Thursday, April 29, 2010

தொழிலாளர்களின் உரிமைகளை பெற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

உலகத் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து போராடி பெற்ற உரிமைகளை பெறுவதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகச் செயலாளர் எஸ். ஜோதிவேல் விடுத்துள்ள மேதின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த தொழிற்சங்கங்களுடன் தோட்டக் கம்பனிகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கம்பனிகள் நேர்மையாகப் பின்பற்றுவதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. தொழிலாளர்களின் குமுறல் இல்லாதொழிக்கப்படுகிறது. அடுத்த ஒப்பந்தம் வரை தொழிற்சங்கங்கள் மௌனித்து போகின்றன.

இனிவரும் காலங்களில் கம்பனிகளுடன் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தம் கூட்டு ஒப்பந்தத்திற்கு மாறாக செயற்படும் கம்பனிகளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மூலம் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

இதற்காக தொழிற்சங்கங்களுக்கு அங்கத்தவர்கள் பாரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும். தோட்ட உத்தியோகத்தர்களுக்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று வீட்டு வசதிகளுக்கான நிவாரணமும் பெற்றுக் கொடுக்க சகலரும் ஒன்றிணைய வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன் வைப்பதில் வலுசேர்க்க முடியாவிடில் மீண்டும் சம்பள நிர்ணய சபையின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வழி செய்வதுடன் காலத்துக்குக் காலம் ஏற்படும் வாழ்க்கைச் செலவுக்கேற்ப மாற்றம் செய்யவும் நிர்ப்பந்திக்கவும் போராட்டங்களில் ஈடுபட்டு தொழிற்சங்கங்களை விழிப்புறும் நிலைக்கு தொழிலாளர் சக்தி இட்டுச் செல்ல வேண்டும் என்றார்.

Wednesday, April 28, 2010

உரிமையை தட்டிக் கேட்டும் தினமாக மேதினம் மாற வேண்டும்

30 வருட யுத்த காலத்தின் பின்னர் இந்த நாட்டில் இடம்பெறும் முதலாவது மேதினம் நாடு முழுவதுமாக நடைபெறுகிறது. மலையகத்தை பொறுத்தவரை மேதினம் ஒரு ஆலய திருவிழா, சடங்கை போல இடம்பெற்று வருகிறது.
மேதினம் தொழிலாளர்கள் தினமாகும். முதலாளித்துவத்திற்கு எதிராக எழும்பிய அலைககளினால் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் தினத்தின் வரலாறு நீண்டதோர் வரலாறாகும். தொழிலாளர்களின் அடிமைத்தன வாழ்வுக்கு எதிராக அமெரிக் சிக்காகோ நகரில் 1889 மே மாதம் 01 திகதி மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் விளைவாக ஏற்றபட்டதன் பயனே மே 1ம் திகதிய தொழிலாளர் தினமாகும்.
தொழிலாளர்களின் ஒற்றுமையின் விளைவாக 1890 மே 1ம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பட்டது. இச் சம்பவத்தின் பின்னரேபல நாடுகளில் மே முதலாம் திகதி உலகத் தொழிலாளர் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இன்று மலையகத்தில் மேதினம் ஒரு கேலிக்கூத்தாக அதன் புனித தன்மைக்கு எதிராக இடம் பெறுகிறது. வெறுமனே வருடா வருடம் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலத்தை ஏற்படுத்துவதாலும் கூட்டத்தின் இறுதியில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவதாலும் எமது சமுதாயத்திற்கு இதுவரை எதுவுமே நன்மைகள் கிடைக்கப்பெற்றதாக தெரியவில்லை.
கடந்தகால மேதினங்களில் எழுப்பப்பட்ட கோஷங்களாலும் தீர்மானங்களாலும் என்ன பயனை எமது மக்கள் எட்டியுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்களை மகிழ்விததது மட்டுமே எமது மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
மலையக பாட்டாளி மக்களின் உரிமையை தட்டிக்கேட்கும் ஒரு சந்தர்ப்பமாக மலையகத்திலும் மேதினம் மாற வேண்டும்.
ஏட்டிக்குப் போட்டியாக ஒவ்வொரு தொழிற்சங்கமும் தெருக்கூத்து நாடகங்களை நடடத்துவதுபால தலைவர்களின் செல்வாக்கை பிரதிபலிக்கும் நிகழ்வாகிவிட்டது மேதினம். தொழிலாளர்களின் உணர்வுகளை கொண்ட தொழிலாளர் தினமாக மேதினம் மாற்றம் பெற வேண்டும். வெறுமனே இந்திய சினிமா பாடகர்களையும் வெத்துவேட்டு தீர்மானங்களை கொண்டு மேதினத்தை நிரப்புவதைவிட எமது மண்ணுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் உயிர்நீத்த மலையக தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் தினமாக மாற்றம் பெற வைக்க வேண்டும்.
இலட்சக்கணக்கான செலவுகளை செய்து பந்தா மேதினக் கூட்டங்களை நடத்துவதை விட்டு அச் செலவு பணத்தை கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ள மலையக மாணவ மாணவிகளுக்கு வழங்கினால் அதுவே எமது சமுதாயத்தின் அறிவுக் கண்கள் திறப்பதற்கான அத்திவாரமாக அமையும் நடைமுறைக்கு ஒத்துவராத செயல்களை கைவிட்டு நடைமுறை வழிக்கு ஏற்ற வகையில் எமது மக்களே மேதினத்தை மாற்றம் பெற வைக்க வேண்டும்.
எமது பாட்டாளி வர்க்க போராட்டத்தில் முதன் முதலாக 1939 ஜனவரி 12ம் திகதி முல்லோயா போராட்டத்தில் சுரவீர என்ற பொலிஸ்காரரால் கோவிந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் முதல் மலையக மக்களின் போராட்டத்தில் கண்டி பல்லேகல தோட்டத்தை சேர்ந்த பழனிவேல்(1979) வi 36 தியாகிகள் உயிரை இழந்துள்ளனர்.
இந்த தியாகிகளை எந்தவொரு தொழிற்சங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ மேதினத்தினத்திலாவது நினைவுகூராமை வருந்தத்தக்கதாகும்.
ஓவ்வொரு மேதினத்தன்றும் இத் தியாகிகளை நாம் நினைவு கூரல் வேண்டும்.
வெறுமனே மேதினத்தை ஒரு திருவிழாவாக கொண்டாடுவதால் எமது எதிர்கால சமுதாயத்திற்கு எவ்வித பயனுமில்லை.
அர்த்தபுஷ்டியான செயல்களில் எதிர்வரும் காலங்களில் நாம் செயற்படுவோம்.
அதன் மூலமாக எமது தொழிலாளர்களின் பலத்தை அடையாளப்படுத்துவோமாக
திண்ணனூரான்
சிலாபம்

Thursday, April 22, 2010

மாணவி கடத்தல்

ஹட்டன் கொட்டகலை வெலிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்விபயிலும் 13 வயது மாணவி ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது உடைகள் காட்டுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை மாணவி கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஹட்டன் மனித உரிமைகள் தாபனம் தெரிவித்தது.
கடந்த 5ஆம் திகதி பாடசாலையிலிருந்து வரும் வழியில், முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதோர் மாணவியைக் கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் ஸ்டொனிகிளிப் தோட்டத்தின் காட்டுப் பகுதியிலிருந்து மாணவியின் ஆடைகளும் புத்தகங்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். எனினும் இந்த மாணவி தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை எனப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் மனித உரிமைகள் தாபனத்திலும் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Monday, April 19, 2010

தோட்டத்திற்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தவர்களின் தாக்குதலால் நால்வர் காயம்

நிவித்திகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னகந்த மகாவெல தோட்டத்திற்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்;ந்த சிலர் குடிபோதையில் அங்குள்ள தமிழர்களை தாக்கியுள்ளதோடு அவர்களின் வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இச் சம்பவத்தில் காயமடைந்த நால்வர் இத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது நீண்டகாலமாக இத் தோட்டத்திலுள்ள காணியை வெளியார் அத்துமீறி கைப்பற்றி வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து பெரும்பாலான தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே அங்கு வசித்து வருவதாகவும் தெரியவருகிறது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நிவித்திகலை பொலிசில் முறைப்பாடு செய்த போதிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறைப்பாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை எனவும் மாறாக தொழிலாளர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.டி ராஜனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அவர் சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தார். தொழிலாளர்கள் நிவித்திகலை பொலிசில் முறைப்பாடு செய்யவும் ஆவண செய்தார்.

மேம்படுத்தப்பட்ட தொழில் சூழல் மூலம் தொழிலாளர் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது


கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால தேயிலைத் தொழில், பிரித்தானியா சார்ந்த சம்பிரதாய பெருந்தோட்டத்துறையில் இருந்து விலகி நீண்டதூரம் வந்துவிட்டது.

பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் அங்கத்தவரான ரேஜி ராஜியா, 1962ம் ஆண்டு இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் நுழைந்தார். அவர், பெருந்தோட்ட நிர்வாகியாக, தரகராக, இயக்குநராக மற்றும் கொள்வனவாளராக தேயிலை தொழிற்துறையின் சகல நிலைகளிலும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் 45 வருட அனுபவம் உள்ளவர்.



இலங்கையின் சம்பிரதாய பெருந் தோட்டத் துறையில் இருக்கும் பெருந்தோட்ட வாழ்க்கை, நிலையான உற்பத்தி தாக்கத்திலும், இலாபத்திலும் சீரடைந்துள்ளது என்று இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கு அளித்த பேட்டியில் ராஜியா தெரிவித்துள்ளார்.


அன்று நாட்டிலுள்ள பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் தோட்டங்களுக்கு அவற்றின் முக்கியமான சாதனைகளைத் தெரிவு செய்யும் பொருட்டு மேற் கொள்ளப்பட்ட சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிறகு அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார். பெருந் தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத் தினால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை களுக்கு அமையவே இச்சாதனைகள் பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


“நிச்சயமாக முன்னேறுவதற்கு பல இடைவெளிகளிலிருந்தும் கடந்த 1980ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தோட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் மனிதவள அபிவிருத்தி சம்பந்தப்பட்ட துறைகளிலும் காணக் கூடியதாக உள்ளது” என்கிறார் ராஜியா.
கம்பனி தோட்டங்களில் டிரஸ்டின் தலையீட்டினால் தோட்ட மகளிர் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காண முடிந்திருக்கிறது.
“எந்த விதமான காலநிலையிலும், கடினமான நிலப்பரப்பில் கொழுந்துகளை பறிக்கும் விசேட தொழிற்றிரன் படைத்த அதேநேரம் அப்பெண்கள் துவைத்தல், விறகுகள் சேகரித்தல், உணவு தயாரித்தல், குழந்தைகளை பராமரித்தல் போன்ற வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது ராஜியா என்றார். இன்று


“ஆனால் இன்று, முன்னேற்றமடைந்துள்ள குடும்ப வசதிகளாலும் சமூக அந்தஸ்தாலும், கௌரவிக்கப்படுவதாலும் தோட்டப் பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் அரும்பத் தொடங்கியுள்ளன.” என்றும் ராஜியா கூறுகிறார்.


தோட்டங்களின் முக்கியமான துறைகளான சுகாதார பராமரிப்பு, சிறுவர் அபிவிருத்தி, குடியிருப்பு அபிவிருத்தி, வதிவிட மற்றும் சமூக அபிவிருத்தி போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளது.

உதாரணமாக மது போதைக்கு அடிமையானோர்களுக்கு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் அறிவுரை வழங்குதல், வீட்டு நிதி பராமரிப்பு, வங்கியிடுதல் மற்றும் சேமித்தல், கால்நடை வளர்ப்பு, வருவாய் பெருகக் கூடிய எடுத்துக்காட்டாக சிகை அலங்கார நிலையம் போன்ற தொழில்துறைகளுக்கு கடன் வழங்குதல் போன்றவற்றில் டிரஸ்ட் எடுபட்டுள்ளது. இச்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களது பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்காக நிதியுதவியும் வழங்கப்படுகிறது.


வீட்டு சௌகரியங்களுக்கு தேவையான வசதிகள், சூரிய ஒளி மூலம் மின்சாரம், சுடுநீர், தொழிற்சாலையிலும் வெளிக்களத்திலும் ஓய்வு அறைகள், முதியோர் இல்லம் மற்றும் கலாசார தேவைகளை கருதி சில பெருந்தோட்ட மாவட்டங்களில் மயானங்களையும் டிரஸ்ட் அமைத்துத் தந்துள்ளது.


“தேசிய மயமாக்கப்பட்ட நாளிலிருந்து, பெருந்தோட்ட சமூகத்துக்காக கட்டாயச் சேவைகளை முன்னேற்ற தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது கம்பனி தோட்டங்கள் இதைவிடவும் முன்னேறியுள்ளன. தற்போது விசேடமான சேவைகள், சிறந்த முறையான கட்டமைப்பில் தோட்ட குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சில நேரங்களில் அயல் கிராமப்புற சமூகங்களுக்குக் கொடுக்கும் விதத்தில் சலுகைகள் நிரம்பி வழிகின்றன” என்கிறார் இவர்.


அநேக தோட்டங்களில் உள்ள 0-5 வயதெல்லையையுடைய சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் சமூக கட்டமைப்புடன் உபகரணப்படுத்தப்பட்ட பிரிவுகளுடன் பயிற்சியளிக்கப்பட்ட தராதரமுள்ள உத்தியோகத்தர்கள் மூலம் முகாமைப்படுத்தப்பட்டதாகும். இன்றைய காலகட்டத்தில் அனேகமான நிறுவனங்களில் நிகழும் குழந்தை பிறப்புக்களின் போது, தாய்மார்களுக்கு உரிய ஊட்டச்சத்தும், பிரசவ பராமரிப்பும் வழங்கப்படுகிறது. இன்று இறப்புகளின் எண்ணிக்கை தேசிய கணக்கிற்கு உட்பட்டதாகவே உள்ளது.
கூடுதலான இளைஞர்களும் இள வயதினருமே புதிய வசதிகளுடைய வீடமைப்பு குடியிருப்புகளில் குடியேறுகின்றனர். இது அவர்கள் தனித்தனியான வீடமைப்புகளை ஏற்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. வயது முதிர்ந்தோர் இம்முறைமையை ஏற்றுக்கொள்ள காலம் எடுக்கலாம். ஆனால் இது முன்பைவிடவும் மிகப்பெரியதொரு முன்னேற்றமாகும். அதிகமான தகராறுகள் நீர் குறைவினாலும், கூரை ஒழுக்கினாலும், வதிவிட குறைபாடுகளாலுமே ஏற்படுகின்றன” என்கிறார் ராஜியா.


பிராந்திய கம்பனி தோட்டங்கள், சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீனமயமான தரக்கட்டமைப்பாகிய சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரச்சான்றிதழ்களுடன், தொழிற்சாலை அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இத்தொழிற்சாலைகள் மேம்படுத்தப்பட்டதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளதுடன் சுத்தமான, ஒழுங்கமைக்கப்பட்ட தொழில் சூழ்நிலை மூலம் தொழிலாளிகளின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. தொழிற்சாலை ஓய்வறை உட்பட இவைபோன்ற செயற்பாடுகள் இலங்கை தேயிலையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


கம்பனி தோட்டங்களில் பொதுவாகக் காணப்பட்ட வேலை செய்யும் நிலைமை வெகுவாக மாறி நல்ல நிலையை அடைந்துள்ளது. தற்போது தோட்ட முகாமைத்துவம், தொழிலாளர்களது கண்ணியத்தினை அடையாளம் கண்டுகொள்வதை அதிகரித்துள்ளதுடன் உடன்பாட்டுடனான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.


“ஆரம்பத்தில் இது ஒரு கொடுங்கோலான அமைப்பாக இருந்தது. தற்போது தோட்டங்களை நிர்வகிப்பதில் கலந்தாலோசிக்கும் அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு தோட்டத்திலும் தோட்ட கண்காணிப்பாளர், தொழிலாளர் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டு தொழிலாளர் செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான செயற் குழுக்களில் தற்போது பெண்களும் பிரதிநிதிகளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இது முன்னேற்ற வழியின் பெருமாற்றமாகும். இந்த செயற்குழுக்கள் மூலம் தொழிலாளர்களது தகராறுகள் சுமுகமாக பேசித்தீர்க்கப்படுகிறது. இதன் மூலம் தகராறுகளில் வீணாக்கப்படும் நேர விரயம் மற்றும் வேலை நிறுத்தங்கள் தவிர்க்கப்படுகின்றன” என்று சொல்கிறார் ராஜியா.


(இலங்கை பெருந்தோட்ட முதலாளிகள் சம்மேளன ஊடக வெளியீடு)
நன்றி- தினகரன் வாரமஞ்சரி

Sunday, April 18, 2010

கம்பனிகளின் வருகையின் பின்னர் தொழில் ரீதியாக நசுக்கப்படும், சலுகைகளை இழந்து வரும் தோட்டத் தொழிலாளர்கள்

மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அநேகமானோர் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வருவதை நாம் அறிகின்றோம் இவர்களில் ஆண், பெண் உட்பட பெரும்பாலானவர்கள் தேயிலைத் தோட்டங்களில் தொழில் செய்து தமது வாழ்க்கையை கொண்டு செல்வதே உண்மையான நிகழ்வாகும். இதில் இளைஞர் யுவதிகள் என்ற விதி விலக்கல்ல.
அநேகமாக தேயிலைத் தோட்டத தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்களை முன்னெடுக்கலாம். இதில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதையும் சில வரப்பிரசாதங்களுக்கு அடிமையாக விடுவதையும் கூறலாம் வரப்பிரசாதம் என்று இவர்கள் நினைப்பது தம் இருப்பிடத்துக்கான கூலி அறவிடப்படுவதில்லை என்பதையே. மேலும் நகரங்களில் பணம் செலுத்தி பெறுகின்ற குடிநீர், காற்று போன்றவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளும் நிலை தோட்டப்புறங்களில் அதிகமாக உள்ளது. அதுவும் மரக்கறி தோட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு வசதி உள்ளமையேயாகும்.
இது ஒருபுறமிருக்க இவர்கள் சுரண்டப்படும் விதங்களை அறியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகும். இவர்கள் தொழில் ரீதுpயாக நசுக்கப்படுவது எவ்வாறு என்று நோக்குவோமானால் ஒரு தொழிலாளி வேலைத் தளங்களில் இருந்து வீடு திரும்பும் நேரம் மிகவும் தாமதகமாகவே இருக்கின்றமையை சுட்டிக்காட்டலாம்.
குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வேலை நேரம் அதிகரிப்பால் நசுக்கப்படுவது அநேகமான தோட்டங்களில் காணப்படுகின்றதொன்றாகும். மலையில் வேலை பார்க்கும் கங்காணிமார்கள் அன்றைய கால பெரிய கங்காணிமார்களை விட ஆதிக்கம் செலுத்துக்கின்றார்கள் என பல பெண் தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் குற்றம் கூறச் செய்கின்றார்கள் இதுவும் ஓர் ஆண் ஆதிக்கம் என்றே பலர் சொல்லி வேதனைப்படுகின்றனர்.
இன்று தேயிலைத் தோட்டங்களில் அநேகமாக இளம் யுவதிகள் வேலை செய்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. சில தோட்டங்களில் கங்காணிமார்கள் இளம் பெண்கள் என்றுகூட பார்க்காமல் தங்களை மலையில் வாய் கூசாமல் பேசுகிறார்கள். சிலர் தகாத வார்த்தைப் பிரயோகங்ககளை உபயோகிப்பதாக தோட்டப்புற பெண் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொழுந்து நிறுவையிலும் தங்கள் பாதிப்புக்களை அவர்கள் மறுக்கவில்லை. தற்போது சில தோட்டங்களில் உள்ள கொழுந்து நிறுக்கும் தராசுகள் பழைமை வாய்ந்தவையாகவும் உடைந்த, துருப்பிடித்த நிலையிலும் இருக்கின்றமையால் சரியான நிறுவையினை காட்டுவதில்லை என்றும் பெண் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் தொழிலாளர்கள் தற்போது வேதன அதிகரிப்பின் பின்னர் ஒரு நாள் பேருக்கு(சம்பளத்துக்கு) சில தோட்டங்களில் 18 கிலோ கொழுந்து எடுத்தல் (தோட்டத்துக்கு தோட்டம் இது வேறுபடும்) வேண்டும். என நிர்வாகம் கண்டிக்கின்றது. இது போன்ற நேரங்களில் பெண் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது இவ்வாறிருக்க தோட்டப் பகுதியிலுள்ள இன்றுள்ள பெண்கள் தொழிலாளர்கள் தேயிலை தொழிற்சாலைகளில் அதிகபட்சம் வேலை செய்வதை காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் தேயிலை தொழிற்சாலைகளில் இரவு நேர கடமைகளிலும் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட சில தோட்டங்களில் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் போது பாதுகாப்பு கவசங்கள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. இதனால் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு உள்ளாவதாகவும் சில பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க பெருந்தோட்டத்துறையில் வாழும் தொழிலாளர்கள் சுகாதார ரீதியாக அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. தோட்டங்களை அரசு நடத்தி வந்தபோது தோட்ட வைத்தியசாலைகள் காணப்பட்டன. மருந்தக, தாதி, (நுஆயு) தோட்ட வைத்தியர்கள் போன்றோர் அநேகமான தோட்டங்களில் பிரசவ வார்ட் போன்ற காணக்கூடியதாக இருந்தமையும் சுகாதாரம் சீராக இருந்தமையும் குறிப்பிடுவதோடு வாரம் ஒரு முறையாவது தோட்டக் குடியிருப்புக்களுக்கு சேமநல அதிகாரி தோட்ட வைத்தியர் ஆகியோர் சென்று சுகாதாரம் சம்பந்தமாக கலந்துரையாடி வைத்தியம் பார்த்த காலமும் தோட்டங்களில் இருந்து வந்தது.
அது மட்டுமல்லாமல் சகல தோட்டக் குடியிருப்புக்களின் வடிகான் மற்றும் குடியிருப்பினை சுத்தம் செய்வதற்காக லயன் சுத்திகரிப்பாளர் ஒருவரும் கடமையில் இருந்து வந்ததும் குறிப்பிட வேண்டும். தற்போது தனியார் கம்பனிகளின் வருகையின் பின்னர் இவை படிப்படியாக குறைவடைய ஆரம்பித்து விட்டன. தோட்டப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் இயங்குவது குறைவு பல தோட்டங்களுக்கு ஒரு வைத்திய அதிகாரியொருவர், தாதி ஒருவர் என மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். சில தோட்டங்களில் மருந்தகம், வைத்தியசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணக்கூடியதாக இருப்பது வேதனையாகத்தான் இருக்கின்றது.
தற்போது வைத்திய அதிகாரி, தாதிமார், சேமநல அதிகாரி போன்றோர் தோடடக் குடியிருப்புக்களுக்கு விஜயம் செய்து நோயாளிகளை பார்வையிடுவது அடியோடு இல்லாமல் போயுள்ளது. அன்றிருந்த லயன் சுத்திகரிப்பாளர்கள் எந்த தோட்டத்திலும் இல்லை என்பதைத்தான் கூற வேண்டும். இப்படி கம்பனி வருகையின் பின்னர் பெருந்தோட்டத்துறை தொழிலாளிகளின் சலுகை படிப்படியாக குறைந்து வருகின்றது. அத்தோடு தொழிலாளர்களின் சந்தாவிற்கு அக்கறை காட்டும் தொழி;ற்சங்கங்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அதிகரித்து வரும் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொழிலாளர்கள் நலனிலும் சற்று அக்கறை காட்டு இதுவரை கிடைத்து வந்த சலுகையாவது குறையாமல் இருக்க வேண்டி தொழிலாளர்கள் கேட்கின்றனர்.
சுகாதார அமைப்புக்கள் தோட்டப் புறங்களில் சுகாதார நலன்களில் அக்கறை காட்ட வேண்டும். சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடத்தி தோட்டத்துறை தொழிலாளர்களின் உரிமைகளிலும் அக்கறை செலுத்த முன் வர வேண்டுமென பெருந்தோட்ட கடமையில் உள்ள தொழிலாளர்கள் கேட்கின்றனர்.
ராஜ்குமார்