Saturday, March 10, 2018

தீவிரமும், அதிதீவிரமும் எமது மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிடும்- டக்ளஸ் தேவானந்தா

கேள்வி:- நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஈ.பி.டி.பி யின் வெற்றியை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் :- நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி க்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதையும், வாக்குவங்கி அதிகரித்திருப்பதையும் கருத்திற்கொண்டு அதனை பாரிய வெற்றியாக சக கட்சிகளும் ஏனையவர்களும் கருதினாலும், என்னைப் பொறுத்தவரையில் நாம் முன்னெடுத்த சேவைகளுக்கு எமக்கான வாக்குகள் பல மடங்காக அதிகரி;த்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். 
எனவே நான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். ஏனைய கட்சிகள் மக்களுக்கு எதனையும் இதுவரை செய்யவில்லை. நாமோ எமக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரங்களுக்கேற்ப பல மடங்கு சேவைகளை செய்திருக்கின்றோம். அதை மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள். நாம் முன்னெடுக்கும் சரியான திசைவழி நோக்கி மக்கள் அணிதிரண்டு வருவதற்குத் தயாராகி விட்டார்கள் என்பதை சமகால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அரசியல் ரீதியாக நாம் எதிர்பார்க்கும் பலம் என்பது மக்களுக்கான பலமாகவே அமையும். ஈ.பி.டி.பி யின் வெற்றி மக்களின் வெற்றியாக அமைய வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.

கேள்வி:- வடக்கின் ஓரிரு சபைகளைத் தவிர எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் அந்ததந்த சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகள் ஈ.பிடி.பி உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனவா? அது குறித்து இணக்கப்பாடெதுவும் எட்டப்பட்டதா?

பதில் :- இதுவரை உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. உத்தியோகப்பற்றற்ற வகையான பேச்சு வார்த்தைகளே  தொடர்கின்றன. இந்த நிலையில் முடிவுகளாக எவையும் எடுக்கப்படவில்லை. சக கட்சிகளுக்கு அரசியல் அதிகாரங்களை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பமோ, அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை. சபைகளைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு தேவையான புறச்சூழலை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருப்பதானது ‘ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லையாம்’ என்ற கதையாகவே இருக்கப் போகின்றது. 

கேள்வி :- அதிதீவிரம் பேசும் சக்திகளுக்கான ஆதரவு, நடந்து முடிந்த உள்ளராட்சிசபைத் தேர்தல்களில் வடக்கில், பெருமளவு அதிகரித்திருப்பது எதனை காட்டுகிறது? மீண்டும் இவ்வாறான ஆதரவு வடக்கில் அதிகரித்ததிருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் :- தீவிரமோ, அதிதீவிரமோ எதை பேசினாலும் அது போலித்தனமானதாகும். எந்தத் தரப்பு அவ்வாறு பேசினாலும் அது எமது மக்களை அழிவுக்குள்ளும், அவலங்களுக்குமே தள்ளிவிடுமே தவிர எமது மக்களை பாதுகாப்பதற்காகவோ, அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்திப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு கௌரவமான தீர்வை பெற்றுத்தரவோ உதவாது. இதுவே கடந்த காலத்திலும் நடந்து முடிந்துள்ளது. 

தீவிரமோ அதிதீவிரவாதமோ பேசி உணர்ச்சியூட்டுவது வாக்குகளை அபகரிக்கவே தவிர, மக்களுக்கு சேவை செய்வதற்கல்ல. இந்த பிற்போக்குத்தனத்தை தமிழ் தலைவர்கள் என்று கூறப்படும் சேர்.பொன் இராமநாதன், தொடக்கம் ஜி.ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம், பின்னர் பிரபாகரன் இப்போது சம்பந்தன் வரை. நீங்கள் குறிப்பிட்டது போன்று தீவிரத்தையும், அதிதீவிரத்தையும் பேசி மக்களை உணர்ச்சியூட்டி வாக்குகளை அபகரிக்கவும், அழிவுக்குள் தள்ளிவிடவுமே முனைந்திருக்கிறார்களே தவிர தாம் முன்வைத்த கோரிக்கைகளை அவர்களால் மக்களுக்கு வென்று கொடுக்க முடியவில்லை. அதற்குக் காரணம் தாம் முன்வைத்த கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த தலைவர்களிடத்திலேயே இருக்கவில்லை. அதற்காக அவர்கள் நடைமுறைச் சாத்தியமான தன்மையுடன் உழைக்கவில்லை. அதை வென்றெடுக்கும் பொறிமுறையை ஏற்படுத்த அவர்கள் தயாராகவும் இருக்கவில்லை. இவ்வாறு நான் கூறுவது அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியாலோ, அவர்கள் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதாலோ அல்ல. 15 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்ட வழிமுறையிலும், 30 வருடத்திற்கு மேலான தேசிய அரசியல் நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் வழிமுறையூடாகவும் நான் பெற்றுக்கொண்ட அனுபவத்தில் இருந்தே இந்த விமர்சனங்களை முன்வைக்கிறேன். 

எமது மக்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அது வென்றெடுக்கப்படாமல் இருப்பதற்கு தனியே இலங்கை அரசையோ, இந்திய அரசையோ மட்டும் தவறென்று கூறிவிட முடியாது. தமிழ் தலைமைகள் என்றிருந்தவர்களின் அணுகுமுறை தவறுகளும், சுயலாப அரசியல் போக்குகளும் காரணங்களாக இருந்திருக்கின்றன என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

கேள்வி:- புதிய அமைச்சரவையில் உங்கள் பெயரும் இடம்பெறுவதாக பேச்சுகள் அடிபட்டன. 2015ம் ஆண்டில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் இவ்வாறான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன?

கடந்த காலங்களில் நாம் மத்திய அமைச்சரவையில் பங்கொடுத்து எமது மக்களின் பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியிருக்கின்றேன். யுத்தத்தினால் அழிந்து நொறுங்கி கிடந்த எமது தாயக பிரதேசத்தை மீண்டும் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியிருக்கின்றேன். உட்கட்டமைப்புக்களை கடுமையான முயற்சிகளால் மீள் கட்டமைப்பு செய்திருக்கின்றேன். ஒரு இயல்பான சூழலில் எமது மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நேரகாலம் பாராது கடுமையாக உழைத்திருக்கின்றேன். நான் செய்ததைப் போன்று எந்த தமிழ் அரசியல் தலைமைகளும் மக்கள் சேவைகள் செய்தது கிடையாது. ஆனாலும் இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன என்பதையும் நானறிவேன்.  ஒருவேளை ஆட்சியில் நான் தொடர்ந்து இருந்திருந்தால் மிச்ச பணிகளையும் செய்து முடித்திருப்பேன். வேலை வாய்ப்புக்களுக்காக காத்திருக்கும் எமது இளைஞர் யுவதிகளுக்கு அதைப் பெற்றுக்கொடுக்கவும் உழைத்திருப்பேன். 

யுத்தத்தை நடத்திய அரசுகளுடனும், யுத்தத்தை வெற்றிகொண்ட அரசுகளுடனும் இணக்க அரசியல் நடத்தி என்னால் இவ்வளவு செய்து முடிக்க முடிந்தது. யுத்தத்துக்கு முகம் கொடுக்காத இந்த அரசிடமிருந்து இன்னும் அதிகமான பலாபலன்களை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்க முடியும். துரதிஷ்டவசமாக நான் தொடர்ந்து ஆட்சியில் பங்கெடுக்க முடியவில்லை. இவ்வாறான எனது சேவைகைளை எதிர்பார்த்திருக்கும் மக்கள் நான் அமைச்சரவையில் பங்கெடுக்க வேண்டுமென விரும்புவதாலும், அவ்வாறு எதிர்பார்ப்பதாலும் தென்னிலங்கையில் அரசியல் பரபரப்பு தலைதூக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தி;லும் எனக்கும் அமைச்சுப்பதவி கிடைக்கும் என்ற விருப்பத்தை முன்வைக்கிறார்கள்.. அதவே அடிக்கடி நான் அமைச்சுப்பதவி பெற்றுக்கொள்ள போவதாக செய்திகளாக வெளிவருகின்றன என நினைக்கின்றேன் 

கேள்வி:- உள்ளுராட்சித் தேர்தல்களையடுத்து தெற்கில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலை, வடக்கின் அரசியலிலும் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றதா?

பதில் :- தெற்கில் இனவாத முன்னெடுப்புக்கள் தலைதூக்கி இருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று வடக்கு கிழக்கில் தலைதூக்கிய அதாவது நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட தீவிரவாத மற்றும் அதிதீவிரவாத போக்குகள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கே ஒருமித்து வெளிப்பட்டிருக்கும் தன்மையானது வட இலங்கையில் இரண்டாக பிரிந்து காணப்படுகின்றது.
தெற்காக இருந்தாலும்,வடக்காக இருந்தாலும் இனவாதமோ, தீவிரவாதமோ வாக்குகளை அபகரிக்க உதவலாமே தவிர மக்களுக்கு பயன்தரக்கூடியதாக ஒருபோதும் மாறப்போவதில்லை.

(11-03-2018 அன்று தினகரன் வாரமஞ்சரிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாமனந்தா வழங்கிய செவ்வி) 

தினகரன்-     வாசுகி சிவக்குமார்     

Thursday, March 8, 2018

தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது

கண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதொரு சம்பவமாகவே அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பா.உ இந்த அசம்பாவிதங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கடந்த வருடங்களையும் இந்த வருடத்தின் இதுவரையான காலகட்டத்தையும் ஆராய்ந்து பார்க்கின்றபோது, மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் சில தீய சக்திகளால் திட்மிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் அண்மையில் கூறியிருந்தார்.

கடந்த காலங்களைப் பொறுத்தவரையில் எமது சகோதர மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்; சம்பவங்கள் தொடர்ந்து நடாத்தப்பட்டு வந்துள்ளன. தம்புள்ளையிலிருந்து மாவனல்லை, காலி ஜிந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, குருனாகலை என அது தொடர்ந்து அண்மையில் அம்பாறை, இப்போது திகன என மேலும் தொடரும் நிலைமைகளையே காணக்கூடியதாக இருக்கின்றது.

அம்பாறையில் இடம்பெற்ற சம்பவங்களின் சூடு தணியும் முன்பதாகவே திகன சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்றிருந்த ஒரு சம்பவத்தின் பின்னணியாகவே இந்த  வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன. இச் சம்பவத்தினை ஆராய்கின்றபோது, இது முழுமனே முஸ்லிம் மக்களின் சொத்துக்களை அழிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகவே விளங்குகின்றது.

மேற்படி சம்பவத்தின்போது பொலிஸார் தங்களால் இயன்றளவில் தங்களது கடமைகளை நிறைவேற்றியதாகவே தெரிய வருகின்றது. என்றாலும், பொலிஸாரையும் மீறிய நிலையிலேயே முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு அமுலில் இருந்த போதிலும் நகர்ப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய உட்புற குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

ஒரு தனிப்பட்ட பிரச்சினையானது இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. எனவே, இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் தவிர்ப்பதற்கான காரணிகள் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது.

அதே நேரம், இத்தகைய செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, ஏதாவதொரு சம்பவம் இடம்பெறும் வரையில் பார்த்திருந்து, அல்லது வேண்டுமென்றே ஒரு சம்பவத்தை உருவாக்கி, அதிலிருந்து ஆரம்பித்து இத்தகைய வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக, நான் இந்த சபையிலே ஒரு விடயத்தைக் கூற வேண்டும். அதாவது, தமிழ் - சிங்களப் புத்தாண்டு அண்மிக்கின்ற காலப்பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களில் சிங்கள மக்கள் பொருட்கள் - குறிப்பாக ஆடைகள் வாங்கக்கூடாது என பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது ஒரு வழமையாகி வருகின்றது. இதன் பின்னணியில் ஒரு சில சுயலாப வர்த்தகர்களே இருக்கின்றனர் அன்றி, இதன் பின்னணியில் வேறு ஒன்றும் கிடையாது.

அந்த வகையில்தான் மேற்படி சம்பவங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்த வருட தமிழ் - சிங்களப் புத்தாண்டு அண்மித்து வருகின்ற காலகட்டத்திலேயே மேற்படிச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. அதாவது முஸ்லிம் மக்களது வர்த்தக நிலையங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய காலகட்டத்ததைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் மக்களில் பலரும் அரச தொழில்வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். கடந்தகால யுத்தம் இதற்கொரு காரணமாகலாம். இவ்வாறு அரச தொழில்வாய்ப்புகள் மறுக்கப்படுகின்ற மக்கள் வர்த்தகங்களில் ஈடுபடுகின்றபோது, அதனையும் தாக்கி அழிக்க முற்பட்டால் அந்த மக்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்காக வேறு என்ன செய்வார்கள்? என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே, தங்களது சுயலாபங்களுக்கு இனவாதத்தினை பூசிக் கொண்டு, இந்த நாட்டை பின்தள்ளிச் செல்லாது எல்லோரும் இணைந்து இந்த நாட்டினை முன்னேற்றவே முன்வர வேண்டும்.

எம்மால் எல்லாற்றையும் செய்தும் இந்த இனவாதத்தினை ஒழிக்க முடியாவிட்டால் ஒருபோதும் முன்னேற முடியாது என்பதை நான் இந்தச் சபையிலே வலியுறுத்த விரும்புகின்றேன். எனவே, தயவு செய்து எவராக இருந்தாலும் இனவாதத்தைப் பூசிக் கொண்டு திரியாதீர்கள். மனித நேயத்துடன் வாழ்ந்து பார்க்க முன்வாருங்கள் என அழைப்பு விடுகின்றேன்.

20 ஆண்டுகால பதவியில் இருந்த முதல்வருக்கு சொந்த வீடில்லை

இந்தியாவின் திரிபுரா மாநில முதல்வராக கடந்த 20 ஆண்டுகளாக பதவியில் இருந்த மாணிக் சர்க்கார் தனக்கென சொந்த வீடு இல்லாததால் மனைவியுடன் கட்சி அலுவலகத்தில் தங்கியுள்ளார்.

திரிபுராவில் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியை இழந்தார்.

திரிபுராவில் 25 ஆண்டு காலமாக நீடித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சியை பாரதிய ஜனதாக் கட்சி முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் எளிமையான முதல்வர் என அழைக்கப்பட்ட மாணிக் சர்க்கார் இம்முறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

இவ்வளவு காலம் பதவியில் இருந்தாலும் அவருக்கென சொந்த வீடொன்று இல்லை. தனக்குக் கிடைத்த பணத்தையும் கட்சிக்கு ஒப்படைத்து விட்டார். மனைவியின் வருமானத்தில் தான் அவரது குடும்பம் இருந்தது.

இந்நிலையில், 5 ஆவது முறையாக அரியணையில் ஏறும் வாய்ப்பை இழந்த மாணிக் சர்க்கார் முதல்வருக்கான வீட்டில் இருந்து வெளியேறினார்.

சொந்தமாக வீடு இல்லாததால் அவர் மனைவி பாஞ்சாலியுடன் கட்சி அலுவலகத்தில் தங்கியுள்ளார்.

உறவினர்கள் வீடு இருந்தும் அவர் அங்கு செல்லாமல் கட்சி அலுவலகத்திற்கு சென்று விட்டார். மேலும், அவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் தங்கவும் விரும்பவில்லை.

மாணிக் சர்க்கார் தற்போது குடியேறிய கட்சி அலுவலகத்தில் இரண்டு அறைகளுடன் குறைந்தளவான வசதிகளே உள்ளன.

தனது பங்களிப்பு கட்சியோடு இருக்க வேண்டும் என்பதற்காக கட்சி அலுவலகத்திலேயே அவர் தங்கிவிட்டதாகவும் தமது கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள் தான் எனவும் திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பஜன்கர் தெரிவித்துள்ளார்.

65 வயதான சர்க்கார் தனக்கு சொந்தமான பூர்வீக சொத்தை தங்கைக்கு தானமாகக் கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பி.பி.சி தமிழ்