வாக்­கலை பாம் வீதியில் திஸ்­பன சந்­தியில் வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதனால் இங்கு சுமார் ஒரு­ம­ணி­நேரம் போக்­கு­வ­ரத்து ஸ்தம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.
மேலும் வட்­ட­வளை, டெம்­பல்ஸ்டோ தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்கள் அட்டன் கொழும்பு வீதியில் ரொசல்ல பிர­தே­சத்தில் கூடி பதா­கை­களை ஏந்­தி­ய­வாறும் எதிர்ப்புக் கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். அதே­போன்று அட்டன் ஸ்டிரதன் பிர­தேச தோட்டத் தொழி­லா­ளர்­களும் அட்டன் கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.
 அட்டன் வன­ராஜா மேற்­பி­ரிவு தோட்­டத தொழி­லா­ளர்கள் பொக­வந்­த­லாவை பிர­தான வீதியில் பதா­கை­களை ஏந்­தி­ய­வாறும் கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் டிக்­கோய நக­ரத்தில் பேர­ணி­யு­ட­னான போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். அத்­துடன் டிக்­கோயா பட்­டல்­கலை தோட்டத் தொழி­லா­ளர்­களும் டய­கம பிர­தான வீதியில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
பதுளை மாவட்­டத்தில்
இது இவ்வாறிருக்க பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை, வியாரகலை, தங்கமலை, கிளனூர் உள்ளிட்ட தோட்டங்களிலும், லுணுகலை அடாவத்தையிலும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடாவத்தையில் ஒன்றுகூடிய தொழிலாளர்கள் வீதியில் டயர்களை போட்டு எரித்தும் கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெ ளியிட்டதுடன் உடனடியாக சம்பள அதிகரிப்பினை பெற்றுத் தருமாறு கோஷமிட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையீடு செய்து சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திக் கோரினர்.
நன்றி- வீரகேசரி

Thursday, September 29, 2016

சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் போராட்டம்


சம்­பள அதி­க­ரிப்பை வலி­யு­றுத்தி தோட் டத் தொழி­லா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற எதிர்ப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்­பாட்­டங்­களின் தொடர்ச்­சி­யாக நேற்று புதன்­கி­ழமை மூன்­றா­வது நாளாகவும் வீதி­களை மறித்தும் டயர்­களை எரித் தும் ஒப்­பாரி ஓல­மிட்டும் பேர­ணி­களை நடத்­தியும் தமது எதிர்ப்­பி­னையும் ஆதங்­கத்­தி­னையும் கவ­லை­யையும் தோட்டத் தொழிலாளர்கள் வெளிப்­ப­டுத்­தினர்.  
நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அட்டன் நக­ரத்திற்­குட்­பட்ட தோட்­டங்கள், கொத்­மலை நானு­ஓயா, கண்டி மாவட்­டத்தில் பு­ஸல்­லாவை பிர­தேச பெருந்­தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்­களே இவ்­வாறு எதிர்ப் புப் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.  
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக  தோட்டத் தொழிலில் ஈடு­ப­டாத பொது­மக்­களும் முச்­சக்­க­ர­வண்டி சார­தி­களும் மற்றும் சமூக நலன் விரும்­பி­களும் இணைந்து கொண்டு கடு­மை­யான எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர். இந்த சந்­தர்ப்­பத்தில் வீதி­  
களை மறித்து ஆர்ப்­பாட்டம் நடத்­திய அதே­வேளை டயர்­க­ளையும் எரித்து தமது எதிர்ப்­பினை வெளிக்­காட்­டினர்.  
இதே­வேளை தமது கவ­லையை வெளிப்­ப­டுத்தும் முக­மாக தொழிலாளர்கள் ஒப்­பாரி வைத்து ஓல­மிட்­ட­துடன் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்கு கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்­தனர். அத்­துடன் தோட்ட முகா­மை­யா­ளர்­க­ளிடம் மக­ஜர்­க­ளையும் கைய­ளித்­தி­ருந்­தனர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யான கூட்டு ஒப்­பந்தம் 17 மாதங்கள் கடந்தும் புதுப்­பிக்­கப்­ப­டாமை, சம்­பள அதி­க­ரிப்­புக்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் தொடர்ச்­சி­யாக மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றமை மற்றும் பேச்­சு­வார்த்­தை­களில் எந்­த­வி­த­மான முன்­னேற்­றங்­களும் காணப்­ப­டாமை, அதி­கா­ரி­க­ளி­னதும் சம்­பந்­தப்­பட்­டோ­ரி­னதும் அச­மந்தப் போக்கு ஆகி­ய­வற்­றிற்கு எதிர்ப்புத் தெரி­வித்தே இவ்­வாறு தொடர்சசி­யான ஆர்ப்­பாட்­டங்­களை தொழி­லா­ளர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.
அந்த வகையில் புஸல்­லாவை பிர­தே­சத்தில் கட்­டு­கித்­துல, ஹெல்­பொட, பெரட்­டாசி, மெல்போர்ட், சோகம, சங்­கு­வாரி, பிளக்­போரஸ்ட், டெல்டா ஆகிய தோட்­டங்­களில் போராட்­டங்­க­ளையும் பேர­ணி­க­ளையும் நடத்­திய தோட்டத் தொழி­லா­ளர்கள் 1000 ரூபா சம்­ப­ளத்தை வழங்­கு­மாறும் கம்­ப­னியின் ஒடுக்­கு­முறை ஒழிக்­கப்­பட வேண்டும் என்றும் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­தது சம்­பளம் கேட்டு போரா­டு­வ­தற்கா? என்றும் கோஷங்­களை எழுப்­பினர். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கூறிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­ற வேண்டுமென்றும் தமக்கு நியா­ய­மான சம்­பளம் கிடைக்கும் வரையில் தமது போராட்­டத்தை கைவிடப்போவ­தில்லை என்றும் தொழிலாளர்கள் தெரி­வித்­தனர்.
ஒப்­பாரி
இது இவ்­வா­றி­ருக்க ஹட்டன் - பொக­வந்­த­லாவை வீதியை மறித்து தமது எதிர்ப்­பினை வெளியிட்ட பொக­வந்­த­லாவை, நோர்வூட் சென்ஜோன் டிலரி, வென்சர், டிக்­கோயா பிர­தேச தொழி­லா­ளர்­களும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். டின்சின் தோட்டத் தொழி­லா­ளர்கள் தமது எதிர்ப்­பி­னையும் கவ­லை­யையும் வெளிப்­ப­டுத்தும் முக­மாக ஒப்­பாரி வைத்­த­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.
இதே­வேளை வன­ராஜா தோட்டத் தொழி­லா­ளர்கள் பிர­தான வீதியில் சுலோ­கங்­களை ஏந்தி கோஷங்­களை எழுப்பி பேர­ணி­யாக சென்று தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர். அத்­துடன் தமது கோரிக்­கை­களை நிறை­வேற்­று­மாறும் வலி­யு­றுத்தி வன­ராஜா தோட்ட முகா­மை­யா­ள­ரிடம் மகஜர் ஒன்­றையும் கைய­ளித்­தனர்.
மேலும் செஞ்ஜோன் டிலரி மேற்­பி­ரிவு, கியூ தோட்ட மக்கள் தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­போது அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக முச்­சக்­கர வண்டி சார­தி­களும் இணைந்து கொண்டு ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­தனர்.
மலை­யக மக்­க­ளுக்கு பொய்­யான வாக்­கு­று­தி­களை அளித்து தொழி­லா­ளர்­களை ஏமாற்­று­வ­தாக தெரி­வித்த முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் பொக­வந்­த­லா­வை­யி­லி­ருந்து கியூ தோட்­டத்­திற்கு செல்லும் 4 கிலோ மீற்றர் வீதி நீண்­ட­கா­ல­மாக செப்­ப­னி­டாது குன்றும் குழி­யு­மாக காணப்­ப­டு­வ­தா­கவும் கோசம் எழுப்பி, டயர்­களை எரித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
இதே­வேளை நல்­ல­தண்ணி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட எமில்டன், லக் ஷ்­பான, சென்­அன்றூஸ், வாழை­மலை உள்­ளிட்ட தோட்­டங்­களைச் சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் லக்ஷ்­பான தோட்ட தொழிற்­சா­லைக்கு முன்­பாக திரண்டு பதா­கை­களை ஏந்தி கோஷம் எழுப்பி தமது எதிர்ப்­பினை வெளியிட்­டனர். சம்­பள உயர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் சூளு­ரைத்­தனர்.
மேலும் நேற்று காலை 8.00 மணி­முதல் 10.00 மணி­வ­ரை­யான சுமார் இரண்டு மணி­நேர காலத்­திற்கு றதல்ல பிர­தான வீதியை மறித்து தோட்டத் தொழி­லா­ளர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதனால் அங்கு பாரிய போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. இதன்போது கார்லபேக், லேங்டல், ஈஸ்டல், தம்பகஸ்தலாவ, சமர்செட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தமது வாழ்வாதார நிலைமைகளை வெ ளிப்படுத்தியதுடன் சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அத்துடன் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டால் போராட்டம் பாரியதாக அமையும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
நன்றி- வீரகேசரி

Tuesday, September 27, 2016

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மேலும் ஒருவார காலத்திற்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தொழிலமைச்சர் ஜோன் செனவிரத்னவின் தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்த நிலையில் முதலாளிமார் சம்மேளனம் அதற்குத் தயாரில்லை என நேற்று அறிவித்ததையடுத்து பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து தமது எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்து வரும் நிலையில் 3வது நாளாக நேற்றும் மலையகப் பிரதேசங்களின் பல தோட்டத் தொழிலாளர்கள் கறுப்புக் கொடியுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். பொகவந்தலாவை மற்றும் டன்சினன் பகுதிகளில் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், இந்தப் பிரச்சினையை தொடர்ந்தும் இழுத்தடிக்க இடமளிக்க முடியாது என்றும் ஒருவார காலத்திற்குள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வழி செய்யப்படும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த விவகாரம் தொடர்பில் முழு அவதானத்தையும் செலுத்தி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் நேற்றும் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 18 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் எவ்வித இனக்கப்பாடும் எட்டப்படாமை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொறுமையிழந்த நியைலேயே அவர்கள் சுயமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலை முதலாளிமார் சம்மேளனம் ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு வழியேற்படுத்தும் என தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிடுகின்றன.
கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது எதுவித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில், தொழிலமைச்சரின் தலையீட்டுடன் தீர்வொன்றைக் காண்பதற்கு வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வு வரும் என தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். எனினும் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியுள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தின் முக்கிய கட்சியான இ. தொ. கா வின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் எம்.பி. இது தொடர்பில் நேற்று தினகரனுக்குத் தெரிவிக்கையில்; இன்றைய பேச்சுவார்த்தையை எதிர்பார்த்திருந்த போதும் முதலாளிமார் சம்மேளனம் அதனை அடுத்த வாரத்திற்கு ஒத்திப்போட்டுள்ளமை அதிருப்தியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்புக்காக காத்திருக்கும் நிலையில் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகள் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாது ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுவதைக் காணமுடிகின்றது.
ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்துவதும் அறிக்கைகளை வெளியிடுவதும் என தத்தமது அரசியல் நோக்கங்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தி வருவதையும் காணமுடிந்தது.
கூட்டு ஒப்பந்தம் என்னவாகும்? தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை இன்னும் ஒருவார காலம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சம்பள அதிகரிப்பை கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பித்து தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவ, கெம்பியன், அத்துடன் சாமிமலை ஸ்ரபி தோட்டத்திலும் இடம்பெற்றன.

வீதிமறியல் போராட்டத்தின் காரமாண போக்குவரத்து தடைப்பட்டிருந்ததன் காரணமாக பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி முதலாளிமார் சம்மேளனத்துக்கு  மகஜர் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு ஒருவார கால அவகாசத்தை கேட்டு ஸ்டர்ஸ்பி தோட்ட மக்கள் தோட்ட அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை தமது கோரிக்கைகள், நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் தொடர்ந்தும் இழுத்தடிப்புக்களை மேற்கொண்டால் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.  

பொகவந்தலாவ மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு, டின்சின் தோட்டம், ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுகூடி பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை கொட்டியாக்கலை, கெம்பியன், மற்றும் செப்பல்டன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கெம்பியன் நகரத்தில்  ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். 

இதேபோன்று சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்டத்திலும் சுமார் 500 இற்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டு அர்ப்பாட்டங்களையும், போராட்டங்களை முன்னெடுத்ததோடு முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.