Thursday, January 23, 2014

தோட்ட உத்தியோகத்தர்களின் காணிப்பிரச்சனை

தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கு ஏழு பேர்ச்சஸ் காணித்துண்டு கொடுத்ததைப் போன்று தோட்ட உத்தியோகத்தர்களுக்கும் வீடு கட்டிக்கொள்வதற்கு 10 பேர்ச்சஸ் காணித்துண்டுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியின் ஆதரவுடன் இப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க ஜயவர்த்தன பொதுச்செயலாளர் கிங்ஸ்லி ராஜேந்திரன் றொபர்ட் ஆகியோர்களின் எற்பாட்டில் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் சமரசிங்க இதனை தெரிவித்தார். 

அவர் அங்கு உரையாற்றுகையில் தோட்ட உத்தியோகத்தர்களின் பிரச்சனை சம்பந்தமாக ஜனாதிபதியுடன் நேரில் பேசுவதற்கு ஒழுங்குகள் செய்து தரப்படும் என்றும் ஜனாதிபதிக்கும் உங்களின் சக்தி நன்கு தெரியும். அவர் பெருந்தோட்ட மக்கள் மீது நல்ல நம்பிக்கை கொண்டுள்ளார். 

ஆரம்ப கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் எடின்பரோ தோட்டத்தில் தோட்ட உத்தியோகத்தர்களுக்கு காணி வழங்குவதற்கு தோட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். இவர்களின் பிரச்சனை பல வருடகாலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த போதிலும் இப்போதுதான் செயற்படுகிறது. 

கண்டி, களுத்துறை, நாவலப்பிட்டி, ட்டன், நுவரெலியா, தலவாக்கலை, அவிசாவெல்ல, கேகாலை ஆகிய பகுதியிலிருந்து தோட்ட உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றார்கள்

மனித உரிமைகள் தொடர்பாக தற்போது அதிகமாக குரல் எழுப்பப்பட்டு வருகின்ற இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றமை வருந்தத்தக்க விடயமாகுமென மலையக மக்கள் முன்னணியில் அரசியல் பிரிவுத் தலைவர் வி. இராதாகிருஷ்ணன் நுவரெலியாவில் பொது மக்களுடனனான சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்தார். 

அவர் அங்கு தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்பின் சிகரமாக திகழ்கின்றார்கள். நாட்டுக்கு உரமூட்டுகிறார்கள.; இவர்களுக்கு நீண்டகால வரலாறு இருக்கின்ற போதும் இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிட வில்லை என்பது கசப்பான உண்மையாகும். தொழிலாளர்கள் குடியிருக்கும் லயன்கள் சுமார் 200 வருடத்துக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்டதாகும். இந்த வாழ்க்கை முறையை மாற்றியமைத்து தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக குரல் எழுப்பப்பட்டு வருகின்ற போதும் தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதில் இழுபறி நிலைகளே காணப்படுகின்றன.

தொழிலாளர்களின் பல துறைகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்படவில்லை. இவர்களை ஏணியாக வைத்து பலர் முன்னேறி செல்கின்ற போதும் தொழிலாளர்கள் இருந்த இடத்திலேயே இருந்து வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற உலகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழிலாளர்களின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். அவர்களின் கல்வி, கலை, கலாச்சாரம் விளையாட்டு போன்ற இன்னோரன்ன துறைகளின் அபிவிருத்தி கருதி நடைமுறைச்சாத்தியமான திட்டங்களை வகுத்து முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் பிரச்சினைகள் மாறுபட்ட தன்மை கொண்டவை மலையக மக்களுக்கும் தனித்துவமான பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. இவற்றை தீர்ப்பதற்கு அரசு ஆர்வம் காட்ட வேண்டும். இதேவேளை மலையக தலைமைகள் அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து மலையக மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும். 

Sunday, January 19, 2014

தொழிலாளர்கள் சிறு தேயிலை தோட்ட உடமையாளர்களாக மாற வேண்டும்

தோட்டத் தொழிலாளர்கள் சிறு தேயிலை தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால எதிர்;பார்ப்பாகும் என இ.தொ.கா பொதுச்செயலாளரும், கிராமிய கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் பத்தனை பிரதேசத்தில் முன்பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக வேர்ல்ட் விஷன் நிறுவனம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஓர் அங்கமாக முன்பள்ளி கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. இதற்கெனபல லட்சம் ரூபாவை செலவிட்டு வருகின்றது. ஆரம்ப கல்விக்கு சரியான அடித்தளம் இடப்பட்டால்தான் உயர்கல்வியில் மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற முடியும் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகின்றது. தொழிலாளர்களும் தமக்கு கிடைத்த இந்த வளங்களை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று நாம் விரும்புகின்ற அதேவேளையில் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலாளியாகவே இருக்காமல் சிறு தேயிலை தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். தோட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2- 3 ஏக்கர் தேயிலை காணிகளை வழங்கி அதை தொழிலாளர்களே பராமரித்து கொழுந்து பறித்து அதை தோட்ட நிர்வாகத்துக்கு விற்பனை செய்து வருமானத்தை ஈட்டி முதலாளிமார்களாக வளர வேண்டும் என்பதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான ஆலேலாசனைகளை முன்வைத்துள்ளோம். அவ்வாறு நாம் காணிகளை பெற்றுக்கொடுக்கும் போது அவற்றை வெளியாருக்கு யாரும் விற்பனை செய்து விடக்கூடாது. தங்களுக்கு கிடைத்த காணிகளில் தகுந்த வருமானத்தை தேடிக்கொள்வதோடு அந்தக் காணிகளுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். 

கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட சுமார் 6,000 குடியிருப்புக்கள் வெளியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதோடு அவற்றை விற்றவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் குடியிருப்புக்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் தீபாவளி பண்டிகை இரண்டு தினங்களுக்கு மாத்திரமே கொண்டாடப்பட வேண்டியதொன்றாகும். கடந்த வருடனம் ஒரு தோட்டத்தில் 10 நாட்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியுள்ளனராம். இந்த வருடம் ஒரு தோட்டத்தில் 30 நாட்கள் கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வேலைக்குச் செல்லாமல் செய்கின்ற தொழில் மீது அக்கறை இல்லாமல் இருந்தால் தேயிலை உற்பத்தி எவ்வாறு பெருகும். தொழிலாளர்களுக்கு எவ்வாறு வருமானம் கிடைக்கும்? தமது தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே, தொழிலாளர்கள் இந்த நாட்டில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக நாம் மேற் கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு, கட்டுப்பாடும் ஒழுக்கமும் உள்ள சமூகம் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் அரசியல்வாதிகள் கண்மூடித்தனமாக செயற்படுகின்றனர்: சதாசிவம்

ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்ட ஆலோசனை குறித்து பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை முன்மொழிகின்றபோது ஒரு சில அரசியல்வாதிகள் அவ்விடயத்தில் கண்மூடித்தனமாக செயற்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களை துரும்பாக உபயோகித்து ஒரு சிலர் அரசியல் இலாபம் பெறுகின்றனர். அந்நிலைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமெனக் கோரி அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது மலையக மக்கள் தனியொரு தேசிய சிறுபான்மை இனமென்றும் அம்மக்களுக்கென தனியான கலாசாரம் பொருளாதார கட்டமைப்பு என்பன உண்டு என தொடர்ந்தேர்ச்சியாக குரல்கொடுக்கப்படுகின்ற போதும் அவர்களின் வாழ்வாதாரம் பரிதாபகரமானதாகவே உள்ளது.

இவர்களால் இலங்கை அரசு பொருளாதாரத்தில் பல நன்மைகள் அடைந்துள்ள போதிலும் இம்மக்களின் வாழ்வாதாரம் அன்றும் இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. இம்மக்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் பொருளாதார ரீதியில் இலங்கையை உலகத்திற்கு உயர்த்தியது.

இந்நிலையில் அரசியல் ரீதியான ஒரு கட்டமைப்புக்குள் முழுமையாக இவர்களை செல்ல விடாது ஒருசில தொழிற்சங்கத் தலைவர்கள் இம்மக்களை அடகு வைத்து மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் பேரம் பேசும் சக்தி எனும் மாயையை மக்களிடம் புகுத்தி பல்வேறு சலுகைகளையும் வசதிகளையும் தமக்கும் தாம் சார்ந்தோருக்கும் இன்று வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெற்று வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் தன்மையை அடிப்படையகாகக் கொண்டு இவர்களது இன அடையாளத்தை கருத்தில் கொண்டும் இம்மக்கள் பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கும் பொருளாதாரத் தாக்கங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்ட ஆலோசனை குறித்து பல்வேறு தரப்பினரும் தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துகின்றபோது ஒரு சில அரசியல்வாதிகள் மௌனிகளாக இருந்து கண்மூடித்தனமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பல ஏக்கங்களோடும் எதிர்பார்ப்புகளோடும் வாழ்கின்ற மக்களை தொடர்மாடி என்று கூறி மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கு கொண்டு செல்வது இம்மக்களின் உழைப்பை உறிஞ்சுபவர்களின் நன்றிக் கடனாகாது.

மாடி வீடு என்ற மாயையில் ஒரு லயன் அறைக்கு மேல் மேலும் ஒரு லயன் அறையை கட்டிக்கொடுத்து இம்மக்களை அவமானப்படுத்தியது போதும். ஜனாதிபதி நீட்டும் வீட்டுத்திட்ட நேசக்கரத்துக்கு மலையகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் தொழிற்சங்க தலைவர்களும் நலன் விரும்பிகளும் ஆரோக்கியமான வீட்டுத் திட்டமொன்றை அமைக்க வேண்டும். இவ்வீட்டுத்திட்டமானது மலையக புவிசரிதவியலுக்கு ஏற்ப சகல வசதிகளையும் கொண்ட தனிவீடாக அமைவதே பொருத்தம். ஆகவே இது விடயத்தில் அனைவரும் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Friday, January 17, 2014

2013 இல் தேயிலை உற்பத்தி 339 மில்லியன் கிலோ- வருமானம் 1.6 பில்லியன் ரூபா

நாட்டில் 2013 ஆம் ஆண்டில் 339 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தேயிலை உற்பத்தி வரலாற்றுடன் ஒப்பிடுகையில் இது பாரிய சாதனையாகும். இதன்மூலம் நாட்டுக்கு 1.6 பில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மாத்தறை கொட்டபொல மொரவக்க பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் 2012 ஆம் ஆண்டில் 328 மில்லியன் கிலோ தேயிலையே உற்பத்தி செய்ய முடிந்தது. தேயிலை செய்கைக்கு வழங்கப்படுகின்ற உர மானியம் காரணமாகவே தேயிலை உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது.

2013 ஆம் ஆண்டு 70 வீதமான தேயிலை சிறு தேயிலை உரிமையாளர்களினாலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சிறு தேயிலை தோட்டங்களுக்கு பல்வேறு வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் தேயிலைக்கு உலகம் முழுவதும் உயர்வான கேள்வி ஏற்பட்டுள்ளது.

தேயிலை செய்கைக்கு நிவாரணமாக ஒரு ஹெக்டெயருக்கு 350000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. 3500 ரூபா பெறுமதியான 50 கிலோ கொண்ட உரம் 1500 ரூபாவுக்கு வழங்கப்படுகின்றது. 

ஒரு காலத்தில் ஒரு கி.கி தேயிலை கொழுந்தின் விலை 25 ரூபாவாக குறைவடைந்தது.

ஆனால் தற்போது 90 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. எனினும் தேயிலை செய்கைக்கு வழங்குகின்ற நிவாரணங்களை அரசாங்கம் குறைக்கவில்லை.

எமது நாடு சிறிய நாடாகும். எனவே நிலத்தை விரிவுபடுத்திக்கொள்ள முடியாது. இருக்கின்ற தேயிலை செய்கையை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும் என்றார்.

இலங்கையை பொறுத்தவரையில் 206104 ஹெக்டெயர் நிலத்தில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. அவற்றில் 70 வீதமானவை சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.அதாவது 397223 சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களினால் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது.

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களினால் 120664 ஹெக்டெயர் நிலத்தில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களினால் 15 இலட்சம் பேர் தங்கிவாழ்கின்றனர். இலங்கையில் தனிநபர் தேயிலை பாவனையானது 1.3 கிலோ கிராமாகும். 14 மாவட்டங்களில் சிறு தேயிலை உற்த்தியாளர்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இரத்தினபுரி காலி மாத்தறை போன்ற மாவட்டங்கள் அவற்றில் முன்னணியில் உள்ளன.

தொழிலாளர்களுக்கு தனி வீடா? மாடி வீடா? அல்லது சொந்தமான வீடா – சந்திரபோஸ்

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகள் தனித்தனியான வீடுகளாகவே அமைக்கவேண்டும் என்று ஒருசாரார் வாதிடுகின்றனர். இல்லை, அவர்களுக்கு மாடி வீடுகளே பொருத்தமானது என்கின்றனர் மறுசாரார். எனினும் தனி வீடுகளோ, மாடிவீடுகளோ எதுவாயினும் அவை சொந்தமாக்கப்படவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உண்மையில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்த முனைந்தபோதும் அவர்கள் வாழ்கின்ற வீடுகள் சொந்தமாக்கப்படவில்லை. எனினும் லயன் காம்பிராக்களுக்கு வெள்ளை பூசப்பட்டன. கணிசமான லயன் காம்பிராக்களில் கூரைத்தகடுகள் மாற்றப்பட்டன. மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. குடிநீர் வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன. இதற்கு மேலாக தனிவீடுகளும,; மாடிவீடுகளும் கட்.டப்பட்டன. மொத்தமாக லயன்களில் வாழ்பவர்களில் சுமார் 33 வீதமானவர்கள் லயன் காம்பிராக்களில் இருந்து விடுபட்டு தனி அல்லது மாடிவீடுகளில் வாழமுடிந்தது. இவை யாவும் கடந்த 60 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

தொழிலாளர்களின் லயன் குடியிருப்பில் உள்ள அசௌகரியங்களை நீக்கி அவர்களை கௌரவமான வீட்டில் குடியிருத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே தனிவீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிவீடுகள் அமைக்கும் பணியை மனித அபிவிருத்தி நிதியமே (PHDT) ஆரம்பித்தது என்று கூறுவதற்கில்லை. குடிபெயர்ந்துவந்த இந்திய தொழிலாளர்களின் லயன் வாழ்க்கையை பொறுக்கமுடியாத இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தினால் 1930களில் ஒருசில தோட்டங்களில் இரட்டை வீடுகளும் அமைக்கப்பட்டன. அவற்றில் சில மாடி வீடுகளாகவும் நிர்மாணிக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகளை இப்போதும் பல இடங்களில் பார்க்கலாம். உதாரணமாக ஹட்டனில் இருந்து நுவரெலியா செல்லும் வழியில் நானுஓயா நகரத்தைக் கடந்து செல்லும்போது இடப்பக்கத்தில் காணப்படும் தோட்டக் குடியிருப்புகள் மாடி வீடுகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதேபோல இரட்டை வீடுகளை ரதல்ல (Radella), ரொக்வூட் (Rockwood) போன்ற தோட்டங்களிலும் காணலாம்.

ஓப்பீட்டளவில் மாடிவீடுகளிலும் பார்க்க இரட்டைத் தனி வீடுகள் நல்லமுறையில் நிர்மாணிக்கப்பட்டன. தொழிலாளர்களுக்கென அமைக்கப்பட்ட இந்த இரட்டை வீடுகள் பிற்காலத்தில் கங்காணிமார்கள், சுப்பவைசர்கள், டிரைவர்களுக்கும் வழங்கப்பட்டன. சில தோட்டங்களில் இவ்வாறான வீடுகள் staff Quarters ஆகவும் பயன்படுத்தப்பட்டன. பானா தங்கம் எழுதிய கட்டுரையில் கூட இதுபற்றிய விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பி;ட்டதுபோல 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ‘தனித்தனி வீடுகள்’ அமைக்கப்படுமா? அல்லது ‘மாடிவீடுகள்’ அமைக்கப்படுமா? என்றவாறு பலதரப்பட்ட அபிப்பி;ராயங்கள் ஒருபக்கமாக இருக்கும் போது ‘மாடிவீடுகளே’ அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு ஏன் மாடிவீடுகள் அமைக்கப்பட்டன? அதன் பலாபலன்கள் யாவை? மாடிவீடுகளுக்குப் பதிலாகத் தனிவீடுகள் அமைத்து அவர்களுக்கு அதனை சொந்தமாக வழங்குவதிலுள்ள சிக்கல்கள் என்ன? என்பது பற்றிய சிலவிடயங்கள் இக்கட்டுரையில் மேலோட்டமாக அவதானிக்கப்படுகின்றது.

ஏன் மாடிவீடுகள் கட்டப்பட்டன?

லயன் குடியிருப்புகளுக்குப் பதிலாக தனிவீடுகள் அமைப்பதை விட்டுவிட்டு ஏன் மாடிவீட்டுத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்று பலரிடம் வினவியபோது அவர்கள் வழங்கிய விளக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன.

1. லயன் வீடுகளில் காணப்பட்ட அசௌகரியமான இருட்டு அறை, அடுப்புப் புகைகூட வெளியேற முடியாத அடைப்புகள், கணவன், மனைவி, பிள்ளைகள், புதுமணத் தம்பதிகள் என்று ஒரே அறையில் அடங்கிக் கிடைப்பதைவிட வெளிச்சமுள்ளதும் தமது பிரத்தியேக நடவடிக்கைகளுக்கு ஏதுவானதுமான வாழ்க்கைமுறைக்கு பொருத்தமானது மாடிவீட்டுத் திட்டமாகும்.

2. 1990களில் திட்டமிடும்போது தனி வீடுகளாயின் சுமார் 150,000 வீடுகள் அமைக்க வேண்டும். அவ்வாறாயின் வருடத்தில் 10,000 வீடுகள் அமைத்தாலும் திட்டம் நிறைவுபெற 15 ஆண்டுகளாவது தேவைப்படும். ஆனால் மாடிவீடுகள் என்றால் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

3. தனிவீடுகள் அமைத்துக் கொடுத்தால் அதனை தொழிலாளர்கள் வெளியார்களுக்கு விற்றுவிடலாம் அல்லது வாடகைக்கு வழங்கலாம். தோட்டங்களில் அமைக்கப்பட்ட இவ்வாறான தனிவீடுகள் பல பறிபோய்விட்டன. ஆனால் இப்போது இருப்பது போல லயன் அமைப்பில் மேல்மாடியுடன் அமைத்துக் கொடுத்தால் அப்படியான குடியிருப்புக்களை வெளியார்கள் விரும்பமாட்டார்கள.; அதனை சொந்தமாகவும் பெற்றுக் கொள்ள முனையமாட்டார்கள். இவ்வாறான நிலையில் லயன்களுக்குப் பதிலாக மாடிவீடுகளை வழங்கினால் தொழிலாளர்களின் இருப்பை பாதுகாக்கலாம் என்றும் கருதப்பட்டது.

4. மாடிவீடுகளை நிர்வகிப்பதற்கு மேலதிக செலவுகள் தேவைப்படுவதில்லை. அதனால் அவர்கள் தோட்டத்தில் வழங்கப்படும் சம்பளத்திலேயே சமாளிக்கக் கூடியதாயிருக்கும்.

5. மாடிவீட்டில் வாழ்வதும் ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது. காலம் காலமாக லயத்தில் வாழ்ந்தவர்கள் ‘மாடிவீடுகளில் தான் வாழ்கிறோம்’ என்ற பெருமையுடன் வாழ்வதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என்றும் எடுத்துக்காட்டப்பட்டது.

6. தோட்டத்தில் இப்போது 150,000 குடும்பங்கள் இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 7 பேர்ச் வீதம் தனி வீடுகள் அமைக்கக் காணிகள் இல்லை. அவ்வாறாயின் இருக்கின்ற தேயிலைச் செடிகளைப் பறித்துவிட்டு வீடுகளை மட்டுமே கட்டலாம். அவ்வாறாயின் அவர்கள் எங்கே வேலை செய்வர்? தேயிலைத் தொழிலை எப்படி நடத்துவது? என்று கேட்கின்றனர். இவ்வாறான நிலையில் இருக்கின்ற லயன் காம்பிராக்களுக்குப் பதிலாக அதே இடத்தில் அமைக்கப்படும் மாடிவீடுகளால் தோட்டங்களில் உள்ள தேயிலைக் காணியில் எவ்வித குறைபாடும் ஏற்படப் போவதில்லை என்ற அபிப்பிராயமும் காணப்படுகிறது.

மேற்குறிப்பிட்டது போல பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் தனிவீடுகள் அமைக்க ‘முழுத்தேயிலைச் செடியையும் பறித்தெடுக்க வேண்டியேற்படும்’ என்ற வாதத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.

உதாரணமாக ஒருவருக்கு 7 பேர்ச் காணித்துண்டில் வீடுகட்ட வேண்டுமாயின் எவ்வளவு காணித் துண்டுகள் தேவைப்படும் என்பதை கணிப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு ஹெக்டேயர் காணியில் சுமார் 384 பேர்ச்சஸ் காணப்படும். 384 பேர்ச்சினை 7 துண்டுகளாக பிரிப்போமாயின் (384 ÷ 7=54.8) சுமார் 55 துண்டுகளாக பிரிக்க முடியும். அவ்வாறெனின் ஒரு ஹெக்டேயர் காணியில் வீடு, நடைபாதை மற்றும் தொடர்பாடல் வசதிகளுடன் சுமார் 30-35 வீடுகளையே நிர்மாணிக்க முடியும். அவ்வாறாயின் இப்போது தோட்டங்களில் நிரந்தரமாக பதிவுப் செய்துள்ள சுமார் 150,000 தொழிலாளர் குடம்பங்களுக்குத் தேவைப்படும் காணித்துண்டின் அளவினைக் கணிப்பிடலாம். 

தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் குடும்பங்கள் 200,000 இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையானது தோட்டங்களில் நிரந்தரமாகப் பதிவு செய்துகொண்ட தொழிலாளர்களின் குடும்பம் மட்டுமன்றி தற்காலிமாக தோட்டங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கியதாக இருப்பதுடன், கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட தனிவீடுகள் அல்லது மாடிவீடுகளில் வசிப்பவர்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படும். நாம் ஏற்கனவே அறிந்தது போல சுமார் 33 வீதமானவர்கள் தனியான அல்லது மாடிவீடுகளில் வாழ்கின்றார்கள். அவ்வாறெனின் 200,000 குடும்பங்களில் 33 வீதத்தைக் கழிக்க வேண்டும் அப்படியானால் லயன்களில் உள்ள தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களாக வாழ்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை (200000-66000) 134,000 ஆகக் காணப்படலாம். ஒரு குடும்பத்திற்கு 7பேர்ச் வழங்க வேண்டுமாயின் (134,000×7) 938,000 பேர்ச்சஸ் காணிகள் தேவைப்படும். 938,000 பேர்ச்சஸ் என்பதை ஹெக்டயரில் கணிப்பிடுவோமாயின் (938,000÷384 பேர்ச்சஸ் = 2442) சுமார் 2450 ஹெக்டேயர் பரப்புள்ள காணித்துண்டாகும். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு ஹெக்டேயரில் 30-35 வீடுகளை மட்டுமே அமைக்கலாம் என்றால் 134,000 குடும்பத்திற்கும் தேவைப்படும் காணியின் அளவு (134,000÷30=4466) சுமார் 4470 ஹெக்டயர்கள். ஒரு ஹெக்டேயரில் 35 குடும்பங்கள் எனின் (134,000÷35=3828) சுமார் 3830 ஹெக்டேயர்கள் தேவைப்படும்.

பெருந்தோட்டங்களிலிருந்து இக்காணிகளை வீடமைப்பிற்காகப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படவிருக்கும் பாதிப்புக்களையும் அவதானித்தல் நல்லது. இதன்படி ஒரு ஹெக்கடேயரில் 35 வீடுகள் என்றவாறு 134,000 வீடுகள் அமைக்க சுமார் 3830 ஹெக்டயர் காணிகளே தேவைப்படுகின்றது. இவ்வாறாயின் இன்று பெருந்தோட்டக் கம்பனிகளிடம் தேயிலை, இறப்பர் செய்வதற்கெனப் பயன்படுத்தும் காணிகளின் மொத்தப் பரப்பு சுமார் 122,000 ஹெக்டேயர்களாகும் இதில் 3830 ஹெக்டேயர் என்பது (3830÷122,000×100) சுமார் 3 வீதமான காணியாகும். கம்பனிகள் பயன்படுத்தம் காணியில் 3 வீதத்தினை தொழிலாளர்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்துவதை தேயிலைத் தொழிலுக்;கு செய்யும் துரொகமாகக் கூறுவதற்கில்லை. இப்போது அவர்கள் வாழ்கின்ற இடத்திலேயே 7 பேர்ச் அளவிலான வீடுகளும் நிர்மாணிக்கப்படுமாயின் வீடுகளுக்காகப் பயன்படுத்தப்போகும் காணியின் அளவு 3830 ஹெக்டேயர்களிலும் பார்க்க குறைவாகவே காணப்படும்.

இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். கடந்த ஆண்டில் மட்டும் பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்ட காணிகள் என்று சுமார் 37,000 ஏக்கர் காணிகளை அரசாங்கம் மீட்டெடுத்தது. அக்காணிகளை 12,000 இளைஞர்களுக்கு மாற்றுப் பயிர் நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்கப்படும் என்றனர். அவை முழுமையாகப் பயன்படுத்தப்படாது போனால் அக்காணியையும் தனிவீடுகள் அமைக்கப் பயன்படுத்தலாம். இதன்போது இப்போதிருக்கும் தேயிலை, இறப்பர் காணிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாத அளவில் வீடமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

எவ்வாறாயினும் தோட்டங்களிலிருந்து சமூக நலன்களுக்காக காணிகள் பெற்றுக்கொள்வது இலகுவான காரியமல்ல. ஏற்கனவே பாடசாலைகள் அமைக்கவும் சிறுவர் நிலையங்கள் அமைக்கவும் காணிகள் பெற்றுக்கொள்ள அதிகாரிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். எனினும் இறுதியில் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. சிறுவர் நிலையங்கள் விஸ்தரிக்கப்பட்டன. இதனூடாக இந்த இரண்டு துறைகளிலும் குறிப்பிட்டளவு வளர்ச்சி காணப்பட்டன. ஆனால் வீடு மனிதனின் அடிப்படை உரிமையாகும். மனிதனின் அடிப்படைத் தேவையில் உணவு, உடை என்பதற்கு அடுத்ததாக உறையுள் (வீடு) அமைந்துள்ளது. இந்த உரிமையை எவரும் மறுப்பதற்கில்லை. அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் உரிமை கிராமிய, நகர மக்களுக்கு இருப்பது போல இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மூன்று தலைமுறையாக உழைக்கும் பெருந்தோட்ட மக்களுக்கும் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.


கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்
நன்றி- வீரகேசரி

Friday, January 10, 2014

பெருந்தோட்ட நிர்வாக நிலங்கள் யாவும் அரசுடமை தொழிலாளர்கள் சொந்தம் பாராட்ட முடியாது

பெருந்தோட்டத்துறை நிர்வாகத்திலுள்ள விவசாய மற்றும் தரிசு நிலங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகள், தோட்டப்பணியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சொந்தம் பாராட்டுவதோ, விவசாய பணிகளில் ஈடுபடுவதோ நீதிக்கு புறம்பானது என நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜித குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாவலப்பிட்டி பிரதேசம் போஹில், கிறீன்வூட், ருவன்புர, வெரலபத்தன சார்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தாங்கள் சார்ந்த தொழிற்சங்க பிரமுகர்கள் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், எம். மோகன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.எம். கிருஷ்ணமூர்த்தி, மற்றும் கொத்மலை பிரதேசசபை உறுப்பினர் கெஹல்தெனிய ) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திந்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இவர்கள் இங்கு தெரிவிக்கையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தரிசு நிலம் காணியில் எங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் பற்றாக்குறைக்குமே இந்த தரிசு நிலத்தில் மா, பலா, தேயிலைச்செடி, கால்நடை வளர்ப்பு முதலியவற்றை பெரும்பான்மை இனத்தவர்களுடன் சேர்ந்து மேற்கொண்டு வருகிறோம். 2012ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தரிசு நிலத்தில் விவசாயம் செய்வோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
;. 
இதே­வேளை, மாதத்தில் 15 நாட்கள்    கூட தோட்டங்களில் தொழில் வழங்கப்படுவதில் நாளாந்த வாழ்வில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் வகையிலேயே இதனை செய்து வருகிறோம். சுpறிய ரக விவசாயிகளுக்கு சார்பாக மக்கள் நலன் காப்பதாக வெற்றி ஆரவாரம் ஏட்டளவிலேயே உள்ளது. அது பேரினப் பொருளாதாரக் கொள்கையாகவே காணப்படுகிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். 
தேர்தல் காலங்களில் உறுதியளித்த எந்தவொரு திட்டமும் இன்றுவரை செயல்முறைப்படுத்தப்படவில்லை. கொள்கைப் பொதிகளை கட்டவிழ்த்து சூறையாடப்படுகின்றதே தவிர எங்களைப் போன்ற தொழிலாளர் வர்க்கத்தினருக்கு பாரபட்சமே எஞ்சியுள்ளது என பலரும் தெரிவிக்கின்றனர்

மலையக தமிழர்களின் நலனுக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் - பி.பி. தேவராஜ்

இலங்கைத் தமிழர்கள் என்றாலே அது வடக்கு மாகாணத் தமிழர்கள் என்ற கோணத்தில் நோக்கும் இந்திய அரசியல் கட்சிகளின் இந்த இந்த அணுகுமுறை மாற வேண்டும். மத்திய மாகாணத்தில் இலட்சக்கணக்கில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்காகவும் இந்தியா குரல் கொடுக்க வேண்டுமென இலங்கை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் பி.பி.தேவராஜ் டில்லியில் இடம்பெற்ற “பிரவாசி பாரதிய திவஸ்” மாநாட்டில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நாங்கள் அனைவரும் மத்திய மாகாணத்தில் வசிப்பவர்கள். வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழர்கள் சுயாட்சி உரிமை கோருகின்றனர். அதேபோல, மத்திய மாகாணத்தில் உள்ள எங்களுக்கும் போதுமான மாகாண பிரதிநிதித்துவம், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனக்கோரி வருகிறோம். 

மலைவாழ் தமிழர்களின் மக்கள்தொகை, இலங்கைத் தமிழர்களுக்கு இணையானதாகும். நாங்கள் சிங்களர்கள், தமிழர்கள் எனப் பிரிவினை பார்க்காமல் ஒற்றுமையுடன் வாழ்கிறோம். 
இலங்கைத் தமிழர்கள் என்றாலே அது வடக்கு மாகாணத் தமிழர்கள் என்ற கோணத்தில் இந்திய அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. இந்த அணுகுமுறை மாற வேண்டும். மத்திய மாகாணத்தில் இந்திய வம்சாவளி இந்தியர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களின் நலன்களுக்காகவும் இந்தியா குரல் கொடுக்க வேண்டும். 

தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகுந்த கொந்தளிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால், இலங்கைத் தமிழர்கள் மட்டுமன்றி, இந்திய வம்சாவளி தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் உணர வேண்டும். 

இலங்கை குடிமக்கள் என்ற முறையில் ஒரே நாட்டில் வசிக்கும் சிங்களர்களுடன் நல்லுறவு பேணுவது அவசியம். இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி திரும்ப வேண்டும். 

இந்தியர்களின் ஆதரவும் அன்பும் எப்போதும் எங்களுக்குத் தொடர வேண்டும். அது இன, மத அடிப்படையில் அல்லாது, நட்புறவு, சகோதரத்துவம் அடிப்படையில் இருக்க வேண்டும். 

இதற்குத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்திய அரசும் ஒத்துழைக்க வேண்டும்´ என்று கேட்டுக் கொண்டார் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ்.

Wednesday, January 8, 2014

தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு

தமிழ் மொழி பேசும் அமைச்சர் ஒருவரின் அமைச்சில் இடம் பெற்ற விருது விழாவில் தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவமொன்று கண்டியில் இடம் பெற்றது.

மத்திய மாகாண சபையின் விவசாய, கால் நடை வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு, சுற்றாடல் அமைச்சின் கால் நடை உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு விருது விழா செவ்வாய்க் கிழமை  கண்டி அவன்ஹல மண்டபத்தில் இடம் பெற்றது.

அதன் போது கால்நடை மற்றும் பால் உற்பத்தி தொடர்பாக மத்திய மாகாண மட்டத்தில்  பங்களிப்புச் செய்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு துறைகளாகப் பிரித்து கௌரவிக்கப்பட்டனர்.

பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்த விவசாயிகள், மிருக வைத்தியர்கள், விவசாய உத்தியோகத்தர்கள், மிருக வைத்திய காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் மிருக வளர்ப்பு மகாண அமைச்சின் பல்வேறு அலுவலர்கள் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட, மிருக வைத்திய அதிகாரி பிரிவு மட்டம் போன்ற பல்வேறு மட்டங்களில் கௌரவிக்கப்பட்டனர். முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிலும் விசேடமாக மேற்படி துறையில் பங்களிப்புச் செய்தர்கள் என்று சொல்லக் கூடிய ஊடக வியலாளர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர். கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

ஆனால் அப்பட்டியலில் தமிழ் மொழி பேசும் ஊடக வியலாளர்கள் எவருமே இருக்கவில்லை. இது திட்டமிட்ட சதியா? தவறா எனத் தெரியவில்லை. அதில் மற்றொரு வியப்பு என்ன வென்றால் மேற்படி அமைச்சரின் தொகுதியான நுவரெலியாவில் இருந்து கூட ஒரு தமிழ் பத்திரிகையாளரின் பெயர் வாசிக்கப்படவில்லை. அப்படியென்றால் தமிழ் மொழி பேசும் அமைச்சரையும் பணிப்பாளரையும் பிரதானமாகக் கொண்ட மேற்படி அமைச்சின் செய்திகளை இதுகாலம் வரை தமிழ் மொழி பேசும் சகல மத்திய மாகாண ஊடகவியலாளர்களும் எழுத வில்லை என்ற கருத்து நிலவுகிறது.

எனவே குறிப்பிட்ட அமைச்சு அதிகாரிகள் தமிழ் ஊடக வியலாளர்களை புறக்கணித்தனரா? அல்லது மத்திய மாகாண தமிழ் ஊடக வியலாளர்கள் அமைச்சின் செய்திகளைப் புறக்கணித்தனரா என்ற வினாவிற்கு இரு சாராரும் விடைகாண்பது நல்லதென அங்கு சமூகமளித்திருந்த ஒரு சில தமிழ் மொழி பேசும் பொது மக்களும் மாகாண சபை தமிழ் அங்கத்தவர்கள் சிலரும் அங்கலாய்த்துக் கொண்டனர்.

அடிப்படை வசதிகள் இன்றி பல வருடங்களாக வாழும் பெருந்தோட்ட மக்கள்


நுவரெலிய மாவட்டத்துக்குட்பட்ட றம்பொடை டிவிசனில் அமைந் துள்ள ஆறு தோட்டங்களை உள்ளடக்கிய புரட்டொப் குறூப் ( பெரட்டாசி தோட்டம்) என்ற தோட்டப்பகுதியில் வாழும் மக்கள் பலவருடங்களாக அடிப்படை வசதிகள் கூட இன்றி கடும் சிரமத்துக்கு மத்தியில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

கல்வி, சுகாதார, போக்குவரத்து,  தபால், தொடர்பாடல் போன்ற வசதிகள் இல்லாததால் இப்பகுதிகளில்   வாழும் மக்களுக்கு தொடர்ந்தும் கொத்தடிமைகளாகவே  வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.  புரட்டொப் குறூப்பில் அமைந்துள்ள பூச்சிக்கொடை, அயரி, மேரியல், ரஸ்புருக், பெரட்டாசி, மேமலை ஆகிய தோட்டங்களில் தமிழ் மக்களே முழுமையாக வாழ்கின்றனர்.

இவர்கள் வாழும் பகுதிகளில் மொத்த வியாபார நிலையங்கள், பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், பாமசி, தொடர்பாடல் நிலையங்கள் என தேவையான எதுவுமே இல்லை. இருக்கும் சில்லறை வியாபார நிலையங்களிலும் உச்ச விலை என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஏதாவது முக்கிய பொருட்களை வாங்கவேண்டுமென்றாலோ அல்லது  சேவையை பெற்றுக்கொள்ளவேண்டுமென்றாலோ புசல்லவை நகருக்கே மக்கள் செல்லவேண்டும்.

ரஸ்புருக்கிலிருந்து புசல்லாவைக்கு 1 மணித்தியாலயத்தில்  செல்லக்கூடியதாக இருந்தாலும், பெரட்டாசி - புஸல்லாவை வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் இரண்டு மணித்தியாலயத்துக்கும் மேலாக கடும் சிரமத்துக்கு மத்தியில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. கட்டிக்குத்தலை, காச்சாமலை, வீடன் ஆகிய தோட்டத்து மக்களும் இந்த வீதியையே போக்குவரத்துக்காகப் பயன்படுத்துவர்.

அதுவும் உரிய நேரத்துக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்துவிட்டே நகருக்கு வரவேண்டியுள்ளது. காலையில் சென்றால் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருவதற்கு மாலையாகிவிடும். எனவே, எங்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என தோட்டப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மழைக்காலங்களில் வீதிகளில் நீர் தேங்கிவிடுவதால் அதிக விபத்துகளும் ஏற்படுகின்றன. பெரட்டாசி - புசல்லாவை வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்கள் அடிக்கடி சேதத்துக்குள்ளாகின்றன. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து முன்னர் சேவையில் ஈடுபட்டிருந்தாலும் அந்த சேவை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதனால், நகரப் பகுதிக்கு உயர் கல்வி பயிலவரும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தனியார் பேருந்துகளுக்கு அதிக கட்டணங்களை செலுத்தவேண்டியுள்ளது. ஆசன எண்ணிக்கைக்கும் அதிகமாக பேருந்துகளில் ஏற்றப்படுவதால் நெரிச்சலுக்கு மத்தியில் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.  

குறிப்பாக மத்திய மாகாண சபைத் தேர்தல்  நடைபெற்ற காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காக குறித்த வீதி புனரமைக்கப்படும் என உறுதிமொழிகள் அள்ளிவீசப்பட்டன. ஆனால், புனரமைப்பு பணிகள் பல மாதங்களாகியும் இன்னும் தொடங்கவில்லை என்று பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு அயரி என்ற தோட்டத்தில் அமைக்கப்பட்ட வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டு கிசிச்சைப்பெறுவதற்கான  வசதி அமைத்துக்கொடுக்கப்பட வில்லை. அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவோ அல்லது சத்திரசிகிச்சைப் பிரிவோ, கதிரியக்கப்பிரிவோ அதில் அமைக்கப்படவில்லை. இதனால், திடீர் விபத்துகளால் பாதிக்கப்படுவோரைக்கூட புசல்லாவைக்கு அல்லது கம்பளை வைத்தியாலைக்கு கொண்டுச் செல்லவேண்டிய துன்ப நிலை காணப்படுகின்றது. 

அம்புலன்ஸ் வசதிகள் இல்லாததால் கொழுந்து ஏற்றும் லொறியிலேயே நோயாளர்கள் கொண்டுச் செல்லப்படுவார்கள். வீதி சீர்கேடு காரணமாக நோயாளி இடைநடுவே இறந்து விடுகின்றனர். கர்ப்பினி தாய்மார்களுக்கும் வழியிலேயே பிரசவம் ஏற்பட்டுவிடுகின்றது.

நாய்க்கடி, பாம்புக்கடி,  குளவிகொட்டு போன்றவற்றுக்கு உரிய மருத்துவ வசதிகள் இல்லாததால் நகரத்துக்கு வருவதற்கு சிரமப்பட்டு பலர் நாட்டு வைத்தியத்தை அணுகுவதால் அதனாலும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதற்கு புறம்பாக,  முறையாக மின் விநியோகம் வழங்கப்படாததால் லயன் அறைகள் அடிக்கடி தீப்பற்றி எறிதல், சுகாதார ஆலோசனைகள் இன்மை, சிறுவர் துஷ்பிரயோகங்கள், முகவர் நிலையங்களால் வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் ஏமாற்றப்படுகின்றமை, 

சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடன் உதவி இன்மை,  ஆசிரியர்கள் பற்றாக்குறை,  கல்வி வீழ்ச்சி உட்பட மேலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

எனவே,  ஊடகங்களும் குறிப்பாக தமிழ் ஊடகங்களும் மலையக சிவில் அமைப்புகளும் எமது பிரச்சினைக்கு விடிவைத் தேடிதரவேண்டும் என புரட்டொப் தோட்டத்தில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி- வீரகேசரி 

Thursday, January 2, 2014

எப்போது எங்களுக்காக கதைக்கப் போகின்றீர்கள் ?



தேர்தல் காலங்­களில் மட்டும் சிரித்த முகத்­தோடு எம்மை தேடி வரும் பிர­தி­நி­தி­க­ளுக்கு 

கல்வி, சுகா­தரம், விளை­யாட்டு, போக்­கு­ரத்துதொழில் குடி­யி­ருப்பு என சகல அம்­சங்­க­ளிலும் பின்­தங்­கி­யி­ருக்கும் எங்கள் பிரச்­சி­னைகள் பற்றி கதைக்க வேண்­டிய இடத்தில் நீங்கள் எவ­ருமே கதைக்­க­வில்லை என்­பதை அறிந்து மிகவும் மன­வே­தனை அடை­கிறோம். பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 7 பேரில் ஐந்து பேர் அர­சாங்­கத்­துடன் இணைந்­தி­ருக்­கின்­றீர்கள். இதில் ஒருவர் அமைச்சர் மற்­று­மொ­ருவர் பிரதி அமைச்சர். வடக்கு மற்றும் கிழக்கு பிர­தேச மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­துவோர் ஏதோ ஒரு வழியில் தமது மக்­களின் பிரச்­சி­னை­களை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கின்ற போது நீங்கள் ஏன் அந்த அமர்­வு­க­ளுக்கே செல்­வ­தில்லை என்­பது எமக்கு புரி­ய­வில்லை. இது நீங்கள் பிர­தி­நி­தித்­துவம் செய்வது மலை­யக சமூ­கத்­திற்கு செய்யும் பெருந்­து­ரோகம் என்­பதை அறி­வீர்­களா?

 2014 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவு திட்ட குழு நிலை விவா­தத்தில் மலை­யக மக்­களின் மேற்­கூ­றிய பிரச்­சி­னைகள் பற்றி எவ­ருமே மறந்து கூட வாய்­தி­றக்­க­வில்­லையே? இந்த விவா­தங்கள் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதில் மலை­யக மக்­க­ளோடு சம்­பந்­தப்­பட்ட அமைச்சு விவா­தங்­களில் முக்­கி­ய­மா­ன­தாக விளங்கும் கல்வி அமைச்சு குறித்த விவா­தங்­களில் நீங்கள் எவ­ருமே கலந்து கொள்­ள­வே­யில்லை எனும் போது மலை­யக கல்வி தொடர்பில் நீங்கள் வைத்­தி­ருக்கும் அக்­கறை எமக்கு நன்­றாக விளங்­கு­கி­றது. உங்­க­ளுக்கு தெரி­யா­விட்­டாலும் இந்த மாதத்தில் திகதி வாரி­யாக இடம்­பெற்ற குழு­நிலை விவா­தங்­க­ளையும் அதில் நீங்கள் ஒன்றில் கூட நீங்கள் பேச­வில்லை என்­ப­தையும் இங்கு தர கட­மைப்­பட்­டுள்ளேன்.

1) 2 ஆம் திகதி கல்வி மற்றும் உயர்­கல்வி அமைச்சு பற்­றிய விவாதம் இடம்­பெற்­றது. மலை­யக பகு­தி­களில் நிலவும் ஆசி­ரியர் பற்­றாக்­குறை பாட­சாலை வளப்­பற்­றாக்­குறை இடை­வி­ல­கல்கள் தகுதி வாய்ந்த மாண­வர்­க­ளுக்கு உயர்­கல்­வியை தொடர்­வதில் உள்ள இடர்கள் என கல்­வித்­து­றையில் காணப்­படும் பல பிரச்­சி­னைகள் பற்றி கதைக்க தவறி விட்­டீர்கள். 

2) 7 ஆம் திகதி சிறுவர் அபி­வி­ருத்தி மற்றும் மகளிர் விவ­கார அமைச்சு மீதான விவாதம் இடம்­பெற்­றது. மலை­ய­கத்­தி­லி­ருந்தே அதிக சிறு­வர்கள் இன்று தலை­ந­கரில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­கின்­றனர் என்றும் அவர்கள் நீண்ட கால­மாக உயி­ரா­பத்­தையும் துஷ்­பி­ர­யோ­கத்­தையும்  சந்­தித்து வரு­கின்­றனர் என்­பதும் உங்­க­ளுக்கு தெரி­யா­த­தல்ல.  பெருந்­தோட்­டப்­பெண்­களின் கட்­டாய கருத்­தடை பிரச்­சி­னைகள் வேலைத்­த­ளத்தில் அவர்கள் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள் என எவ்­வ­ளவோ உள்­ளதே அதைப்­பற்­றியும் நீங்கள் எவரும் கதைக்­க­வில்லை.

3) 9ஆம் திகதி வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் ஊக்­கு­விப்பு நல­னோம்­புகை குறித்த அமைச்சு விவாதம் இடம்­பெற்­றது. பெருந்­தோட்­டப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்து வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்கு சென்று பிணங்­க­ளாக திரும்­பிய பெண்­களை மறந்து விட்­டீர்­களா? மலை­யக இளை­ஞர்­க­ளுக்கு தகு­தியின் அடிப்­ப­டையில்  வெளிநாட்டு தொழில் பெற்­றுத்­தர வேண்டும் என்ற எண்ணம் உங்­க­ளுக்­குக்­கி­டை­யாதா? போலி முக­வர்­களால் மலை­யக இளைஞர் யுவ­திகள் ஏமாற்­றப்­பட்டு வரு­வது குறித்தும் வெளிநாட்டில் தாய் பணி­யாற்றும் போது தந்தை அல்­லது  உற­வி­னர்­க­ளுடன் இருக்கும் பிள்­ளை­களின் பாது­காப்பு குறித்தும் நினைத்­துப்­பார்த்­தீர்­களா? இதற்கும்    மௌனம் தான் உங்கள் பதி­லாக இருந்­தது. 

4)  11 ஆம் திகதி இளைஞர் அலு­வல்கள் மற்றும் திறன் அபி­வி­ருத்தி அமைச்சு மீதான விவாதம்  இடம்­பெற்­றது. இன்று மலை­யக இளை­ஞர்­க­ளைப்­பொ­றுத்­த­வரை தோட்­டப்­பு­றங்­களில் அல்­லது தலை­ந­க­ரங்­க­ளி­லேயே அதி­க­மோனோர்  பணி­யாற்றி வரு­கின்­றனர். ஆசி­ரி­யப்­ப­ணி­களில் உள்­ளீர்த்­துக்­கொண்­ட­வர்­களின் தொகை போதாது. வேலை­யின்றி இருக்கும் இளை­ஞர்கள் பற்­றிய உங்கள் தொலை­நோக்­குப்­பார்வை என்ன? இதை சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருக்­க­லாமே?

5) 13 ஆம் திகதி போக்­கு­வ­ரத்து அமைச்­சுக்­கான விவாதம் இடம்­பெற்­றது. மலை­ய­கத்தில் எத்­த­னைப்­ப­கு­தி­களில் முறை­யான போக்­கு­வ­ரத்து சேவைகள் இல்லை என்­பதை நீங்கள் நன்­றா­கவே அறி­வீர்கள் இகாரணம் அத்­தனை இடங்­க­ளுக்கும் தேர்தல் காலத்தில் உங்கள் பிராடோ மோன்­டரோ ரக வாக­னங்கள் பய­ணித்­தி­ருக்­கின்­றன. பாட­சாலை மாண­வர்­க­ளுக்­காக அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­பட்ட சிசு­ச­ரிய பஸ் சேவைகள் மலை­ய­கத்தின் எந்த பகு­திக்கும் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது சரி உங்­க­ளுக்­குத்­தெ­ரி­யுமா? அது குறித்தும் எவரும் கதைக்­க­வில்லை. 

6) அதே 13 ஆம் திகதி சுகா­தார அமைச்சு மீதான விவா­தமும் இடம்­பெற்­றது. மலை­ய­கத்தில் நிலவும் மந்த போசனை மற்றும் வைத்­தி­ய­சா­லை­களில் நிலவும் வளப்­பற்­றாக்­குறை உங்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். இந்த வரு­டத்தில் மட்டும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 19 கர்ப்­பி­ணித்­ தாய்­மார்கள் மர­ம­டைந்­துள்­ளமை உங்­க­ளுக்­குத்­தெ­ரி­யுமா? டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சா­லையில் நிலவி வரும் உள்­ளக பிரச்­சி­னைகள் நாள்­தோறும் பத்­தி­ரி­கை­களில் வெளிவ­ரு­கின்­றன. அதை பார்த்தும் பாரா­தது போல் காலத்தை கடத்­து­கின்­றீர்­களே? சிசு மரண வீதம்இ சுகா­தார சீர்­கே­டுகள் குறித்து சபையின் கவ­னத்­திற்­குக்­கொண்டு வந்­தி­ருக்­க­லாமே? 

7) 14 ஆம் திகதி விளை­யாட்­டுத்­துறை அமைச்சு மீதான விவாதம் இடம்­பெற்­றது. தேசிய ரீதி­யான போட்­டி­களில் பங்­கு­பற்ற தகு­தி­யி­ருந்தும் மலை­யக இளைஞர் யுவ­தி­க­ளுக்கு உரிய ஊக்­கு­விப்பு இன்­மையால் பிர­கா­சிக்க முடி­யா­தது குறித்து பேசி­யி­ருக்­கலாம் ஏனெனில் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரும் மலை­யக நக­ரான நாவ­லப்­பிட்­டியை சேர்ந்­தவர் தானே ? தோட்­டப்­ப­கு­தி­களில் உரிய மைதானம் இல்­லாமை இருக்கும் மைதா­னங்கள் பரா­ம­ரிக்­கப்­ப­டாமல் இருக்­கின்­றமை குறித்தும் சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருக்­கலாம். ஆனால் உங்­களில் பலர் இந்த விவா­தத்­திற்கு சமூகம் அளித்­தி­ருக்­கவே இல்லை.

8) 14 ஆம் திக­தி­யன்றே உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் தொடர்­பான அமைச்சு மீதான விவாதம் இடம்­பெற்­றது. இது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் தோட்­டப்­பு­றங்­க­ளுக்கு சேவை­களை வழங்க முடி­யாத நிலை இருப்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கலாம். இந்த சந்­தர்ப்­பத்தை மலை­யக பிர­தி­நி­தி­க­ளான நீங்கள் தவ­ற­விட்டு விட்­டீர்கள். 

மேற்­கு­றிப்­பிட்ட அமைச்­சு­களின் விவாதம் தொடர்பில் நீங்கள் எவ­ருமே வாய்­தி­றக்­காத விட­யத்தை சில ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. அதை வாசித்து விட்டு உங்­களால் எந்த அறிக்­கை­யையும் விட முடி­ய­வில்லை. ஆனால் 18 ஆம் திகதி இடம்­பெற்ற விவா­தத்தின் போது ஊட­கங்­களில் வெளிவந்த செய்­தியை முன்­னி­லைப்­ப­டுத்தி உங்­களில் சிலர் கதைத்­தீர்கள். அது கண் குரு­டான பின்பு சூரிய வணக்­கத்­திற்கு தயா­ரா­ன­தற்கு சமன். 
இப்­போது எம்­மத்­தியில் எழுந்­தி­ருக்கும் கேள்வி இது தான். மேற்­கு­றிப்­பிட்ட அனைத்து பிரச்­சி­னை­களும் இருந்தும் குறிப்­பிட்ட அமைச்சு மீதான விவா­தத்தில் நீங்கள் கதைக்­கா­ம­லி­ருந்­த­தற்குக் காரணம் இந்த பிரச்­சி­னைகள் வெளிப்­பட்டால் உங்­க­ளுக்கு பிரச்­சினை வந்து விடும் என்றா அல்­லது இவ்­வ­ளவு பிரச்­சி­னை­களை வைத்­துக்­கொண்டு இத்­தனை வரு­டங்­க­ளாக இந்த மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றீர்­களே என யாராவது கேள்வி எழுப்பி விடுவார்களே என்ற அச்சமா? 

நீங்கள் இவ்வாறு வாய்மூடி மௌனிகளாக இருப்பதால் மலையக மக்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என ஏனையோரும் ஏன் அரசாங்கமும் கூட நினைக்க வாய்ப்புள்ளதே ? சபை விவாதத்தில் கதைக்காமல் ஜனாதிபதியுடன் தனியே சென்று கதைப்பதில் என்ன பிரயோசனம் உண்டு? நீங்கள்  என்ன கதைத்தீர்கள் என்பது யாருக்குத்தெரியும்? பாராளுமன்றத்தில் கதைத்தால் தானே அனைவருக்கும் தெரியும்? அடுத்த வருடம் இடம்பெறும் முக்கிய விவாதங்களில் சரி கதைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் இந்த மக்கள். இந்த வருடம் நீங்கள் கதைக்காமலிருந்ததற்கு  ஏதாவது காரணங்கள் இருந்தால் ஊடகங்களுக்கு தெரிவிக்கலாமே.

இப்­ப­டிக்கு உங்­க­ளுக்கு 
வாக்­க­ளித்­த­வர்­களில் ஒருவன்
(நன்றி சூரியகாந்தி)

Wednesday, January 1, 2014

மலையகத் தமிழர்கள் காணி பெறுவதை அரசு விரும்பவில்லை- ஆர். யோகராஜன் பா.உ


இலங்கையில் மலையகத் தமிழர்கள் சொந்தக் காணிகளைப் பெற்றுவிடக்கூடாது என்ற இனவாத நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார். 

தேயிலை மீள்நடுகை நடவடிக்கையிலும் அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான- செயற்திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் சுமார் ஆறு லட்சம் ஏக்கர் தேயிலைக் காணியில், சுமார் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பிலுள்ள தேயிலைச் செடிகளை பிடுங்கிவிட்டு புதிதாக மீள்நடுகை செய்ய வேண்டியிருப்பதாக  தெரிவித்த யோகராஜன்  பா.உ; வெறும் 400 ஏக்கர் பரப்பில் மட்டுமே மீள்நடுகை செய்வதற்குப் போதுமான 500 மில்லியன் ரூபா நிதியையே அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருப்பதை சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்களுக்கு தலா இரண்டு ஏக்கர் காணியை பகிர்ந்தளித்து அதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து, தேயிலை உற்பத்தியை பெருக்குவது மட்டுமன்றி- தொழிலாளர்களுக்கும் உதவமுடியும் என்பதே பொருத்தமான நடவடிக்கை என்று அரசாங்கத்திடம் தான் யோசனையை முன்வைத்துள்ளதாக தெரிவித்த யோகராஜன் தொழிலாளர் குடும்பங்களுக்கான மாடிவீட்டுத்திட்டம் பற்றி குறிப்பிடுகையில்

கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது, தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் (சுமார் 253 சதுர மீட்டர்) காணியை வீடமைப்புக்காக ஒதுக்குவதாக ஜனாதிபதி மலையக தோட்ட மக்களுக்கு வாக்குறதி அளித்திருந்த போதிலும், இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் அந்த வாக்குறுதி மீறப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்

தோட்டத் தொழிலாளர்களுக்கு தனித்தனி வீடுகளுக்குப் பதிலாக 50 ஆயிரம் தொடர்மாடி வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளதாக வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் கூறியிருப்பதன் பின்னணியில், தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுடன் வீடு கிடைக்கக் கூடாது என்ற இனவாத நோக்கமே இருக்கிறது என்றார்.

விவசாயிகளுக்கு நிலமே ஆதாரம். தேயிலைத் தொழிலாளர்களும் விவசாயிகளே என்றபடியால், அவர்களுக்கு மாடிவீடு வழங்குவது ஏற்புடையதா என கேள்வி எழுப்பினார்.

ஆனால், அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்ற மலையகத்தின் பிரதான அரசியல்கட்சிகள் இந்த வீடமைப்பு முறையின் பாரதூர தன்மையைப் புரிந்துகொள்ளாமல் உள்ளனர் என்றார்

இனிய புது வருட வாழ்த்துக்கள்