Friday, November 7, 2008


தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புக்கள் சொந்தமா?

அரசியல் தொழிற்சங்கத் தலைவர்களால் உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்படும் வார்த்தைகளை நம்பி தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் தங்களுக்கு வழங்கப்படும் ஏழு பேர்ச்சர்ஸ் நிலத்தில் நிர்மாணித்து வழங்கப்பட்ட வீடுகளை விருப்பப்படி விற்கவோ, வேறு பாணியில் கட்டிடத்தை மாற்றி அமைக்கவோ நினைத்து அப்படிச் செய்யும் போது நிர்வாகத்தினால் அதைக் கட்டுப்படுத்துவதோடு தவறும் பட்சத்தில் குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை அநேக தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்றனர். தொழில் நீதிமன்றங்களிலும் நீதவான் நீதிமன்றங்களிலும் இதை சென்று பார்வையிடலாம்.
வீட்டை இன்னொருவருக்கு விற்றதாகவோ மாற்றியதாகவோ நிர்வாகம் கருதி அவர்களுக்கு வேலை நிறுத்தம் செய்தால் விபரமறியாத தொழிலாளர்கள் தொழில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து வருடக் கணக்கில் வழக்காடப்பட்டு இறுதியில் காணியும் வீடும் தனக்கு சொந்தம் என்பதை நிரூபிக்கத்தவறி, வழக்கில் தோல்வி அடைந்து தொழிலை இழப்பதோடு வீட்டையும் நிலத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நீதிமன்ற கட்டளையை மீறும் பட்சத்தில் எதுவித அறிவித்தலுமின்றி இரக்கமற்ற முறையில் வீட்டில் உள்ளவர்களை வெளியில் அனுப்புவதுடன் உடைமைகளுடன் வீசப்பட்டு நிர்வாகத்திடம் வீடு கையளிக்கப்படுகிறது. வீடும் அதைச் சுற்றியிருக்கும் நிலமும் தொழிலாளருக்கு சொந்தம் என்பவர்கள் அதற்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

பொகவந்தலாவை, டிக்கோயா, வட்டகொட, மடக்கொம்பரை போன்ற தோட்டப் பகுதிகளில் வேலை செய்யாதவர்கள் வீடுகளில் இருக்க முடியாது என்று நிர்வாகத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதை யாவரும் அறிவோம். மடக்கொம்பரையில் முன்னாள் (பா.உ) சி.வீ வேலுப்பிள்ளையின் வீடு கூட பிஸ்கால் மூலம் கைப்பற்றப்பட்டது. டிக்கோயா பகுதியில் ஒரு தொழிற்சங்க பிரதிநிதிக்கும் இதுவே நடந்தது. மடக்கொம்பரை மேல் பிரிவுக்கு சொந்தமான சிறு நிலத்தை வாங்கி வீடு கட்டிய தொழிலாளிக்கு எதிராக பொலிஸ் மூலம் நிர்வாகம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

பல தோட்டங்களில் நிர்வாகங்கள் லயன்களையும், சேவையாளர்களின் வீடுகளையும் வங்களில் அடைவு வைத்து பணம் பெற்றுள்ளதை வருடாந்த அறிக்கைகளில் கம்பனிகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. தொழிலாளர்களால் லட்சக்கணக்கில் சேகரித்துக் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் கூட நிர்வாகத்துக்கே சொந்தமானதாகும். இந்த நிலையில்தான் தொழிலாளர்கள் பல்லாண்டு காலம் உழைத்து இறுதி காலத்தில் பெறப்படும் ஊழியர் சேமலாப நிதியை கொண்டு தாங்கள் இருக்கும் வீடுகளை நல்ல முறையில் திருத்தியமைக்கின்றனர். ஆனால் எந்தவொரு தொழிலாளியும் இந்த வீடுகளை சொந்தம் கொண்டாடவோ சட்டப்படி அடைவு வைக்கவோ முடியாது. காரணம் காணி, வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் தேவை.

இதேபோல் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் தொழிலாளர்கள் கடன் பெற்று 10 ஆண்டுகளுக்கும் 15 ஆண்டுகளுக்குமான பெற்ற கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இப்படி பெற்ற கடனை வட்டியுடன் உடனடியாக திருப்பிக் கிடைக்காது என்றும் உறுதிப் பத்திரத்தை வாங்கிக் கொடுக்க அமைச்சராக அப்போதிருந்த பெ. சந்திரசேகரன் அவர்களிடம் சவால் விடுத்திருந்தார் ஓ.ஏ. இராமையா என்பது நினைவு கூரத்தக்கது. 1996ம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்த இவ்வாறான முறை பணத்தை கடனுடன் திருப்பிய செலுத்திய தொழிலாளர்கள் எவருக்கும் உறுதிப்பத்திரம் கொடுக்கப்படவில்லை. மாறாக இன்னும் வீட்டுக்கு வாடகையைப் போல் ஒக்ஸ்போர்ட் போன்ற தோட்டங்களில் மாதாந்தம் 390 ரூபாய் அறவிடப்பட்டு வருகிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு அறவிடப்படும் என்பது தெரியவில்லை.

தேசிய வீடமைப்பு அதிகார சபை உதவியுடன் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு அருகாமையில் விஸ்தரித்துக் கொள்வதற்கு தோட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றே ஆக வேண்டும். அப்படி அனுமதி பெறாவிடில் நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு.
ஆகவே இந்த உரிமைகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாகாண சபை தேர்தல்கள் வரப் போகின்றன. தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்காக எவ்வளவு பணம் நிர்வாகங்களால் அறவிடப்பட்டு அதிகார சபைக்கு செலுத்தப்பட்டன. என்ற விபரங்களை கூட பல தோட்டங்களில் அறிவிப்பதில்லை. எனவே இந்த முக்கிய விடயத்திலாவது தொழிற்சங்கங்கள் செய்யப் போவதை தாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்

சிதம்பரம் ஜோதி-
நிர்வாகச் செயலாளர்

ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ்

தொடரும்…..
விலை வீழச்சியை காரணங்காட்டி தொழிலாளர்களின் சம்பளவுயர்வை மழுங்கடிக்க சதி

உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி, உற்பத்தி குறைக்கப்படவேண்டும் என காரணம் கூறப்படுவது தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை மழுங்கடிக்கும் சதியெனவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளையும், போராட்ட நடவடிக்கைகளையும் பலமிழக்க செய்யும் நடவடிக்கையென மலையக தொழிலாளர் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே வாழ்க்கை செலவுப்புள்ளிக்கேற்ப சம்பள உயர்வு தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்

தேயிலையின் விலை வீழ்ச்சியால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பு

தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதனைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டங்களில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. தோட்டக் கம்பனிகளோ விலை வீழ்ச்சியால் உற்பத்திகள் அனைத்தும் தேங்கியிருப்பதாகவும், சம்பள அதிகரிப்போ, மேலதிக வேலையோ வழங்க முடியாதுள்ளதாக காரணம் தெரிவிக்கின்றனர்.

இரு இலைகள் கொண்ட இளந் தளிர் கொழுந்து மட்டுமே கொள்வனவு செய்யப்படுகின்றன. இவ்வாறான கொழுந்து வழங்கப்பட்டாலும் அதனையும் முழுமையாக கொள்வனவு செய்ய தேயிலை தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 கம்பனிகளும் 100க்கு மேற்பட்ட சிறு தேயிலை மற்றும் தனியார் தோட்டங்களும் காணப்படுகின்றன. இவற்றில் 25,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கடமை புரிகின்றனர். இத் தோட்டங்களை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு வேலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.