Tuesday, August 20, 2019

தேயிலை ஏற்றுமதி விலைகளில் வீழ்ச்சி

ஜுலை மாதத்தின் தேயிலை ஏற்றுமதி சராசரி பெறுமதி ரூ. 497.35 ஆக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதி ஜுன் மாதத்தில் பதிவாகியிருந்த ரூ. 494.48 உடன் ஒப்பிடுகையில், ரூ. 2.87 அதிகரிப்பு என்ற போதிலும், 2018 ஜுலை மாதத்தில் பதிவாகியிருந்த ரூ. 537.88 உடன் ஒப்பிடுகையில் ரூ. 40.53 சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.  
பிராந்திய மட்டத்தில் விலைகளை ஆராயும் போது, உயர் நில தேயிலை ஜுலை மாதத்தில் சராசரியா ஒரு கிலோ கிராமுக்கு ரூ. 449.10 ஆக பதிவாகியிருந்தது. இது ஜுன் மாதத்தில் பதிவாகியிருந்த ரூ. 458.55 உடன் ஒப்பிடுகையில் ரூ. 9.45 சரிவாகும்.  
மத்திய நில தேயிலை விலையை பொறுத்தமட்டில், 2019 ஜுலை மாதத்தில் கிலோகிராம் ஒன்றின் சராசரி பெறுமதி ரூ. 414.40 ஆக பதிவாகியிருந்தது. இது ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 430.74 ஆக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ரூ. 84.95 சரிவை பதிவு செய்திருந்தது.  
தாழ் நில தேயிலை விலையை பொறுத்தமட்டில் ஜுலை மாதத்தில் கிலோகிராம் ஒன்றின் சராசரி விலை ரூ. 538.63 ஆக பதிவாகியிருந்தது. இது ஜுன் மாதத்தில் பதிவாகிய ரூ.526.52 உடன் ஒப்பிடுகையில் ரூ. 12.11 அதிகரித்திருந்தது.  
இந்தப் பெறுமதி 2018 ஜுலை மாதத்தில் ரூ. 555.71 ஆக பதிவாகியிருந்தது. இதனூடாக முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ரூ. 17.08 வீழ்ச்சியாகும். 2019 ஜனவரி - ஜுலை வரையான காலப்பகுதியை எடுத்துக் கொண்டால், மொத்தமாக ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தேயிலையில் சராசரி பெறுமதி ரூ. 549.99 ஆக பதிவாகியிருந்தது. இது 2018 ஜனவரி - ஜுலை வரையான காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 592.55 உடன் ஒப்பிடுகையில் 
ரூ. 42.56 சரிவாகும்.  2019 ஜனவரி - ஜுலை வரையான காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட உயர் வலய தேயிலை கிலோகிராம் ஒன்றின் சராசரி விலை ரூ. 518.66 ஆக பதிவாகியிருந்தது. இது 2018 2019 ஜனவரி - ஜுலை வரையான காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 568.87 உடன் ஒப்பிடுகையில் ரூ. 50.21 குறைவாகும்.  
மத்திய நில தேயிலையை பொறுத்தமட்டில் நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஜுலை வரையான காலப்பகுதியில் ஒரு கிலோகிராம் சராசரி பெறுமதி ரூ. 476.75 ஆக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகிய பெறுமதியான ரூ. 531.51 உடன் ஒப்பிடுகையில் ரூ.54.76 சரிவாகும்.  
தாழ்நில தேயிலையை பொறுத்தமட்டில், 2019 ஜனவரி - ஜுலை வரையான காலப்பகுதியில் பதிவாகியிருந்த சராசரி ஒரு கிலோகிராமின் விலை ரூ. 580.42 ஆகும். இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 616.12 உடன் ஒப்பிடுகையில் ரூ.35.70 குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   
மாதாந்த மற்றும் ஒன்று திரட்டிய சராசரி பெறுமதிகள், முன்னைய ஆண்டில் பதிவாகியிருந்த பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலர்களில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. இதற்கு ரூபாயின் மதிப்பிறக்கம் காரணமாக அமைந்துள்ளது.
-Tamil Mirror)

Monday, April 15, 2019

கந்தப்பளையில் தேயிலைத் தோட்டம் அலோசியஸுக்கு குத்தகைக்கு?

நுவரெலியா - கந்​தப்பளை பிரதேசத்திலுள்ள 450 ஏக்கர் தேயிலைத் தோட்டமொன்று, 2015ஆம் ஆண்டில் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் அவரின் மகனான அர்ஜுன் அலோசியஸிடம், மாதாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த தோட்டமானது, மாதாந்தம் 8,000 ரூபாய் 30 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கந்தப்பளை, மாஹகுடுகள தோட்டமே இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும், 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர், ஒரு மாத இடைவெளியிலும் மத்திய வங்கி பிணை முறிமோசடி இடம்பெற்று 7 மாத காலப்பகுதிக்குள்ளும் இந்த தோட்டம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்படி தோட்டத்தை 2045 ஆம் ஆண்டு வரையில் குத்தகைக்கு பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில், ஜெப்ரி அலோசியஸ், அர்ஜுன் அலோசியஸ் ஆகியோர் 2015.09.15 அன்று கையெழுத்திட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சுக்குச் சொந்தமான மேற்படி தோட்டம், முன்பு “மத்துரட்ட” கம்பனிக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிறுவனத்திடமிருந்து ஜெப்ரி அலோசியஸ் குறித்த காணியைக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தோட்டத்தில், இரண்டு பங்களாக்களும் வைத்திய மத்தியஸ்தானம் ஒன்றும், ஊழியர்களுக்கான இருப்பிடம் ஒன்றும் தாய்மார்களுக்கான இல்லமொன்றும் காணப்படுவதாகவும், பெறுமதிமிக்க 19,000 மரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி- தமிழ் மிரர்

Thursday, April 11, 2019

அரசுக்கு ஆதரவு. அடுத்தது என்ன?

எல்லோரும் எதிர்பார்த்தமாதிரியே வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. அதாவது தமிழ் மக்களுடைய விருப்பத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்பட்டுள்ளது.
ஆனால் “நாம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. அப்படி எந்த நிபந்தனையையும் விதிக்கவும் முடியாது” என்று பெருமையோடு கூறுகிறது கூட்டமைப்பு.
இதைக் கேட்பவர்களுக்கு சிரிப்பு வரும். சற்று ஆழமாக யோசித்தால் தலைசுற்றும்.
இதேபோலத்தான் ஜெனிவாவிலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்தோம் என்று மகிழ்ச்சியடைகிறார் சுமந்திரன்.
இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும். அது தவிர்க்க முடியாத சர்வதேச (மேற்குலக) விதி என்பது எல்லோருக்குமே தெரியும்.
இதையிட்டுக் கூட்டமைப்போ சுமந்திரனோ அல்லது அவர்களுடைய ஆதரவாளர்களோ பெருமைப்படுவதற்கு எதுவுமே இல்லை.
இதைப்போலத்தான் தற்போதைய வரவு செலவுத்திட்டத்துக்கான கூட்டமைப்பின் ஆதரவும். அதைப்போலக் கண்மூடித்தனமாக  ஆதரவளித்ததை நியாயப்படுத்துவதுமாகும்.
இதையெல்லாம் தமிழ் மக்கள் விரும்புகிறார்களா என்றால் அதுவுமில்லை.
அப்படியென்றால் மக்களுக்கு விருப்பமில்லாத விசயங்களை எதற்காகக் கூட்டமைப்புச் செய்ய வேண்டும்?
அல்லது மக்களுடைய விருப்பத்தின்படிதான் இந்த முடிவுகளைக் கூட்டமைப்பு எடுத்ததா?
அல்லது மக்களுடன் எங்கேயாவது இந்த விடயங்களைக் குறித்துக் கூட்டமைப்பு ஆலோசித்திருக்கிறதா?
அல்லது இப்படித்தான் கூட்டமைப்புச் செயற்பட வேண்டும். தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று மக்கள் எங்கேயாவது கூறியிருக்கிறார்களா?
மக்கள் மட்டுமல்ல எவரும் எங்களை எதுவும் கேட்க முடியாது. ஒரு மசிரையும் புடுங்க முடியாது என்ற இறுமாப்புடன் அது அரசுக்குச் சார்பான தீர்மானங்களை எடுக்கிறது. அரசுக்கு ஆதரவை வழங்குகிறது. அரசோடு ஒத்தோடுகிறது. (அப்படியென்றால், முன்னர் அரசோடு இணைந்து செயற்பட்ட ஈ.பி.டி.பியை எப்படிக் கூட்டமைப்பினர் ஒத்தோடிகள் என்று சொல்ல முடியும்?)
ஆகவே சந்தர்ப்பவாதமாக மக்களுக்கு எதிர்நிலையில் நின்று செயற்படுகிறது கூட்டமைப்பு எனலாம்.
எதற்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்படிச் செயற்படுகிறது? அதற்கான அவசியம் என்ன? என்று சிலர் கேட்கலாம்.
பச்சையாகவே தெரிகிறது, கூட்டமைப்பு தன்னுடைய நலன்சார்ந்து மட்டுமே செயற்படுகிறது என.
அதாவது கூட்டமைப்பின் பாரா”ளுமன்ற உறுப்பினர்களுடைய நலன்களே இதில் மையம்.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே கட்சியின் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் வைத்திருப்பவர்கள். ஆகவே அவர்கள் தங்களுடைய நலன்களைப் பெற்றுக்கொள்ளவும் பெருக்கிக் கொள்ளவும் இதையெல்லாம் செய்கிறார்கள்.
கூட்டமைப்பின் அடுத்த மட்டத்திலிருப்போரில் பலருக்குத் தங்கள் தலைமை இப்படிச் செயற்படுவதையிட்டு உள்மனக்கொதிப்புண்டு.
ஆனால், அவர்களால் தலைமையை எதிர்த்து நிற்க முடியாது.
அப்படி எதிர்த்தால் அவர்கள் கட்சியினால் – தலைமையினால்  ஓரங்கட்டப்படுவர். மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்தில் கூடச் செல்வாக்கைப் பெற முடியாமல் போய் விடும்.
ஆகவே கட்சியின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமாக இருந்தால் வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும். கட்சியின் நன்மதிப்பைப் பெற வேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த வேணும். அதனுடைய ஏகபோகத்துககுக் கட்டுப்பட்டாக வேண்டும்.
இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், போரினாலும் நீண்டகால ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்ட சமூகமொன்று அந்தப் பாதிப்புகளிலிருந்தும் நீதியின்மையிலிருந்தும் இன்னும் மீட்கப்படாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் அரசியல் தோல்விகளால் மூழ்கடிக்கப்படுகிறது. அதிலும் அந்த மக்கள் நம்பிய தலைமையினாலேயே தோற்கடிக்கப்படுகிறது. இது உண்மையில் பலியிடலாகும்.
காணாமலாக்கப்பட்டோர், காணிகளை இழந்தோர், உறவுகளை இழந்தோர், அரசியல் கைதிகள் என்ற பேரில் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலையாளர்கள், போரிலே பெற்றோரை இழந்தோர், ஆண்துணையை இழந்த பெண்கள், உடல் உறுப்புகளை இழந்தோர் என கூடுதற் பாதிப்புகளைச் சந்தித்தவர்களுக்கு இதுவரையில் முறையான எந்தத் தீர்வும் கிட்டவில்லை. எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவேயில்லை.
இந்த நிலையில் எப்படிக் கண்ணை மூடிக் கொண்டு அரசுக்கு ஆதரவை வழங்கியது கூட்டமைப்பு? அதற்கான அவசியம் என்ன? கூட்டமைப்பு இப்படிச் செயற்படுவதற்கான ஆணையை வழங்கியது யார்?
இந்த விடயங்களில் குறைந்த பட்சமான மீட்பையாவது அரசாங்கத்தைக் கொண்டு கூட்டமைப்பு செய்வித்திருந்தால் இவ்வாறான ஆதரவளிப்புகளுக்கு ஒரு நியாயம் இருக்கும்.
ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
இவை எதையும் செய்யாமலே கூட்டமைப்பின் ஆதரவை (தமிழ் மக்களின் ஆதரவை) அரசாங்கம் பெற்றுள்ளது. இது அரசுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றியே.
அதாவது போர்ப்பாதிப்பை நிவர்த்தி செய்ய வேண்டிய தன்னுடைய பொறுப்பைச் செய்யாமலே பாதிக்கப்பட்ட மக்களின் தலைமையுடைய ஆதரவை அரசாங்கம்  பெற்றுள்ளதென்பது சாதாரணமான விசயமல்ல.
இது பாதிக்கப்பட்ட மக்களைச் சரணாகதி அடைய வைத்த செயற்பாடாகும். ஏறக்குறைய இது இன்னொரு வகையான தோற்கடிப்பே.
இதற்கு முழுமையான “கைவேலை”யைச் செய்து கொடுத்திருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
ஆகவேதான் தமிழ் மக்களின் வரலாற்றில் மாபெரும் தவறுகளைக் கூட்டமைப்பு விட்டுக் கொண்டிருக்கிறது என்கிறோம்.
இன்றுள்ள நிலைமையின்படி குறைந்தபட்சப் பேரம்பேசக்கூடிய வாய்ப்புகளையும் கூட்டமைப்பு குறுகிய சுயநலன்களுக்காகக் கைவிடுகிறது என்பது வரலாற்றுத் தவறாகும்.
எந்த வகையிலும் அரசாங்கங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு எந்த நியாயங்களும் கூட்டமைப்பிடம் இல்லை என்பது வெளிப்படையான விசயம்.
அரசியல் என்பது தாம் பிரதிநிதித்துப்படுத்தும் மக்களுடைய நலன்களுக்கான பணியே தவிர, மக்களை வைத்துத் தமது நலன்களைப் பேணிக்கொள்ளும் விசயமல்ல.
அப்படி ஒரு அரசியல் இருந்தால் நிச்சயமாக அது மக்கள் விரோத அரசியலேயாகும்.
2009 போர் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்கும் அரசியலுரிமைக்குமாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழியப்போகின்றன. இதில் நான்கு ஆண்டுகள் சுத்தமாகவே நடப்பிலுள்ள அரசாங்கத்துக்குப் பகிரங்க ஆதரவைச் சம்மந்தன் அணி வழங்கிக் கொண்டிருக்கிறது.
அப்படி நெருக்கமாக நின்று ஆதரவளித்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு இந்தச் சூழலைப் பயன்படுத்தி இதுவரையில் எவ்வளவோ வேலைகளைச் செய்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை ஈடேற்றியிருக்க முடியும்.
இதற்கென அரசாங்கத்திற்குச் சில வேலைத்திட்டங்களை முன்வைத்திக்கலாம். நிலைமையைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருக்கலாம். புதிய அரசியல் முறைமையை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
சிறப்பான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கலாம்.
பல கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கலாம்.
கூடவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்துப் போராடிக் கொண்டிருப்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக இல்லாமல் செய்திருக்கலாம்.
கூட்டமைப்பு அந்தப் பணியைச் செய்யாதபடியால்தானே மக்கள் போராட வேண்டியிருக்கிறது.
எனவே இதொன்றையும் செய்யாமலே அரசுக்கு ஆதரவாகக் கையையும் காலையும் தூக்குவதென்பது மிக அநீதியானது. கேவலமானது. கூட்டமைப்பின் வார்த்தைகளிலேயே சொன்னால் துரோகமானது.
இதையே நாம் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது.
முன்னர் இதே போல அரச ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டமைப்பினர் கடுமையாக விமர்சித்தனர்.
இப்பொழுது அதே வேலையை அவர்களே செய்கின்றனர்.
அப்படியென்றால் இதற்கு என்ன அர்த்தம்? இதற்கு என்ன பெயர்?
மக்களுடைய நியாயங்களுக்கும் நிலைமைகளுக்கும் மாறாகச் செயற்படும் எந்த அரசியல் தரப்பும் நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடித்து நிற்க முடியாது,
அது எவ்வளவு தந்திரங்களைச் செய்தாலும் வெற்றியைப் பெற முடியாது.
இதொன்றும் கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டுப்பத்திரமல்ல. மக்களின் நிலை நின்று நோக்கப்படுவதானால் ஏற்பட்ட வெளிப்பாடு.
சனங்களுக்கான நியாயக் குரல்.
இதை மறுத்துரைப்போரிடம் நாங்கள் சில கேள்விகளை எழுப்பலாம்.
விடுதலைப்புலிகளின் காலத்திலும் அதற்குப் பிறகு 2009 ற்குப்பின்னான இறுதிப் பத்து ஆண்டு காலத்திலும் அரசியல் அரங்கில் கூட்டமைப்பே தலைமைச்சக்தியான நிற்கிறது.
இந்தப் பத்து ஆண்டுகளிலும் அது தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் என்ன?
இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் பெற்ற மாபெரும் நன்மைகள் எவை?
இந்தப் பத்து ஆண்டுகளிலும் கூட்டமைப்பின் அரசியல் சாதனை என்ன? அரசியற் பங்களிப்பு என்ன?
எந்தக் கணக்கெடுப்பும் இல்லாமல், எத்தகைய மதிப்பீடுகளும் இல்லாமல் இப்படியே இந்தப் பயணம் தொடர்வது சரியானதா?
இதையிட்டு இப்போதேனும் பேசவில்லை என்றால் இதையும் விட மோசமான நிலையே நாளை ஏற்படும்.
நாளை என்பது இன்றைய உருவாக்கமே. இன்றைய பாதுகாப்பு. இன்றைய செயற்பாட்டின் விளைவுதானே!
ஆகவே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மதிப்பீடு செய்து, ஆய்வுக்குட்படுத்தியே நாம் அடுத்த கட்டத்தைப்பற்றிச் சிந்திக்க முடியும்.
அதற்கான ஒரு தூண்டலே இந்தக்குறிப்புகள்.
தவறுகளை உரிய வேளையில் சுட்டிக்காட்டவில்லை என்றால், பொறுப்பானவர்களை உரிய சந்தர்ப்பத்தில் நெறிப்படுத்தவில்லை என்றால் அது இன்னொரு முள்ளிவாய்க்கால் போலவே மாறும்.
தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால்களிலிருந்து வெளியேற வேண்டுமே தவிர தொடர்ந்தும் முள்ளிவாய்க்கால்களுக்குள் வீழ்ந்து கொண்டிருக்க முடியாது.
– கருணாகரன்-

Thursday, March 28, 2019

இலங்கையை வதைக்கும் வறட்சி

இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
நாட்டின் பல பகுதிகளின் இன்னும் வறட்சியான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அனுமானித்து அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, வடமேல், வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், ஊவா உள்ளிட்ட பல மாகாணங்கள் இந்த வறட்சியான வானிலையை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, அதிக வெப்பமுடைய காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடியம் வரை நிலவுகின்ற சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவிக்கின்றார்.
அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை அடுத்து, நீர்மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் நீர்மின் உற்பத்தி 90 சதவீதம் குறைந்துள்ளதால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது 10 சதவீதமான நீர்மின் உற்பத்தியே செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் நாள்தோறும் சூழற்சி முறையில் மின்சாரத்தை நிறுத்துவதற்கு மின்வலு, எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாளாந்தம் சுழற்சி முறையில் மின்சார தடை இருந்து வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையினால், நாட்டிலுள்ள மின்சார தேவைக்கு ஏற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்மின் உற்பத்தி இயல்புக்கு திரும்பும் வரை, மின்சார சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதால் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சேமித்துக் கொள்ளும் சாத்தியம் உள்ளதாகவும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த மூன்று மாத காலத்திற்கு நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் இரண்டு மின்குமிழ்களை அணைக்கும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், அரச நிறுவனங்கள், மத ஸ்தானங்கள் மற்றம் வணிக நிறுவனங்களில் மின்சார தேவையை 10 சதவீதம் குறைப்பதற்கும், தேவையேற்படின் மின்குமிழ்களை அணைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீதி விளக்குகளை வழக்கமாக அணைக்கும் நேரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே அவற்றை அணைத்து விடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நன்றி- பி.பி.சி தமிழ்

Tuesday, February 26, 2019

தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஏமாற்றத்தையே பெற்றுக்கொடுத்துள்ளது - அத்தாவுட செனிவிரட்ன

வரவு செலவு திட்டத்தினூடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவை பெற்றுக்கொடுத்துள்ளோம் என அமைச்சர் திகாம்பரம் கூறியிருப்பதானது தொழிலாளர்களுக்கு அவர்கள் ஏமாற்றத்தையே பெற்றுக்கொடுத்துள்ளார் என முன்னார் அமைச்சர் அத்தாவுட செனிவிரட்ன தெரிவித்துள்ளார். 

அவர் இது குறித்துத் தெரிவிக்கையில் தோட்த் தொழிலாளர்களுக்கு இதுவரை காலமும கிடைத்து வந்த உற்பத்தித்திறன் கொடுப்பனவு 160 ரூபாய், வருகைக்கான கொடுப்பனவு 60 ரூபாவும் இம் முறை அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கா பணக்கார வர்க்கத்தினரை பாதுகாக்க முற்படுவது தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகமாகும். இனிமேலாவது மலையக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  

பெருந்தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீடமைப்புத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான ஆட்சியில் நான் பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு 07 பேர்ச் காணியில் வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்த்தைதான் இன்றைய அரசாங்கமும்முன்னெடுத்துச் செல்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில்தான் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக திகாம்பரம் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்றார். 

தொழிலாளர்களுக்கு 50 ரூபா பெற்றுக் கொடுத்தது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சாதனை என கூறுகின்றவர்கள் சார்பில் பாராளுமன்றத்தில் 06 உறுப்பினர்கள் இருந்த போதிலும் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உற்பத்தித்திறன் கொடுப்பனவு 160 ரூபா, வருகைக்கான கொடுப்பனவு 60 ரூபா இல்லாமல் செய்யப்பட்டன. தொழிலாளர்களுக்கு 200 ரூபா வழங்காவிட்டால் அரசுக்கு வழங்கிவரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் எனவும், அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்யப்போவதாகவும் தெரிவித்தனர். வரவு செலவுத்திட்டத்தில் அமைச்சர் நவின் திசாநாயக்கா 50 ரூபா  வழங்கப்படும் என தெரிவித்ததும் அமைச்சர் பதவி குறித்து மௌனம் காத்தனர். இவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் அதனால் அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதும் இவர்கள் ஒருநாளும் அரசை விட்டு வெளியேறமாட்டார்கள் என்பது பிரதமர் ரணிலுக்கு நன்றாகவே தெரியும். அமைச்சின் சுகபோக வாழ்க்கையை இவர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பது அப்பட்டமான உண்மை என குறிப்பிட்டார்

Wednesday, February 13, 2019

கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா என்ற வேதன உயர்வே வழங்கப்பட்டுள்ளது

கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா என்ற வேதன உயர்வே வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக மூன்று மாத நிலுவைக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கவில்லை என்றும், தொழிற்சங்கங்களும் அதனைக் கோரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை சபையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்ததில் 500 ரூபா அடிப்படை வேதனமும், 140 ரூபா வரவுக்கான கொடுப்பனவும், 60 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவும், 30 ரூபா தேயிலை நிர்ணய கொடுப்பனவும் என 730 ரூபா நாளாந்த வேதனம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அடிப்படை வேதனம் 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, விலைக்கான கொடுப்பனவு 50 ரூபா அடங்களாக தொழிலாளர்களுக்கு 750 ரூபா நாளாந்த வேதனமாக வழங்குவதற்கு இம்முறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு 730 ரூபாவாக வழங்கப்பட்ட நாளாந்த வேதனமானது இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 750 ரூபாவாக வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஆயிரம் ரூபா அடிப்படை வேதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புகளின் ஒன்றியமான ஒருமீ உள்ளிட்ட ஆயிரம் இயக்கம் என்பன கூட்டு ஒப்பந்தத்தில் 20 ரூபா வேதன அதிகரிப்பே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, தமது எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன.
எனினும், இம்முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக அடிப்படை வேதனம் 40சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் தெரிவித்திருந்தன.
இந்த அளவான அடிப்படை வேதன உயர்வு சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரம், மூன்றுமாத கால நிலுவைக் கொடுப்பனவை வழங்குவதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு 100 மில்லியன் ரூபா வழங்குவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறிருப்பினும், ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகியோர் கூறியபடி 40 சதவீத அதிகரிப்பு மற்றும் நிலுவைக் கொடுப்பனவு போன்ற அறிவிப்புகள் உண்மைக்குப் புறம்பானவைபோன்று அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கருத்து அமைந்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா வேதன அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாத நிலுவைக்கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கவில்லை என்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்று விளக்கமளித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தம் மூன்று மாதகாலம் மாத்திரமே தாமதமாகியது.
இதில் 730 ரூபாவிலிருந்து 750 ரூபா என 20 ரூபா சிறிய வித்தியாசமே காணப்படுகிறது.
எனவே, அதனை நிலுவைத் தொகையாக வழங்குவதற்குத் தாங்கள் கருதவில்லை என்னும், தொழிற்சங்கங்களும் இவ்வாறு கோரவில்லை என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், நிலுவைக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானித்தால், 20 ரூபாவிற்கான நிலுவைக் கொடுப்பனவையே வழங்க வேண்டும்.
இது மிகவும் நகைப்புக்குரியதாகும்.
தேயிலை சபையின் பணத்தை இதுபோல வீண்விரயம் செய்வதற்கும் தாம் விரும்வில்லை என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நன்றி-தேனீ

Tuesday, February 12, 2019

சம்பளப் பிரச்சினைக்கு உடனடி தற்காலிக தீர்வு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடி தற்காலிக தீர்வாக அவர்களது நாள் சம்பளத்துடன் ஒரு தொகை பங்களிப்பை செய்வதற்கு அரசாங்கத் தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் இத் தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் எனவும் மேலதிக விபரங்களை பிரதமரிடம்கலந்துரையாடுவது என்றும் நேற்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஒரு வருட காலத்திற்குள் பெருந்தோட்டத்துறை முகாமை முறையை மறுசீரமைப்பதற்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று இந்தப் பேச்சவார்த்தை நடைபெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித் தலைவர்கள் அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜ், அரவிந்த் குமார் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொழில் அமைச்சர் ரவீந்தர சமரவீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னைய கோரிக்கையின்படி தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்பதை பேச்சுவார்த்தையின்போது அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தற்காலிக தீர்வாக அரசாங்கத் தரப்பில் நாள்சம்பளத்துக்கு ஒரு தொகை பங்களிப்பை செய்வதற்கும் ஒரு வருட காலத்திற்குள் பெருந்தோட்டத்துறை முகாமை முறையை மறுசீரமைப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் மேற்படி தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் எனவும் மேலதிக விபரங்களை பிரதமரிடம்கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.