Tuesday, February 9, 2016

புதிய அரசியலமைப்பில் மலையக மக்களுக்கும் இடம்..... ?

புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பில் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வடக்கு மாகாணத்தில் வாழும் மலையக மக்களுக்கான அபிவிருத்தி முதல் அரசியல் வரையான விசேட ஏற்பாடுகள் கொண்டு வரப்படவேண்டுமென அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு சீா்திருத்தம் மீதான மக்கள் கருத்தறியும் அமா்விலேயே மேற்படி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
45 வீதமான மலையக மக்கள் வாழ்கின்ற போதும் வடக்கு மாகாண சபையில் தங்கள் சார்பாக ஒரு உறுப்பினர் கூட இல்லை. இதுவே இந்த மக்களின் நிலைமைகளுக்கான சிறந்த உதாரணம். எனவே உள்ளுராட்சி சபைகளிலும் கூட வடக்கு வாழ் மலையக மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ற அளவு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.
கிளிநொச்சி மேற்கில் 16 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசம், ஆணைவிழுந்தான், ஜெயபுரம் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிளிநொச்சி கிழக்கில் உழவனூர், புதிய புன்னை நீராவி, தருமபுரம், கல்மடுநகர், மாயவனூர், இயக்கச்சியில் கொற்றாண்டார்குளம், மேற்படி பிரதேசங்களில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாவட்டத்தின் சனத்தொகையில் ஏறக்குறைய 45 வீதமான மக்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் தனித்துவமான சமூக, பொருளாதார, கலாசார கட்டமைப்பைக் கொண்டு இருக்கின்றனர். எனினும் இவர்கள் பரந்துபட்ட ஏனைய தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களுடன் வாழ்கின்ற போதும் இவர்களுக்கான தனித்துவம் மிக்க அடிப்படை பிரச்சினைகளும், தேவைகளும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைமைகள், குடியிருக்கும் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பவற்றில் முன்னுரிமை பெறவேண்டிய அளவு நலிவுற்றவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே இவர்கள் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர் என்கின்ற தேசிய இனத்துவ அடையாளங்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன் இவர்களுடைய நலன்களுக்கும் முன்னுரிமை பெறப்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த தனித்துவமான தேசிய அடையாளத்தை மலையக மக்களுடன் இணைந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அமையப்போகும் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என கோருகின்றோம்.
அத்துடன் இவர்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார அந்தஸ்தையும் பிரதிநிதித்துவத்திற்கான இடத்தையும் வழங்குவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். எனவும் தங்களின யோசனைகளை அவர்கள் இக்குழுவினரிடம் முன்வைத்தனர்.