Sunday, November 22, 2009

வளர்ச்சி கண்டுவரும் மலையக கல்வி

மலையகம் கல்வித் துறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இலங்கையின் கல்வி வரலாறு பல தசாப்தங்களை கடந்துள்ளது. குருகுலக் கல்வி முதல் போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற வெளிநாட்டவர்கள்
இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலினார்கள். இலங்கையில் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1945 ஆம் ஆண்டு இக் கல்வி முறைமையில் ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. 1946 ஜூன் மாதத்தில் ‘இலவச கல்வி சட்டம்’ அமுல்படுத்தப்பட்டது. 1951 இல் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 6 வயது முதல் 16 வயது வரையான எல்லா பிள்ளைகளும் கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும் என்ற சட்டமும் அமுலுக்கு வந்தது.
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கல்வியானது மலையக மக்களுக்கு கிடைப்பதற்கு 30 வருடங்கள் சென்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 03 தசாப்தங்களுக்கு பின்னரே தோட்டப் பாடசாலைகள் அரசுடைமைகளாக்கப்பட்டன.
ஏனைய சமூகங்களுக்கு கிடைத்த கல்வி வாய்ப்புக்களை 30 வருடங்களின் பின்னரே நோக்கவேண்டும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட மலையகச் சமூகம் பல வழிகளாலும் பல துறைகளாலும், தொழில் துறை ரீதியாகவும், கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்களாலும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளாலும் மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது.
பாடசாலைக்கு மாணவர் அனுமதி, பெற்றோரின் பங்களிப்பு, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நிலை போன்றவற்றை சுட்டிக் காட்டலாம். இன்னும் 2ம் தர கல்வியை உயர்த்த வேண்டும். அத்தோடு உயர்தர கல்வி பெறுபேற்றையும், பல்கலைக்கழக அனுமதியையும் அதிகரிக்க கூடிய வகையில் வேலைத்திட்டங்களை அமைச்சு மட்டங்களில் முன்னெடுக்க வேண்டும்.
இன்று மலையகத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் ஆசிரியர்களாக, விரிவுரையாளராக, எஞ்சினியர்களாக, வக்கீல்களாக, நிர்வாக உத்தியோகத்தர்களாக, அதிபர்களாக, கல்வி சேவை உத்தியோகத்தர்களாக, கல்வி அதிகாரிகளாக, அரசியல்வாதிகளாக (அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களாக உள்ளார்கள்) வெளிநாட்டு தூதுவர்களாக, உலக வங்கி நிறுவனங்களில் வேலை செய்பவர்களை, அரச சார்பற்ற நிறுவனங்களை கொண்டு நடத்துபவர்களாக, உயர் அதிகாரிகளை, பொலிஸ் உத்தியோகஸ்தர்களாக, வர்த்தகர்களாக, உழைப்பாளர்களாக (தோட்ட தொழிலாளர்கள்) இன்று காணப்படுகின்றனர்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கூட வருடா வருடம் தேசிய மட்ட புள்ளிகளோடு போட்டி போடுகின்றார்கள். மாவட்ட, மாகாண, தேசிய மட்டத்தில் 2ம், 10ம் இடங்களையும் கூட பெற்றுக் கொள்கின்றார்கள்.
மலையகப் பிரதேசத்தில் இருந்து இன்று பெரும்பாலான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இம்முறையும் நுவரெலியா மாவட்டத்தில் 185, 181 புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் இருக்கின்றார்கள்.
இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நாங்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். க. பொ. த. சாதாரண பரீட்சையில் கூட 9 ‘ஏ’ சித்திகளை அதிகமான மாணவர்கள் பெற்றுக் கொள்வதைக் காணலாம். தற்போது உயர் தரத்திற்கு வரும் மாணவர்கள் கலை, வர்த்தகத்தை தெரிவு செய்வதை விட விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கு செல்வதே அதிகமாக உள்ளது.
உயர்தரப் பரீட்சையில் கூட கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் 3 ‘ஏ’ சித்திகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் மிக அதிகமாக உள்ளார்கள். மலையகத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் விகிதம் கூடியுள்ளது.
அண்மையில் ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் உலக ரீதியில் 5 ம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் கூட மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலகட்டத்தில் மலையக பிரதேசத்தில் ஆசிரியர்கள் கூட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று மலையகத்தில் பிறந்து வளர்ந்து இப்பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்றவர்களே ஆசிரியர்களாக அதிபர்களாக, விரிவுரையாளர்களாக, ஆசிரிய ஆலோசகர்களாக, பட்டதாரி ஆசிரியர்களாக () உத்தியோகத்தர்களாக கல்விப் பணிப்பாளர்களாக, ஆலோசகர்களாக உருவாகியிருப்பது மலையகத்தின் கல்வி வளர்ச்சியை ஒரு படி மேல் உயர்த்தி காட்டுகிறது.
எமக்கு கிடைத்த மனித பௌதிக வளங்களை பயன்படுத்திக் கொண்டு இச்சமூகம் இப்போது ஓரளவு கல்வித் துறையில் வளர்ந்து வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
யார் எந்த வகையில் விமர்சனங்களை முன்வைத்தாலும் பல அமைச்சர்களின் அயராத உழைப்பினால் பாடசாலை கட்டடங்களில், ஆசிரியர் நியமனங்களும் பௌதிக வளங்களும் கிடைத்திருக்கின்றன. இவற்றை நாம் போராடியே பெற்றுள்ளோம். பிரதிக் கல்வி அமைசச்ர், மாகாணக் கல்வி அமைச்சர் பதவிகளைப் பெற்றதும் கல்வி மறுமலர்ச்சியின் வெளிபாடே ஆகும்.
எனவே கல்வி வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்ற மலையகம் இன்று பூரணமாக வளர்ச்சி அடைய நீண்டகாலம் காத்திருக்க தேவையில்லை. மலையகம் கல்வியில் முன்னேற முடியும்.
முன்னேறும் இன்றைய ஆசிரியர்களின் அயராத உழைப்பின் மூலம் எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும்.மலையக அமைச்சர்கள், உறுப்பினர்கள் தொழிற் சங்கங்கள் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கான வேலைத் திட்டங்களை கட்சி, இனம், மதம், சாதி பார்க்காமல் மலையகத்தின் கல்வி வளர்ச்சியே எமது சமூகத்தின் வளர்ச்சி என்ற தொனிப் பொருளில் சேவையாற்ற வேண்டும். தற்போது பல அமைச்சர்கள் இவ் விடயத்தில் அதிக கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.
மலையகப் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதன் மூலம் மலையகத்தின் கல்வி அபிவிருத்தியை பிரசித்தப்படுத்தலாம். இதற்கு உயர் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஒரே நோக்கோடு செயற்பட வேண்டும்.
இன்று இருப்பதை விட பல மகா வித்தியாலயங்கள், மத்திய மகா வித்தியாலயங்கள், தேசியப் பாடசாலைகள், கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் மலையகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வியியல் கல்லூரிகளை மேலும் மலையகத்திற்கு நன்மை தரக்கூடியவாறு பல பயிற்சி நெறிகளையும் ஆரம்பிக்க வேண்டும். மலையகத்திற்கென வாசிகசாலை, அருங்காட்சியகம், கணனி வளநிலையம், ஆய்வு கூடங்கள், தகவல் மையங்கள் என்பன கல்வித் துறையை மையப்படுத்தி உருவாக்க வேண்டும். குறிப்பாக மலையகத்தில் இருந்து கற்று இன்று உயர் ஸ்தாபனங்களில் இருப்பவர்களின் சேவையை மலையகம் முழுமையாக பெறும் போது எமது கல்வி வளர்ச்சி வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி.
எமது, மக்களையும், ஆசிரியர்களையும், அதிபரையும் குறைகூறுவதை விட்டுவிட்டு செயற்பாட்டில் இறங்குவோம். அதற்காக சிறப்பாக சேவை செய்பவர்களையும், சிறந்த பெறுபேற்றை எடுத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்க வேண்டும். ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் உச்சாகப்படுத்த வேண்டும்.
வருடா வருடம் இவர்களை உற்சாகப்படுத்தல் செயற்திட்டங்களை உருவாக்க கல்வித் திணைக்களங்கள் கல்வி அமைச்சு உட்பட கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பும் முன்வர வேண்டும்.
பரீட்சை பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு பாடசாலை மட்டத்திலும், மாவட்ட, மாகாண மட்டத்திலும் (6 – 9) தேசிய மட்டத்திலும் பரீட்சைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு செயலமர்வுகளை செய்வதோடு மாணவருக்கும் வழிகாட்டல் கருத்தரங்குகளையும் பரீட்சைகளையும் நடத்தி பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை மட்டத்தில் மீள் பரிசீலனை செய்யப்பட்டு குறைபாடுகள், பிரச்சினைகள் காணப்படின் நிவர்த்தி செய்யவேண்டும். பாடசாலை சமூகத்தோடு தொடர்புடைய (SDS) பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள், அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் சேவைகளையும் பெற்றுக் கொள்வதோடு JSA SUBJECT AD வளவாளர்கள், கற்றோர்கள் நிபுணர்களின் சேவைகளை கூடுமானவரை பெற்றுக்கொள்ள வேண்டும். சாதாரண தரத்திற்கு ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள் போன்றோரை பாடசாலைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரா. சிவலிங்கம்
நன்றி- தினகரன் வாரமஞ்சரி
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்தில்லை- சிவா ஸ்ரீதரராவ்

தமிழர்கள் செறிந்து வாழும் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அரசாங்கத் திணைக்களங்களில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படுவதில்லை. இதனால் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை சகல அரச உத்தியோகத்தர்களும் ஓரளவுக்கேனும் அறிந்திருக்க வேண்டும் என்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் அச் சட்டங்கள் வெறும் ஏட்டுச் சட்டங்களாகவே இருக்கின்றன.
தமிழ் மொழி பேசுபவர்களுக்கு பெரும் சோதனை
அரச திணைக்களங்களுக்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக செல்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு தங்களது தேவைகளை உரிய முறையில் சரியாக செய்து கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. தமிழ் மொழி பேசுகின்றவர்கள் தாங்கள் தமிழ் மொழி மூலம் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மலையகப் பகுதிகளிலுள்ள அரச திணைக்களங்களில் தொடர்பாடல் வசதியளிப்பாளர் என்ற நியமனங்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.
மேற்படி தொடர்பாடல் வசதியளிப்பாளர்கள் என நியமனம் பெற்றவர்கள் பிரதேச செயலகத்திலும் உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்திலும் தபாற் காரியாலயத்திலும் கடமையாற்றி வந்த போதிலும் அவர்களில் அதிகமானோர் ஆசிரியர் நியமனம் கிடைத்து சென்று விட்டனர். இவர்களின் வெற்றிடங்களுக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படாதமை தமிழ் மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக விளங்குகின்றது.
விளம்பரப் பலகைகளில் தமிழ் பிழைகள்
அரச மற்றும் தனியார் திணைக்களங்களிலுள்ள விளம்பர பலகைகளில் தமிழ் மொழியில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டாலும் கூட அதில் எண்ணிறைந்த தமிழ் பிழைகள் காணப்படுகின்றன. தமிழ் மொழிக்கு இவ்வாறு பாரபட்சம் காட்டப்படுவதனால் அரசாங்கத் திணைக்களங்களுக்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள செல்வோர் மொழி தெரியாமல் திரும்பி விடுகின்றனர்.
அரச காரியாலயங்களிலுள்ள நுழைவாயில் தொடக்கம் ஏனைய எல்லா இடங்களிலும் காட்சியளிக்கின்ற அறிவித்தல்கள் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு பெரும் சோதனையாகவே காணப்படுகின்றன. இவ்வாறு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவது இம் மாவட்டத்தில் பெருந் தொகையாக வாழும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலென பலரும் கருதுகின்றனர்.
தனிச் சிங்களத்தில் அனுப்பப்படும் சுற்று நிருபங்களால் பெரும் சிரமம்.
சம்பரகமுவ மாகாணத்தின் கல்வி அமைச்சு மற்றும் கல்விக் காரியாலங்களில் காணப்டுகின்ற அறிவித்தல்கள் எல்லாமே சிங்கள மொழியில் மாத்திரமே காணப்படுகின்றமையால் சேவைகைளைப் பெற்றுக் கொள்வதற்கு இக் காரியாலயங்களுக்கு வருகை தரும் நூற்றுக்கணக்கான தமிழ் ஆசிரியர்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனனர்.
கல்வி அமைச்ச மற்றும் கல்வித் திணைக்களங்கள், காரியாலயங்கள் என்பவற்றிலிருந்து தமிழ் பாடசாலைககளுக்கு அனுப்பி வைக்கப்படும் அதிகளவான கடிதங்களும் சகல சுற்று நிருபங்களும் சிங்கள மொழியிலேயே அனுப்பப்பட்டு வருவாதாக அதிபர்களும் , ஆசிரியர்களும் முறையிடுகின்றனர். மேற்படி சுற்று நிருபங்களை மொழிப்பெயர்ப்பதற்காக சிங்கள மொழி தெரிந்தவர்களிடம் அதிபர்,ஆசிரியர்கள் செல்ல வேண்டியிருப்பதால் உரிய நேரத்திற்கு தகவல்களை சமர்ப்பிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
ஆசிரியர்களின் சம்பள உயர்வுக் கடிதங்கள் மற்றும் நியமனக் கடிதங்கள் என்பன சிங்கள மொழியில் இருப்பதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள விளம்பரத்தைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.
தபால் நிலையங்களில் தந்தி செய்திகளை தமிழில் அனுப்ப முடியாத நிலை
இம் மாவட்டத்தில் உள்ள தபால் மற்றும் உப தபாற் கந்தோர்களில் அவசர தந்திகள் கூட தமிழில் அனுப்ப முடியாமல் இருப்பதும் பெரும் கவலைக்குரிய விடயமென தெரிவிக்கப்படுகிறது. அரச நிறுவனங்களுக்கு அன்றாட கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள வரும் போதிய கல்வி அறிவில்லாத தோட்ட மக்கள் தரகர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. இவர்களுக்கான கொடுப்பனவுகளும் கணிசமான தொகையாக இருப்பதால் ஏற்கனவே பொருளாதார பிரச்சினைகளால் நொந்திருக்கும் அநேகமானோர் இந் நிறுவனங்களுக்கு வருவதை தவிர்ப்பதே மேலென கருதுகின்றனர்.
தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படல் வேண்டும்
அரச கரும மொழியாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தமிழ் மொழிக்கு தகுந்த இடத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் அரசியல்வாதிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் மலையக புத்திஜீவிகளின் தலையாய கடமையாகும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.