Thursday, May 24, 2018

மலையகத்தில் பாதிப்புகள்

கடந்த சில நாட்களாக, மலையத்தில் ​நிலவிவரும் சீரற்ற வானிலை, இன்றும் தொடர்ந்த நிலையில், மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தில், இன்றுக் காலை வரை பெய்த கடும் மழையால், 278 குடும்பங்களைச் சேர்ந்த 1,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுள் 820 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டம்
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில், 337 குடும்பங்களைச் சேர்ந்த 1,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பி புஷ்பகுமார தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள், முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்வைக்கப்பட்டுள்ளனர் என்றும் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம், 68 வீடுகள் பகுதியளவிலும் 4 வீடுகளும் முற்றாகவும் சேதடைந்துள்ளன என்றும், இவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும், நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 6,133 குடும்பங்களைச் சேர்ந்த 24,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, இரத்தினபுரி மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
மேற்படி மாவட்டத்தில் எலபாத்த, இரத்தினபுரி, கிரியெல்ல, அயகம, நிவித்திகல, களவான, எஹலியகொடை, குருவிட்ட, காவத்தை, ஓப்பநாயக்க, பெல்மதுளை, பலாங்கொடை, இம்புலபே, கொடக்கவெல ஆகிய 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 189 கிராம சேவர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால், இதுவரை 6 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளனவெனவும் 139 குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் 1,961 குடும்பங்களைச் சேர்ந்த 7,861 பேர் தத்தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும்   493 குடும்பங்களைச் சேர்ந்த 1,951 பேர், 38 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டம்
அத்தோடு, பதுளை மாவட்டத்தில், இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளன என்றும் 63 வீடுகள் தற்போது சேதமடைந்துள்ளன என்றும், பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார் தெரிவித்தார். அத்தோடு, 51 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர், இரண்டு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, பசறை, ஊவா பரணகம, ஹப்புத்தளை ஆகிய இடங்களில், மேலும் 60 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் மழை தொடர்ந்து பெய்யுமாயின், பதுளையில் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, மரங்கள், மின்தூண்கள், கற்பாறைகள் போன்றவை, வீதிகளில் விழுந்துள்ளமையால், மலையகத்தின் பல்வேறு வீதிகளுக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. பாரிய பாதை வெடிப்புக்கள், குடியிருப்பு வெடிப்புகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அத்தோடு, மழையுடன் சேர்ந்து, மலையத்தில் கடுமையான குளிரான வானிலை காணப்படுவதால். தொழிலாளர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாகலை, லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால், மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவொன்று, நேற்று (23) காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெரீக்கிலோயர் தோட்டத்தில், மண்சரிவு அபாயம் காரணமாக, அங்கிருந்த 33 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்த பின்னரே, குறித்த 33 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.
குறித்த தோட்டப் பகுதியில், குடியிருப்பொன்றுக்கு அடிப்பகுதியில் நீர் ஊற்றெடுத்துச் செல்வதாகவும் இது தொடர்பில், தேசிய மண் பரிசோதனை ஆய்வாளர்களால் அப்பகுதி ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Wednesday, May 16, 2018

மருந்தகங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை

பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படுகின்ற 'டிஸ்பென்சரி' எனப்படுகின்ற தோட்ட மருந்தகங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வரும் சுமார் 450 தோட்ட மருந்தகங்களை விருத்தி செய்வதன் ஊடாக தோட்டப்புற மக்களின் சுகாதார நிலைமையினை கட்டியெழுப்புவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், நாட்டின் எனைய பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற சுகாதார சேவையினை போன்று வசதிகளை தோட்டப்புற மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துளளது.
தோட்டப்புற சுகாதார பிரிவினை அரச சுகாதார பிரிவுடன் இணைப்பதற்கும், அதன் கீழ் தற்போது தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்ற தோட்ட சுகாதார நிலையங்களை கட்டம் கட்டமாக அரசாங்கத்துக்கு கையகப்படுத்திக் கொள்வதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Thursday, May 3, 2018

ஓய்வூதிய பணத்தை முறையாக பெற உதவ வேண்டும்

தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை, முறையாக பெற்றுக்கொள்ள முழுமனதுடன் தொழிலாளர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என, இலங்கையின்  மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீறல்களுக்கான, நுவரெலியா மாவட்ட செயலணி படையின் இணை செயலாளர் வி.யோகேஷ்வரன்  நுவரெலியா பொலிஸ் வீதியில் அமைந்துள்ள செயலணிபடை காரியாலயத்தில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயேதெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில், 55 தொடக்கம் 60 வயதை பூர்தியாக்கி, தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தொழில் விலக்கப்பட்ட தொழிலாளர்கள், அவர்கள் சேவைசெய்த காலப்பகுதியில் பிடிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதி (ஈ.பி.எப்) மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி (ஈ.டி.எப்) ஆகியவற்றைப் பெற்றுகொள்வதில், பல்வேறு சிறமங்களை அனுபவித்து வருகின்றனர்.
“இந்த நிலையில், தோட்டத்தில் தொழில் புரியும் வயதெல்லயை அடைந்த உடன், தொழில் நீக்கம் செய்ய, சட்ட ரீதியாக தோட்ட நிர்வாகங்களுக்கு முடியும் என்றால், தோட்ட நிர்வாகங்களின் நடவடிக்கைகளுடன் ஏன் தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை முறையாக பெற்றுக்கொள்ள தொழிலாளர்களுக்கு உதவ முடியாது” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்தும், “இந்த பிரச்சினை  நமது நாட்டிலுள்ள அனைத்து பெருந்தோட்டப் பகுதிகளிலும் காணப்படுவதுடன், நுவரெலியா மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
“இது தொடர்பாக, நுவரெலியா பிரதேச தோட்டப்பகுதிகள் பலவற்றில் இருந்து, எமது செயலணி படைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில், தோட்ட நிர்வாகங்களை ஆராய்ந்த பொழுது, தொழிலாளர்கள் ஓய்வூதிய பணத்தை தொழில் திணைக்களத்துடன், மத்திய வங்கியில் பெற்றுக்கொள்ள, உரிய ஆவணங்களை வழங்க, தோட்ட நிர்வாகங்கள் முறையாக செயற்படுவதில்லை என்பது, ஆரம்பக்கட்டத்தில் தெரியவந்தது.
“இதன் பின், தோட்ட நிர்வாகங்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் இயங்குவதால், தோட்ட காரியாலயங்களில் ஓய்வூதியம் தொடர்பில் செயலாற்ற உத்தியோகஸ்தர்களும், அதற்கான தனி பிரிவு ஒன்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
“இதை விட தொழில் திணைக்களத்திற்குச் சென்று, தொழிலாளி ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் விண்ணப்ப படிவத்தைப் பெற்று, பின் அதனை முறையாக நிரப்புவதற்கு, தோட்ட காரியாலயத்துக்குச் சென்றால், ‘இன்று போய் நாளை வா’ என்ற விநாயகர் வேதம் ஓதப்படுகின்றது.
“இவ்வாறாக அழைக்களிக்கப்படும் தொழிலாளர்கள், கடைசி காலத்தில் தம் உழைப்பால் சேமித்த பணத்தை, அனுபவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
“இந்நிலையில், தொழிலாளிகளான தனி மனிதர்களின் அடிப்படை மற்றும் மனித உரிமை மீறலில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுப்படுகின்றமை தெளிவாகியுள்ளது. இது தொடர்பாக தோட்ட அதிகாரிகளிடம் மனித உரிமைகள் மீறல் செயலணி படை செயலாளர் என்ற ரீதியில் கேட்டபொழுது, நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவிக்கின்ற போதிலும், நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்றங்கள் எதுவும் காணவில்லை.
“எனவே, கொழும்பிலுள்ள தலைமை தொழில் திணைக்களத்தின், நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பான, தொழில் ஆணையாளரிடம் நேரடியாகச் சென்று, தோட்டநிர்வாகங்களின் செயற்பாட்டை எடுத்துரைக்கப்பட்டது.
“தொழிலாளர்களின் ஓய்வூதிய விடயத்தில், தோட்ட நிர்வாகங்கள் முறையாக செயல்பட, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிராந்திய ரீதியான தொழில் திணைக்களத்துடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த உறுதி மொழி மீறும் பட்சத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பின், எமது செயலணிபடை, இலங்கை மனித உரிமைகள் அமைப்புடன் பாரிய நடவடிக்கை ஒன்றை எடுக்க தயாராகிவருகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தரகர்கள் ஊடாக, கூடுதலான பணத்தை செலவு செய்து, ஓய்வூதிய பணத்தை பெற தொழிலாளர்கள் முயற்சிக்க, தோட்ட நிர்வாகங்கள் இடம்வழங்காது, தொழிலாளர்களுக்கு இந்த விடயத்தில் உதவ முன்வரவேண்டும் எனவும், அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

கிளைபோசெட் பாவனைத் தடை நீக்கம்

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த, கிளைபோசெட் பாவனைத் தடை நீக்கப்பட்டுள்ளதாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்  நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அடுத்த வாரமளவில் அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் ஏனைய விவசாய உற்பத்திகளுக்கான, கிளைபோசெட் பாவனைத் தடை தொடருமெனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

கிளைப்போசைட்டின் செறிவு தேயிலையில் அதிகம்
விவசாயப் பொருட்களில், தேயிலையிலேயே கிளைப்போசைட்டின் செறிவு அதிகளவில் காணப்படுவதாக அமெரிக்காவின் உயர் பல்கலைக்கழகம் ஒன்றின் சமீபத்திய ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின்,சுகாதார தொழில் மற்றும் அறிவியலுக்கான மொரொக்சி கல்லூரியினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளைப்போசைட் களைக்கொல்லியாக உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவின் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வில், தேயிலை,தேயிலை பை,கோப்பி,தேன் ஆகியப் பொருட்களில் கிளைப்போசைட் செறிவு அதிகளவில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.