Sunday, May 5, 2013

இ.தொ.கா.வுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நுவரெலியா மாநகரசபையில் தோல்வி


   
தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்த தொழிற்சங்கமான இ.தொ.கா.விற்கு நன்றி தெரிவித்து நுவரெலியா மாநகரசபையின் மாதாந்த கூட்டத்தில் ஆளும் ஐக்கிய முன்னணி சார்பில் நுவரெலியா மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் எம் சந்திரன் சமர்பித்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

இந்த தீர்மானத்தை எதிர்த்து மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஆர்.ராஜராம், எதிர்கட்சியான ஐ.தே.க.வை சேர்ந்த உறுப்பினர்களான எல்.நேருஜி, கே. சந்திரசேகரன். சந்தன லால் கருணாரட்ன, ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி உறுப்பினர் ஆர்.கேதீஸ் ஆகியோர் வாக்களித்தனர். அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு போதாதென்று தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றியதோடு இத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென வாக்கெடுப்பிற்கு விட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.
கூட்டத்தை தலைமை தாங்கிய மாநகர முதல்வர் டி.ஜி.மஹிந்தகுமார இத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டார். தீர்மானத்திற்கு எதிராக 5 வாக்குகளும், ஆதரவாக 1 வாக்கும், 4 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் நடுநிலை வகித்தனர்.
இந்த வாக்கெடுப்பின் போது மாநகர முதல்வர் டி.ஜி.மஹிந்தகுமார, பிரதி முதல்வர் திஸ்ஸ செனவிரட்ன, மாநகரசபை உறுப்பினர் குமாரதேசபிரிய தீர்மானத்தை வழிமொழிந்த உறுப்பினர் எம்.பஸில் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.