Saturday, December 5, 2015

இரண்டு மாடி குடியிருப்பில் வெடிப்பு

கடும் மழை காரணமாக, லிந்துலை திஸ்பனை தோட்டத்தின் குடியிருப்புப் பகுதியிலுள்ள பாரிய மண்மேடுகள், லயன் குடியிருப்புக்கள் மீது  சரிந்து விழுந்துள்ளதாகவும் அதனை அப்புறப்படுத்துவதற்கு எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை என்றும் குடியிருப்பிலுள்ள மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாடி வீடமைப்புத் திட்டம், 2004ஆம் ஆண்டின் போது, லிந்துலை திஸ்பனை தோட்டத்திலுள்ள சுமார் 197 பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
 
இவ்வாறு அமைக்கப்பட்ட மாடி வீட்டு லயன்கள் அனைத்தும், மண்மேடுகள் உள்ள பிரதேசத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி பெய்த மழையின் போது, 07 வீடுகளைக் கொண்ட இரண்டு லயன் தொகுதி மேல் மண்மேடு விழுந்து, குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன. 
 
மேலும், அதே பகுதியில், 14 வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, அவை உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளன.  இதேவேளை, கடந்த 05ஆம் திகதி பெய்த கடும் மழையினால்,   இக்குடியிருப்புக்கள் மீது பாரிய மண்மேடுகள் விழுந்ததில், 05 லயன் தொகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் 84 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
மண்மேடுகள், குடியிருப்புகளின் சமையல் அறைகளிலும் விழுந்துள்ளதனால், மக்கள் தங்களது அன்றாட சமையல் நடவடிக்கைகளில் கூட ஈடுபட முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
 
இது தொடர்பாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் நுவரெலியா மாவட்டப் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் இப்பகுதி கிராம அதிகாரிக்கும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக வந்து பார்வையிட்ட பின்னர், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்ட போதும், அனைத்தும் பொய்யாகிவிட்டதென மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இனியாவது தங்களது குடியிருப்புக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் மக்கள் கோரி நிற்கின்றனர்.
மலையகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்தும் மக்களுக்கு தெளிவுறுத்தும் வகையில்  பொகவந்தலாவ கெம்பியன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.

மலையகத்தில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தக்கூடாது  எனவும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு கோறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் கோஷம் வெளியிட்டனர்.

இதேவேளை மக்களிடம் வாக்குகளை  பெற்று பாராளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகள் பாரளுமன்றத்திற்கு சென்று மௌனம் காக்காமல் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான கடுமையான சட்டதிட்டங்களை  அமுல்படுத்துமாறு பாராளுமன்றத்தில் அழுத்தத்தை தெரிவிக்கபட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் மேலும் தெறிவித்தனர்.

இந்த தெளிவூட்டும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம்   பொகவந்தலாவ கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில் இருந்து கெம்பியன் நகர்வரை பாதாகைகளை  ஏந்தி பேரணியாக சென்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில்  சிறுவர்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள் குறித்து சிறுவர்களை தெளிவூட்டும் செயலமர்வு ஒன்று பொகவந்தலாவ பொலிஸாரால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.