Saturday, October 24, 2009

சுய தொழிலில் ஈடுபட மலையக இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பு

மலையகத்தில் தொழிலற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் மேற்கொண்ட நடவடிக்கையினால் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் 78 பேருக்கு சுயத்தொழிலுக்கான கடனுதவி வழங்கும் வைபவம் ஒன்று நேற்று 23 ஆம் திகதி ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.
சௌயமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் செயற்படும் நவசக்தி திட்டத்தின் மூலம் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்படும் இந்தக் கடனுதவி வழங்கும் வைபவத்தில் பிரஜா சக்தி நிலையங்களின் ஊடாக இனங்கண்ட 78 பேருக்கு மாடு, கோழி வளர்ப்பு, விவசாயம், வியாபாரம், வேல்டிங், தையல் போன்ற சுய தொழில்களை மேற்கொள்ளவே இந்தக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் அங்கு உரையாற்றுகையில் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அமைச்சின் அனுசரணையுடன் இவ்வருடம் ஜனவரி மாதம் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 78 இளைஞர்களுக்கு சுயத்தொழிலுக்கான கடனுதவிகளை வழங்கினோம். அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊவா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் 69 பேருக்கு இவ்வாறான கடனுதவிகளை வழங்கினோம்.
தற்போது மூன்றாம் கட்டமாக 36 லட்சம் ரூபாவை நுவரெலியா, அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு சுய தொழிலுக்கான கடனுதவி வழங்கியுள்ளோம்.
எனது அமைச்சுக்கும் மக்கள் வங்கிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு ஒன்றின் மூலமாகவே இந்தக் கடன் வழங்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் சுய தொழிற்துறை வளர்ச்சி கண்டு வருகின்றது. இதனை நன்கு புரிந்து கொண்டு சுய தொழில் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் கூட்டாகச் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும்போது இந்தத் தொழிற்துறையை மேலும் முன்னேற்ற முடியும்.
சுய தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் இந்தத் தொழிலில் உரிய கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மலையக இளைஞர் யுவதிகளுக்குத் தொடர்ந்து எனது அமைச்சின் ஊடாக சுய தொழில் வாய்ப்புக்கள் மேலும் பெற்றுக் கொடுக்கப்படும்" என்றார்
மலையகப் பாடசாலைகளில் 'சுகாதாரமும் போஷாக்கும்” வேலைத்திட்டம்

பெருந்தோட்டப் பகுதிப் பாடசாலைகளில் சுகாதாரமும் போஷாக்கும் என்ற தலைப்பில் வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்த கல்வி அமைச்சு முன்வந்துள்ளது. அண்மையில் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொண்ட ஓர் ஆய்வின் அடிப்படையில் நாட்டிலுள்ள அனேக மாணவர்கள் குறிப்பாக மலையகப் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் போஷாக்கின்மை காரணமாகவே கல்வித்துறையில் பின்னடைந்து காணப்படுவது தெரிவந்துள்ளது. அதே நேரம் நகரச்சூழல்களில் உள்ள பலர் அதிபோஷாக்கு காரணமாக உடல் உள நிலை பாதிக்கப்பட்டு துன்பப்படுவதாகவும் இனம் காணப்பட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள 101 ஆசிரிய மத்திய நிலையங்களுக்கூடாக ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு, பாடசாலைகள் தோறும் சுகாதாரக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் மூலமாக பல்வேறு சுகாதார செயற்திட்டங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள தமிழ்மொழிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வலய ஆசிரியர் மத்திய நிலையத்தில் செயலமர்வுகள் இடம்பெற்றன. இதில் தத்தமது பிரதேசத்திற்கு ஏற்றவாறு போஷாக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது, மாணவர்களுக்கான போஷாக்கு மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்களை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பன போன்ற செய்முறைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன