Tuesday, July 11, 2017

பெருந்தோட்டங்கள் தனியாருக்கு விற்பனை: “கடுமையாக எதிர்ப்போம்

இலாபமீட்டும் அரச பெருந்தோட்டங்களை, தனியாருக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக, கடுயைமான எதிர்ப்பை நாம் வெளியிடுவோம்” என்று, இலங்கை பெருந்தோட்டச் சேவா சங்கத்தின் தலைவர் சத்துர சமரசிங்க (லங்கா வத்து சேவா சங்கம்) தெரிவித்தார்.
இலங்கை பெருந்தோட்டச் சேவா சங்கத்தின் புதியத் தலைவராகத் தெரிவான சத்துர சமரசிங்க, மல்வத்து மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை, ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே, இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் கூறிய அவர், இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திக் கூட்டுத் தாபனம்,(ஜனவசம) மற்றும் எல்கடுவ பிளான்டேசன் முதலான பெருந்தோட்டங்கள் பலவற்றை, தனியாருக்கு வழங்க, அரச பொருளாதார முகாமைத்துவ குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது ஆரோக்கியமான நிலையல்ல. எனவே, இதனை தடுத்து நிறுத்துவதற்காக, பல மட்டங்களிலும் எதிர்ப்பை வெளியிடவுள்ளோம்.
“97 வருடங்கள் பழைமையான எமது சங்கம், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. எனவே, எமது அமைப்பானது தொழிற் திணைக்களத்தைவிடவும் பழைமையானது. எமது சங்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டதால், எமது அங்கத்தவர்களது நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு தீர்மானங்களை எடுக்கும் கடப்பாடு எமக்கு உள்ளது.
“பெருந்தோட்டங்களில், தொழிலாளர் நலன் கருத்திற்கொள்ளப்படுவதில்லை. ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக, சரியான கணக்குப் பதிவுகள் இடம்பெறுவதில்லை. இதன் காரணமாக, சேவையிலிருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்கள், வெற்றுக் கையுடன் தமது இறுதிக் காலத்துக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டு வருகின்றது. எனவே, தொழிலாளர் நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது” என்றார்.
நன்றி- தமிழ் மிரர்

நிலுவைச் சம்பளத்தை வழங்கவேண்டுமென்ற ‘ஏற்பாடோ, தேவைப்பாடோ இல்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக, முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், கூட்டொப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படல் வேண்டும் என்றோ, நிலுவைச் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்ற ஏற்பாடுகளோ, தேவைப்பாடுகளோ இல்லையென, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.   
ஆகையால், கூட்டொப்பந்தத்துக்கு எதிராக, மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை தள்ளுபடி செய்யும்படியும் கோரியுள்ளது. 

கூட்டொப்பந்தத்தை இரத்துச் செய்யக்கோரி மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான தனது ஆட்சேபனையிலேயே இ.தொ.கா. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.   
உயர்நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ள, சத்திய கடிதாசியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) அதன் உறுப்பினர்களின் தொழில் தொடர்பான நியதிகள் மற்றும் நிபந்தனைகளை முன்னேற்றுவதை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே, 2016ஆம் ஆண்டு 35ஆம் இலக்க சம்பளக் கூட்டொப்பந்தத்தை இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்து கொண்டது. கூட்டொப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படல்
வேண்டும் என்றோ மற்றும் நிலுவை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றோ ஏற்பாடுகளோ அல்லது தேவைப்பாடுகளோ இல்லை.  
அத்துடன், இதுவரை செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் ஊ.சே.நிதி (E.P.F.) ஊ.ந.நிதி (E.T.F.) சட்டத்துக்கு, உட்பட்ட சம்பாத்தியத்தில் (Earning) இணைக்கப்படவில்லை என்பதால், 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திலும் மேலதிக கொடுப்பனவுகளுக்கு ஊ.சே.நிதி (E.P.F.) ஊ.ந.நிதி (E.T.F.) உட்படாது. இவற்றுடன் ஏனைய காரணங்களையும் குறிப்பிட்டு மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை தள்ளுபடி செய்யும்படி கோரியுள்ளது.  

எனினும், மக்கள் தொழிலாளர் சங்கம் தனது மனுவில் நிலுவைச் சம்பளம் என்பது, தொழிலாளர்கள் தொடர்ந்து பெற்று வந்துள்ளமையால், அது தொழிலாளர்கள் ஏற்கெனவே அனுபவித்த உரிமை என்றும், அத்தோடு, சம்பளக் கூட்டொப்பந்தங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்று வந்த நிலையில் அதுவும் ஏற்கெனவே அனுபவித்து வந்த உரிமை என்றும் அவைகள் மீறப்பட முடியாதவையெனவும் சுட்டிக்காட்டியிருந்தது.   
அத்தோடு, கொடுப்பனவுகள் உட்பட மொத்த சம்பாத்தியத்துக்கும் (Total earnings) ஊ.சே.நிதி (E.P.F.) ஊ.ந.நிதி (E.T.F.) ஆகியவற்றுக்கான பங்களிப்பு வழங்கப்படாமை அந்நியதிச்சட்டங்களை மீறும் நடவடிக்கை என்றும் கூட்டிக்காட்டிருந்தது. மேலும், 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சம்பள கூட்டொப்பந்தத்தில் 2003ஆம் செய்து கொள்ளப்பட்ட பிரதான/ முதன்மை கூட்டு ஒப்பந்தத்தை மீறி வெளியாள் உற்பத்தி முறை என்ற பெருந்தோட்டத் தொழிற்றுறையை முழுமையான மாற்றும் முறைமையை அறிமுகம் செய்வது பிரதான/ முதன்மை கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த 300 நாட்கள் வேலை உரிமையை இல்லாம் செய்வதாக இருக்கின்றமை, சம்பள சூத்திரம் மிகவும் தெளிவீனமாக இருக்கின்றமை என்ற விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தது. அதனடிப்படையில், 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் சட்ட அந்தஸ்த்து அற்றது என பிரகடனம் செய்து அதனை இரத்துச் செய்யுமாறு மக்கள் தொழிலாளர் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  
கூட்டொப்பந்தம் தொடர்பான குறித்த எழுத்தாணை மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் சி. துரைராஜா முன்னிலையில் 05.07.2017ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தாக்கல் செய்துள்ள இம் மனுவில் அவரே முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.  
முன்னதாக 08.05.2017 இடம்பெற்ற குறித்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் சட்டமா அதிபரை மனு தொடர்பாக இணக்கப்பாட்டை எட்டமுடியுமா என்று பிரதிவாதிகளுடன் கலந்துரையாடி நீதிமன்றத்துக்கு அறிவிக்கும்படியும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத விடத்து எதிராளிகளை ஆட்சேபனைகள் இருப்பின் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டிருந்தது.
அதனடிப்படையில் சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான அரச சட்டத்தரணி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு எதிராளிகள் தயார் இல்லை என்பதையும் எதிராளிகள் ஆட்சேபனைகளை முன்வைக்க இருப்பதாகவும் அறிவித்தார்.   
அந்தவகையில் வழக்கின் எதிராளிகளான இ.தொ.கா., தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி என்ற கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கம்பனிகள் சார்பாக கைச்சாத்திடும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம், மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகள் அனைத்தும் தமது ஆட்சேபனைகளை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்திருந்தன.   
சட்டமா அதிபர், தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் சார்பாக முன்னிலையாகிய அரச சட்டத்தரணி எதிராளிகளிடத்தில் இணக்கப்பாட்டினை எட்டுவதற்கு கடைசி நேரம்வரை முயற்சித்தாகவும், அதனை கருத்திற்கொண்டு ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசத்தை வழங்குமாறு கோரி இருந்தார். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தனது ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் கோரியது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி ஆட்சேபனையை சமர்ப்பிக்காத தரப்புகளை அதனை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டது. கால அவகாசம் கோரப்பட்ட போது இவ்வழக்கு அவசரமாக விசாரித்து முடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் மீண்டும் நினைவூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த மனு, ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 
நன்றி- தமிழ் மிரர்