Saturday, March 28, 2009

டன்சினன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்

மத்திய மாகாணம் பூண்டுலோயா மத்திய பிரிவு தோட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த விடயம் குறித்து தோட்டத் தொழிற்துறை அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, சூழலியல் அமைப்புக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேவேளை பூண்டுலோயா பகுதியிலேயே மேல் கொத்தமலைத் திட்டத்தின் நிலக்கீழ்ச் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மதுவுக்கு எதிராக மகளிர் அமைப்பு

மலையகத்தில் புதியதொரு அரசியல் மற்றும் தொழிற்சங்க கலாச்சாரமொன்றினை ஏற்படுத்தும் வகையில் மதுவுக்கு எதிரான மகளிர் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களிலும் தொழிற்கங்களுக்கு அங்கத்தவர்களை சேர்த்துக்கொள்ளும் காலங்களிலும் சில அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களால் தாராளமாக வழங்கப்படும் மதுபானம் தோட்டத் தொழிலாளர்களின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. அத்துடன் மலையக பகுதிகளில் அதிகரித்து வருகின்ற மதுபாவனை இளைஞர்கள் உடல் ரீதியாக பாதிப்படைந்து வருகின்றனர். குடும்பத் தலைவர்களின் மது பாவனையால் அக் குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
விவசாயத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து இடைநிறுத்தம்

பொகவந்தலாவை கெம்பியன் தோட்ட 57ம் பிரிவிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம் செய்த 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், அவர்களுடைய உறவினர்களும் தோட்டங்களில் வேலை செய்வதிலிருந்து தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தி வைத்துள்ளனர் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் தமது மேலதிக வருமானத்துக்காக தோட்டங்களிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு தொடர்பாக மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறப்பட்ட மகஜரொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நடவடிக்கையில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

பதுளையில் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடலின் போது தெரிவித்த கிருஷ்ணசாமி அவர்கள் பதுளை மாவட்டத்தில் 65 தோட்டங்களும், 525 பிரிவுகளும் இருக்கின்ற போதிலும் 40 தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன. ஏனைய தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் கையொப்பம் பெறப்பட்ட மகஜர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கூட்டொப்பந்தத்தில் மாதத்திற்கு 25 நாள் வேலையும், வருடத்திற்கு 300 நாள் வேலையும் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கூட்டொப்பந்தம் செய்தவர்களே வாரத்திற்கு இரண்டு, மூன்று நாள் வேலை வழங்கப்படும்பொழுது தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை கேட்பது உகந்த தருணம் இல்லை என்கிறார்கள். வரட்சி நிவாரணம் விவசாயிகள், சிறுதோட்ட சொந்தக்காரர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்படைந்து வருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்கப்படுவதில்லை என்றார்.