Monday, September 15, 2008

டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்

கேகாலை மாவட்டம் ருவான்வெல டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகறாறு காரணமாக சிங்களவர் ஒருவர் கத்திக்குத்து இலக்காகி மரணமானார். இதனையடுத்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தோட்டக்குடியிருப்புக்களின் மீது கற்களை வீசி தொழிலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதனையடுத்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த தோட்டப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களை சூறையாடி சென்றுள்ளனர். இதனால் சுமார் 80 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் அருகிலுள்ள தோட்டங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். தற்காலிகமாக உறவினர்கள் தங்கியுள்ள இவர்கள் இரண்டு நாட்களாக எதுவித பசி பட்டிணியால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கடைகளில் இவர்களுக்கு பொருட்கள் விற்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்படலாம் என இவர்கள் அஞ்சுகிறார்கள். தற்போது சமாதானக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சிறுவர்களை மூலதனமாக வைத்து பிழைக்கும் தரகர் கூட்டம்

தோட்டப் பகுதிகளில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் முழுமையாக சமூக மேம்பாட்டுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பள்ளி செல்லும் வயதில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதிலிருந்து தடுத்து அவர்களை மீட்டெடுத்து புனர்வாழ்வு தருவதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இதற்கு பல துறைசார்ந்த அனைத்து பெரியார்களும் ஒன்று திரண்டு சிறந்ததோர் சிறுவர் உலகை உருவாக்க முன்வர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு அமரர் இரா சிவலிங்கத்தின் 9ம் ஆண்டு நினைவு பேருரை நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம் வாமதேவன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தூரத்திலிருந்து நோக்கும் போது மலையகம் பாரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவே தெரிகிறது. இது வெறும் மாயை. நெருங்கி பார்க்கும் போதுதான் உண்மை தெரியும். 14 வயதுவரை கட்டாயக் கல்வி நாட்டின் சட்டத்தில் உள்ளன. மலையகத்தில் இதற்கு முரணாகவே இருக்கிறது. 85சத வீத சிறுவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். 15 சதவீதம் இடைநடுவில் படிப்பை கைவிட்டு எவ்வித தொழிலுக்கும் செல்லாமல் வெறுமனே சுற்றித்திரிந்து பல்வேறு சடூமூகப் பிரச்சினைகளுக்கு காரணமாகின்றனர். நகர் புறங்களில் வீடுகளுக்கும் கடைகளுக்கும் சிற்றூழியம் செய்வதற்கு தோட்டப்புற சிறுவர்களை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடிகிறது. மூலதனம் இல்லாமல் வயிறு வளர்ப்பதற்கு சிறுவர்களை வேலைக்கு அழைத்துச் செல்ல பெரும் தரகர் கூட்டமொன்றே இயங்கி வருகிறது. கல்வி கற்கும் வயதில் சிறுவர் சிறுமியர் அதிலிருந்து திசை திருப்பப்பட்டு பலவித துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுவது மலையக சமூகத்தின் எதிர்கால மேம்பாட்டுக்கு பாரியதோர் சாபக்கேடாக மாறியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டியது அவசர – அவசிய தேவையாகும் என்றார்.

கண்டி கச்சேரியில் தமிழ் மொழி பணியாளர்கள் எததனை பேர்- அமைச்சர் மகிந்த சமரசிங்க

தமிழ் மொழியும் இந் நாட்டின் அரச கரும மொழியாக சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கண்டி கச்சேரியில் தமிழ் மொழியில் தமிழ் மக்களோடு பணியாற்றக் கூடியவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என கேள்வி எழுப்பினார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க. அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் இல்லாமல் செயல் பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் சமாதானமும் ஐக்கியமும் நிலவும் என்றார். டிசம்பர் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புத் தினத்தை கண்டியில் நடத்துவது தொடர்பாக கண்டி கச்சேரி மாவட்ட செயலாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பி;ட்டார். மேலும் உரையாற்றுகையில் தமிழ் மொழியில் கருமமாற்றக் கூடியவர்கள் இல்லையென்றால் தோட்டப்பிரதேச மக்களுக்கு சேவை செய்வது எவ்வாறு? அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மதித்து அவற்றை வழங்காவிட்டால் நெருக்கடிகளும், ஒற்றுமையின்மையும், பிரிவினை பேதங்களும் ஏற்படும் என்றார்.
மின்சார ஒழுக்கினால் தொடரும் அகதி வாழ்வு

தொழிலாளர்களின் குடியிருப்பு லயன்களில் இணைக்கப்பட்டுள்ள மின்சார ஒழுக்கில் லயன்கள் எரிவதும் அங்கு குடியிருக்கும் மக்கள் அகதிகளாகுவதும் தொடர் நிகழ்வாகிவிட்டது. இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களில் உடைமைகள், ஆவணங்கள், தாங்கள் சேர்த்து வைத்துள்ளவைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறிப்பாக
பத்தனை மவுன்ட்வேர்ணன் மேற்பிரிவில் - 20 குடும்பங்கள் நான்கு வருடங்களாகவும், மடக்கும்பரை புதுக்காடு – 20 குடும்பங்கள் 19 மாதங்களாகவும், மன்றாசி என்பீல்ட் - 24 குடும்பங்கள் 11 மாதங்களாகவும், பொகவந்தலாவ சென் ஜோன் டில்லரி 09 குடும்பங்கள் 12 மாதங்களாகவும், கொட்டக்கலை பளிங்குமலை – 20 குடும்பங்கள் 20 மாதங்களாகவும் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இவர்கள் எவ்வித அடிப்படை தேவைகளும் இல்லாது தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான விபத்துக்களுக்கு அரசியல்வாதிகளும், தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை பெறல், முறையான மின்சார இணைப்பை கொண்டிருக்காமை போன்ற காரணிகள் ஆகும். இதற்கு மின்சார சபையும் பொறுப்பேற்க வேண்டும். எதிர் வரும் காலங்களில் இவ்வாறு அகதிகளாக வாழும் மக்களுக்கு உரிய வீட்டு வசதிகள் செய்து கொடுக்கவும், முறையான மின்சார வசதியை வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய தூதரக உதவியுடன் 750 ஆசிரியர்களுக்கு பயிற்சி

மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு இந்திய உதவித் தூதரகத்தின் உதவியுடன் கடந்த மூன்று வருட காலத்தில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 750 ஆசிரியர்களுக்கு குறுகியகால ஆசிரிய பயிற்சிகளை வழங்கியுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி தெரிவித்துள்ளார். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கே இந்திய கல்வி நிபுணர்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.