Monday, August 30, 2010

நுவரெலியா மாவட்டமும் தமிழ்மொழியின் நிர்வாக உரிமையும்

இலங்கையின் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மொழியாக தமிழ்மொழியை நுவரெலியா மாவட்டத்தின் நிர்வாக மொழியாகப் பிரகடனப்படுத்தி இன்று பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தபோதிலும் தமிழ்மொழியின் நிர்வாக மொழி அந்தஸ்துபற்றி எவரும் கவனத்தில் கொள்ளாத நிலையில் தமிழ்மொழியின் உரிமை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சிந்திக்க வேண்டியவர்கள் எவரும் அது தொடர்பாகக் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின்படி நாடு முழுவதற்குமான அரசாங்க மொழிகளாகச் சிங்களமும் தமிழும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகத் தமிழும் ஏனைய மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச் சிங்களமும் செயற்பட அரசியலமைப்பின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாகாணங்களில் வாழும் சிறுபான்மை மொழி பேசுவோரை மையமாகக் கொண்டு அவர்களது எண்ணிக்கையையும் கவனத்தில் கொண்டு அரசியலமைப்பின் 22 (டூ) பந்தியின் கீழ் குறிப்பிட்ட செயலகப் பிரிவுகளில் தமிழ் அல்லது சிங்களத்தை நிர்வாக மொழியாகப் பிரகடனப்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதியின் வர்த்தமானிப் பிரகடனத்தின் மூலம் அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறுபான்மையாகவுள்ள மக்களது மொழியும் நிர்வாக மொழியாகச் செயற்பட வழி செய்யப்படும். அதாவது சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் ஒரு பிரதேச செயலகப் பிரிவில் நிர்வாக மொழியாகச் செயற்பட வழிவகை செய்யப்படும். குறிப்பிட்ட செயலகப் பிரிவுகளில் சிங்கள மக்கள் அரச அலுவலகங்களுடனான தொடர்புகளைச் சிங்கள மொழியில் மேற்கொள்ளவும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் உள்ள அதே உரிமையைத் தமிழ்மக்களும் அனுபவிக்க முடியும். இது சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமை.

1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரங்கெத்த ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளின் தமிழ் நிர்வாக மொழியாகச் செயற்பட வழிசெய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அந்த அதிவிசேட வர்த்தமானியின் இலக்கம் 1105ஃ25 ஆகும்.

நுவரெலியா மாவட்டத்தின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, மாநகரசபை,நகரசபை,பிரதேசசபைகளின் உறுப்பினர்களுக்கு மேற்படி வர்த்தமானியின் விபரம் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கு நுவரெலியா மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வமான நிர்வாக மொழி உரிமையைத் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் அலட்சியப்படுத்தக்கூடாது,புறந்தள்ளக்கூடாது.

நுவரெலியா , அம்பகமுவ பிரதேசசபைகளுக்குட்பட்ட மக்களில் சுமார் எண்பது வீதமானவர்கள் தமிழர்கள்.பிரதேசசபைகளின் தலைவர்கள் உட்படப் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழர்கள். அவ்வாறே அட்டன் டிக்கோயா நகரசபையினதும் தலவாக்கலை நகரசபையினதும் தலைவர்களும் பெரும்பான்மையான உறுப்பினர்களும் தமிழர்களே. நுவரெலியா மாநகரசபையின் பிரதி முதல்வராகத் தமிழர் ஒருவரே செயற்படுவதுடன், தமிழ் உறுப்பினர்களும் அதிகமாகவுள்ளனர். வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேசசபைகளிலும் கணிசமான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தெரிவாகிச் செயற்படுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள தமிழ்மக்களின் தமிழ்ப் பிரதிநிதிகளுக்குச் சிங்கள மொழியில் சரளமாகப் பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

இவ்வாறான நிலையில், நூற்றுக்கு அறுபது வீதம் தமிழ்மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்தின் அரச அலுவலகங்கள், வங்கிகள், சபைகளில் போதிய தமிழ் தெரிந்த, தமிழில் பணியாற்றத் தகைமை பெற்ற அலுவலர்கள் இல்லையென்பது பகிரங்கமானது. தமிழ்ப் பொதுமக்கள் மட்டுமல்ல மக்கள் பிரதிநிதிகள் கூடத் தமது கருத்தை வெளிப்படுத்த தேவைகளைப் பூர்த்தி செய்து மக்களுக்குப் பணியாற்ற முடியாத மொழிப் பிரச்சினையுள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. இதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

அரச துறைசார் அலுவலகங்கள், வங்கிகள் , கூட்டுத்தாபனங்கள், சபைகளில் இந்த நிலையென்றால் தமிழ்த் தொழிலாளர்களே பெருமளவிலுள்ள பெருந்தோட்ட அலுவலகங்களிலும் இந்த நிலையே பெருமளவில் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஏழு உறுப்பினர்களில் ஐவர் தமிழர்கள். இருவர் சிங்கள இனத்தவர்கள். அவர்களில் தமிழர் ஒருவரும் சிங்களவரொருவரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள். நுவரெலியா மாவட்ட மக்கள் சார்பாக தேசியப்பட்டியல் மூலம் நியமனம் பெற்றவர்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவருமாக இருவருள்ளனர்.

இந்நிலையிலே, ஆளும் கட்சியின் சார்பாக நால்வரும் எதிர்க்கட்சி சார்பாக மூவரும் பாராளுமன்றம் கூடியபோது இருந்தனர். இன்று ஆளும் கட்சியின் நுவரெலியா மாவட்டத் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாலிலிருந்து ஐந்தாக உயர்ந்துவிட்டது. ஆளும் தரப்பிலிருந்து தமிழ்மக்களின் அடிப்படை உரிமையைப் பெற்றுக்கொடுப்பதாக அணிதிரளும் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

எந்த அணியிலிருந்தாலும் தமிழ்ப் பிரதிநிதிகளின் கடமை தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேண நடவடிக்கையெடுக்க வேண்டியதாகும். மொழி உரிமையைப் பயன்படுத்த முடியாத சமூகம் தரம் தாழ்ந்ததாக இரண்டாம் தரப்பிரஜைகளாகவே கணிக்கப்படும். சமூக அந்தஸ்தை இழந்ததாகவே கொள்ளப்படும். மொழியென்பது ஒரு சமூகத்தின் உயிர்மூச்சு,ஆன்மா என்பார்கள். அது தமிழ்மக்களுக்கும் பொருந்தும்.

நுவரெலியா மாவட்டத்தின் மக்கள் தொகையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ளனர். அவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் நுவரெலியா மாவட்டத்தின் பெரும்பான்மையாகவுள்ளனர். இரண்டு பிரதேசசபைகளின் தலைவர்களாகவும் இரண்டு நகரசபைகளின் தலைவர்களாகவும் நம்மவர்கள் தமிழர்கள் உள்ளனர் என்று பெருமை பேசுவதால் பெருமைப்படுவதால் சாதாரண தமிழ்மக்கள் ஒரு நன்மையும் பெறப்போவதில்லை.

சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள மொழி உரிமையைத் தமிழ்மக்கள் பெற்றுக்கொள்ள, அனுபவிக்கத் தடையுள்ளது. தடைகளைத் தகர்க்க வேண்டிய பொறுப்பு தமிழ்மக்களின் பிரதிநிதிகளென்று கூறப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கேயுள்ளது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் தமிழர்கள். மக்கள் சேவை என்பது என்ன என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.


மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வழிகாணப்பட வேண்டும். மக்களது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டத் தமிழ் மக்கள் குறிப்பாகப் பெருந்தோட்டத்துறையில் வாழும் தமிழ்மக்கள் உணவு, குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் உட்படப் பல்வேறு தேவைகளை எதிர்நோக்கியிருப்பது மறைக்கக்கூடியதல்ல, மறுக்கக்கூடியதல்ல.

பாரதியார் கூறியதுபோல், கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றுவதன்றி நாட்டத்தில் கொள்ளமாட்டார்கள் நம் பிரதிநிதிகள் என்று நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்கள் நமது தமிழ் அரசியல் பிரதிநிதிகளைக் கணித்துவிடக்கூடாது , மதிப்பிட்டுவிடக்கூடாது. அதனால், சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளை நுவரெலியா மாவட்டத் தமிழ்மக்கள் பெற்றுக்கொள்ள , அனுபவிக்க வழி செய்யப்பட வேண்டும்.

மொழி உரிமையை நிலைநாட்டி தமிழ்மக்கள் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ வழிகாண வேண்டும். மொழிப் பயன்பாட்டுக்கு நிர்வாகச் செயற்பாட்டுக்குத் தடையாகவுள்ள ஏதுகளை இனங்கண்டு தகர்க்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். அது காலத்தின் கட்டாய தேவை. தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர்ந்து உரிமையுடன் வாழ அதுவே அடித்தளமாக அமையும்.

தினக்குரல்

Sunday, August 29, 2010


இ.தொ.காவைப் பலப்படுத்துவதன் மூலமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்


ஆசிரியராக, சமூக சேவை யாளராக இருந்து மலையக மக்கள் முன்னணியின் ஊடாக அரசியலில் பிரவேசித்த இவர், சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பிரதேச சபை உறுப்பினராக இருந்த துடன் ஆசிரியர் சேவை யையும் தொடர்ந்தவர், 2000ஆம் ஆண்டு தேசி யப் பட்டியல் மூலம் பாரா ளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியில் இணைந்து கொண்டார். அக்கட்சியில் உப தலைவராகவும் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

கேள்வி: இ.தொ.காவில் நீங்கள் இணைந்து கொண்டதற்கான காரணம் என்ன?

பதில்: மலையகத்தில் சிறு சிறு கட்சிகள் ஆங்காங்கே முளைவிட ஆரம்பித்தன. மாகாண சபை உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து சென்று அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களை புதிதாக உருவாக்கிக் கொள்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்தவர்களும் இதனையே செய்கின்றனர்.

இவர்கள் அந்த மக்களை வைத்து வாக்கு சேகரித்து அவர்களுடன் எவ்விதத் தொடர்புகளும் இல்லாத பெரும்பான்மை இனத்தவர் கூட மாகாண சபை உறுப்பினராக வந்து தொழிற்சங்கத்தை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

மூன்றாவது சிறுபான்மையினரான மலையக மக்கள் பல கூறுகளாக பிரிந்து இருப்பதுடன் உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கு நாங்களும் கார ணகர்த்தாக்களாக இருந்துவிடக்கூடாது என்று எண்ணினேன்.
அதன் அடிப்படையில் மலையகத்தில் பிரதான அமைப்பின் தலைமையின் கீழ் முழு மலையகமும் அணிதிரள வேண்டும். அவ்வாறு ஒன்று திரண்டால் மட்டுமே மலையக மக்கள் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பது யதார்த்தமான உண்மை. அந்த யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு நான் எனது ஆதரவாளர்களுடன் இ.தொ.காவில் இணைந்து கொண்டிருக்கிறேன். பிரிந்து போன சமூகம் மீண்டும் தலைநிமிர வேண்டும்.

பல்வேறு கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்த பெரும்பான்மை இனத்தலைவர்கள் தற்போது ஓரணியில் திரண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் சிறுபான்மை இனமான நாம் ஒரே குடையின் கீழ் இணைவதில் எந்தவிதத் தவறும் இருக்க முடியாது.

இ.தொ.கா ஒரு தாய் அமைப்பைப் போன்றது. இலங்கை இந்திய காங்கிரஸில் இருந்து ஏற்பட்ட பிளவின் காரணமாக இ.தொ.கா தோற்றம் பெற்றாலும் மலை நாட்டில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களையும் பிரதிநிதித்து வப்படுத்துகின்ற ஒரு அமைப்பாக அது விளங்குகிறது. மறைந்த சௌமியமூர்த்தி தொண் டமான் தலைமையிலே பல உரிமைகளை பெற்ற ஒரு பலம் பொருந்திய அமைப்பு. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகிறது. இந்த அமை ப்பை பலப்படுத்துவதன் மூலம்தான் மலையகத்தைப் பலப்படுத்த முடியும்.

கேள்வி: மாற்றுக் கருத்துக்கள் கொண்ட தொழிற்சங்கங்களும் மலையகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவே?

பதில்: இ.தொ.காவை விமர்சித்துக் கொண்டு இடைக்காலத்தில் புதிதாக பல அமைப்புக்கள் உருவாகியதென்பது உண்மைதான். புரட்சிகர சிந்தனைகளுடன் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு கட்சிகள் உருவான போதிலும் இதுகாலவரை அவர்கள் எதனைச் சாதித்தார்கள் என்பதை ஆழமாகச் சிந்தித்தால் புரியும். வெற்றுக் கோஷங்களால் மலையக சமூகத்தை பிளவு படுத்தியதைத் தவிர வேறு எதுவுமே இல்லை யென்றே கூறவேண்டும்.

மேலும் பல கூறுகளாகப் பிரிந்து சிறுசிறு அமைப்புக்களாக நின்று எதனைச் சாதிக்க நினைக்கிறார்கள்? கொள்கை ரீதியாக எடுத்துக் கொண்டாலும் மலையகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் மாறுபட்ட கொள்கை களைக் கொண்டிருப்பதாக என்னால் பார்க்க முடியாது. ஏனெனில் இ.தொ.கா இந்நாட்டில் ஆளும் தரப்போடு இணைந்து எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்ற அடிப்படை கோட்பாட்டை கொண்டிருக்கிறது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் காலத்திலிருந்து இது தொடர்கிறது.

கேள்வி: இ. தொ. காவிலிருந்து முக்கியஸ்தர்கள் சிலர் வெளியேறிய நிலையில் நீங்கள் அதில் இணைந்து கொண்டிருக்கியர்கள். அதிலிருந்து எவ்வாறு அரசியலை முன்னெடுக்கப் போகியர்கள்?

பதில்: நான் ஏற்கனவே கூறியது போல இ.தொ.கா விலிருந்து பலர் வெளியேறியிருக்கிறார்கள். இ.தொ.கா.வின் வெளியேற்றம் பல கட்சிகளை தோற்றுவித் திருக்கிறது. ஆனால் இ.தொ.காவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் என்ன காரணத்திற்காக பிரிந்து சென்றார்கள். ஏன் சென்றார்கள் என்ற கேள்வி எழுந்தது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடனான முதலாவது சந்திப்பின் போது இக்கேள்வியை அவரிடம் கேட்டேன். அவர் சரியானதொரு பதிலை தெரிவித்தார். இ.தொ.காவிற்குள் எவராவது பணக்காரராக வந்து ஏழையாக வெளியே சென்றதில்லை. பெரும் செல்வாக்குடன் இருந்து செல்வாக்கை இழந்து செல்லவில்லை. அப்படியென்றால் இ.தொ.கா விற்குள் இணைந்தவர்கள் தங்களுக்கு தேவை யானவற்றை சேர்த்துக்கொண்டு வெளியே போயிருக்கிறார்கள்.

இ.தொ.காவிற்கென ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அந்தக் கட்டுப் பாட்டின் அடிப்படையில் எவராவது செயற்பட்டால் அவர்கள் இ.தொ.கா.விலிருந்து வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செல்கின்ற போது அவர்கள் வெளியேறுவதற்கு அதுவே கார ணமாக இருந்திருக்கிறது என அமைச்சர் தெரிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை நான் இ.தொ.காவில் இணைந்ததற்கான காரணம் மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1947ஆம் ஆண்டு முதல் 1977ஆம்ஆண்டு வரை எந்தவித அரசியல் பின்புலம் இல்லாமல் இந்த சமூகத்தை கட்டிக்காத்திருக்கிறார். அந்த நேரத்தில் இந்த சமூகம் அவர் பின்னால் அணி திரண்டும் இருந்திருக்கிறது, 1977ஆம் ஆண்டு அவர் பாராளுமன்ற உறுப்பினராக வந்த பின் பல சாதனைகளை நிலைநாட்டியிருக்கிறார். அதை எவரும் இல்லையென்று மறுதலிக்க முடியாது.

30 வருடங்கள் நாடற்றவர்களாக இருந்த ஒரு சமூகத்துக்கு பிரஜா உரிமையை பெற்றுக் கொடுத்திருக்கிறார். பிரஜாவுரிமையை பெற்றதன் வாயிலாக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்வைத்திருக்கிறார்.பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசாங்க தொழிலை பெறுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். மாட்டுப்பட்டியைப் போல இருந்த மலையகப் பாடசாலைகளை மாடிக் கட்டிடங்களாகவும், மகா வித்தியாலயங் களாகவும் மாற்றியமைத்திருக்கிறார்.
படிக்காத சமூகம் என தூற்றப்பட்ட சமூகத்திலிருந்து இன்று ஒவ்வொரு தோட்டத்திலும் படித்தவர்கள் பெருகுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். தன்னுடைய அரசியல் சாணக்கியத்தின் மூலமாக தோட்டக் குடியிருப்புக்களையும் அதனைச் சார்ந்த பிரதேசங்களையும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக்க வேண்டும் என்ற முயற்சியை பெருமளவு மேற்கொண்டிருக்கிறார்.

அவர் செய்த பல்வேறு விடயங்கள் இந்த சமூகத்தை மாற்றியமைத்திருக்கிறது. அவ்வாறான தலைமைத்துவத்தோடு நாம் இணைந்திருப்பதில் எந்தவித தவறும் கிடையாது. அது மட்டுமல்ல தற்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமை மலையகத்திற்கு ஒரு பிரகாசத்தைக் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. மறைந்த தலைவர் எமது சமூகத்திற்கு ஒரு முகவரியைக் கொடுத்திருக்கிறார். அந்த முகவரியை மேலும் மெருகூட்டி அந்த மக்களை தலைநிமிர்ந்து நிற்கும் தலைவராக இன்று ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார். அந்த தலைமையை ஏற்றுக் கொள்வதில் நாங்கள் பெருமையடைகின்றோம்.

கேள்வி: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை எதிர்த்து வந்திருக்கியர்கள். இ.தொ.காவில் இணைந்த பின்னர் உங்களது நிலைப்பாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது அடிப்படை நோக்கம். மலையக சமூகத்தின் இதயம் தோட்டத் தொழிலாளர்கள். வருமான ரீதியில் அவர்கள் உச்ச நிலையில் இருக்க வேண்டும். உச்ச நிலை என்பது இந்நாட்டில் இருக்கின்ற ஏனைய துறையை சார்ந்தவர்கள் பெறுகின்ற வருமானத்திற்கு சமமாக வருமானத்தை பெறும் சமூகமாக மலையக சமூகம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த சமூகத்தின் எதிர்கால வாரிசுகள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அது கல்வியாக இருந்தாலும் சரி, வேலை வாய்ப்புக்களாக இருந்தாலும் சரி, வீட மைப்பாக இருந்தாலும் சரி அனைத்து நடவடிக்கைகளும் வருமானத்தில்தான் தங்கியிருக்கிறது. எனவே கடந்த காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமென உரக்கக் குரல் கொடுத்ததென்பது வெறுமனே அரசியல் நோக்கங்களுக்காக அல்ல. மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற் காகவே அவ்வாறான வேலைத்திட்டத்தை நாங்கள் முன்வைத்தோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் பெறுவதற்கான ஒரேயொரு வழி என்னவென்றால் கூட்டு ஒப்பந்தமாகத்தான் இருக்கிறது. கூட்டு ஒப்பந்தத்தைத் தவிர தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பெறுவதற்கு வேறு எந்த மார்க்கமும் இல்லாத நிலை காணப்படுகிறது. கூட்டு ஒப்பந்தத்தில் உச்ச அளவில் எங்க ளுடைய பேரம் பேசும் சக்தியை உருவாக்கி தொழிலாளர்களுக்கான கூடுதலான சம்பளத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இப்போதும் எனது நிலைப்பாடாகும்.
இ.தொ.கா எதிர்காலத்தில் செய்யப்போகும் கூட்டு ஒப்பந்தம் கூட தோட்டத் தொழிலாளர்க ளுக்கு மிக உச்ச அளவிலான வருமானத் தையும், அவர்களுடைய சேவைகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான தொழிற்சங்கங்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டு களுக்கு மேல் குரல் எழுப்பி வந்திருக்கின்றன. ஆனால் இந்த 10 ஆண்டு காலப்பகுதியில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்வைக்க முடியவில்லை. குறிப்பிட்ட கூட்டு ஒப்பந்தக் காலப்பகுதியிலேயே தோட்டத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இறக்குவதும் அவர்களை உணர்ச்சிமயப் படுத்தலும், புரட்சிகர வேலைகளில் ஈடுபட வைப்பதுமாகவே இருந்தார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை.

கூட்டு ஒப்பந்தம் முடிந்த ஒருவார காலத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போகின்றோம். அல்லது வேறு வகையான போராட்டங்களை முன்னெடுக்கப் போகின்றோம் என கூக்குரல் இடுவதுடன் அந்தக் காரியம் முடிந்ததாகவே இருக்கிறது. இருக்கும் ஒரேயொரு வழி கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதே சிறந்த வழியாகும். எதிரணிகள் எல்லாம எதற்கும் எடுபடாமல் இருக்கின்ற போது அந்த எடுபடாத கூட்டத்தில் இருக்கின்ற ஒருவராக இருப்பதை விட பேரம்பேசி சம்பளத்தை பெறுகின்ற கூட்டத்தோடு இணைந்து எனது ஆலோசனைகளையும் வழங்கக் கூடியதாக இருக்கிறது.

கேள்வி: தொடர்ந்தும் மாகாண சபை உறுப்பினராகவே செயற்படப் போகியர்களா? எதிர்காலத்தில் உங்களுடைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புக்கள் எவ்வாறானதாக அமையும்?

பதில்: மலையக அரசியல் வரலாற்றில் எனக்கென ஒரு இடம் இருக்கிறது. இ.தொ.காவில் நான் இணைந்தது எந்தவித சுயநலத்தின் அடிப்படையில் அல்ல என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். மக்களின் நலன்களின் அடிப்படையில்தான் இ.தொ.காவில் இணைந்துள்ளேன். நான் வந்த அரசியல் பாதை மிகக் கரடுமுரடானது. போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.
பல்வேறு பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன். மக்களை நேரடியாக அணி திரட்டியிருக்கிறேன். இவ்வாறான பல்வேறு வேலைத் திட்டங்களின் அடிப்படையில் தான் அரசியல் நிலைக்கு உயர்த்தப்பட்டேன். சிலர் அரசியல் கட்சிகளின் செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். நான் கட்சிகளுக்கு செல்வாக்கை உயர்த்தி அதன் மூலம் வந்தேன் என்பதுதான் உண்மை.

இதை இ.தொ.காவின் உயர்மட்ட தலைமைகள் நன்கு உணர்ந்திருக்கின்றன. என்னை இ.தொ.கா விருப்பத்தோடு உள்வாங்கி யிருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கட்சியின் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எனக்கு எவ்வாறான பொறுப்புக்களை வழங்குவது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதும் எனக்குத் தெரியும். அவர்களுக்கு அவகாசத்தை வழங்கி அவர் வழங்கும் பொறுப்புக்களை ஏற்று செயற்படுவேன். மலையகத்திலே சிதறிக் கிடக்கின்ற பல்வேறு அமைப்புக்குள் கட்டுண்டு கிடக்கின்ற மக்களுக்கு ஏன் அவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி அவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்பதே எனது எதிர்காலத் திட்டமாகும்.

கேள்வி: உங்களின் வரவால் இ.தொ.காவில் நீண்டகாலமாக இருப்போரின் மனநிலைகளில் ஏதேனும் மாற்றங்கள் .....?

பதில்: அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் நட்பு ரீதியாகப் பழகுகிறார்கள்.
அந்த அமைப்புக்குள் வந்து சேர்ந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றிருக்கிறார்கள். என்னுடைய இ.தொ.கா பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள், மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட அங்கத்தவர்கள் வரை அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்,அதேநேரத்தில் கட்சியில் இருக்கின்ற எவருக்குமே நான் போட்டியாக திகழப் போவதில்லை. எனது திறமையை அக்கட்சிக்கு வழங்கி அதன் மூலமாக வளர்வேனே தவிர இ.தொ.கா உறுப்பினர்களின் இடத்தைப் பிடித்து வளர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

இ.தொ.காவில் இருக்கின்ற எனது நண்பர்கள் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் என்னை எவ்வளவு சந்தோஷமாக ஏற்றுக் கொண் டிருக்கிறார்களோ அவர்களுக்கு விசுவாசமாக நடந்து அக்கட்சியை கட்டிக்காப்பதுதான் எனது பிரதான நோக்கம்.

கேள்வி: இ.தொ.காவில் இணைந்ததன் மூலம் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

பதில்: இ.தொ.காவில் இணையப் போகும்போது பல்வேறு பயமுறுத்தல்கள் எனக்கு வந்தன. அங்கிருக்கின்ற தலைமைத்துவம் உள்வாங்கி விட்டு பின்னர் கிடப்பிலே போடுவார்கள். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அமைச்சர் முத்து சிவலிங்கம், உயர்மட்ட உறுப்பினர்களான செந்தில் தொண்டமான், சென்னன் போன்றோருடன் பேசிய போது சுமுகமாக, சந்தோஷமாக ஜனநாயக ரீதியிலே யதார்த்தத்துடன் பேசக்கூடிய வாய்ப்பு எனக்கிருந்தது.

இ.தொ.காவிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இ.தொ.காவின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆதங்கமாக இருந்தது. அந்த ஆதங்கத்தை நான் நன்கு புரிந்து கொண்டிருக்கிறேன்.


தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்
நேர் கண்டவர் : பி. வீரசிங்கம்

Friday, August 27, 2010

சம்பள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்கு


தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்க அங்கத்தவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதால் இதற்கெதிராக உயர் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள மீளாய்வுத் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம், பெருந் தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகிய தொழிற் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற்று அதன் பின்பு கூட்டொப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தக் கூட்டொப்பந்தமானது தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்குச் சாதகமாக மேற்கொள்ளப்படுவதால் தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுகின்றது.

கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தமது அங்கத்தவர்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற இந்த கூட்டொப்பந்தமானது ஏனைய தொழிற் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கி விடுவதால் கூட்டொப்பந்தத்தில் உடன்படாத தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் விருப்பமின்றி கூட்டொப்பந்த சம்பளத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் அடிப்படை மனித உரிமை மீறலாக கருதுகின்றோம்.

இதனடிப்படையில் இந்தக் கூட்டொப்;பந்த்திற்கெதிராக உயர் நீதி மன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆராய்ந்து வருவதாக சதாசிவம் குறிப்பிட்டார்

மேல் கொத்மலை நீர் மின் பணி


நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை நகருக்கு அருகில் அமைக்கப்பட்டு வருகின்ற மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளாகின்றன.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்தத்திட்டத்தின் தலவாக்கலை நீர் அணையிலிருந்து சுரங்கப்பாதை ஊடாக பூண்டுலோயா நியாங்கந்துர மின் உற்பத்தி நிலையத்துக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

13 கிலோ மீற்றர் தூரமுள்ள சுரங்கப் பாதையின் நிர்மாணப்பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. மேல் கொத்மலைத் திட்டத்தின் மூலம் 150 மெகாவோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

மேல் கொத்மலைத் திட்டத்தினை முன்னிட்டு தலவாக்கலை பிரதேசத்தில் புதிய குடியிருப்புக்கள், கட்டிடங்கள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பணிகள் அடுத்த வருடம் பூர்த்தியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மலையகத்தில் புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும்

மலையகத்தில் புதிய தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருப்பதாகப் இ.தொ.கா தெரிவிக்கின்றது.

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொருளாதார பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தும் பொழுது பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் பெற்றுக்கொள்ளப்படுமென அரசாங்கத்துடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது தமக்கு உறுதியளிக்கப்பட்டதாக அவர் கூறினார்


உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் முறை மாற்றத்தின்படி விகிதாசார முறைமை மாற்றப்பட்டுத் தொகுதி வாரி முறையுடன் விகிதாசார முறையூம் கலந்த ஒரு முறைமையில் சிறுபான்மையினர் பாதிக்கப்படாதிருக்க வேண்டுமென்று இ.தொ.கா அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மலையக மக்கள் பரந்துபட்டு வாழ்கிறார்கள் எனவே விகிதாசார முறையில் அவர்களடைந்த நன்மைகள், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பன பாதித்துவிடக் கூடாது.

மலையக மக்கள் பரந்து வாழும் சூழலுக்கு ஏற்ப புதிய தொகுதி உருவாக்கப்பட வேண்டுமென்றும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருப்பதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். புதிய தொகுதிகள் உருவாக்கப்படவேண்டிய பிரதேசங்களை அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையால் மலையகப் பெருந்தோட்டப் புறங்களுக்குப் பாதகமான நிலை கிடையாது என்றார்.

ஒவ்வொரு தோட்டத்திலும் மக்கள் செறிந்து வாழ்வதால் அதற்கு ஏற்றவாறு தொகுதிகளை ஏற்படுத்துவதன் மூலம் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் தொகுதிகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Friday, August 6, 2010

இலங்கையில் தேயிலையின் வருவாய் அதிகரிப்பு


இலங்கையின் மிக முக்கிய வருமான வழியான தேயிலை ஏற்றுமதியில் இலங்கை தற்போது சிறப்பானதொரு வருவாயை ஈட்டியுள்ளதாக அங்கு இந்த வாரம் வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

தேயிலை உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சென்ற வருடம் சரிவை எதிர்கொண்டிருந்த இலங்கை இந்த ஆண்டு பெரு விளைச்சலையும், சிறப்பான ஏற்றுமதி வருவாயையும் ஈட்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிலோன் டீ உள்நாட்டிலேயே அதிகம் பாவிக்கப்படுவதோடு உலகெங்கும் ஏற்றுமதி ஆகிறது.

சிறிய நாடாக இருந்தாலும் உலகின் முன்னணி தேயிலை உற்பத்தியாளராக இலங்கை பலகாலமாக விளங்கி வருகிறது. இலங்கையில் இந்த வருடத்தின் முதல் பாதியில் நடந்துள்ள தேயிலை ஏற்றுமதி புள்ளி விபரங்களைப் பார்க்கையில் இந்த வருடம் இலங்கைக்கு முன்பில்லாத அளவில் இந்த வருடம் தேயிலை ஏற்றுமமதியால் கிடைக்கும் என்று தெரிவதாக இலங்கை தேயிலை வாரியம் கூறுகிறது.

சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் தேயிலை ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம் 25 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. சென்ற வருடம் வறட்சி காரணமாகவும் உலக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் தேயிலையின் ஏற்றுமதியும் சந்தை விலையும் சரிந்திருந்தது.

தொழிலாளர்களுக்கு நன்மையில்லை

தேயிலைத் தொழிலாளர்கள்இதேவேளை இலங்கையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சமூக மற்றும் வாழ்க்கைத் தரம் நீண்ட காலமாகவே மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றது.
தேயிலை உற்பத்தி அதிகரிப்பும் ஏற்றுமதியால் கிடைக்கும் வருமான அதிகரிப்பும் எந்த வீதத்திலும் பொருளாதார ரீதியிலோ சமூக ரீதியிலோ தொழிலாளர்களை சென்றடைவதில்லையென சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தேயிலை ஏற்றுமதியும் அதற்கான விலை நிர்ணயமும் இடைத் தரகு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுவதால் அதன் பலாபலன்கள் தொழிலாளர்களுக்கு சென்றடைவதற்கான வழிமுறைகள் அங்கு இல்லையென சமூக ஆர்வலர் பெ.முத்துலிங்கம் கூறுகின்றார்.

இலங்கையில் தேயிலை உற்பத்தியும் ஏற்றுமதியும் தற்போது ஏற்றம் கண்டுள்ள அதேநேரம் இந்தியாவில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது.இந்தியாவின் முக்கிய தேயிலை உற்பத்திப் பிரதேசமான அஸ்ஸாமில் பூச்சி தாக்கம் ஏற்பட்டு தேயிலை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போதிய உற்பத்தி இல்லாததால் சர்வதேச சந்தையில் தேயிலை விலை உயர்ந்து போனது இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

- பி.பி.சி

Tuesday, August 3, 2010

சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய மாகாணம் நுவரெலியா, லபுக்கலை, நானுஓயா, வட்டவளை போன்ற பல்வேறு பகுதிகளில் பெய்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் மழையினால் நுவரெலியா மாவட்டத்தில் கடுங்குளிரோடு கூடிய காலநிலை தொடர்வதால் சிறுவர்களும் முதியோர்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மேற்படி இப் பகுதிகளில் மேக மூட்டம் காணப்படுவதால் வாகனங்களைச் செலுத்துவதில் சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Monday, August 2, 2010

மாணவர் இடைவிலகல் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி பணிப்பு



தோட்டப் பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் முழுமையாக கற்காமல் இடைவிலகிச் செல்வது தொடர்பாக உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பொன்றின் போதே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களை தெளிவுபடுத்துமாறும் அதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கினார்.

நாட்டில் வாழுகின்ற அனைவருக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எந்த இனமாகவும் இருக்கலாம், எந்த மதமாகவும் இருக்கலாம், அனைத்து மக்களும் சகல வசதிகளுடனும் சந்தோசமாக வாழ வழிவகைகளை நாம் செய்து கொடுக்க வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளினதும் கல்விக்கு மிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதுடன் கல்வியையும் சுகாதாரத்துறையையும் மேம்படுத்துவது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.

தோட்டப்புற பாடசாலைகளில் கல்வியை தொடராமல் இடைநடுவில் பாடசாலையை விட்டு மாணவர்கள் அதிகளவில் விலகிச் செல்கின்றனர். இதற்கான காரணத்தை கண்டறியவும், ஆய்வினை மேற்கொள்ளவும் வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் தோட்டப்புற மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசணை நடத்தினார்.

யுனெஸ்கோ பட்டியலில் மலைநாடு


இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியை உலக கலாசார, பாரம்பரியம் மிக்க பிரதேசங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது. குறுகிய நிலபரப்புகளில் உள்ளக எல்லை வரையறைகளை கொண்டுள்ள போதிலும் பூகோள ரீதியிலும் காலநிலை இயல்புகளிலும் பல்வேறு வேறுபாட்டம்சங்களைக் கொண்டதொரு தீவாக இலங்கை விளங்குகின்றது.

சிவனொளிபாத மலை மற்றும் நக்கள்ஸ் மலைத்தொடர் போன்ற முக்கிய மலைகளை உள்ளடக்கியுள்ள மத்திய மலைநாட்டுப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீற்றர்கள் உயரத்தில் அமைந்துள்ளது

வேகமாக அழிவடைந்த உயிரினமாக கருதப்பட்ட ஸ்லென்டர் லோரிஸ் என்ற அரிய வகை தேவாங்கினம், ஊதா நிற முகத்தோற்றத்தைக் கொண்ட குரங்கினம், இலங்கைச் சிறுத்தைப்புலி மற்றும் அரிதான பறவையினங்கள், தாவர இனங்கள் போன்ற பல வகையான உயிரினங்களுக்கும் வாழ்விடமாக விளங்குவதால் மத்திய மலைநாட்டுப் பகுதி, உயிரினப் பல்வகைத் தன்மைக்கு உகந்த இடமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்கு கரையோரத்தை ஒட்டி அமைந்துள்ள வில்பத்து தேசிய சரணாலயத்தை விட இந்தப்பிரதேசம் மிக முக்கியமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக இலங்கையில் நிலவிய சிவில் யுத்தம் காரணமாக வில்பத்து சரணாலயப் பிரதேசத்தின் உயிரின முக்கியத்துவம் குறித்து அக்கறை செலுத்தப்படாது இருந்துவந்துள்ளது.

புதிய வீதிகளை உருவாக்குதல், மற்றும் கடற்படை தளங்களை அமைப்பதற்காக இந்தப்பிரதேசத்தின் அனேகமான பசுமைக்காடுகளும் ஈரலிப்பு மிக்க சதுப்பு நிலங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அண்மைய சுற்றுச்சூழல் ஆய்வுகள் கூறுகின்றன.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய மலைநாட்டின் உலக பாரம்பரிய சிறப்பு வலயப்பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கான கட்டுமாண நடவடிக்கைகள் சட்டவிரோதமாக நடைபெறுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற போதிலும் அந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுக்கின்றது.

இந்தியாவில் ஜந்தர் மாந்தர்

இதுதவிர அமெரிக்கா, டன்ஸானியா, சவுதி அரேபியா மற்றும் ஒஸ்ட்ரேலியா போன்ற நாடுகளிலுள்ள சில முக்கிய தலங்களையும் உலக கலாசார மற்றும் பாரம்பரிய சிறப்பம்சங்கள் கொண்ட பிரதேசங்களாக அறிவித்துள்ள யுனேஸ்கோ, இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தர்வானவியல் சாஸ்திர ஆய்வு மையத்தையும் இந்த பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இரண்டாம் ஜய்சிங் ஜய்ப்பூர் மகாராஜாவால் இந்தப்பிரதேசம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Wednesday, July 28, 2010

தோண்டியெடுக்கப்பட்ட சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

கடந்த 12ம் திகதி வைத்தியசாலையில் தூக்கில்தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட வேலணை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவக்கச்சேரி, ஊhகாவற்துறை யாழ்ப்பாணம், ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் இச் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இப் பெண்ணின் மரணத்திற்கு இதே வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவரே காரணம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லயன் தொகுதி இடிந்து விழுந்ததில் 14 குடும்பங்கள் வெளியேற்றம்


நுவரெலியா, நானுஒயா, டெஸ்போட் தோட்டத்தில் நான்கு லயன் வீட்டுத்தொகுதிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் ஒரு லயன் வீட்டுத்தொகுதியில் உள்ள 14 வீடுகள் முற்றாக சேதமாகியுள்ளதோடு இவ் வீடுகளில் உள்ள அனைவரும் உடனடியாக அகற்றப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நுவரெலியா பிரதேச அனர்த்த நிவாரண முகாமைத்துவத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுடன் உரையாடினர். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இடம்பெற இருப்பதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

நன்றி- தமிழ் மிரர்

Tuesday, July 27, 2010

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது சவாலான விடயம் - ஸ்ரீகுமார்


இலங்கையில் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது பெரும் சவாலாகவே இருக்கின்றது என்று இலங்கைப் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஆலோசகர் எஸ்.ஸ்ரீகுமார் பெருந்தோட்டத் தொழிற்துறையின் இன்றைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நுவரெலியாவிலுள்ள பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிலையக்கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு பேசிய போது தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் பெருந்தோட்டத்துறையானது சம்மேளனங்களின் தலையீடற்ற துறை, தொழிற்சங்கங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கின்ற துறை, கூட்டுப்பேரம் பேசுதலின் அடிப்படையிலான உடன்படிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் துறையாகும்.

1998 ஆம் ஆண்டு முதல் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்படுகின்ற கூட்டு உடன்படிக்கையின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கும் முறை அமுல் படுத்தப்படுகின்றது.

இந்த உடன்படிக்கையின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயமும் ஏனைய சலுகைகள் தொடர்பான விடயங்களும் உறுதி செய்யப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான சம்பளம் 405 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடிப்படைச் சம்பளமாக 285 ரூபாவும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளாக நிபந்தனைக்கு உட்பட்டதாக 30 ரூபாவும் 90 ரூபாவும் வழங்கப்படுகின்றது.

மேலும் தோட்டத்தொழிலாளியின் மாதாந்த வருமானத்திற்கு மேலதிகமாக மாதாந்தம் 1500 ரூபா சலுகையை அனுபவிக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதும் அவர்களை வறுமை நிலையிலிருந்து மீட்பதும் பெரும் சவாலாகவே உள்ளது. எனினும் இலங்கையின் பெருந்தோட்டத்துறையைப் பாதுகாப்பது அனைத்துத்தரப்பினரதும் கடப்பாடாகும் என்றார்

Monday, July 26, 2010

பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் அருகில் அமைந்துள்ள மதுபான நிலையங்கள் அகற்றப்படும் - ஆறுமுகன் தொண்டமான்


மலையகத்தில் வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பில் தமக்கு இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான விடுத்த கோரிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் அகற்றும் நடவடிக்கையை அமைச்சர் முன்னெடுப்பாரானால் அதை வரவேற்பதுடன் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில் 32 வீதம் இலங்கையின் வறுமை நிலையியில் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தை வகிப்பது போலவே மதுபாவனையிலும் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தை வகிக்கிறது. இந்த இரண்டு விடயத்திற்கும் நேரடி சம்பந்தம் இருக்கிறது.

வணக்கஸ்தலங்களுக்கும், பாடசாலைகளுக்கும் அருகாமையில் மதுச்சாலைகளும், மது விற்பனை நிலையங்களும் அமைக்கப்படக்கூடாது என சட்டம் கூறுகின்றது. ஆனால் இச்சட்டம் நுவரெலியா மாட்டத்திலே மீறப்பட்டுள்ளது.

பெருந்தொகையான மதுபான விற்பனை நிலையங்கள், மதுபானசாலைகள் மலையகத்தின் தொழிற்சங்கவாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஊக்குவிக்கப்படுகின்றன என்ற பொதுவான குற்றச்சாட்டும் இருக்கின்றன. உழைக்கும் தொழிலாளியின் உடல் நலத்தையும், உழைப்பையும் இந்த மதுபானம் மலையகத்தில் அட்டையாய் உறிஞ்சுகின்றது.

இதேபோல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, ஆகிய ஏனைய மாவட்டங்களிலும் அதீத மதுபாவனை ஒழிக்கப்படுவதற்கு இது வழிகாட்டும் என்றார்

Sunday, July 25, 2010

பெருந்தோட்ட கல்வி நிலை

பெருந்தோட்டப் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் பெற்றோர்களின் பங்களிப்பும் என்ற ஆய்வு அறிக்கையை மலையகக் கல்வித்துறை சார்ந்தவர்கள் முன்னிலையில் முன்வைத்து அங்கீகாரம் பெறுவதற்கான செயலமர்வு ஹட்டன் சீடா வள நிலையத்தில் இடம் பெற்றது.

மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தச் செயலமர்வுக்கு மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் அனுஷியா சிவராஜா அமைச்சின் செயலாளர் ஷிராணி வீரக்கோன், அமெரிக்காவிலுள்ள டுலேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமரசிங்க, மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சின் ஆலோசகர் எல்கடுவ, ஆய்வு அறிக்கை சமர்ப்பித்த அமெரிக்க டுலேன் பல்கலைக்கழக மாணவர் மைக்கல் போல் மற்றும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பிரிவின் கல்வி அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட கல்வித்துறை சார்ந்த பலரும்கலந்து கொண்டனர். இந்த ஆய்வு மூலம்

மலையகத் தமிழ் மாணவர்களின் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாதது.

பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையிலான இடைநிலைப்பிரிவில் ஏற்படுகின்ற மாணவர் இடைவிலகலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

பெருந்தோட்டப்பகுதி மாணவர்களிடத்தில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான பரிகார திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஆகிய முக்கிய முடிவுகள் வெளிக்கொணரப்பட்டன.

இந்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு செயற்திட்டமொன்றினைத் தயாரித்து அதனை முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தும் வகையில் அரசாங்கம், மலையக அரசியல் தலைமைகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புக்கள் என்பனவற்றின் பங்களிப்பினைக் கோருவதற்கும் ஆலோசிக்கப்பட்டது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பெயர் மாறியுள்ளதே தவிர அபிவிருத்திப் பணிகள் அப்படியே தொடர்கின்றன- இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளரும், ஊடகப் பேச்சாளரும், எஸ். ஜெகதீஸ்வரன் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த நேர்காணல்.

நேர்கண்டவர்

பி. வீரசிங்கம்


கேள்வி: பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த அரசாங்கத்தில் மலையகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் அமைச்சர்களாக வும் பிரதியமைச்சர்களாகவும் இருந்தி ருக்கிறார்கள். புதிய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்புக்கென தனியொரு அமைச்சு இல்லாததுடன் ஒரு அமைச்சர், பிரதியமைச்சர் என்ற நிலையில் அந்த மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு உட்பட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது, மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றிய நீண்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இ. தொ.கா.வின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் என்ற வகையில் உங்களது கருத்தென்ன


மலையகத்தில் கல்வி: சிலுவை வேண்டாம், சிறகு கொடுங்கள்!

சிக்கல்களும் சவால்களும் நிறைந்த பருவமே இளமைப் பருவமாகும். இந்த இளமைப்பருவம் நெருக்கீடுகளுக்கும் உளக் கொந்தளிப்புகளுக்கும் பாத்திரமானது. தமது வாழ்வில் அடையாளத்தை வெளிப்படுத்த உதவுவது. சிறகு கிடைத்தால் பறப்பது மட்டுமல்ல, சிலுவை கிடைத்தால் சுமப்பதுதான் வாழ்க்கை என்பதை தெளிவு படுத்துவதும் இளமைப் பருவம்தான்.

தமது வாழ்வில் அடையாளத்தை காணக்கூடிய இளையவர்கள் சுதந்திரமும் பொறுப்பும் மிக்கவர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டியவர்கள் என்பது மாத்திரமின்றி தமது வாழ்வின் இலக்கை அடைய பல தெரிவுகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் என்ப தையும் எடுத்துக் கூறும் இந்த இளமைப் பருவத்தில் அவர்களை சரியான வழியில் இட்டு செல்ல வேண்டியதும், அவர்கள் காணும் சமுதாயத்தை படைப்பதற்கு ஊக்குவிப்பதன் மூலம் வாழ்வை அர்த்தமாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களிடம் மாத்திரமல்லாது வாண்மை விருத்தி கொண்ட கல்வியூட்டும் ஆசிரியர்களிடமும் காணப்பட வேண்டிய முக்கிய பங்காகும்.

இந்த அடிப்படை விடயத்தில் தவறு இழைக்கப்படுமேயானால் பின்தங்கிய கல்விக் கூட்டமான மலையக மாணவர்களின் கல்வியை விருத்தி செய்வதென்பது கனவுகளின் கற்பனையாக மாறிவிடும். ஒரு செடி வளர்வதற்கு என்னென்ன தேவையோ அதைப் போன்று மனிதன் பண்பாட்டையும், நாகரிகத்தையும் மேலான அறிவையும் பெறுவதற்கு கல்வி அவசியமென குறிப்பிடுகின்றார் ரூசோ. ஆகவே கல்வியும், அறிவு விருத்தியும் ஒரு மனிதனின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதும் அதற்கு தொட்டிலாகவும் துணையாகவும் பாடசாலைகளே விளக்குகின்றது என்பதனை நாம் எளிதில் மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு மனிதனும் தான் தன்னில் வளர்வதற்கும் முதிர்ச்சி பெறுவதற்கும் பல துறைகளில் சாதனை படைப்பதற்கும் பொதுவில் அனைத்து அம்சங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது கல்வியும் அந்த கல்வியை கற்றுத்தரும் பாடசாலையுமே என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

ஆனால் எந்த இளைமையைப் பற்றி பேசுகின்றோமோ அந்த இளமையின் வேராகவும் விழுதாகவும் விளங்கும் பாடசாலை பலவீனமான அம்சங்களை அடையாளப்படுத்துவதும் பெறுமதி மிக்க வாழ்வியலை வேறு திசைக்கு இட்டுச் செல்வதும் வாழ்வாங்கு வாழக் கூடிய சூழலிலிருந்து உண்மைத் தன்மைக்கு உரம் போடாமல் வெறுமனே வருமானம் சேர்க்கும் தொழிலாக கற்றுவித்தலை கடைபிடித்துக் கொள்ளுவதும் கவலைக்குரிய விடயமாகும். அப்புத்தளை பண்டாரவளை கல்வி வலயத்தில் பாடசாலைகளில் இடம் பெற்ற சில கசப்பான அனுபவத் திரட்டல்களேயாகும்.

மலையக சமுகத்தின் மேல் நோக்கிய அசைவியக்கத்திற்கு உந்து சந்தியாக விளங்குவது கல்வியே என்பதனையும் உலகில் பின்தங்கிய சமூகம் கல்வியினூடாகவே தமது சமூக பொருளாதார அரசியல் அபிவிருத்தியை முன்னேற்றிக் கொண்டார்கள் என்பதும் உணரப்பட்ட உண்மையாகும். லெனின் கூறுவது போல் போராடப் படியுங்கள் போராட்டத்தோடு படியுங்கள் என்ற கூற்று அடிமைச் சிலுவையில் அறையப்பட்டிருந்த இளமைக் கிறிஸ்துக்கள் வாழும் மலையகத்திலிருந்து நீக்கிவிட முடியாத ஒரு நிஜக் கூற்றாகும்.

அப்படியொரு சூழ்நிலையில் இளமை இரத்தம் ஓடும் இளசுகளான உயர் வகுப்பு மாணவர் களிடையே தூவப்படுகின்ற தீய எண்ணங்கள் அவர்களை ஒரு விதமான தன்னிணைப்புத் தன்மைக்கு தள்ளிவிடும் என்பதோடு நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற சவாலுக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர்கள் தனித்துவமான வர்கள். புனிதமானவர்கள், ஆளுமை மிக்கவர்கள்; தனக்கு வருத்தமோ, தோல்வியோ வருமென நினைக்காமல் உணர்ச்சிகளால் உந்தப்படுபவர்கள். அதனால் தோல்வியோ, துன்பமோ, புண்படுத்தலோ எவற்றையும் எதிர் பார்க்காமல் பிறருடைய பாராட்டை பெறவும் தட்டிக் கொடுத்தலை அடைய தன்னிணைப்பை (ஐனநவெகைiஉயவழைn) கையாளக் கூடியவர்கள் இவர்களிடம் காணப்படும் நம்பிக்கை மலையைக் கூட பெயர்க்க அடிகோலும், அப்படிப் பட்ட மாணவர்களை பிழையான திசைக்கு இட்டுச் செல்லுகின்ற சில துரதிஷ்டமான சம்பவங்கள் பெருங் கவலையைத் தருகின்றன.

அண்மையில் ஒரு பாடசாலையில் எவரும் எதிர்பாராத விதத்தில் ஆரம்பமான மாணவப் போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்ததோடு குறித்த அந்த பாடசாலைக்கு இருந்து வந்த கௌரவத்திற்கும் கறைபடியச் செய்திருக்கின்றது. இவர்களது மனத்திடத்தின் முயற்சிக்கு அடிகோலியவர்கள் யார், ஒரு நொந்து போயுள்ள சூழ்நிலையை தோற்றுவித்தவர்கள் யார்? எனக் கவனமாக ஆராய வேண்டியது மலையகக் கல்வியின் மீது அக்கறை கொண்டவர்களின அங்கலாய்ப்புமிக்க கடமையாகும்.

மாணவர்களின் போராட்டம் மந்திரி காதையும் எட்டியது போல் அவசரமாகக் கூட்டப்பட்ட அந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள், நகர வாசிகள் என பலரும் கலந்து கொண்டமையும் அங்கு தொடுக்கப் பட்ட கேள்விகணைகள் கவலைப்படுத்தும் காரணிகளாக அமைந்தமையும் வேதனைக்குரிய விடயங்களாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்கள் சூழ்ந்து கொண்டு மாகாண அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைகள் அவர்களிடம் ஒரு அசட்டு தைரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம். உணர்ச்சி வசப்பட்டு தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திய பெற்றோர்கள் வரிசையில் பெண்களே அதிகமாக இருந்ததையும், தீர்வு கேட்போர் அல்லது திரும்பவும் வந்து ரோட்டில் அமர்வோம் என்ற முடிவு எட்டிய நிலையில் அங்கு பேசப்பட்ட பெட்டிசன் விடயம் ஒரு மனிதாபிமானமற்ற நிலையை அடையாளப்படுத்தியது எனலாம். சில ஆசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களது குடும்பத்தாரையும், தனிப்பட்ட தகவல்களையும் அச்சாக்கி வெளியிட்டு அசிங்கப்படுத்தியவர்கள் பழைய மாணவர்கள் என்ற முத்திரையை குத்தி மாணவ ஒழுக்கத்திற்கு தீங்கு செய்திருக்கிறார்கள். நிச்சயம் இதை தயாரித்த பெருமை மாணவர்கள் அல்லாதவரையே சாரும். அதேபோன்று மத்திய கல்லூரி மாணவர்களினது கண்ணீர்த் துயரங்கள் என தயாரிக்கப் பட்டிருந்த பெட்டிகள் அறிக்கை ஊழலின் ஒப்பனைச் சான்றிதழாகவும் அமைந்திருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த விளப்பமுள்ள அறிக்கைகள் பல முக்கியஸ்தர்களுக்கு முகவரியிடப்பட்டு அனுப்பி வைக்கப் பட்டதாகும். போதாக்குறைக்கு வகுப்பு வாசல்களில் ஒட்டப்பட்டதும் காட்சிப் படுத்தப்பட்டதும் கவலைக்குரிய விடயமாகும். இதனை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. தவறுகள் செய்வது மனித இயல்பு. அதை பக்குவமாக தட்டிக் கேட்க வேண்டியது நல்ல குண இயல்பு. எனவே இனி மேலாவது இத்தகைய குற்றப் பத்திரிகைகள் எழுதப்படுவதற்கும் விமர்சிக்கப்படுவதற்கும் அனுமதிக்கக் கூடாது. என்பதை அனைத்து தரப்பினரும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

அரபு நாடுகளில் நடைமுறையி லுள்ள பழமொழியான

“நாம் ஒவ்வொருவரும் ஒரு நேர்மையாளரை உருவாக்க முடியும். அந்த நேர்மையாளர், நான்” என்பதை நினைவிற்கொண்டு விவேகம், சீராக்கம், செயற்பாடுகள் மிக்க மாணவ சமூகத்தை உருவாக்க அனைத்து ஆசிரிய சமூகமும் இதய சுத்தியோடு முன் வருதல் வேண்டும். நினைவுகளை நினைத்தல் எவ்வளவு அவசியமோ மறுத்தலும் மனிதனுக்கு முக்கியமானது.

ஆகவே நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை யின் தேசிய கல்வி முறையில் பெரும் பின்னடைவைக் கொண்டுள்ள மலையக சமூகம் காலத்தை வெல்வதற்கு ஆசிரியர்கள் உதவினால் தான் அசாத்தியங்கள் மறைந்து அசைவியக்கம் உருப்படியாகும்.

கந்தையா வேலாயுதம்...-


புசல்லாவையில் அதிகரித்துவரும் தற்கொலைகள் : யார் காரணம்


மலையகத்தில் பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் யார் என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது. இவ்வாறான தற்கொலை சம்பவங்களுக்குப் பாடசாலைகள் தான் காரணம் என்று ஒரு சாரார் கூறிக்கொண்டு உண்மை நிலைமைகளை மறைக்கும் சூழலும் நிலவுகிறது.

பாடசாலை மாணவிகள் அல்லது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது.

குறிப்பாக புசல்லாவை பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதக் காலத்துக்குள் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளில் ஒருவர் தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டும் மேலும் இருவர் கழுத்தில் தூக்கிட்டும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை இதே பிரதேசத்தைச் சேர்ந்த மேலுமொரு மாணவி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் பாடசாலைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தான் காரணமென்று சில தரப்புக்கள் நியாயம் கூறி, சமூகத்தின் பார்வையைத் திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்ற குற்றஞ்சாட்டும் நிலவுகின்றது.

Saturday, July 24, 2010

195 புதிய கிராம சேவகர் பிரிவுகள் மலையகத்திற்கு அவசியம்

பொது நிர்வாக அமைச்சுக்கு சமர்ப்பிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள ஆலோசனை அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டவை



புதிய கிராம சேவகர் பிரிவுகளை அமைத்தல், மற்றும் பிரதேச செயலகங்கள் தொடர்பாக யோசனைகளை முன் வைக்குமாறு பொதுநிர்வாக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மலையகத்தில் 195 புதிய கிராம சேவைப் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும் என்று மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் பொது நிர்வாக அமைச்சுக்கு சமர்ப்பிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட அறி;க்கை சம்பந்தமாக நடத்தப்பட்ட கலந்துரையாடப்பட்டது. பி.பி. தேவராஜ் அவர்களின் தலைமையில் வர்த்தகரும் மொறிசியஸ் நாட்டுக்கான கௌரவ தூதுவருமான தெ. ஈஸ்வரன், மற்றும் எக்ஸ் பிரஸ் நியூஸ் பேப்பர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் ஆகிய மூவர் கொண்ட இக் குழு அறிக்கையை தயாரித்தது

பி.பி. தேவராஜ் குழுவினர் மலையகத்துக்கு வெளிக்கள விஜயங்களை மேற்கொண்டு கிராமசேவையாளர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தியும், புள்ளி விபரவியல் திணைக்களம், மாவட்ட செயலகங்கள், உள்ளிட்ட பல அமைப்புக்களிடமும் தரவுகளை பெற்று அறிக்கையை தயாரித்துள்ளனர்.

இந்த அறிக்கை தொடர்பாக ஆராயும் நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றிய இலங்கை திறந்த பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளர் யசோதா கதிர்காமத்தம்பி இந்த அறிக்கை பல தரப்பினரின் ஆதரவுடனே தயாரிக்கப்பட்டது. முக்கியமாக பிரதேச செயலக பிரிவுகள், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள், தற்போது காணப்படும் கிராமசேவை பிரிவுகள் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டோம்.

அதனடிப்படையில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, கேகாலை, களுத்துறை, மற்றும் கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளை கருத்திற் கொண்டோம். ஆதன்படி பதுளை மாவட்டத்தில் புதிதாக 34 கிராம சேவைப்பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 94 புதிய கிராமசேவை பிரிவுகளும் (நுவரெலியா மாவட்டத்தில் தற்போது 487 கிராம சேவை பிரிவுகள் உள்ளன) கண்டி மாவட்டத்திற்கு 11 புதிய பிரிவுகளும்( கண்டி மாவட்டத்தில் தற்போது 1188 பிரிவுகள் உள்ளன) மாத்தளை மாவட்டத்திற்கு 15 புதிய பிரிவுகளும்,( மாத்தளை மாவட்டத்தில் 550 பிரிவுகள் உள்ளன) கேகாலை மாவட்டத்திற்கு 15 புதிய பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு 15 புதிய பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்திற்கு 9 புதிய பிரிவுகளும் தேவையாகும். கொழும்பில் மட்டக்குளி பதியை மட்டுமே ஆராய்ந்தபோது 20,000 பேருக்கு ஒரு கிராம சேவை பிரிவு உள்ளது என்றார்

பி.பி. தேவராஜ் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் மலையகத்தில் புதிதாக கிராம சேவையாளர் பிரிவுகளை அமைப்பது தொடர்பான யோசனை குறித்து ஆராயும் நோக்கில் பல தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து கலந்தரையாடக் கிடைத்தமை நாம் பெற்ற பாரிய வெற்றியாகும்.

இங்கு கூடியுள்ள அரசியல் கட்சிகள், சிpவல் சமூக அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் புத்திஜீவிகளும் வேறுபாடான கருத்துக்களை முன் வைத்தாலும் அனைவரினதும் நோக்கங்கள்ள் ஒன்றானதாகவே அமைந்துள்ளன. அதாவது இறுதியில் நாங்கள் பயணிக்க வேண்டிய இடம் ஒன்றாகவே உள்ளது.

மலையக மக்கள் நன்றாக வாழ வேண்டும். அவர்களுக்கு வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற பொதுவான நோக்கங்களே மலையகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கின்றன. முக்கியமாக இங்கு வித்தியாசமான கருத்துக்கள் மற்றும் வேறுபாடான அபிப்பிராயங்கள் இருந்தாலும் அனைவரும் ஒன்று கூடியுள்ளமை விசேட அம்சமாகும். வேறுபாடான கருத்துக்களை பல்வேறு தரப்பினர் ஒன்று கூடுமிடத்து எம்மால் உடனடியாக சிறந்த முடிவை எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒற்றுமையின் ஆரம்ப கட்டமாகவும் முதற்படியாகவும் எம்மால் எடுத்துக் கொள்ள முடியும். நாம் இந்த விடயங்களை கவனமாக ஆராய வேண்டும். கண்ணும் கருத்துமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சில இடங்களில் தமிழ் பேசும் கிராம சேவையாளர்கள் இல்லை. சில இடங்களில் 20,000 பேருக்கு ஒரு கிராம சேவகர் கடமையாற்றுகின்றார். கிராம சேவகரை காணாத மக்களும் உள்ளனர். எனவே நாம் இவை தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

இதேவேளை புதிதாக அமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் மக்கள் சபைகள் தொடர்பில் மலையக சமூகத்தினரும் அரசியல் கட்சிகளும் விழிப்புடன் இருப்பதாக தெரியவில்லை. இது தொடர்பில் நாம் அவசரமாக விழிப்படைய வேண்டிய நேரம் வந்துள்ளது.

மேற்படி அறிக்கை தொடர்பில் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய பல்கலைகழக விரிவுரையாளர் விஜயசந்திரன் இந்த முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். 2010 அம் ஆண்டில் நாம் இருக்கிறோம். எனவே அதற்கேற்ற வகையில் அறிக்கைக்கு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும். அடுத்து புதிதாக கிராமசேiயாளர் பிரிவுகளை பிரேரிக்கும் போது மக்களின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும். அப்போது எதிர்காலத்தில் மக்கள் சபைகளில் மக்களின் பிரதிநிதிகள் அதிகரிக்க முடியும் என்றார்.

திறந்த பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரபோஸ் இவ்வாறான ஆலோசனை அறிக்கைகளை தயாரிக்கும் போது தமிழ் மக்கள் என்று குறிப்பிடுவதைவிட தோட்ட மக்கள் என்ற பதத்தை முன் வைக்கின்றேன் என்றார்.

இ.தொ.கா தலைவர் முத்துசிவலிங்கம் நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருததிற்கொண்டே நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எம்மால் முடியுமானவரை கோரிக்கைகளை முன்வைக்கலாம். அதேநேரம் அவற்றின் சாத்திய தன்மைகளை ஆராய வேண்டும் என்றார்.

Thursday, July 22, 2010

தேர்தல் சீர்த்திருத்தங்களின் பாதிப்பிலிருந்து தமிழ்ப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கு மலையக தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடுமா?

உத்தேச தேர்தல் முறையிலிருந்து தமிழ் அரசியல் பிரதேசத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முனைப்புகளில் மலையகத் தமிழ்க் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஒன்றுபட்டு இது தொடர்பில் இணக்கப்பாடு ஒன்று காணப்பட வேண்டும் என்ற நோக்கில் மலையகத் தமிழ்க் கட்சிகள் செயற்பட முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம். அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைமை அடிப்படையில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்குப் புதிய நிர்வாக அலகுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒருமித்த வலியுறுத்தல் தற்போது கட்சிகளுக்கிடையில் மேலோங்கியுள்ளது.

அந்த வகையில் பதுளை மாவட்டத்தில் மேலதிகமாக 5 பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் எனப் பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மலையக மக்கள் முன்னணியால் இந்தக் கோரிக்கை பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருவதாகக் கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளரும் ஊவா மாகாணசபை உறுப்பினருமான ஏ.அரவிந்குமார் தெரிவித்துள்ளார். புதிதாக உருவாக்கப்படுகின்ற பிரதேச செயலகப் பிரிவுகள்,தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் கோரிக்கையின்படி பதுளை மாவட்டத்தில் உள்ள பசறை பிரதேசத்தில் மடுல்சீமை மற்றும் லுணுகலையை உள்ளடக்கியதாக ஒரு பிரதேச செயலகப் பிரிவும் நமுனுகலையில் உள்ள தமிழ்த் தோட்டப்பகுதிகளை ஒன்றிணைப்பதன் ஊடாகவும் ஹாலிஎல பிரதேச செயலகப்பிரிவை இரண்டாகப் பிரிப்பதன் ஊடாக இரண்டு பிரதேசசபைகளும் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், பண்டாரவளைக்கு அருகில் உள்ள பூனாகலை, கொஸ்லாந்தை போன்ற பகுதிகள் தனிப்பிரதேச செயலகப் பிரிவுகளாக மாற்றப்பட வேண்டும். அவற்றுடன் அப்புத்தளைப் பிரதேச செயலகப் பிரிவையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதற்கான சாத்தியப்பாடுகள் எவ்வாறு அமைகின்றன என அவரிடம் வினவப்பட்டபோது, பாரிய நிலப்பரப்பில் அதிகளவிலான மக்கள் அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற நிலையில், புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படுவதில் சிக்கல் இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் க.வேலாயுதம்,மடுல்சீமை,
லுணுகலையை உள்ளடக்கிய தனிப் பிரதேச செயலகப் பிரிவொன்று உருவாக்கப்பட
விருப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், பண்டாரவளை மற்றும் அப்புத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளிலும் புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்படுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுவதுடன், ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவு இரண்டாகப் பிரிக்கும் அளவுக்கு விசாலத் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் நமுனுகலை குறித்து எதுவும் கூற முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அரசாங்கம் புதிய தேர்தல் முறைமை ஒன்றை அமுல்படுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பதுளை மாத்திரமின்றி மலையகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராமசேவையாளர் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அத்தியாவசியமான விடயம் என வேலாயுதம் சுட்டிக் காட்டியுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகப் பாரியளவில் பாதிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, புதிய நிர்வாக எல்லைகள் உருவாக்கப்பட வேண்டியதே தற்போதைய முக்கியமான தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்த ஊவா மாகாணசபை உறுப்பினர் ஏ.அரவிந்குமார், தற்போது அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறைமை மாற்றம் என்பன குறித்துப் பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டு வருகின்றன. எனினும் அடிப்படையில் பொதுமக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அவர்களுக்கான நிர்வாக எல்லைகளை அதிகரிப்பது குறித்து உயர்மட்டங்கள் சிந்திக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனை விடுத்து மேல் மட்டங்களில் கலந்துரையாடப்பட்டு ஒரு அரசியல் யாப்பினையோ அல்லது புதிய தேர்தல் முறைமையினையோ திடீரென அமுல்படுத்தும் பட்சத்தில் அது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது பொதுமக்கள் தயாராகாத நிலையில் அல்லது ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தாது புதிய தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவதனால் பல்வேறு சிக்கல்கள் தோன்றக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. புதிய முறை ஒன்றின் கீழ் தேர்தல் நடத்தப்படும்போது அதனால் எந்தத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலான சூழ்நிலையை முன்னதாக உருவாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உத்தேச தேர்தல் முறைமை அடிப்படையில் பாதக விளைவுகள் ஏற்படாத வகையில் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வை அல்லது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நிலைக்கு மலையக அரசியல் கட்சிகள் வந்துள்ளன. இதன்பொருட்டு நாளை 22 ஆம் திகதி மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், முன்னதாக மலையக எல்லை நிர்வாகக் கட்டமைப்பில் புதிய நிர்வாக அலகுகளை ஏற்படுத்தும் பொருட்டு சிரேஷ்ட அரசியல்வாதி பி.பி.தேவராஜ் தலைமையில் குழுவொன்று செயல்பட்டு வந்தது.

இந்தக் குழு தற்போது தமது முழுமையான அறிக்கையைத் தயார் செய்துள்ளதாக பி.பி.தேவராஜ் தெரிவித்துள்ளார். எனவே, இந்த அறிக்கை மலையகக் கட்சிகள் சந்திக்கும்போது முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பி.பி.தேவராஜின் தலைமையிலான இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வு மற்றும் மீள் எல்லை நிர்ணயிப்பு யோசனைகளில் முக்கிய சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற 5 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மேலதிகமாக மேலும் 12 பிரதேச செயலகப் பிரிவுகளை உருவாக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அங்கு புதிய நிர்வாக எல்லைகள் உருவாக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் தேர்தல் முறைமையினால் பாதிப்பு எவையும் ஏற்படாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஊவா மாகாணசபை உறுப்பினர் அரவிந்குமார் முன்வைத்த பதுளை மாவட்டத்தில் 5 மேலதிக பிரதேசசபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் கருத்துரைத்த பி.பி.தேவராஜ், அதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கூறினார். எனினும், இதற்கான சான்றுகள் மற்றும் சாத்தியப்பாடுகளுடன் எதிர்வரும் மலையகக் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போது யோசனை முன்வைக்கப்படும்போது அது தொடர்பில் மீளாய்வு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரமுகரும் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்,இந்தச் சந்திப்பின் பின்னர் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்திருப்பதாகத் தெரிவித்தார். பதுளை மாவட்டத்தையும் நுவரெலியா மாவட்டத்தையும் ஒன்றிணைத்து புதிய தமிழ் மாகாணமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாக அமைந்துள்ளது. இது தொடர்பில் நாளை 22 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சிகளின் சந்திப்பின்போது எடுத்துரைத்து கலந்தாலோசிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ஆலோசனை செய்யப்பட்டு இந்த விடயங்களும் உள்ளடக்கப்பட்ட அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இந்த யோசனையை மலையக மக்கள் முன்னணி முதல் முறையாக 1994 ஆம் ஆண்டு முன்வைத்ததாக மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் அ. லோரன்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த காலங்களில் பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் அரசியல் திருத்த யோசனைகள் கோரப்பட்டபோது மலையக மக்கள் முன்னணி இந்தக் கோரிக்கையையும் முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு புதிய மாகாணமாக மாற்றப்படும் பட்சத்தில் அது இந்திய வம்சாவளி மக்களுக்கான தனி மாகாணமாக இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது உள்ள மாகாண, பிரதேச மற்றும் கிராமசேவகப் பிரிவு கட்டமைப்பின் அடிப்படையில் மலையக மக்கள் தமது அவசர தேவைகளுக்கும் தங்களுக்குரிய பிரதேச செயலாளரைச் சந்திப்பதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியதாக இருப்பதாக ஏ.லோரன்ஸ் தெரிவித்தார். அவர் வழங்கிய தகவல்படி இலங்கையிலுள்ள சுமார் 300 இற்கும் அதிகமான பிரதேச செயலகப் பிரிவுகளில் 40 சதவீதமானவை 50 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டவைகளாகவே காணப்படுகின்றன.

எனினும் நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கு சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தற்போதுள்ள ஒரு பிரதேச செயலகப் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எனவே, அங்கு சராசரியாக இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச செயலகப்பிரிவு காணப்படுகின்றது. எனினும் கிழக்கு மாகாணத்தின் வாகரை பிரதேச செயலகப்பிரிவைப் பொறுத்தவரையில் அங்கு 8,000 மக்களே காணப்படுகின்றனர் என ஊவா மாகாணசபை உறுப்பினர் ஏ.அரவிந்குமார் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், வாகரைப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கிடையில் பகிரப்படுகின்ற வளங்களுக்கும் மலையகத்திலுள்ள பிரதேசசபை ஒன்றின் ஊடாகப் பகிரப்படுகின்ற வளத்துக்குமிடையில் பாரிய அளவு ரீதியான வேறுபாடுகள் அவதானிக்கப்படுகின்றன. இந்த நிலையில், கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளின் அபிவிருத்திகளை மலையகத்தில் எந்த அளவில் எதிர்பார்க்கலாம் என்பது கேள்விக்குறியாகிறது. இவ்வாறானதொரு நிலையில் மலையகத்தின் நிர்வாக எல்லைகள் புதிதாக வரையறுக்கப்படுவதும் புதிய எல்லைகள் உருவாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது.
எவ்வாறாயினும் இதற்கான சாத்தியப்பாடுகள் எந்தளவில் உள்ளன என்பது குறித்து ஆராயப்பட வேண்டிய மிக முக்கிய தேவையொன்று காணப்படுகிறது. இது தொடர்பில் கருத்துரைத்த மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் அ.லோரன்ஸ்,கடந்த காலங்களில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு எண்ணிக்கையிலா பிரதேச செயலகப் பிரிவு அதிகரிப்புகளைக் கோரி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அது அரசாங்கத்தினால் பெரிதாகப் பரிசீலிக்கப்படவில்லை. குறிப்பாக மலையக மக்கள் முன்னணியினால் கடந்த காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 14 பிரதேசசபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எனினும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டுமெனக் கோருகின்ற அதேவேளை, எவ்வாறாயினும் இதற்கான சாத்தியப்பாடுகள் எந்தளவில் உள்ளன என்பது குறித்து ஆராயப்பட வேண்டிய மிக முக்கிய தேவையொன்று காணப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். நுவரெலிய மாவட்டச் செயலாளர் டீ.பி.ஜே.குமாரசிறி அங்கு 10 பிரதேச செயலகப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையீனம் அல்லது ஒரே பொது இணக்கப்பாடின்றி இது தொடர்பில் வலியுறுத்தப்பட்டபோது அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என லோரன்ஸ் தெரிவித்துள்ளார். எனினும். தற்போது அனைத்து மலையகக் கட்சிகளும் ஒன்றுகூடி இது தொடர்பில் ஒரு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் பட்சத்தில் இந்தக் கோரிக்கை சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டே பி.பி.தேவராஜ் தலைமையிலான குழு புதிய நிர்வாக எல்லை வரையறைகளை மேற்கொண்டது. இவற்றுடன் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் லோரன்ஸ் வழங்கிய மற்றுமொரு தகவல் மேலும் இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதாகும்.

பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்களை இணைத்து அல்லது பிரித்து மேலும் இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மலையகத்தில் காணப்படுகின்ற பல தோட்டப்பகுதிகளில் உள்ளூராட்சி நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்படுவதில்லை. இதன் காரணமாக தோட்டப்பகுதிகள் தனியான பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்படுவதன் ஊடாக அவர்களையும் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கிக்கொள்ளலாம். அவ்வாறு செய்தால் மாத்திரமே சிறுபான்மைத் தமிழ்ச் சமூகத்தைத் தேசிய அரசியல் நிர்வாக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்துசிவலிங்கம், இது தொடர்பில் உறுதியாக இல்லாதபட்சத்தில் மலையகத்தின் அரசியல் பிரவேசம் முற்றாக அழியும் அபாயமிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து வலியுறுத்தி வருவதாகவும் தற்போது அதனைச் சாத்தியப்படுத்த வேண்டிய தேவையிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் தேசிய முன்னணியைப் பொறுத்தவரையில் அது நிலத்தொடர்பில்லாத இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பாக புவியியல் சாத்தியமற்ற மாகாண அல்லது மாவட்டக் கொள்கைகளை முன்வைக்கவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தமது முன்னணி அரசாங்கம் ஏற்கனவே முன்மொழிந்துள்ள இருமொழிக்கொள்கை என்ற அடிப்படையில் மொழி ரீதியான மற்றும் உப பிரதேச செயலகங்களை உருவாக்குவதைத் தாம் முன்மொழிவாகச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து அவரிடம் கேட்டபோது; சோல்பரி யாப்பிற்கமைய 50 ஆயிரம் பேர் கொண்ட சிறுபான்மை மக்கள் குழுவொன்றுக்குப் பிரதேச செயலகப் பிரிவொன்றை உருவாக்கும் அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார். இதனடிப்படையிலேயே பி.பி.தேவராஜின் அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் வெறும் கோரிக்கைகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் சாத்தியப்பாடுகளுடன் கூடிய உசிதமான நடவடிக்கையை எடுப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் எதிர்வரும் கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணி,ஜனநாயக மக்கள் முன்னணி,இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற கட்சிகள் கலந்து பேசவுள்ளன. இதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அருள்சாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இவ்வாறு மலையகத்தில் தமிழ்ப் பிரதேசங்களை வேறுபடுத்தி புதிய மாகாணங்கள் அல்லது மாவட்டங்களை ஏற்படுத்துவது என்பது இன ரீதியான பிரிவினையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும் பலர் மத்தியில் நிலவுகிறது. அல்லது அவ்வாறு உருவாக்கப்படுகின்ற தமிழ்ப் பிரதேசங்கள் எதிர்காலத்தில் மேலும் புறக்கணிக்கப்பட்டுவிடுமோ என்ற கருத்தும் மேலோங்குகிறது. எனினும் இந்த நடவடிக்கைகள் அதிகாரப் பகிர்வினை அடிப்படையாகக் கொண்டமைவதால் புறக்கணிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால், அங்கு இனப்பிரிவினை ஏற்படலாம் என்ற கருத்து எஞ்சி நிற்கிறது. இது தொடர்பில் முன்னதாக கருத்துத் தெரிவித்திருந்த பி.பி.தேவராஜ், அதற்கான சூழ்நிலைகளும் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் எனத் தெரிவித்திருந்தார். அதாவது தனியான தமிழ்த் தோட்டப்பகுதிகளை மாத்திரம் இதணத்து ஒரு கிராமசேவகப் பிரிவாகவோ அல்லது பிரதேச செயலகமாகவோ மாற்றாமல் அனைத்து இனங்களையும் கலந்து ஆனால், தமிழ்ப் பெரும்பான்மை,சிங்களப் பெரும்பான்மை ஆகிய உள்ளடக்கங்களுடன் கிராம சேவகர் பிரிவுகள் உருவாக்கப்படும்போது இந்தச் சிக்கல் கலையப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது மாவட்ட மற்றும் மாகாண அலகுகளில் எவ்வாறு சாத்தியப்படும் என்பது குறித்து தெளிவற்று இருக்கிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான ஒருவர், நடைமுறைச்சாத்திய ரீதியாக அல்லது யதார்த்த ரீதியாகச் சிந்திக்கும் போது இது சாத்தியப்படுவதற்கான வாய்ப்பில்லையெனக் கூறியிருந்தார். மாவட்டங்கள் அல்லது மாகாணங்கள் தனித்தமிழர்களுக்காக உருவாக்க முற்படும்போது அதற்கு அரசாங்கம் எந்தளவில் ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டார். அத்துடன், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை இணைக்கும்போது சிங்கள மக்கள் அதிகம் வாழ்கின்ற பிரதேசங்களை எங்கு சேர்ப்பது அல்லது எவ்வாறு ஒதுக்குவது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில், எவ்வாறான ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்பது தெளிவற்ற நிலையில் உள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல சிங்களவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது சிங்களப் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கின்ற வகையிலான எந்த யோசனையையும் அரசாங்கம் தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளாது.

இவ்வாறு தனியான மாகாணங்கள் அல்லது மாவட்டங்கள் பிரிக்கப்படும் பட்சத்தில் அது சிங்கள அரசியல் பிரவேசத்துக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் என்ற கோணத்திலேயே பார்க்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. எனவே, யோசனை சமர்ப்பின்போது தமிழர்களுக்கு நன்மையான அதேவேளை, பெரும்பான்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தாத வகையில் முன்வைக்கப்பட வேண்டிய ஒரு கட்டாயம் காணப்படுகிறது.
நன்றி- தினக்குரல்