Friday, January 8, 2016

சாத்வீக போராட்டத்துக்கு தயாராக வேண்டும்

மலையக இளைஞர் - யுவதிகளும் வடக்கு, கிழக்கு இளைஞர் - யுவதிகளும் ஒன்றிணைந்து, உரிமைகளை வென்றெடுப்பதற்கான சாத்வீக போராட்டத்துக்கு தயாராக வேண்டுமெனவும் அதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலவிய யுத்தம் காரணமாக நாம் இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எமது மக்கள் மீது சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலை அன்று இருந்ததன் காரணமாக நாங்களும் மிகுந்த பயத்துடன் வாழக்கூடிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினோம்' என்றார். 'தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. எனவே, இந்த சூழ்நிலையை நாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மலையக இளைஞர், யுவதிகளையும் வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகளையும் ஒன்றிணைத்து சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்து, அதன்மூலம் எமது உரிமைகளைப் பெறுவதற்கு முன்வரவேண்டும். 

மலையக இளைஞர்களுடைய பிரச்சினைகளும் வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுடைய பிரச்சினைகளும் வேறுபட்டவை. ஆனாலும், நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்பட்டால் அனைத்துவிதமான விடயங்களையும்; வெற்றிகொள்ள முடியும்.  நாங்கள் தற்போது சமூக ரீதியாக ஒன்றுபட்டு செயற்படுகின்ற நிலைமை உருவாகியுள்ளது. அதனால், வடக்கு - கிழக்கு இளைஞர்களை இணைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.மலையக இளைஞர்களை ஒன்றிணைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்' என்றும் அவர் கூறினார்.  '

மலையகத்தை பொறுத்த வரையில் எமக்கு கல்வி ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளன. மலையகத்தில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான குறைபாடுகள் நிலவுகின்றன. அவ்வாறான விடயங்களில் வடக்கு, கிழக்கில் இருந்து எமக்கு உதவி செய்ய முடியும். இந்த நாட்டில் நாம் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும்; செயற்பட்டால்  மாத்திரமே எமது இலக்கை அடைய முடியும். மலையகத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்பு தற்போது ஓர் அமைப்பாக அதாவது தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம். 

எதிர்காலத்தில் தமிழ்; தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் கனிந்து வருகின்றது. அதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே, எதிர்கால எமது இளைஞர்கள் ஒற்றுமையாக செயற்படுவதற்காக நாம் இன்று அதற்கான அடித்தளத்தை இடவேண்டும். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழு ஒத்துழைப்பையும் எமக்கு வழங்க வேண்டும்' என அவர் கூறினார்.

மலையக பல்கலைக்கு கெட்டப்புலாவில் காணி

புதிய ஆட்சியில், மலையகத்தின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கவும் மலையகத்தில் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகக் கல்லூரியை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாவலபிட்டி, கெட்டபுலா தோட்டத்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றை நிர்மாணிப்பாதற்காக 5 ஏக்கர் காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நுவரெலியா மாவட்டத்தில் தமிழ், சிங்கள மொழி மூலமான மாணவர்கள், ஆங்கில மொழியில் கல்வி கற்பதற்காக புதிய பாடசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. 2016 தொடக்கம் 2020ஆம் ஆண்டுக் காலத்துக்கான புதிய கல்விக்கொள்கையில், மலையகக் கல்வி அபிவிருத்தி தொடர்பில் தேசிய கல்வி நிறுவனம் புதிய நடைமுறைகளையும் அதற்கான பிரிவையும் ஆரம்பிக்கவுள்ளது' என்றார். 'அதேபோல் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு, ஆளனி பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர்தரத்தில்  கணித, விஞ்ஞானப் பிரிவுகளை அபிவிருத்தி செய்யவும் அதற்கான ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்தாக அவர் மேலும் கூறினார்.

மெத்தகந்த தோட்ட மக்களுக்கு பலவந்தமாக காணிகள்

பலாங்கொடை மெத்தகந்த தோட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கும் அரசாங்கத்தினால் அமைத்துகொடுத்தக்கப்படவுள்ள வீடுகளுக்கு தோட்ட நிர்வாகம் காணிகளை ஒதுக்கி கொடுப்பதற்கு முன்வராவிட்டால் அத்தோட்டத்திலே பலவந்தமாக காணிகளை பிரித்துகொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். 

இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், இரத்தினபுரி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலாங்கொடை பிரதேச செயலாளர் சம்பிக நிரோஷ் தர்மபால, 'மெத்தகந்த  தோட்டத்தில் மண்சரிவால பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் அவர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான போதிய காணிகளை மேற்படி தோட்ட நிர்வாகம் வழங்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க முடியாதுள்ளது' என்றார்.   

'மேற்படி தோட்டத்தில் போதிய காணிகள் கிடைக்குமாக இருந்தால் விரைவில் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும். எனவே காணிகளை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று  அவர் கூறினார். இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே  சப்ரகமுவ மாகாண முதலமைச்சருமான மஹிபால ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'தோட்ட மக்கள்  வியர்வை சிந்தி, அரும்பாடுபட்டு கம்பனிக்கு இலாபத்தை பெற்று கொடுக்கின்றார்கள். ஆபத்தான நிலைமைகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம்  முன்வந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் அதற்கு இடையூராக உள்ளன. 

குறிப்பாக தோட்ட மக்கள் தமக்கான மலசலகூடங்களை அமைத்துகொள்வதென்றாலும் அதற்கான இடத்தை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை என நான் அறிந்துகொண்டேன். பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற தோட்ட தொழிலாளர்களும் மனிதர்கள்தான். அவர்களின் முன்னேற்றத்துக்கு தோட்ட நிர்வாகம் தடையாகவுள்ளது.   தோட்ட மக்கள் குறித்து தோட்ட நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை. இம்மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுக்க தோட்ட நிர்வாகம் முன்வராவிட்டால் மக்களால் நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகள் என்ற வகையில்,  மெந்தகந்த தோட்ட மக்களுக்கு அந்த தோட்டத்திலே காணிகளை பலவந்தமாக பெற்றுகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இதுகுறித்து தோட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்' என அவர் கூறினார்.