Thursday, June 25, 2009

களுத்துறை மாவட்டத்தில சுமார் 5000 தோட்ட மக்கள் வாக்களிக்க முடியாத நிலை

களுத்துறை மாவட்ட தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை இல்லாததால் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் சுமார் 5000 தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை யை பெற்றுக் கொள்வதற்கு நுவரெலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சேவையைப் போல் களுத்துறை மாவட்டத்திலும் மேற்கொண்டு அம் மாவட்ட தொழிலாளர்களுக்குப் இவற்றை பெற்றுக் கொடுக்க முன்வருமாறு அம் மக்கள் பதில் நீதியமைச்சர் வி.புத்திரசிகாமணியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இருந்த போதிலும் மாவட்டத்திலிருந்து பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் முகமாக 1,800 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக பெருந்தோட்ட நம்பிக்கை நிதியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்
சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை பிற்போடப்படுவதை அனுமதிக்க முடியாது

ஊவா மாகாணத் தேர்தலை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு பேச்சுவார்த்தைகள் பிற்போடப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி.வி. சென்னன் தெரிவித்தார். மேலும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த் தைகளைப் பிற்போட்டு வருகின்றன. இதனால், தோட்டத் தொழிலாளர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தொழிற்சங்கங்கள் வெற்றுக்காரணங்களைக் கூறிக்கொண்டிருக்காமல், கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தொழிலாளர்களிடம் பண மோசடி செய்யும் கும்பல்

களுத்துறை, இங்கிரிய, ஹொரண, புளத்சிங்கள, இரத்தினபுரி, காவத்தை, இறக்குவானை பகுதியில் தோட்டத் தொழிலாளர்களிடம் அவர்களுக்கு காணி, காணிக்கான உறுதி பெற்றுக்கொடுத்தல், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, வாகனச் சாரதிப் பத்திரம், வேலைவாய்ப்பு என்பவற்றைப் பெற்றுத் தருவதாகக் கூறி அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களிடம் பெருமளவு பணத்தை மோசடி செய்துவருவதாக தெரிவிக்கின்றனர். இதில் தொழிற்சங்கவாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அண்மையில் இறக்குவானை பகுதியில் பிரபல தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மாவட்டப் பிரதிநிதியொருவர் தொழிலாளரிடம் இவ்வாறான கருமங்களை மிக எளிதாகவும் விரைவாகவும் செய்து தருவதாகக் கூறிப் பணத்தை வாங்கி தலை மறைவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆசாமி தோட்டத் தொழிலாளி ஒருவரின் ஊழியர் சேமலாப நிதியை விரைவில் பெற்றுக் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து 20.000 ரூபாவை சன்மானமாகப் பெற்றுள்ளார். இவ்வாறானவர்கள் குறித்து தோட்டப்புற மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.