Wednesday, February 13, 2019

கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா என்ற வேதன உயர்வே வழங்கப்பட்டுள்ளது

கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா என்ற வேதன உயர்வே வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக மூன்று மாத நிலுவைக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கவில்லை என்றும், தொழிற்சங்கங்களும் அதனைக் கோரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை சபையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்ததில் 500 ரூபா அடிப்படை வேதனமும், 140 ரூபா வரவுக்கான கொடுப்பனவும், 60 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவும், 30 ரூபா தேயிலை நிர்ணய கொடுப்பனவும் என 730 ரூபா நாளாந்த வேதனம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அடிப்படை வேதனம் 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, விலைக்கான கொடுப்பனவு 50 ரூபா அடங்களாக தொழிலாளர்களுக்கு 750 ரூபா நாளாந்த வேதனமாக வழங்குவதற்கு இம்முறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு 730 ரூபாவாக வழங்கப்பட்ட நாளாந்த வேதனமானது இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 750 ரூபாவாக வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஆயிரம் ரூபா அடிப்படை வேதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புகளின் ஒன்றியமான ஒருமீ உள்ளிட்ட ஆயிரம் இயக்கம் என்பன கூட்டு ஒப்பந்தத்தில் 20 ரூபா வேதன அதிகரிப்பே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, தமது எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன.
எனினும், இம்முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக அடிப்படை வேதனம் 40சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் தெரிவித்திருந்தன.
இந்த அளவான அடிப்படை வேதன உயர்வு சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரம், மூன்றுமாத கால நிலுவைக் கொடுப்பனவை வழங்குவதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு 100 மில்லியன் ரூபா வழங்குவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறிருப்பினும், ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகியோர் கூறியபடி 40 சதவீத அதிகரிப்பு மற்றும் நிலுவைக் கொடுப்பனவு போன்ற அறிவிப்புகள் உண்மைக்குப் புறம்பானவைபோன்று அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கருத்து அமைந்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா வேதன அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாத நிலுவைக்கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கவில்லை என்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்று விளக்கமளித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தம் மூன்று மாதகாலம் மாத்திரமே தாமதமாகியது.
இதில் 730 ரூபாவிலிருந்து 750 ரூபா என 20 ரூபா சிறிய வித்தியாசமே காணப்படுகிறது.
எனவே, அதனை நிலுவைத் தொகையாக வழங்குவதற்குத் தாங்கள் கருதவில்லை என்னும், தொழிற்சங்கங்களும் இவ்வாறு கோரவில்லை என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், நிலுவைக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானித்தால், 20 ரூபாவிற்கான நிலுவைக் கொடுப்பனவையே வழங்க வேண்டும்.
இது மிகவும் நகைப்புக்குரியதாகும்.
தேயிலை சபையின் பணத்தை இதுபோல வீண்விரயம் செய்வதற்கும் தாம் விரும்வில்லை என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நன்றி-தேனீ